24 November 2017

கிடைக்காமலே இருந்திருக்கலாம்

கிடைக்காமலே இருந்திருக்கலாம்
இந்த சுதந்திரம்...!

வெள்ளையர்கள் ஆண்டபோது கூட
இத்தனை அடிமைத்தனங்கள் இல்லை
இந்தக் கொள்ளையர்களால்
ஒவ்வொரு விடியலிலும் ஒரு
புது வரித்தொல்லை

வரி கொடுத்துவிட்டு
வாய்க்கரிசி போடு என
வரிசையில் நிற்கிறார்கள்

ஆதாரை காட்டிவிட்டு
அடக்கம் செய்யென
அனுப்பி வைக்கிறார்கள்

குடும்ப அட்டையை பிடுங்கி விட்டு
கோமாணத்தை கொடுக்கிறார்கள்
நாட்டை ஏலம் போட்டு விற்றுவிட்டு
கோடிகளில் திளைக்கிறார்கள்

குழந்தைகளைக் கொன்றுவிட்டு
மதங்களை வளர்க்கிறார்கள்
மாடுகளை அவிழ்த்துவிட்டு
அரசியல் நடத்துகிறார்கள்

விவசாயம் அழித்துவிட்டு
வேடிக்கை பார்க்கிறார்கள்
தண்ணீரை தடுத்துவைத்து
தத்துவம் சொல்கிறார்கள்

நெல் விளையும் நிலமெல்லாம்
மீத்தேனால் மிதக்கின்றன
விஞ்ஞான அறிவெல்லாம்
வீணாகப் போகின்றன

ஆணுறையை
இலவசமாய்க் கொடுத்துவிட்டு
நாப்கினுக்கு அதிகபட்ச வரியாம்
புதிய இந்தியா பிறப்பதற்கு
இவர்கள் செய்வதுதான் சரியாம்

சுதந்திரத்தை கொண்டாட
பல வெள்ளையர்களை வசைபாட வேண்டாம்
சில கொள்ளையர்களிடமிருந்து
மீட்டெடுத்தாலே போதும்

இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு
இந்த சுதந்திரம்
கிடைக்காமலே இருந்திருக்கலாம்....!


வாழ்க்கை மிளிர்கிறது

மனதின் ஓரங்களில்
அங்குமிங்கும் அலையும்
வார்த்தைகளை வடிகட்டி
கொஞ்சம் மகிழ்வும்
கொஞ்சம் வலியும்
கலந்து கோர்க்கிறேன்

அது வாக்கியங்களாகவும்
சில நேரங்களில்
யாரோ ஒருவருடைய
வாழ்க்கையாகவும் மிளிர்கிறது

கடந்து வந்த நாளை
காத்திருக்கும் நாளைகளோடு
சேர்த்து திரிக்கையில்
அது சிலநேரங்களில்
விருப்பக் குறியீடுகளாகவோ
விமர்சனங்களாகவோ மாறிவிடுகிறது

மொழியை நேசிக்குமொரு
தருணத்தில் வந்துவிழும்
சொற்களைப் பொருக்கி
புதிதாய் நெய்ய முயல்கிறேன்
அது சில நேரங்களில்
அனுபவமாகவோ
எதிர்பார்ப்பாகவோ அடங்கிவிடுகிறது

எனக்கென நேரமெடுத்து
பிரியங்களின் அன்பிலோ
பிரிவுகளின் துயரிலோ
வாழும் நொடிகளை
கவிதையாக்க நினைக்கிறேன்

அந்த எழுத்துக்களோ
என்னை இன்னும் வாசகனாகவே
வைத்திருக்கின்றன ....!!!


அங்கேயே நில்லுங்கள்


அருகில் வரவேண்டாம்
அங்கேயே நில்லுங்கள்

நீங்கள் சுமந்து வருவது
என் மீதான பரிவல்ல
என் வலியின் அடர்த்தியை
ஆய்வு செய்வதற்கான முயற்சி

வார்த்தைகளால் நலம் விசாரித்துவிட்டு
பின்சென்று புன்னகையால்
கைகுலுக்கிக்கொள்ளும்
உங்கள் கருணை எனக்கு வேண்டாம்

கண்ணீரைத் துடைக்க
நீளும் உங்கள் விரல்
என் கண்களைக் குத்தி
குருடாக்க முயல்வதாய்த் தோன்றுகிறதெனக்கு

குருதி வழிந்தோடும் காயத்தில்
கூர் தீட்டப்பட்ட ஆயுதத்தால்
மேலும் குடையும்
குரூரத்தை விடக் கொடுமையானது
பொய் முலாம் பூசிய உங்கள் அன்பு

ஆகவே ....
அருகில் வர வேண்டாம்
அங்கேயே நில்லுங்கள்
என் வாழ்வை நானே
வாழ்ந்து கொள்கிறேன் ....!!!


இரண்டு பேர் சேர்ந்து எழுதிய 
ஹைக்கூ நீ


பிரியங்களின் வலி




பிரியங்களின் பெருவாசலில்
தனித்திருப்பது அத்தனை சுலபமல்ல

தனிமை போர்த்தியபடி
மெல்ல நகரும் பொழுதுகள்
நரகத்தை நினைவூட்டும்

துக்கம் மிகுந்து தூக்கம் துறந்த
இரவுகளை தலையணைக்கடியில்
ஒளித்து வைக்கச் சொல்லும்

பசி நிறைந்த பகல்கள்
மெளனத்தை சமைத்து
உணவாய்த் திண்ணும்

பெயரற்ற உருவங்கள்
மூளை மடிப்புகளில்
முன்னும் பின்னும் மின்னும்

அழகிய முரண்களோடு
அர்த்தமற்ற சண்டைகளால்
மனம் திணறி பிரிந்திருப்பதை விட
தனித்தே இருந்துவிடலாமென்றும்
தோன்றும் ....!

எஞ்சி நிற்கும் வருத்தம்

கனவால் செய்த பலூனொன்று
சொற்கள் குத்தியதால்
பெரிதாய் சத்தமிட்டு உடைகிறது

திட்டங்களின் நூலறுந்து
அந்தரத்தில் தொங்குகிறது
தொகுத்த வார்த்தைகள்

பிம்பங்களுக்குள் வந்துபோன
சந்தோச நிமிடங்கள்
சட்டென மறைந்து காணாமல் போகின்றன

சுமந்து வைத்திருந்த
பிரியங்களின் கூடையில்
இப்போது முட்கள் மட்டுமே
நிரம்பி வழிகிறது

எனக்கு ஆறுதல் தேவைப்படவில்லை
உனக்கு கொடுத்து வைக்கவில்லையென்ற
வருத்தம் மட்டுமே எஞ்சி நிற்கிறது...!


நுரைப்பெண்


குடம் தீர்க்கும் தாகமெனக்கு
நீ சங்கடையில் நீட்டுகிறாய்

கரும்புதின்ன வந்தவனிடம்
பல்குச்சியை திணிக்கிறாய்

பெரும்பசியில் இருப்பவனுக்கு
ஒரு பருக்கை கொடுக்கிறாய்

அடைமழைக்கு காத்திருப்பவனுக்கு
பன்னீர் மட்டும் தெளிக்கிறாய்

வார்த்தைகளில் நனைய வந்தவனுக்கு
மெளனக்குடை பிடிக்கிறாய்

உதடுகள் குவிந்த நொடியில்
முத்தத்தடை விதிக்கிறாய்

சுமக்கமுடியா காதலும்
எழுதமுடியா கவிதைகளுமாய்
நிரம்பி வழியும்
நானென்ற கோப்பைக்குள்
நீ நுரையாய்த் ததும்புகிறாய்....!


தீராத முத்தங்கள்


என் தலையணை உறைக்குள்
நிறைந்து கிடக்கும் முத்தங்களில்
நேற்றைய கனவில் நீ கொடுத்ததை
தேடி எடுத்தேன்

உன் உதடுகளின்
ஈரப் பிசுபிசுப்பில் இன்னும்
உறையாமல் இருந்தது அம்முத்தம்

இதையெனக்கு கொடுத்தபோது
எத்தனை விதமான வெட்கத்தில்
நீ இருந்தாய் என நானறிவேன்

உன் கண்களில் விழுந்து
கழுத்தடியில் தொலைந்து
உயிர்ப்பள்ளத்தில்
நான் காணாமல் போனதை நீயறிவாய்

உதடுகள் பிரிந்த அந்த நொடியில்
உள்ளுக்குள் வயதின் பெருங்காடொன்று
பற்றியெரிந்ததை நாமறிவோம்

கொடுக்க கொடுக்க தீராத
முத்தங்கள் உன்னிடத்திலும்
தின்ன தின்ன பசியாறாத உதடுகள்
என்னிடத்திலும் இருக்கின்றன

முத்தங்களின் நினைவுகளை
எடுத்துப்பார்க்க இரவுகளும்
எழுதிப்பார்க்க கவிதைகளும்
இருக்கும் வரை நீயும் நானும்
நாமாகவே இருப்போம்.


நனையும் மனம்



உன் முத்தங்களைப் போலவே
பொசுக்கென பொழியும் மழையில்
நனைகிறது மனம்

இரவில் பொழியும் மழையில்
நீ அருகில் இல்லை
முந்தானை குடை பிடிக்க

ஜன்னலில் தெறிக்கும் துளிகளில்
சிதறுகிறது உன் சிரிப்பை போல
சில குட்டி மழைகள்

கன்னத்தில் விழுந்து
கழுத்திலிறங்கும்
ஒரு துளி பயணிக்கிறது

உன் விரல்களைப்போல
உன்னை நனைக்கும் மழைத்துளிகள்
தேனாய் மாறலாம்
என்னை நனைக்கும் மழைத்துளிகள்
நீயாய் மாறலாம்

இருளில் மிதக்கும் இரவைப்போல்
உன் நினைவில் மிதக்க வைக்கிறது
இந்த மழை...!

வாசித்துப் போ

ரோஜாக்களாலும்
சந்தனத்தாலும் செய்த
துளைகளற்ற இரட்டைப் புல்லாங்குழல்
உன் உதடுகள்

நான் வாய் வைத்து ஊதுகையில்
சங்கீதத்தோடு சேர்ந்து வெளிவருகிறது
உன் வெட்கமும்

வாசிப்பவன் திறந்திருக்க
புல்லாங்குழல் கொண்ட பூ உடலே
நீ ஏன் கண் மூடுகிறாய்

ராகங்கள் தடுமாறி
பாதைகள் தடம் மாறினாலும்
சம்மதம்

ஒருமுறை என்னைப் புல்லாங்குழலாக்கி
உன் உதடுகளால் முழுமையாய் வாசித்துவிட்டுப் போ ...!


