21 March 2017

கவிதை தினமாமே

மனதின் ஓரங்களில்
அங்குமிங்கும் அலையும்
வார்த்தைகளை வடிகட்டி
கொஞ்சம் மகிழ்வும்
கொஞ்சம் வலியும்
கலந்து கோர்க்கிறேன்

அது  வாக்கியங்களாகவும்
சில நேரங்களில்
யாரோ ஒருவருடைய
வாழ்க்கையாகவும் மிளிர்கிறது

கடந்த வந்த நாளை
காத்திருக்கும் நாளைகளோடு
சேர்த்து திரிக்கையில்
அது சிலநேரங்களில்
விருப்பக் குறியீடுகளாகவோ
விமர்சனங்களாகவோ மாறிவிடுகிறது

மொழியை நேசிக்குமொரு
தருணத்தில் வந்துவிழும்
சொற்களைப் பொருக்கி
புதிதாய் நெய்ய முயல்கிறேன்
அது சில நேரங்களில்
அனுபவமாகவோ
எதிர்பார்ப்பாகவோ அடங்கிவிடுகிறது

எனக்கென நேரமெடுத்து
பிரியங்களின் அன்பிலோ
பிரிவுகளின் துயரிலோ
வாழும் நொடிகளை
கவிதையாக்க நினைக்கிறேன்

அந்த எழுத்துக்களோ
என்னை இன்னும் வாசகனாகவே
வைத்திருக்கின்றன ....!!!

#எதோ கவிதை தினமாமே நாமளும் எதையாவது சொல்லி வைப்போம்.

13 March 2017

உச்சிமுதல் பாதம் வரை

அரிந்து வைத்த
ஆப்பிள் துண்டுகளைப்போல்
பளபளக்கும் கண்ணங்களில்
மினுக்குகிறது உன் நிறத்துக்கு
போட்டியாய் ஒரு ரோஸ் கலர்

கருப்பு திராட்சையாய்
உருளும் கண்களின்
மேல் புருவத்தில் புரள்கிறது
கொஞ்சம் மஞ்சள் நிறம்

ஜெர்ரிப்பழத்தின்
செதில்களைப்போல்
சேர்த்திருக்கும் உதடுகளின் கீழ்
உன்னை முத்தமிட துடிக்கிறது
ஒரு பச்சை வண்ணப்பொடி

உரித்து வைத்த ஆரஞ்சு சுளையாய்
நீளுமுன் மூக்கின் நுனியில்
சிவந்திருக்கிறது ஒரு சிவப்பு

உன்
பத்துவிரல்கள் தொட்டெடுக்க
வண்ணங்கள் பத்தாது
உன் உச்சிமுதல் பாதம் வரை
உச்சரிக்க பழங்கள் சிக்காது

நீ
ஹோலியை கொண்டாடவில்லை
அதுதான் உன்னைக்
கொண்டாடிக் கொண்டிருக்கிறது



12 March 2017

குட்டி உலகத்தைக் கொண்டாடு

மந்திரக்கோலும் சிறகுகளும்
இல்லாமல் பிறந்த தேவதை நீ
கனவுகளாலும் வாஞ்சைகளாலும்
வளர்த்தெடுக்கப்பட்ட  பூவுந்தன் வயிற்றில்
வளர்கிறது மொட்டொன்று

பிரியங்களின் பெருவெளிச்சத்தை
பிரசவிக்கப்போகிறாய்
சுத்தம் செய்யப்பட்ட குட்டி சொர்க்கமொன்றை
உன் கைகளில் கொடுக்கும் போது
ஒட்டுமொத்த முத்தத்தையும்
ஒரேநாளில் கொடுக்க எத்தனிப்பாய்

பேறுவலியிலோ பேரானந்தத்திலோ
நீ கண்ணயரும் கனமொன்றில்
அழுகைமொழியோடு அக்குழந்தை
உன்னை அழைக்க நேரிடும்

சிரிப்பைப் போலவே அதன் அழுகையையும் ரசி
முதல் முறை சுரக்கும்
தாய்ப்பாலின் சுகம் உணர்
கைகால் முளைத்த
உன் குட்டி உலகத்தைக் கொண்டாடு
கடந்தகால காயங்களை மற
எதிர்கால கனவுகள் வளர்

போதும்
இனிமேல் தயவுசெய்து
என் கனவுகளில் வராதே
ஏனெனில்
எனக்கும் கல்யாணம் ஆகப்போகிறது.


