04 August 2016

நிம்மதி கொள்


நடுங்காதே மனமே
தூரத்தில் தெரிவது
வேறு யாருமல்ல
தேனின் தித்திப்பென அடி நாக்கில்
ஒட்டிக்கிடந்த ஒரு உறவுதான் அது

பக்கம் நெருங்கி உன்னை
கடந்து போகும் போது
உடைந்து போகாதே
உன்னைப்போலவே அந்த உறவும்
தேனீர் அருந்தவோ
பசி போக்கவோ வந்திருக்கலாம்

உன் சந்தோசத்தின் மீதொரு
பார்வைக் கல்லெறிந்தோ அல்லது
உண்மையில் பார்க்காமலே கூட
உன்னைத் தாண்டிப் போயிருக்கலாம்

கடந்த காலத்தின் நினைவுகளை
கண்களில் கொண்டுவந்து
ஆறிப்போனதாய் நினைத்துக் கொண்டிருக்கும்
காயங்களின் தழும்புகளைத் தடவிப்பார்க்காதே

கூண்டைத் திறந்துவிடும்
கைகளென மென்மையாக விலகு
சிறகுவிரிக்கும் பறவையென
அவளோ / அவனோ பறக்கட்டும்
அந்த சந்தோசத்தில்
உன் சந்தோஷமும் இருக்கிறதென நிம்மதி கொள் .....!!!