என்னவாகும் வார்த்தைகள்


உன் குழிவிழும் கன்னத்தில்
இட்டு நிரப்ப நிறைய
முத்தங்கள் சுமந்து வருகிறேன்
நீயோ சிரிக்க மறுக்கிறாய்

உன் மடிமீது உறங்குமொரு
தருணத்தை நோக்கி தவமிருக்கிறேன்
நீயோ வரம் தராமல் விரதமிருக்கிறாய்

யாருமற்ற சாலையில்
உன் விரல் கோர்த்தபடி
நெடுந்தூரம் நடக்க நினைக்கிறேன்
நீயோ எதிர் திசையிலேயே பயணிக்கிறாய்

கவிதைகளோடு நானும்
கவிதையாய் நீயும்
பேச நினைக்கையில்
நீ மௌனத்தை துணைக்கு அழைக்கிறாய்

சொற்கள் நிறைந்த ஒரு சூழலில்
பிரியங்களின் விரல் பிடித்தபடி
உன்னை நானும்
என்னை நீயும்
தேடுமொரு நாளில்
நம் இருவருக்குமே நாம் கிடைக்காமல் போகலாம்
அப்போது சேர்த்துவைத்த வார்த்தைகள் என்னவாகும்...???


பொசுக்கென இறக்கிறாய்

இரக்கமில்லா உன்னால்
உறக்கமில்லை இரவுகளில்

ரத்தம் கசிய
முத்தங்கள் இடுகிறாய்

ஆடை மூடா இடங்களை
தேடித் தேடி ருசிக்கிறாய்

விளக்கணைத்த இடைவெளியில்
உற்சாகம் அடைகிறாய்

வெறிதீர்ந்த பின்னும் இன்னும்
வேண்டுமென துளைக்கிறாய்

விருப்பமற்ற போதும் கூட
ஏனென்னை வதைக்கிறாய்

தீராத பெருவலியில்
கத்த மனமில்லை

தீர்க்கமான முடிவுடன்
கிடைக்குமந்த இடைவெளியில்
கையாளும் திறமையில்
கைதட்டல் வாங்கியபடியே
பொசுக்கென இறக்கிறாய்

#கொசு_செத்துடுச்சி ;)


எப்படிச் சொல்ல...?


பெரு நகர பேருந்தில்
நரக பயணத்தில்
பெண்ணாய் படும்
அவஸ்தைகளை
எப்படிச் சொல்ல...?

இருக்கைகள் நிறைந்த
காலை வேளையில்
கிடைக்கும் இடைவெளியில்
என்னை நிறுத்திக்கொள்ள
முயலும் போராட்டத்தை
எப்படிச் சொல்ல...?

உடைக்குள் ஊடுருவி
உடல் தேடும் ஒருவனிடம்
உடலுக்குள் மனுசி என்ற
மனசொன்று இருப்பதை
எப்படிச் சொல்ல...?

மல்லிகை கருகும்படி
முதுகில் மூச்சுக்காற்றை
ஊசியாய் இறக்கும் ஒருவனிடம்
உனக்கும் என் வயதிலொரு
சகோதரி இருப்பாளென
எப்படிச் சொல்ல...?

கடக்கும் சாக்கில்
கம்பியை பிடித்தபடி
பின்னுரசும் ஒருவனிடம்
பிசுபிசுப்பின் ஈரக்கசிவை
எப்படிச் சொல்ல...?

வெக்கை தகிக்கும் வியர்வையில்
வழிந்திறங்கும் துளிகளில்
வாசம் நுகரும் ஒருவனிடம்
உதிரம் கசியும் வலியை
எப்படிச் சொல்ல...?

காலதாமதத்திற்கு காரணம் கேட்டு
கைப்பேசியில் வந்து குதறும் மேலாளருக்கு
"அந்த மூன்று நாட்களில்"
அலுவலகம் வர கொஞ்சம்
தாமதமாகுமென்பதை
எப்படிச் சொல்ல...???


வானத்தை அடையும் திசை

உனது
முத்தங்களின் பசிக்கு அழாமல்
கொஞ்சல்களுக்கு ஏங்காமல்
தாலாட்டுக்கு காத்திருக்காமல்
உறங்குமொரு குழந்தையென
அமைதியாய் இருக்கிறதுன் நினைவுகள்

மீன்களில்லா குளத்தில் போடும்
தூண்டிலைப்போல சமயங்களில்
வெறுமை சிக்கிக்கொள்ளும்
கொக்கிகளாய் நகர்கிறது நாட்கள்

தவறியும் அவிழ்த்துவிடாத
நம் சிநேகத்தின் முடிச்சுகளில்
இறுக்கம் இன்னும் கூடியிருக்கலாம் 
உன்மீதான காதலைப்போலவே

மிகச்சரியாய் எய்யப்பட்ட அம்பில் 
காயப்பட்ட பறவையின் 
சிறகுகளுக்கு வலுவிழந்து போகலாம்... 
அது வானத்தை அடையும் திசையை நோக்கி 
மீண்டும் பறக்கும்...!


புதிதாய்க் கட்டியிருக்கும்
உன் வீட்டிற்குள் நுழைந்த எல்லோரும்
வீட்டை சுற்றிப் பார்த்து
சந்தோசப்படுகையில்
நான் மட்டும் வருத்தப்படுகிறேன்

நீ சுற்றிச் சுற்றிப் பார்க்கும்
அந்த கண்ணாடியாய்
நான் இருந்து தொலைத்திருக்கக்கூடாதா ...?


ரொம்ப நேரமாக
யோசனை செய்தும்
எழுதவே முடியவில்லை
உன்னைவிட அழகான
ஒரு கவிதையை


சின்ன வயதில்                                                                                                                  
பலூன் வாங்கித்தரச்சொல்லி                                 
அழுது அடம்பிடித்ததுபோல்

இப்போது அழுது
அடம்பிடிக்க வேண்டும்போல் உள்ளது
என்னைக்கடந்து போகும்

உன்னை வாங்கித்தரச்சொல்லி ...!


உன் கைப்பேசி அழைப்பிற்குள்
சுருங்கிக்கிடக்கிறது    
என் உலகம் ..!


23 November 2017

உன் விரல் நுழையும்
வரத்திற்க்காகவே..
மோதிரங்களின் தவம் ...!!!


பயணம் முடிந்தாலும்
பத்திரமாய் இருக்கிறது
நீ வாங்கிக்கொடுத்த பயணச்சீட்டு ..!


என்னோடு  வர மறுக்கிறது
கரையில் படுத்திருக்கும்
உன் பாதச்சுவடுகள்.....!



உன் மடி தந்த சுகத்தை 
இனி எந்த தலையணையாலும் 
தந்து விட முடியாது....!


வண்ணங்களற்ற ஒரு வானவில்
உன் வெள்ளை துப்பட்டா....!


அடை மழையில் நனைந்து
அதிராத உடம்பு
உன் துப்பட்டா தீண்டலில்
தீப்பிடித்து எரிகிறது...!



நீ உறக்கத்தில் புரண்டுபடுக்கிறாய்  
ஓரமாய் நின்று ரசித்துக்கொண்டிருக்கிறது 
நிலா .....!


இரவுகள் பலவிதம்





தொலைதூர பயணங்களில் 
தூக்கமில்லாமல் நீள்கிறது 
ஓட்டுனர், நடத்துனரின் இரவு ....!

மீட்டருக்கு மேல் கேட்டு கேட்டு 
மீட்டருக்குல்லேயே முடிந்து விடுகிறது 
சில ஆட்டோக்காரர்களின் இரவு.....!

கண்களுக்கும் கணினிக்குமான யுத்தத்தில் 
விரல்களோடு விடியாமலே இருக்கிறது 
ஐ டி பொறியாளர்களின் இரவு.....!

மின்சாரம் இல்லாத நேரத்திலும் 
புத்தகங்களோடு போராடி போகிறது 
மாணவனின் இரவு ....!

அழுகின்ற குழந்தையை 
சமாதானப்படுத்தும் முயற்சியில் 
தொலைந்துபோய் விடுகிறது 
இளம் தாயின் இரவு.....!

திறக்காத பூட்டுகளோடு 
சண்டையிட்டு சமாதானம் அடைகிறது 
திருடனின் இரவு.....!

வாடிக்கையாளர் வராததால் 
வசைகளை சுமந்துகொண்டு நகர்கிறது 
விபச்சாரியின் இரவு.....!

குறட்டைகளாலும் 
மாமூல்களாலும்  நிரம்பி வழிகிறது
போலீஷ்காரர்களின் இரவு.....!

முத்தங்கள்  சுமந்த உதடுகளோடு 
போதையேறி உறங்கப்போகிறது 
நடிகையின் இரவு.....!

கறுப்புப்பணத்தில் கலர் கலர் 
கனவுகளாய் விரிகிறது 
அரசியல்வாதியின் இரவு....!

அடுத்தநாள் உழைப்பிற்காக 
நிம்மதியாய் தொடர்கிறது
ஏழையின்  இரவு....!

தூரத்தில் நாம் இருப்போம்

தூரத்தில் பெய்யும் 
மழையின் சாரலாய் 
எப்போதும் மனதை ஈரமாகவே 
வைத்திருக்கிறது உன் நினைவுகள் ....!

அறை முழுவதும்  நிறைந்து கிடக்கும் 
அமைதியை அறுக்கும் 
கடிகாரத்தின் முட்களைப்போல
எப்போதும் இசைத்துக்கொண்டிருக்கிறது 
உன் மௌனங்கள் ....!

இருளை விரட்டும் 
மெழுகுவர்த்தியின் வெளிச்சம் போல் 
உறக்கத்தை விரட்டி 
உட்கார்ந்து விடுகிறது 
கண் வழி புகும் உன் கனவுகள் ...!

யாருமற்று தவிக்கும் தனிமையில் 
என்னோடு பேசியபடி 
நிழலாய் கைகோர்த்து நடக்கிறது 
உன் விரல்கள் ...!

தேனில் நனைந்து 
பூக்களில் தவழ்ந்து 
காதுக்குள் வந்து குதிக்கிறது 
காற்றில் மிதந்து வரும் 
 உன் குரல்கள்...!