உணரவேண்டியிருக்கிறது

அர்த்தராத்திரியோ அதிகாலையோ
கதவு திறக்கும் போது
உதிரும் புன்னகையோ
"வா கண்ணு" என்னும் வார்த்தையோ கேட்காது

கதவுகளுக்குள் வந்தபின்
ஆடை மாற்றுவதற்குள் கொடுக்கப்படும்
ஒரு செம்பு தண்ணீர் கிடைக்காது

காலையில் எழுவதற்கு முன்
படுக்கையில் இருக்கும்போதே
ஒரு கோப்பை தேநீர் வராது

இட்லியோ தோசையோ
இரண்டு சட்னிகளோடு சேர்த்து
கொஞ்சம் கரிசனமும் அக்கறையும்
இருக்காது

எங்கோ வைத்துவிட்ட
இருசக்கர வாகனத்தின் சாவியை
நாமே தேடி எடுக்க வேண்டிவரும்

டீத்தூள் டப்பாவையும்
சர்க்கரை டப்பாவையும் கண்டுபிடிப்பதற்குள்
தேநீர் தயாரிக்கும் ஆசையை
பலமுறை கைவிடவேண்டும்

சமையலறையில் தேடல்
சாப்பாட்டு மேஜையில் வெறுமை
வீட்டில் தெரியும் தனிமை
விளங்க முடியா பொறுமை
எல்லாம் சேர்ந்து உணர்த்தும் அம்மாவின் பெருமை

அம்மா வெளியூர் சென்றிருக்கும் போது
நாம் வெளியூரில் இருந்து வீடு திரும்பும் நாளொன்றில் உணரவேண்டியிருக்கிறது எத்தனையோ விசயங்களை..!

07 March 2017

பெண்கள் சூழ் உலகு ..!



பேரன்பின் பிடியிலிருந்து
நழுவும் போதெல்லாம்
தாங்கிப்பிடிக்கும் கரங்களாய்
எப்போதும் இருக்கிறார்கள் சில பெண்கள்

துரோகங்களாலும்
ஏமாற்றங்களாலும் உடையும் போது
அன்பாலும் ஆறுதல்களாலும்
உயிர்ப்பிக்கிறார்கள்
தோழிகளாய் சில பெண்கள்

உண்மையாய் சண்டையிட்டு
பொய்யாய் கோபித்து
பொசுக்கென சமாதானம் ஆகிறார்கள்
அக்கா தங்கைகளாய் சில பெண்கள்

கனவுகளை பொசுக்கி
லட்சியங்களை நசுக்கி
மீளாத்துயரில் தள்ளிவிட்டு போகிறார்கள்
காதலிகளாய் சில பெண்கள்

திரும்ப முடியா பயணத்திலிருந்தோ
திருத்த முடியா பழக்கத்திலிருந்தோ
மிக இயல்பாய் மீட்டெடுக்கிறார்கள்
மனைவிகளாய் சில பெண்கள்

எத்தனைதான் நடந்தாலும்
எப்படிதான் இருந்தாலும்
இது என் குழந்தைதான் என
இப்போதும் நெகிழ்கிறார்கள்
அம்மாக்களாய் சில பெண்கள்

பெண்கள் சூழ் உலகில் வாழ்வது அறமெனில்
பெண்ணாய்ப் பிறப்பது வரம் ...!

#மகளிர்_தின_வாழ்த்துகள் :)