என் வாழ்க்கைப்  புத்தகத்தின் 
எல்லா பக்கங்களிலும் 
பிழையில்லாமல் எழுதப்பட்டிருக்கிறது 
உன் பெயர் ....!

நேசிக்கவும் வாசிக்கவும் 
நானிருக்கிறேன் .....
காதல் தொட்டுக்கொண்டே இருக்கும் 
தூரத்தில் நாம் இருப்போம்...!


உன் உள்ளங்கைச் சூடு 
உசுப்பேற்றி விடுகிறது 
விரதமிருக்கும் விரல்களை ....!



கா ... த ...ல்



உன்னை நனைத்து
என்னை துவட்டுகிறது ...

நீ நடக்க
எனக்கு குடைவிரிக்கிறது ...

உன்னை கவிதையாக்கி
என்னை மொழிபெயர்க்கிறது ...

நீ உறங்க
எனக்கு தாலாட்டுகிறது ...

உன்னை சிரிக்கவைத்து
என்னை நிரப்புகிறது ...

நீ சிவக்க
எனக்கு சிலிர்க்கிறது ...

உன்னைப் படைத்து
என்னைப் படுத்துகிறது ...

உன்னில் தொடங்கி
உன்னிலே முடியும்
ஒரு வாழ்வின் மீதிப் பாதியில்
இன்னும் மிச்சமிருக்கிறது ...

கா ... த ...ல்

18 October 2017

தொலைந்துபோன_தீபாவளிகள்


பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் ஊருக்கு ஊர் மாறுபட்டாலும் இந்தியா முழுவதும் கொண்டாடும் பண்டிகை தீபாவளி. மற்ற பண்டிகைகள் விதவிதமாய் கொண்டாடினாலும் தீபாவளியை மட்டும் பட்டாசு வெடித்து கொண்டாடுவதுதான் முறையும் மகிழ்வும் கூட. குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் கொஞ்சம் சவாலும் கொஞ்சம் பயமும் கலந்தே இந்த பண்டிகை கடந்து போகும். பெரிய அளவில் செலவு வைக்கும் பண்டிகைதான் ஆனாலும் நினைவுகளில் எப்போதும் பொழிந்துகொண்டிருக்கும் ஒரு தீராத மத்தாப்பைப்போல வெளிச்சங்களால் நிரம்பியவை.

திரியைக்கிள்ளி தீ வைத்தவுடன் சத்தமிட்டு வெடிக்கும் வெடியைப்போல தீபாவளி என்ற சொல்லுக்குள் தான் எத்தனை வெடிகள் எத்தனை சத்தங்கள் புதைந்து கிடக்கின்றன. எல்லோருக்கும் சொல்லிக்கொள்ள பல கதைகளையும், நினைத்து நெக்குருக பல நினைவுகளையும் சில தீபாவளிகள் கொடுத்திருக்கும். வளர்ந்து படித்து முடித்து பட்டம்வாங்கி கல்யாணமும் முடித்து குழந்தை பேரன் பேத்திகளையும் பார்த்த பின்பு நினைத்துப்பார்க்கும் தீபாவளிகளை விட பால்யத்தின் பரணில் வெடிக்காத பட்டாசுகளைப்போல தப்பிவிட்ட தீபாவளிகள் தான் கைகளில் ஒட்டிக்கொண்ட மருந்துகளைப்போல பிசுபிசுப்பாய் எப்போதும் நினைவுகளில் இருந்து அகலாதவை.

அவரவர் கொண்டாடி, சந்தோஷித்து, திளைத்து, இழந்து, களைத்து, மறந்து, வெறுத்து ஒதுக்கிய பண்டிகைகளும் , இப்படி கொண்டாட வேண்டுமென  பலநாட்கள் திட்டமிட்டு எல்லாம் வாங்கி குவித்து எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்த நாளுக்குமுன் எதிர்பாராமல் உறவுகளில் ஒருவர் இறந்துவிட அத்தனை கனவுகளும் நொடியில் உடைந்து துக்கம் வந்து அப்பிக்கொண்ட பண்டிகைகளையும் அவரவர்களால் தான் சொல்லிக்கொள்ளவோ நினைத்துப்பார்க்கவோ முடிகிறது. அப்படி சொல்லிக்கொள்ள பத்தாயிரம் வாலா போல என்னிடமும் பல கதைகள் நீண்டுகொண்டே போனாலும் கேட்பதற்கு காதுகள் இல்லாத காரணத்தால் நினைத்துப்பார்க்கிறேன்.

நிச்சயமாய்… தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த வயதுகளில் பட்டாசு சத்தம் கேட்டு அதைவிட சத்தமாய் அழவோ, அல்லது அந்த திடீர் சத்தத்தில் திடுக்கிட்டு எழவோ செய்திருப்பேன். ஆனால் இது தீபாவளி , இது பட்டாசு, இதை இப்படி வெடிக்கணும், இந்த மத்தாப்பை இப்படி பிடிக்கணும் என தெரிந்து கொண்ட வயதிலிருந்து இன்று வரை எத்தனையோ தீபாவளிகளைக் கடந்துவந்த பின்னும் அந்த சிறுவயதின் கொண்டாட்டக்கனவுகள் இப்போதும் துளிர்க்கின்றன. பத்த வெச்ச நெலபுருசு போல பொங்கி மேலெழும்புகின்றன சந்தோசங்கள்.

இப்போது காலம் வளர்ந்து நேரம் சுருங்கிவிட்ட காரணங்களால் சின்ன சின்ன குழந்தைகளைக்கூட துணிக்கடைகளுக்கு அழைத்துப்போய் அவர்களுக்கு பிடித்ததை வாங்கி போட்டுப்பார்த்து ரெடிமேடாக எடுத்து வந்துவிடுகிறோம். ஆனால் எங்கள் பால்யத்தில் அந்த வாய்ப்புகள் இல்லை ஆனால் அதைவிட அழகான, வார்த்தைகளால் உணர முடியாத, சொல்லிப் புரியவைத்துவிட முடியாத பல சந்தோசங்கள் கொட்டிக்கிடந்தன. அப்போதெல்லாம் இத்தனை ரெடிமேடு துணிகள் கிடையாது, துணி எடுத்துதான் தைக்க வேண்டும். எங்களிடம் எதுவும் கேட்காமலேயே அவர்களாகவே துணிகளை எடுத்துவந்துவிடுவார்கள். எனக்கும் அண்ணனுக்கும் ஒரே நிறத்தால் பேண்ட்டும் வெவ்வேறு நிறத்தில் சட்டை துணியும் வாங்கிவருவார்கள். தங்கைக்கு தைப்பதென்றால் பட்டுப்பாவாடை-சட்டை, ரெடிமேடெனில் வெல்வெட் ஆடை. ஒருமுறை எங்கள் இருவருக்கும் நல்ல அடர்மஞ்சள் நிறத்தில் பேண்ட் துணியும் எனக்கு சிகப்புகலர் சட்டை துணி அண்ணனுக்கு பச்சைகலர் சட்டை துணியும் வாங்கிவந்தார்கள். அதைக்கொண்டு போய் டெய்லரிடம் கொடுத்து அளவு கொடுக்க நின்ற போது அவர் மேலும் கீழும் ஒரு மாதிரியாய் பார்த்துவிட்டு “தீபாவளியே உங்களுக்குதான்டா" என்றார், அந்த வயதில் அந்த வார்த்தைகள் வெட்கத்தை மட்டுமே கொடுத்தன. இப்போது அந்த காம்பினேஷனில் உடை அணிந்தால் எப்படி இருக்குமென நினைத்துப்பார்த்தால் பல மாடுகளும் சில மனிதர்களும் தெறித்து ஓடும் காட்சி அப்பட்டமாய் கண்களுக்குள் வந்து போகிறது.

துணியை தைக்க கொடுத்துவிட்டு வந்த அடுத்த நாளிலிருந்து நினைப்பெல்லாம் டெய்லரிடமே இருக்கும். "இந்நேரம் நம்ம துணியை எடுத்திருப்பாரா? அண்ணனுக்கு முதல்ல தெப்பாரா இல்ல எனக்கா? ஐயையோ சட்டைக்கு என்ன கலர் பட்டன் வைக்கணும்னு சொல்ல மறந்துட்டமே, ஒருவேளை தீபாவளிக்குள்ள சட்டை தைக்கலைன்னா நாம என்ன பண்றது?" என்னும் விதவிதமான கேள்விகள் சங்கு சக்கரம்போல சுழன்றுகொண்டே இருக்கும். ஒருவழியாய் துணிகள் தைத்து வீட்டுக்கு வந்ததும் போட்டுப்பார்ப்போம், யாராவது "உன்னுடையதை விட அண்ணனுது நல்லா இருக்குன்னு" சொல்லிட்டா வரும் பாருங்க ஒரு கோவம் வீடு ரணகளமாகும் கடைசியில் அடிவாங்கி என் உடம்பு ரணமாகும்.

வழியும் எண்ணெய் காதுக்குள் குறுகுறுக்க, தலையில் தேய்த்த அரப்பு வாய்க்குள் புகுந்து கசக்க குளித்துவிட்டு வந்து போட்ட புதுத்துணியை எல்லோர்கிட்டையும் காட்டனும்ல, ஒவ்வொரு நண்பர்கள் வீடு சொந்தக்கார வீடாக போய் காட்டிவிட்டு அவர்களின் வாசலில் ஒரு பட்டாசைப் பற்றவைத்துவிட்டு, அவர்கள் கொடுக்கும் இனிப்பை மென்றுகொண்டே  நோம்பிக்காசு கொடுங்கன்னு கேட்டு வாங்கிட்டு வீட்டுக்கு வந்தால் குளித்துவிட்டு வந்திருக்கும் பாட்டி நாங்கள் கேட்காமலேயே தன் சுருக்குப்பையிலிருந்து "நோம்பிக்காசு" என்னும் பெயரில் எடுத்து நீட்டும் ஐந்துரூபாயோ பத்துரூபாயோ இனி எத்தனை ஜென்மமெடுத்தாலும் சம்பாதித்துவிட முடியாதவை. அந்த தீபாவளிகள் தான் புகையை விட அதிகமாய் நினைவுகளையும் சத்தங்களைவிட அதிகமாய் சந்தோஷங்களையும் நிரப்பிவைத்தவை. தனித்தனி குடும்பங்களாய் வாழ்வதை பெருமையாய்க் கூறிக்கொள்ளும் இன்றைய வாழ்வில் கைப்பேசியில் வந்துவிலும் ஜிப் பைல்களில் வெடிக்கின்றன டெக்கனாலஜி பட்டாசுகள்.

பெரிய பெரிய ஷாப்பிங் மால்களுக்கு போகும்போது நமக்கு வேண்டியவைகளை எடுத்துப்போட ஒரு பிளாஸ்டிக் கூடை வைத்திருப்பார்களே அப்படியான ஒரு கூடை இப்போதும் எங்கள் வீட்டில் இருக்கிறது. தீபாவளிக்கு முந்தைய நாள் அந்தக்கூடை முழுவதும் பட்டாசு வந்துவிடும். சிறுவயது என்பதால் வெடிகள் கொஞ்சமாகத்தான் இருக்கும். அண்ணனும் நானும் வெடிகளை பிரித்துக்கொண்டு வெடியில்லாத பட்டாசுகளையும் மூன்றாக பிரித்து தங்கைக்கென ஒரு பங்கு கொடுத்துவிடுவோம். அவள் வெடிக்க பயப்படும் நேரங்களில் அதையும் நாங்களே வெடிக்கவும் செய்வோம். துப்பாக்கிகளில் சுருள் கேப்பை போட்டு இப்படி வெடிக்கவேண்டுமென சொல்லித்தரும் சாக்கில் அதையும் பெரும்பாலும் நானே வெடித்துவிடுவேன். முக்கால்வாசியை தீபாவளிக்கு முந்தைய இரவே வெடித்துவிட்டு என் பங்கை தீபாவளி அன்று இரவு எடுத்து அவர்களுக்கு தராமல் வெடித்து அவர்களை வெறுப்பேத்துவதில் வரும் ஆனந்தம் இப்போது எத்தனை கோடிக்கு பட்டாசு வாங்கி வெடித்தாலும் கிடைக்காத ஒன்று.

சரமாய் வாங்கிவரும் பட்டாசுகளை தனித்தனியாய் உதிர்த்து திரிகளைக்கிள்ளி வைத்துக்கொண்டு கையில் பிடித்து தூக்கிப்போடும் ஊசிப்பட்டாசுகள் கொடுத்த உற்சாகத்தை இப்போது வெடிக்கும் பத்தாயிரம் வாலாக்கள் , ஐயாயிரம் வாலாக்கள் கொடுத்துவிடுவதில்லை. மதிய நேரத்தில் தெருத்தெருவாய் சுற்றி வெடிக்காத பட்டாசுகளைப் பொறுக்கிவந்து அதிலுள்ள மருந்துகளை மட்டும் தனியே சேர்த்து ஒரு காகிதத்தின் நடுவில் கொட்டி நாலு பக்கங்களிலும் நெருப்பு வைத்து அந்த நெருப்பு மருந்தின் கிட்டே வரும்போது தொற்றிக்கொள்ளுமொரு பரபரப்பு, மருந்தில் நெருப்பு பட்டவுடன் பொங்கிவரும் "புஷ்வானம்" என இந்த தலைமுறைக் குழந்தைகள் நெருங்கிவிடாத ஒரு சந்தோசத்தின் உச்சியில்தான் மிதந்தன எங்கள் தீபாவளிகள். பட்டாசு வாங்க வசதியில்லாத குழந்தைகள் ஏக்கத்தோடு பார்க்கும் தருணங்களில் அவர்களிடம் கொடுக்கும் சில கொள்ளு பட்டாசுகளிலும் சில மத்தாப்புகளிலும் எங்களைவிட அவர்கள் அதிகமான சந்தோசத்தை உணர்வார்கள். ஒருகாலத்தில் நாங்களும் பட்டாசுகள் வாங்க முடியாமல் தூரத்தில் வெடிப்பவர்களைப் வேடிக்கை பார்த்து சந்தோசப்பட்டுக்கொண்ட தீபாவளிகளும் உண்டு. மிச்சமிருக்கும் பட்டாசுகளை கார்த்திகை தீபத்தன்று வெடிக்க வேண்டுமென எடுத்து பத்திரப்படுத்திவிட்டு கார்த்திகை தீபம் எப்போ எப்போ என கேட்டு நச்சரித்த நாட்களின் நினைவுகள் பாம்பு பட்டாசு போல சுருள் சுருளாய் பொங்கிவருகிறது. சிறிய அணுகுண்டு ஒன்றை பற்றவைத்துவிட்டு சத்தத்திலிருந்து தப்பிக்க காது பொத்தியபோது ஊதுபத்தியால் சுட்டுக்கொண்டது , பட்டாசிலிருந்து தெரித்துவிழுந்த நெருப்புத்துண்டு புதுசட்டைக்குள் புகுந்து வயித்தில் காயமானது, எங்கோ பார்த்துக்கொண்டு பிடித்த மத்தாப்பின் மருந்து எரிந்து முடிந்து கையைச்சுட்டு கொப்பளமானது, கல்லுவெடியை வாங்கிக்கொண்டு வெடிக்கத்தெரியாமல் வெடித்து சிதறிய கற்களால் சுரீரென அடிவாங்கியதென எத்தனை எத்தனை நினைவுகள் பிஜிலி வெடிகளைப்போல விட்டு விட்டு வெடிக்கின்றன.

தீபாவளி முடிந்து பள்ளிக்கூடம் திறக்கும் நாளன்று தீபாவளிக்கு எடுத்த புதுத்துணியை போட்டுவரலாம் என கொடுத்திருக்கும் சிறப்பு சலுகைக்காகவே  இன்னுமொரு பண்டிகைபோல அந்தநாள் இனிப்பாய் விடியும். தெருவெங்கும் புத்தகப்பை சுமந்துபோகும் பள்ளிக்கூட பிள்ளைகளை அந்த ஒருநாள் மட்டுமே கலர் துணிகளில் பார்க்கமுடியும். அடுத்த தீபாவளி வரும் வரை  கல்யாணம், காதுகுத்து, கோவில் பண்டிகை என காத்திருக்கும் அத்தனை நல்ல விசேஷங்களுக்கும் அந்த புது துணிதான். அதைப்போட்டுக்கொண்டு உருண்டு, பெரண்டு, அழுக்காக்கி, கரையாக்கி அந்த ஒற்றை புதுத்துணியோடு வருடம் முழுவதும் விடியும் இரவுகள் இனி எந்த விடியலிலும் கிடைக்காது.

தீபாவளிக்கு இரண்டுநாள் முன்பே எல்லோருக்கும் சேர்த்து பலகாரங்களும், முறுக்குகளும் சுடும் அத்தைகளையும், சித்திகளையும் இப்போது பார்க்கமுடியவில்லை. ஊருக்குள் வந்து நிற்கும் தள்ளுவண்டியை ஆக்கிரமித்து தங்கள் தாவணி பாவாடைகளுக்கோ சேலைகளுக்கோ மேட்சாக வளையல்கள், கிளிப்புகள், ரிப்பன்கள், ஹேர்பின்கள் என வேண்டியதைத் தேடும் அக்காக்களையும், மருதாணியை அரைத்துக்கொடுத்துவிட்டு சிவந்துகிடக்கும் அம்மிக்கல்லுகளையும் பார்க்கமுடியவில்லை. தீபாவளிக்கு ரிலீசாகும் தங்கள் தலைவர்களின் படங்களில் அவர்கள் உடுத்தும் உடைகளைப்போலவே உடுத்திக்கொண்டு கொத்தாக கிளம்பும் நண்பர்கள் இப்போது தங்கள் குழந்தைகளின் புது துணிகளுக்கு மஞ்சள் வைத்துக்கொடுக்கும் வேலையை சலித்தபடி செய்கிறார்கள். கடந்து வந்திருக்கும் காலம் மிகச்சிறியதுதான் ஆனால் இழந்துவிட்ட சந்தோசங்கள் மிகப்பெரியவை. எப்போதும் வற்றாமல் நினைவுகளில் தேங்கி நிற்கும் இந்த தொலைந்துபோன தீபாவளிகளைப்போல.

இத்தனை வருடங்களைக் கடந்துவந்தபின்னும் இன்னும் மாறாமல் இருக்கும் ஒரே விஷயம் பெண்களும் சமையலறைகளும்தான். பண்டிகைகள் வந்துவிட்டால் என்ன சமைக்கணும், யார் யாருக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, எதைச்செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள், என்ன செய்து அசத்தலாம் என அம்மாக்களின் யோசனைகளிலேயே பாதி தீபாவளி முடிந்துவிடும். காலையிலேயே குளித்து முடித்துவிட்டாலும் சமையலை சாக்காக வைத்து புது சேலையக் கூட கட்டமாட்டார்கள், சிறப்பு பட்டிமன்ற பேச்சுக்களை காதில் கேட்டபடி சமையல் வேலைகளை முடித்துவிட்டு மதியத்திற்கு மேல் கொஞ்சநேரம் கட்டிவிட்டு அவர்கள் தீபாவளியை சமையலறையோடு முடித்துக்கொள்வார்கள். அவர்களைப்போன்ற அம்மாக்களும், பெண்களும் திளைத்துக் கொண்டாடும் விதமாகவும், முடிந்த அளவு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத, யாருக்கும் காயமாகாத தீபாவளியாய் இந்த தீபாவளி அமையட்டும்.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் ...!

---தனபால் பவானி
13.10.2017




#HAPPY_DIWALI #HAPPY_FESTIVAL #DIWALI_2017
#DIWALI #SAFE_DIWALI

19 August 2017

செல்ஃபிக்களால் நிரம்பும் கைப்பேசிகள்


எல்லோருக்கும் எப்போதும் ஆறுதலாகவும் சில சமயங்களில் இம்சையாகவும் இருக்க வேண்டுமென்பதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன கைப்பேசிகள். தொழில்நுட்பங்கள் வளர வளர மனித மனம் குறுகிக் கொண்டிருப்பதை  கவனிக்க யாருக்கும் நேரமில்லை, நேரமிருந்தாலும் அதைப்பற்றிய அக்கறையும் கொஞ்சம் கொஞ்சமாய் மழுங்கிக்கொண்டு வருகிறது என்பதை மறுப்பதற்கும் இல்லை.

எங்கெல்லாம் செல்ஃபிகள் எடுக்கக்கூடாதோ அங்கெல்லாம் எடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் இப்போது நம் கைப்பேசிகளில் நிரம்பி வழியும் அத்தனை செல்ஃபிக்களையும் அடுத்த வருடம் எடுத்து பார்ப்போமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. நான் உட்பட "வேண்டாத" செல்ஃபிகள் எடுப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சில நிமிட வசீகரத்திக்காக சிலர் உயிரைக்கூட விட்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.

விபத்தில் சிக்கி இரண்டு கால்களும் இழந்தவர் கதறிக்கொண்டிருக்கும் போது, ஒட்டுமொத்தமாய் எரிந்துகொண்டிருக்கும் வீட்டிற்கு முன்னால் நின்று, சுனாமி அலைகள் சுருட்ட நெருங்கிவிட்ட தருணம், வேகமாய் வரும் ரயிலின் முன்னால் அது கடக்கும் நொடி, இறந்தவரின் உடலை சுமந்தபடி, வெற்று கட் அவுட்டுகளுக்கு முன்னால் என எத்தனை எத்தனை செல்ஃபிகள்? எல்லாவற்றுக்கும் மேலாய் கல்யாண மண்டபங்களில் கேமரா மேனை மறைத்துக்கொண்டு எடுக்கிறார்கள் பல செல்ஃபிகள் அவர் பாடு எத்தனை திண்டாட்டமென அருகில் இருந்து பார்த்திருக்கேன்.

தடித்த அட்டை போட்ட புகைப்பட ஆல்பம் ஒன்று எங்கள் வீட்டில் இருந்தது நான் சிறுவனாக இருந்த போது, அதில் பக்கவாட்டு வடிவில் நீண்ட ஒவ்வொரு கருப்பு அட்டையிலும் அங்கங்கே கருப்பு-வெள்ளை புகைப்படங்களை ஒட்டி வைத்திருப்பார்கள். அம்மா அப்பாவின் கல்யாண ஆல்பம் அது. விவரம் தெரியாத அந்த வயதில் அதை வைத்துக்கொண்டு அதில் இருப்பது யார் யாரென அடையாளம் சொல்லுவார்கள். அதில் இருப்பவர்களுக்கும் இப்போது நேரில் பார்ப்பவர்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது முற்றிலும் வேறு மாதிரி இருப்பார்கள். பலர் இப்போது இல்லாமல் கூட இருக்கலாம். நாளடைவில் வாடகை வீடுகள் மாற மாற அந்த புகைப்படங்கள் பசையிழந்து விழுந்து கிழிந்தும் தொலைந்தும் விட்டன, ஆனால் எப்போதும் விழுந்துவிடாதபடி மனதின் எல்லா பக்கங்களிலும் கெட்டியாய் ஒட்டியிருக்கின்றன. அந்த தொலைதல் சம்பவத்திலிருந்து தப்பித்த சில புகைப்படங்கள் இன்னும் இருக்கின்றன கொஞ்சம் கரையான்கள் அரித்தபடியும் கொஞ்சம் காலங்கள் அரித்தபடியும். ஆனால் அவை சுமந்து கொண்டிருக்கும் நினைவுகள் என்பது எந்த கரையான்களாலும், எந்த காலங்களாலும் அழித்துவிட முடியாதவை.

பத்து வருடங்களுக்கு முன்பு வீட்டு விசேங்களுக்கும் கல்லூரி சுற்றுலாக்களுக்கும் தயாராகும்போது கையில் கிடைக்கும் ஒரு குட்டி கேமராவை வைத்துக்கொண்டு அந்த காலத்தில் பண்ணிய அலப்பறைகள் கொஞ்ச நஞ்சமா.? கேமராவை வைத்திருப்பவனைச் சுற்றி ஒரு கூட்டமே இருக்கும். அதுக்கான செல், பிலிம் ரோல் என தேடித் தேடி வாங்க வேண்டும். இப்போது போல ஒரு போட்டோ எடுத்துவிட்டு பிடிக்கலைனா பட்டென அழித்துவிட முடியாது. தெரியாமல் கை ரிவர்ஸ் பட்டனில் பட்டுவிட்டால் அவ்வளவுதான் மொத்தமும் அவுட். மங்கிய பிலிம் ரோல் மட்டும்தான் மிஞ்சும். போட்டோ பிடித்து, அதை பத்திரமாய் பாதுகாத்து, ஊருக்கு வந்ததும் கடையில் கொடுத்து, நெகட்டிவ் ரெடியானதும் ஒருமுறை வெளிச்சத்தில் அதை உயர்த்திப்பார்த்து குட்டியாய் சந்தோஷப்பட்டு, வேண்டிய போட்டோக்களை பிரிண்ட் போட சொல்லி, அவர்கள் சொன்ன நேரத்திற்கு முன்பே போய் காத்திருந்து, புகைப்படங்களை கையில் வாங்கும் போது நல்லா வந்திருக்க வேண்டுமென வேண்டி, அந்த கவரை பிரித்து புகைப்படத்தை பார்க்கும் போது வரும் வெட்கம் கலந்த சந்தோசத்தை இன்று ஆயிரக்கணக்கில் பகிர்ந்துகொள்ளும் வாட்ஸ்அப் புகைப்படங்களில் ஒரு படம் கூட தருவதில்லை.

எல்லா ஊருக்குமென பிரத்தியேகமான போட்டோகிராபர் எப்போதுமிருப்பார், அவர் படம் எடுத்தால் கல்யாணம் நல்லபடியா நடக்குமென்ற நம்பிக்கை கூட இருந்திருக்கிறது. அதே போல இறந்தவர்களைக் கூட ஒரு சிலர் மிக அழகாக படமெடுப்பார்கள். எங்கள் ஊரில் பழைய மோகன் தியேட்டர் எதிரில் சாந்தி ஸ்டுடியோ என்னும் புகைப்படக்கூடம் இருந்தது இப்போது அந்த கடையை மெயின் ரோட்டுக்கு மாற்றிவிட்டார்கள். அவர் கடைக்கு சிறு வயதில் பள்ளிக்கூடம் சேர்க்க போட்டோ எடுக்க கூட்டிப்போனார்கள் ஒருமுறை. கடைக்கு வெளியே கலர் கலர் சட்டங்களில் கருப்பு வெள்ளையில் பல நடிகர்களும், பல நடிகைகளும் தொங்கிக்கொண்டிருந்தார்கள்.
அதையெல்லாம் அவரே நேரில் சென்று எடுத்திருப்பாரோ என்ற ஆர்வமும், வியப்பும் அப்போது வந்ததுண்டு. என்னை உள்ளே அழைத்து சில ஒப்பனைகள் செய்து, ஒரு இடத்தில் நிற்க வைத்து என் உடலுக்கான சில பல நெளிவு சுழிவுகளை சொல்லிக்கொடுத்து சொல்லும் வரை ஆடாதே என சொல்லிவிட்டுப்போனார். கேமராவை கையிலெடுத்து என்னென்னவோ சொல்லி, திட்டி, புலம்பி, சலித்து ஒரு படம் எடுத்தார். ஆனால் அந்த புகைப்படம் வாங்கி பள்ளியில் சேர்த்துவிட்டு நெகட்டிவ் வாங்காமல் விட்டுவிட்டோம். இப்போது அது எப்படி இருக்குமென்ற கற்பனைக்குள் கூட அது வரவில்லை. பள்ளிப்படிப்பு முடிந்ததும் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எடுத்திருப்பேன். இப்போதும் புகைப்படங்களின் மீதான காதல் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் பள்ளிக்கூடங்களில் எடுத்ததாய் ஒரு படம் கூட இன்றுவரை என்னிடமில்லை.  இது ஒரு வகையில் வருத்தமாய் இருந்தாலும் கூட அதன் நினைவுகள் நெஞ்சுக்கூட்டில் கதகதப்பாய் இருக்கிறது.

படத்தில் நீங்கள் பார்ப்பது வேறு யாருமல்ல நானேதான். அப்படித்தான் என்னையும் நம்ப வைத்திருக்கிறார்கள். அண்ணனுக்கு பிறகு நானும் பையனாக பிறந்துவிட்டதால் மொட்டையடிக்கும் முன் பெண் வேடமிட்டு புகைப்படங்கள் எடுத்திருக்கிறார்கள். நின்றபடியும், கால்மேல் கால் போட்டு அமர்ந்தபடியும், பூச்சாடிக்கு அருகில் இருந்தபடியும் என பல விதங்களில் இருந்த படங்கள் ஒவ்வொன்றாய் தொலைந்து இப்போது இதுமட்டும் கைப்பேசிக்குள் பத்திரமாய் கிடக்கிறது. இந்த படம் எடுக்கும் போது என்னென்ன நடந்தன என நினைவில் இல்லை. ஆனால் இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எல்லோருக்குள்ளும் இந்தமாதிரி மிகப்பிடித்த புகைப்படங்கள் நிறைய இருக்கும் அது சார்ந்த கதைகளும் நினைவுகளும் கூட இன்னும் பசுமையாய் இருக்கக்கூடும். அது காலங்கள் கடந்தும் நம்மை இன்னும் சிறு குழந்தையாகவே வைத்திருக்க உதவும் ஒரு அழகான வரம்.

எத்தனை காலமானாலும் ஒரு புகைப்படத்தைப் பார்க்கும் போது மனசு மிகவேகமாய் கடந்த காலத்தில் சுழன்று அந்த படம் எடுத்த நிமிடத்தில் போய் குத்தி நிற்கும், அதுமட்டுமல்லாமல் அந்த நொடிகளில் நடந்த அழகான நினைவுகளை இன்னும் அழகாய் ஒரு ஏக்கத்தோடு அசைபோடும். மீண்டும் பின்னோக்கிச் செல்ல முடியா வாழ்க்கை எல்லோரையும் ஒரு வழிப்பாதையிலேயே வழிநடத்திச் செல்கிறது. அவரவர் வீடுகளில் சட்டங்களுக்குள் சிரித்துக்கொண்டிருக்கும் பழைய முகங்களைப் பார்க்கும்போது அவர்களின் கோபமும், குரூரமும் வெளிப்படும் அதே வேளையில் இன்னும் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள் மெலிதான ஒரு அன்பும், யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத பல ஏக்கங்களும் ஆசைகளும் அந்த முகங்களில் ஓடும். அதை இப்போது யார் நினைத்தாலும் நிறைவேற்றிவிட முடியாது. ஆனால் நம் முகங்கள் அந்த மாதிரியான மாலையிட்ட சட்டங்களுக்குள் செல்லும் வரை
மிச்சமிருக்கும் வாழ்வில் கொஞ்சமேனும் கொடுத்து செல்வோம் கையிலிருக்கும் நிறைய அன்பை...!



#WorldPhotographyDay
#Photography

29 July 2017

வயலும்... வாழ்வும்...!


வார இறுதியில் வரும் இரண்டு விடுமுறை நாட்களை எப்படி கழிப்பதென வாரம் முழுவதும் யோசனை செய்ய ஒரு கூட்டம் இருக்கிறது. வயலும் வயல்சார்ந்த நிலமுமாய் ஒரு நாளைக்கழிக்கவோ அல்லது ஒரு நாள் முழுவதும் விவசாயம் செய்யவோ வேண்டுமென்று நீண்ட நாட்களாக மனதில் ஊரித்திளைக்கும் சின்னச்சின்ன ஆசைகளில் ஒன்று நிறைவேறிய நாளாய் இன்று மாறிப்போனதில் மனம் பரவசத்தில் இனிக்கிறது.

நண்பரின் உறவினர்கள் வீட்டுக்கு சென்று வர கிருஷ்ணகிரி வந்திருக்கிறோம். நலம் விசாரிப்புகளும் புன்னகைகளும் பரிமாறிக்கொண்ட பின்பு, இங்குள்ள சிறப்புகளை பார்க்கலாமென நினைத்த பொழுது உச்சிவெயிலின் வெப்பம் உச்சந்தலைக்குள் ஆழமாய் இறங்கியது. இந்த வெப்பத்தை குளித்துதான் குறைக்க வேண்டுமென
வயல்களும் கிணறுகளும் நிறைந்த ராயக்கோட்டை போகும் வழியை நோக்கி புறப்பட்டோம்.

இருபக்கமும் பச்சை கம்பளங்கள் விரித்தது போன்ற வயல்களின் நடுவே கருப்புச்சாலையில் வலுக்கிச் செல்கிறோம்.  கற்றைக்கூந்தலில் விலகிப் பறக்கும் ஒற்றை முடியென நெடுஞ்சாலையில் இருந்து ஊருக்குள் பிரியும் ஒரு குறுகிய சாலைக்குள் சென்று காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு வரப்புகளின் மீது நடக்கிறோம்.

வயல் தேவதையின் இடுப்பில் வற்றாத நீரோடும் முத்தமிட்டபடி நீந்தும் மீன்களோடும் ஒரு கருப்புக்குடமென உட்கார்த்திருந்தது அந்த கிணறு.
வெட்கம் ததும்ப சிரிக்குமொரு பேரழகியின் பல்வரிசை போல அந்த கிணற்றின் படிக்கட்டுகள் அத்தனை அழகு. தென்னை மரநிழலில் தன் ஈரங்களை துடைத்துவிட்டு இளப்பாறிக் கொண்டிருந்தது ஒரு பம்புசெட்.
காதலிக்கும் மீன்களின் கனவுகள் மீது எங்கள் சத்தங்களால் கல்லெறிய வேண்டாமென நீளும் வரப்பில் மீண்டும் நடக்கிறோம்.

வலப்புறம் கதிர் அறுக்கும் பெண்களும் இடப்புறம் ஏர் உழுவும் ஆண்களுமாய் காணும் நொடியில் திறந்துவிடப்பட்ட பம்புசெட்டிலிருந்து வயல் துளைத்து ஓடுகிறது ஒரு குட்டி வாய்க்கால். ஒற்றைப்பல் உடைந்து சிரிக்கும் சிறுமியென
இங்கொரு கிணறு ஒற்றைப்படி உடைந்தபடி. தரை காணக்கிடைக்கா தண்ணீரில் அது தன் இருப்பை ஆழமாய் உணர்த்தியது.ஆறுகளிலும் வாய்க்கால்களிலும் ஆசை தீர நீந்திக் குளித்திருந்தாலும் கிணறு  என்பது கொஞ்சம் அச்சமூட்டக்கூடியது. ஆனாலும் வருடங்கள் பல கழிந்தபின் இத்தனை அழகாய் ஒரு இடத்தையும் இவ்வளவு அடர்த்தியாய் ஒரு கிணற்றையும் பார்க்கும்போது பயம் துறந்து ஒரு துள்ளல் தொற்றிக்கொண்டது. ஆடை களைந்து ஆழம் தெரிந்து அந்த குளிர்ந்த நீரில் குதித்த நொடியில் உடம்பெங்கும் பரவிய சிலிர்ப்பு இன்னும் பல நாட்கள் இந்த உடம்பில் உலாவரும்.

கிணற்றின் உடம்பில் நிரம்பியிருந்த பாசம் நகங்களின் இடுக்குகளில் நுழைந்து, நீரில் மிதந்த தென்னங்கீற்றை பார்த்து பாம்பென பயந்து, நெடுநாட்களுக்குப்பின் ஒரு குட்டிக்கரணம் அடித்து, பாயும் பம்புசெட்டில் பரவசமாய் நனைந்து, இந்த அழகியலை பிரிய மனமில்லாமல் தலை துவட்டுகையில் தெறித்து விழுகின்றன சுமக்க முடியா சோம்பல்களும், சொல்ல முடியா சோகங்களும்.

கடந்த தலைமுறையில் இதுவெல்லாம் அன்றாட சாதாரண நிகழ்வு, ஆனால் இந்த தலைமுறைக்கு வாழ்வின் பின்னால் எதற்கெனத் தெரியாமலே ஓடும் அவசரத்தில் எப்போதாவது வாய்க்கும் சிறு ஆறுதல். அடுத்த தலைமுறையில் இந்த வயல்வெளி ஒரு அடுக்குமாடி குடியிருப்பாகவும், இந்த கிணறு அங்கே நீச்சல் குளமாகவும் மாறக்கூடும். பரிமாறவும், பசியாறவும் சோறும், தாகம் தீர்க்க தண்ணீரும் கிடைக்க வாய்ப்பே இல்லாமல் போகும் ஒரு துயர வாழ்வை நோக்கி வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதில் மனம் கனத்துத்தான் போகிறது.

---தனபால் பவானி
29.07.2017

#வயலும்_வாழ்வும்
#பயணக்கட்டுரை
#கிராமம்_விவசாயம்


14 July 2017

டெண்ட் கொட்டாய்


வார இறுதி  விடுமுறையில் சினிமாவுக்கு போக அலுவலகத்தில் இருந்தபடியே டிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தான் நண்பனொருவன். எந்த வரிசையில் இடம் வேண்டும், கூட வரும் நபர்களின் எண்ணிக்கை, இடைவேளையில் கொறிக்க வேண்டியவை என ஒரு பெரும்தொகை கொடுத்து எல்லாம் தேர்வுசெய்துவிட்டான். உட்கார்ந்த இடத்திலிருந்தபடியே எல்லாம் கிடைத்தது. டிக்கெட் கிடைத்த ஆவலில் அவன் புன்முறுவல் செய்ய என் நினைவுகளின் படச்சுருள் பின்னோக்கிச் சுழன்று நான் விபரமறிந்து பார்த்த "முதல்  படத்தில்" போய் நின்றது.

பவானி வடக்குப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது குரங்குளின் வாழ்க்கையைப்பற்றிய ஒரு "டாக்குமெண்ட்ரி" படத்துக்கு கூட்டிப்போவதாகவும் அதற்கு ஒவ்வொரு மாணவனும் ஒரு ரூபாய் கொண்டுவர வேண்டுமெனவும் அறிவிப்பு வந்தது. எனக்கு வாரம் முழுவதும் சேர்த்தே ஒரு ரூபாய் கிடைக்காது இதில் ஒரே நாளில் ஒரு ரூபாயா என விழிபிதுங்கி எப்படியோ போராடி வீட்டில் ஒரு ரூபாய் வாங்கி என் பெயரையும் சினிமாவுக்கு வருபவர்களின் வரிசைப்பட்டியலில் இணைத்துவிட்டேன். கண்களுக்குள் கனவாய் நிறைந்திருந்த அந்த நாளும் வந்தது. பெயர்பட்டியல் படித்து வரிசையாய் நிற்கவைத்து பள்ளியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுள்ள ஒரு “டெண்ட் கொட்டாய்க்கு” அழைத்துப் போனார்கள்.

அப்போது பவானி வர்ணபுரத்தில் இருந்த "சங்கமேஸ்வரி திரையரங்கம்" என்று எல்லோராலும் அறியப்பட்ட டெண்ட் கொட்டாயில்  பரந்து கிடந்த மணற்பரப்பும் மரப்பலகை பெஞ்சுமாய், ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் நடுவில் நேர்க்கோடு போல ஒரு சின்ன சுவரால் பிரித்து வைத்திருந்தார்கள். பெரிய வெள்ளைத்திரையை கண்களுக்குள் வாங்கியபோது அது அந்த வயதுக்கான தேவலோகமாகவே தெரிந்தது. அப்போது கல்யாணமண்டபம், கோவில்கள், அரசு மருத்துவமனை தாண்டி நான் பார்த்த மிகப்பெரிய கூடாரம் அதுதான். எப்போதும் திரையரங்கின் வெளியே கட்டி இருக்கும் மிகப்பெரிய ஒலிபெருக்கியில் "விநாயகனே வினை தீர்ப்பவனே" பாடல் போடுவார்கள் அது முடிந்தவுடன் படம் போடுவார்கள்.  இந்த பாடல் ஒலிபரப்புவதை வைத்தே அப்போதைய நேரத்தை தெரிந்துகொண்டவர்களும் உண்டு.
காட்டில் வாழும் குரங்குகளை வேட்டையாட வருபவர்களிடமிருந்து தன் குட்டியை  காப்பாற்ற உயர்ந்த மரத்தின்மீது ஏறும் தாய்க்குரங்கு ஒரு கட்டத்தில் அந்த குட்டியை தவறவிடும், அந்த குட்டி குரங்கு ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லும்போது தாய்க்குரங்கு அதை எப்படி காப்பாற்றுகிறது என்பதை அழகாக சொல்லி இருப்பார்கள். சிறுவயதில் பார்த்த அந்த படம் நினைவுகளில் பசைபோல ஒட்டிக்கொண்டது. இடைவேளையில் பெரிய கூடையில் முறுக்குகளும், சோளப்பொரியும் சுமந்த ஒருவர் இருக்குமிடம் தேடிவந்து விற்கும் வாசம் இப்போதும் நாசிகளில் நுழைகிறது. இன்று எத்தனை பெரிய மால்களில் குளுகுளு வசதியோடு குஷன்கள் வைத்த சோபாவில் அமர்ந்து பல படங்கள் பார்த்துவிட்ட போதிலும்கூட கால்களில் மண்துகள்கள் குறுகுறுக்க மண்ணால் மேடை அமைத்து அதில் அமர்ந்து கண்கள் விரிய வியந்து பார்த்த அந்த முதல் படத்தின் பிரமிப்பை இப்போது இருக்கும் எந்த தொழில்நுட்பமும் கடுகளவும் கொடுத்துவிட முடியாது.

பத்து வருடங்களுக்கு முன்னாள் பவானி ராயல் தியேட்டரில் படம் பார்க்காதவர்களே இல்லையென்று சொல்லலாம். இப்போது புதர் மண்டி பாம்புகளும் பலவித விஷ ஜந்துக்களும் வாழுமிடமாக மாறி இருந்தாலும் ஒரு காலத்தில் யாராலும் ஒதுக்கிவிட இடமாகவும், முக்கிய அடையாளமாகவும் திகழ்ந்தது. ராயல் தியேட்டரில் தான் எத்தனை காதல்கள், எத்தனை பிரிவுகள், எத்தனை சண்டைகள், எத்தனை நட்புகள், எத்தனை சந்தோஷங்கள் இப்போது அத்தனையும் நினைவுகளின் பரண்கள்மேல் பத்திரமாய் இருக்கிறது. அப்பள பஜ்ஜியும், பன்னீர் சோடாவும் பல கைகள் மாறி காதலியிடம் சேரும்போது காதலனுக்குள் வரும் சந்தோசத்தை பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் "உயிரே" படம் ஓடிக்கொண்டிருந்த போது கூட்டம் நிரம்பி வழிய "தைய தைய" பாடலின்போது நண்பர்கள் ரயில் போல நின்றுகொள்ள என்ஜினாய் நிற்பவன் வாயில் சுருட்டோடு நிறைய  புகைவிட்டபடி பாடல் முடியும் வரை அங்குமிங்கும் ஓட, பாட்டு முடியுமுன்னே குடும்பத்தோடு வந்தவர்கள் தெறித்து ஓடிய காட்சி குறும்பாய் நிழலாடுகிறது. இப்போது விஷ்ணு தியேட்டர் என்று பெயர் மாறியிருக்கும் மோகன் தியேட்டரில் திரைக்கு முன்னால் தடுப்பு கம்பியிருக்கும் அதில் தீ என்று எழுதிய மணல் பக்கெட்டுக்கள் தொங்கிகொண்டிருக்கும் அந்த கம்பியில் ஏறி ஒருபக்கமிருந்து மறுபக்கம் போக பந்தயம் கட்டி கயிற்றில் நடப்பது போல் நடந்து விளையாடிய நாட்கள் பால்யத்தின் வரம்.  படம் போடுவதற்குமுன் திரைக்கு முன்னால் இருக்கும் பெரிய ஸ்கிரீன் முனைகளில் விளக்கெரிந்த படி மேலெழும்பும் அதிசயத்தையும் அதில் நெக்குருகி நெகிழ்ந்து கிடந்த தருணங்களையும் இந்த தலைமுறை பார்க்க வாய்ப்பு மிகக்குறைவு.

மெத்தகொட்டாய் என்று செல்லமாய் சொல்லப்படும் RAS தியேட்டரில் பல ரஜினி-கமல் படங்கள் மிகப்பெரிய கட்டவுட்டுகளோடும் பெரியபெரிய மாலைகளோடும் பார்த்த நாட்கள் மறக்கமுடியாதவை, இங்கு கிடைக்கும் முட்டை போவண்டாவிற்க்காகவே பலமுறை அடம்பிடித்து வந்ததுண்டு. இதை ஒட்டி இருக்கும் லட்சுமி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியேறுவதற்குள் வண்டிகளை வெளியே எடுக்க படும் சிரமம் இப்போது இருக்காது என நம்பலாம். காதலுக்கு மரியாதையும், WHO AM I? படங்களும் வந்தபோது பல ஞாயிறுகளின் சாயங்காலங்கள் கெளரி தியேட்டரில் விசில் சத்தங்களிலும் கைத்தட்டல்களிலும் நிறைந்தது. காதலர் தினம் பாடல்கள் வந்தபோதே துளிர்த்த கற்பனைகள் அந்த படத்தை KON  தியேட்டரில் பார்த்தபோது முழுமையடைந்து. டிப்ளமோ வாழ்வின் கடைசி தேர்வை முடித்த ஒரு வெள்ளிக்கிழமை காலையில் முருகன் தியேட்டரில் வெளியானது கில்லி படம், மதிய காட்சிக்கு பார்த்த அதுதான் அந்த தியேட்டரில் கடைசி படம். இப்போது அந்த இடம் வீடுகள் கட்ட தயாராகி விட்டது. தியேட்டரில் கேண்டீன் இருந்த இடத்தில் பலவருடங்கள் டாஸ்மாக் இருந்தது. மிகக்குறுகிய சந்துக்குள் போய் டிக்கெட் வாங்கும் சரஸ்வதி தியேட்டரில் பார்த்த பல ஜாக்கிஜான் படங்கள் நினைவுகளை விட்டு நீங்காதவை. வித்தியாசமான வடிவமைப்பில் நாற்காலிகளும் மாடிப்படிகளும் கொண்ட சரவணா தியேட்டர் அதன் அழகுக்காகவே நிறைய கூட்டம் சேர்த்தது காலச் சூழ்நிலையால் இப்போது அது பள்ளிக்கூடமாய் மாறியிருக்கிறது. பல பலான படங்களை மட்டுமே வெளியிடும் ராஜம் தியேட்டர் இப்போது நாகரீகம் கருதி பல நல்ல படங்களை மட்டுமே வெளியிடுகிறது.

மனித வாழ்வில் சினிமா என்பதையும் அது சார்ந்த கொண்டாட்டங்களையும் அத்தனை எளிதாய் ஒதுக்கி விட முடியாது. இப்போதும் கூட ஊருக்கு போகும்போதெல்லாம் நண்பர்களோடு இரவுக்காட்சிக்கு போவதுண்டு என்னதான் பெங்களூரு, சென்னை போன்ற பெரு நகரங்களில் பெரிய பெரிய தியேட்டர்களில் சினிமாக்கள் பார்த்தாலும் கூட சொந்த ஊரில் சிறு தியேட்டர்களில், மறக்க முடியா பழைய நினைவுகளின் மடியில் அமர்ந்தபடி நண்பர்களோடு படம் பார்ப்பது அலாதியானது. காலத்தின் வளர்ச்சிகளாலும், வரிகளின் கொடுமைகளாலும் இனி வரும் காலங்களில் தியேட்டர்கள் இல்லாமல் கூட போகலாம் அப்போது நினைத்துப்பார்ப்பதற்கும் சொல்லி மகிழ்வதற்கும் சில கதைகளை இந்த டெண்ட் கொட்டாய்களும் தியேட்டர்களும் கொடுத்திருக்கின்றன என்பது மறுக்கமுடியாத, மறக்கமுடியாத உண்மை.

09 July 2017

நிறம் மாறும் முகங்கள்...!


பிரியங்களின் ஒரு துளியையோ
அன்பின் ஒரு துகளையோ
நம்மீது தெளிப்பவர்களைக்
கொண்டாடும் மனதுக்கு புரிவதேயில்லை
சிலசமயம் அவர்களின் முகங்கள்
நிறம் மாறுமென்பதை

பழகவும் முடியாமல்
விலகவும் முடியாமல்
தவிக்கும் தருணங்களில்
பழைய சொற்களின் மேல் விழுந்த
நம்பிக்கை மெல்ல நழுவும்

மகிழ்வைக் கொண்டாடிய நாட்களை
சந்தேகத்தின் துருப்பிடித்த நேசமொன்று கிளறிப்பார்க்கும்

பிரமிப்பின் உச்சியில் இருந்த கணத்தை
வெறுப்புகளின் அதள பாதாளத்தில்
போட்டு மூடச்சொல்லும்

ஒரு வரியோ
ஒரு வார்த்தையோ
சுட்டிக்காட்டும் நிகழ்வை
சொற்களின் கூர்மை சோதிக்கும்

மனம் திருந்தி
தவறுகள் திருத்தி
திரும்பி வந்து ரோஜாக்களோடு கைகுலுக்கும் பொழுதில்
முட்கள் மட்டுமே ஆழமாய்  இறங்கும்....!


25 June 2017

புதுப்பித்த பழைய புன்னகை

இத்தனை
வருடங்களுக்குப் பிறகு
நீ வந்தபோது நெகிழ்ச்சியால்
நிரம்பியது என் வீடு

உள்நுழைகையில்
நீ எந்தக்காலெடுத்து வைத்தாயோ தெரியாது என்கால்கள் தரையிலில்லாமல்
இருந்ததை நீ பார்த்திருக்க மாட்டாய்

நீ குடித்துவிட்டு வைத்த பழச்சாற்றின் கடைசிச்சொட்டில் நூற்றுக்கணக்கான முத்தங்கள் மிதந்ததை
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை

ஆட்டோகிராப் நோட்டில்
அடைப்புக்குறிக்குள் நீ எழுதித்தந்த வார்த்தைகளை அதே வெட்கத்துடன்தான் இப்போதும் படித்தாய்

புரட்டிப்பார்த்த புகைப்பட தொகுப்பில்
உன்படத்தில் கசிந்த நினைவுகளின் மேல்  புதுப்பிக்கிறாய்
பழைய புன்னகையை

விடைபெற்று வீடுதிரும்ப
பேருந்தில் புறப்பட்டபோதுதான்
புரிந்துகொண்டேன்
போய்க்கொண்டிருப்பது
நீ மட்டுமல்ல என்பதை...!


17 June 2017

பாலத்தின் சுவடுகள் ...!


"இரும்பு பாலத்துக்கிட்ட போகும்போது பத்திரமா போ, கீழ எட்டிப்பார்க்காத" ன்னு அம்மா சொல்லியனுப்பும்  வார்த்தைகள் இப்போதும் அந்த பாலத்தை கடக்கும்போதெல்லாம்  நினைவுகளுக்குள் வந்துபோகிறது.


பெயர் என்னவோ "பழைய பாலம்" தான் ஆனால் அதுதான் பவானியையும் குமாரபாளையத்தையும் இணைக்கும் மிக முக்கிய பாலம். வெள்ளைக்காரன் காலத்தில் கட்டியிருக்கக்கூடும். லாரிகளோ , பேருந்துகளோ புழக்கத்தில் வராத காலத்தில் வெள்ளையர்களின் சாரட் வண்டிகளுக்காகவும், மிதிவண்டிகளுக்காகவும், மாட்டுவண்டிகள், குதிரை வண்டிகள், சிறு கார்கள் போன்ற மிகச் சாதாரண வாகனங்களுக்காக கட்டப்பட்டதாக தோன்றுகிறது. நிறைய தூண்கள் வைத்து, பாலத்தின் நடுவே இரும்பினாலான சுவர் போன்ற அமைப்பால் கட்டியிருக்கிறார்கள். அந்த இடத்தைத்தான் "இரும்பு பாலம்" என இப்போதும் அடையாளமாய் சொல்லுவதுண்டு. பாலம் உறுதியானதாக இருக்க வேண்டுமென்பதற்காக கலவைகளில் முட்டைகளைக் கலந்து கட்டியிருக்கிறார்கள் எனவும், சிலரை நரபலி கொடுத்திருக்கிறார்கள் எனவும், ஒவ்வொரு தூணுக்குமிடையில் ஒரு மனிதனின் எலும்புக்கூடு இருப்பதாகவும், அப்போது இறந்தவர்கள் இன்னும் பேயாய் சுற்றுகிறார்கள் எனவும், அதனாலேதான் இரும்புப்பாலத்தை கடக்கும்போது கவனமாய் போக வேண்டுமெனவும் சொல்கிறார்கள் என என் சிறு வயதில் நிறைய கதைகளைக் கேட்டிருக்கிறேன். இவையெல்லாம் கதைகளா, கட்டுக்கதைகளா, அவரவர் அனுபவத்தின், வயதின் கற்பனைகளா என்பதையெல்லாம் என் அறிவுக்கு எட்டாத பரணில் தூக்கி போடுகிறேன்.



இந்த பாலத்தினுடனான என் அனுபவங்கள் மிக அலாதியானவை. காய்ந்த மண்ணில் விழும் சிறு மழையைப்போல அதன் ஈரப்பசை என் வயதின் சுவர்களில் இன்னும் அப்பிக்கிடக்கிறது. மிகச் சிறு வயதில் அந்த பாலத்தைக்கடந்து உறவினர் வீடுகளுக்கு போக ஒரு முனையில் நிற்கும் குதிரைவண்டிக்கு பெரியவர்கள் பேரம் பேசிக்கொண்டிருக்கும் போதே கற்பனைகளால் நான் பாதிபாலத்தைக் கடந்திருப்பேன். ஒரு வழியாய் குதிரை வண்டியில் ஏறி வண்டி ஓட்டுபவருக்கு அருகில் உக்கார வைத்துவிடுவார்கள். வழியில் குதிரையின் வால் ஒரு முறையாவது சட்டென அடிக்கும் அதன் சிலிர்ப்பில் வெளியில் சொல்ல முடியாத பயமும் கலந்திருக்கும். இறங்கும் இடம் வரும்போது குதிரைவண்டி அப்படியே பின்னாலே போகாதா என மனம் ஏங்கும். இப்போதெல்லாம் குதிரைவண்டிகளைப் பார்ப்பதே அரிதாய் இருக்கிறது. அடுத்தமுறை எங்கே குதிரைவண்டி சவாரியைப் பார்த்தாலும், எந்த வயதானாலும் ஒரு முறை பயணித்து விட வேண்டும். சாயம் போன என் பால்யத்தின் பயணத்தின் மீது அது நிச்சயம் பல வண்ணங்களைப் பூசும்.



கொஞ்ச காலம் வேலைக்கு போன போது தினமும் இந்த பாலத்தின் வழியேதான் என் வாழ்க்கை ஓடியது. நண்பர்களோடு நடந்து செல்லும்போது பாட்டு பாடியபடி தூண்களையும் கடந்து போகும் ஆட்களையும் எண்ணிக்கொண்டே போனது இப்போதும் யாராவது என்னை கடக்கும்போது மனதில் இருந்து எட்டிப்பார்க்கிறது. எவனோ ஒருவனின் காமப்பசிக்கோ அல்லது  எவளோ ஒருத்தி ஏமாந்ததாலோ தொப்புள்கொடி கூட அறுக்கப்படாத ஒரு குழந்தையை இரவோடு இரவாக பாலத்திலிருந்து காவிரி ஆற்றுக்குள் வீசி இருந்தார்கள். முந்தையநாள் பனிக்குடத்தில் மிதந்த குழந்தை அடுத்தநாள் காவிரியில் மூழ்கியிருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக எட்டிப்பார்த்துவிட்டு கனத்த இதயத்தோடு நடந்தபோது  அன்று அந்த பாலம் முடியவே இல்லை. அவள் உண்மையானவளாய் இருந்திருந்தால் அன்று கரைபுரண்டு ஓடிய காவிரியில் பாதி அவள் கண்ணீராய்  இருந்திருக்கும்.

பெல் இல்லாத குட்டி வாடகை சைக்கிளில் நண்பர்களோடு போட்டிபோட்டுக்கொண்டு அந்த பாலத்தில் ஓட்டிய மகிழ்வை இப்போது காரிலோ, பைக்கிலோ கடக்கும்போது வருவதே இல்லை. இரவுக்காட்சி சினிமாவுக்கு போய்விட்டு திரும்புகையில் தூரத்து சுடுகாட்டில் பிணம் எரியும் நெருப்பைக்கண்டு  பயந்தபடியே பாலத்தைக் கடந்த நாட்களை நினைத்தால் இப்போதும் முதுகுத்தண்டு சிலிர்க்கிறது. ஊரடங்கிய ஒரு பெருமழையில் யாருமற்ற பாலத்தில் சொட்ட சொட்ட நனைந்தபடி நடந்து வரும்போது ஒரு ஆட்டோக்காரர் அழைத்து வந்து பாலத்தின் மறுமுனையில் விட்டார் இருபது வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்த நிகழ்ச்சி இப்போதும் மனதின் ஒரு ஓரத்தில் பத்திரமாய் இருக்கிறது. பகலில் பாலத்திலிருந்து காவிரியில் குதிக்கும் பசங்களிடம் பயம் கலந்த பரவசம் இருக்கும். பாலத்தின் மேல் உட்கார்ந்துகொண்டு யாரோ சிலர் போடும் தூண்டிகளில் சில நேரம் பெரிய மீன்களும் சிக்கி விடும். காய்ந்துபோன பூக்களையும் மாலைகளையும் நடுப்பாலத்தில் இருந்து காவிரிக்குள் வீசும் பழக்கத்தை யார் கண்டுபிடித்தார்களோ இப்போதுவரை தொடர்கிறது.

             
                                  

இப்போது அந்த பாலம் தவிர்த்து இரண்டு புதிய பாலங்கள் வந்து விட்டன. பவானி பேருந்து நிலையத்தை ஒட்டிய புது பாலத்தை கடப்பதற்கு மட்டுமல்லாமல், காதலர்களின் சந்திப்பு, வயதானவர்களின் பொதுக்கூட்டம், மதுப்பிரியர்களின் திறந்தவெளி பார், அதிகாலை நடைபயிற்சி, இருசக்கர வாகன பயிற்சி,  மாலை நேர இயற்கை ரசிப்பு என பலவிதமாய் பயன்படுத்துகிறார்கள் எந்த பயமுமின்றி. இந்த பாலத்தில் நிற்கும் போது பெரிய லாரியோ, பேருந்தோ கடக்கும்போது பாலம் கொஞ்சம் ஆடுவதை உணர முடியும் ஆனால் இந்த உணர்வை பழைய பாலம் தந்ததே  இல்லை. அது எவ்வகை கட்டிடக்கலை என தெரியவில்லை, அல்லது புதிய பாலங்கள் எல்லாமே இப்படி அதிரும் வகைதானா என்பது புரியவில்லை. நேர வசதிக்காக இந்த புதிய பாலங்களை பயன்படுத்தினாலும் கூட இப்போதும் ஊருக்கு போகும் போது ஒருமுறையாவது அந்த பழைய பாலத்தில் பயணிப்பதுண்டு, காரணமே இல்லையெனினும் காரணத்தை உண்டாக்கிக்கொண்டு பயணிப்பதில் என் சிறு வயது வாசனை அங்கே இருப்பதாய் உணரமுடிகிறது. பவானி குமாரபாளையத்தில் பிறந்தவர்கள் ஒருமுறையாவது இந்த பாலத்தைக் நிச்சயம் கடந்திருப்பார்கள்.

கடந்தமுறை சென்ற போது அங்கங்கே பழுதாகி இருந்த இடங்களில் ஒட்டு போட்டுக்கொண்டிருந்தார்கள். முகத்தில் சுருக்கம் விழுந்த ஒரு வயதான பாட்டியின் முகமாய் மேடு பள்ளங்களால் நிரம்பிய அந்த பாலம் இப்போதும் அழகுதான். பாலத்தின் நடுவில் நின்று பார்த்தால் வலப்பக்கம் பெருமாள்மலையும் இடப்பக்கம் ஊராட்சிக்கோட்டை மலையும் அத்தனை அழகாய்த் தெரியும். கற்பனைகளின் உயரத்திலிருந்து பார்த்தால் இரண்டு புதிய பாலங்களுக்கு நடுவே இந்த பழைய பாலம் அணில் முதுகில் உள்ள கோடு போல அழகாய் இருக்கும்.  எதையும் ரசிப்பதற்கான மனதையோ நேரத்தையோ இந்த காலம் எல்லோருக்கும் கொடுத்து விடுவதில்லை ஆனாலும் கூட அவ்வப்போது பால்யத்தின் வயதோடு பயணிப்பது ஒரு சுகம்.

காலம் கைகொடுக்கும் நாளொன்றில் இந்த பழைய பாலத்தில் நடந்து அதன் பக்கச் சுவர்களில் படிந்திருக்கும் என் நினைவுகளுடன் கைகுலுக்கி, தூண்களுக்கு நடுவே தொங்கிக்கொண்டிருக்கும் என் சிறு வயதை தொட்டுப்பார்த்து, இரும்பு பாலத்தில் உட்கார்ந்திருக்கும் என் பயத்திடம் நலம் விசாரித்து, பாலம் முழுவதும் நிரம்பிக்கிடக்கும் என் சுவடுகளின் சூடுகளை அதே கதகதப்போடு அள்ளிவர வேண்டும். அதை என் எதிர்காலத்தின் மொட்டை மாடிகளில் உலரவைப்பேன் அப்போது நகரும் வாழ்விடம் சொல்லிக்கொள்ள பல கதைகளை பத்திரமாய் வைத்திருக்கும்
அந்த "பாலத்தின் சுவடுகள்...!"