31 December 2010

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ....!



நொடி நொடியாய்
கடந்துபோன நிமிடங்களில்
கடைசி நொடிகள் கரைந்து கொண்டிருக்கும்
இந்த நிமிடங்களில் ....

கனவுகளோ ....
கண்ணீரோ ....
கவிதைகளோ ....
காயங்களோ ....
காதலோ ....
நட்போ ....

ஏதோ ஒன்றையோ அல்லது
ஒட்டுமொத்தமாய்
எல்லாவற்றையுமோ
கொடுத்துவிட்டு .....

கைகாட்டி விடைபெறும்
இந்த வருடத்தை வாழ்த்துக்களோடு
அனுப்பிவைத்து....

நமக்கான எல்லாவற்றையும்
எடுத்து வந்த புதிய வருடத்தை
புன்னகையோடு வரவேற்போம்...!

இனிய ஆங்கில புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள் ....!




 




20 December 2010

வலி...!




முதுகுக்குதான் தெரியும்
சுமக்கின்ற வலி ....
முயற்சிக்குதான் தெரியும்
தோல்வியின் வலி...!

19 December 2010

திருத்தம்



சரிந்து விழுந்த தாவணியை
சரி செய்தாய் ...
சரியாய் இருந்த மனது
சரிந்து விழுந்தது ....!

தவிப்பு



எங்கே தொடங்கி
எங்கே முடியவேண்டுமென
தெரியாமல் தவிக்கிறது
என் கவிதை ...

நம் முத்தங்களைப்போல ...!

பிச்சை



குழந்தைகள் தின
சிறப்பு நிகழ்ச்சி
உள்ளூர் தொடர்வண்டிகளில்
எடுக்கிறார்கள் ...

பேட்டியல்ல... பிச்சை ...!

நீர்க்குமிழி



குழந்தைகள் ஊதிவிடும்
நீர்க்குமிழிகளைப்போல்
ஓடிவருகிறது என் காதல்

உன் பாதம் பட்டு உடைவதற்காக...! 

உறக்கம்



இன்று இரவு உறக்கம்
வராது குழந்தைக்கு ...
மழை நனைத்துவிட்டுப் போயிருக்கிறது
பொம்மைகளையும் ....!
குழந்தையின் கனவுகளையும் ....!

தவணைமுறை இறப்பு



ஒருநாளைக்கு மூன்றோ நான்கோ
மொத்தமாய் இருபது நிமிடங்கள்
இறந்துபோகலாம் ....!

செலவழிக்கும்போது சில்லரைதான்
சேர்த்துப்பார்த்தால் சில நூறுகள்
தீர்ந்துபோகலாம் ....!

பகலில் உறுமலும் ...
இரவில் இருமலும் ...
சொல்லாமல் வந்துபோகலாம் ....!

செவ்வகப்பெட்டிக்குள்
சிறையிருப்பவைதான் உன்னை
சவப்பெட்டிக்குள் தள்ளிப்போகலாம் ....!

நுரையீரல் முழுவதும்
புகையீரலாய்
மாறிப்போகலாம் ....!

கைவிரல் அளவுதான்
சிகரெட் ஆகலாம்
அது ஊர் உனக்கு வைக்கும்
கொள்ளிக்கு நீயே ஒத்திகை
பார்ப்பதாகலாம்....! 

எதுவுமே நடக்கவில்லை ..!



படுக்கைதலையணைகள்
கலையவில்லை ....

அலமாரி புத்தகங்கள்
கிழியவில்லை ...

பொம்மைகள் இடம்
மாறவில்லை .....

சுவற்றில் புதிய
கிறுக்கல்கள் இல்லை ...

பலூன்கள் வெடிக்கவில்லை ...

டம்ளர் தண்ணீர்
கொட்டவில்லை ...

பூக்கள் பறிக்கப்படவில்லை ....
கைப்பேசிகள் வீசப்படவில்லை ...

இப்படி எத்தனையோ இல்லைகள் ...
இன்னும் சில நாட்கள்
இப்படித்தான் இருக்கும் ....

ஆம் ...
எங்கள் வீட்டு இளவரசி
ஊருக்குப் போயிருக்கிறாள்....!

படகு



எப்படிப் பயணித்தாலும்
கடைசியில் நீ என்ற
கரையில் தான் வந்து நிற்கிறது
நான் என்ற படகு ....!

தாகம்



தினமும்தான் குடிக்கிறேன்
உன் நினைவுத் தண்ணீரை...
ஆனாலும் ....
அடங்குவதில்லை
என் தனிமை தாகம் ...!

புன்னகை



அடுக்கி வைத்த ஆப்பிள்களைப்போல் 
அழகாய்த்தான் இருக்கிறது ...
உன் உதடுகளின் உச்சத்தில்
இருக்கும் புன்னகை ...!

16 December 2010

எப்படிப்பிடிக்க ..?



கைமீறிப்போகிற எதையும்
உடனே பிடிக்க முடிவதில்லை
குடையோ ...
பட்டாம்பூச்சியோ ....
உன் காதலோ ....
எதையும்..!

மேகஉருவம்



மேகங்கள் உருவங்களாய்
வருவதால் ....
பொம்மைகள் உறங்கிவிட்டன
குழந்தைகள் இல்லாமல்...!

ஏன்


வானமே இருக்கிறது பறந்து செல்ல
இன்னும் ஏன்
முட்டைக்கூட்டுக்குள் முடக்கம் ?



காதலின் சின்னம்


உலக காதலின்
ஒட்டுமொத்த
பனித்துளி ...!
இது என்றுமே
உடைந்து போகாத நீர்க்குமிழி ...!

முயற்சி


இலக்கு அழைக்கிறது கைதட்டி
என்னும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய்
கைகட்டி ...!

தனிமை



தனிமை என்னும் குடுவையில்
அடைந்து கிடக்கிறேன் நான் ...!
வந்து உன் அன்பென்னும்
கடலுக்குள் தள்ளிவிட்டுப் போ...!

கோபுரங்கள்



உன் கால்கள் வந்து
இடித்து விட்டுப்போவதற்காகவே
காத்திருக்கின்றன
நான் கட்டிவைத்த மணல் கோபுரங்கள்

வெற்றிடம்



வீடு அமைதியாகவே இருந்தாலும்
ஏதோ ஒரு வெற்றிடமாகவே
இருக்கிறது...
அம்மா இல்லாத நேரங்களில் ......

வாசிப்பு வரம்



படிக்கத் தெரியாத அம்மாவின்
வாசிப்பு வரத்திற்காகவே
திருமணப் பத்திரிக்கைகளின்
தீராத தவம் .......!


கண்ணாடி

புதிதாய் கட்டியிருக்கும்
உன் வீட்டுக்குள் நுழைந்த எல்லோரும்
வீட்டை சுற்றிப்பார்த்து
சந்தோசப்படுகையில் ...
நான் மட்டும் வருத்தப்படுகிறேன்
நீ சுற்றிச் சுற்றி பார்க்கும்
அந்த கண்ணாடியாய்
நான் இருந்து தொலைத்திருக்க கூடாதா ...?

15 December 2010

சின்ன உலகம்


முதல் இரண்டு நாள்
முழுதாய் இருந்தது...

மூன்றாவது நாள் வலது கையின்
நான்கு விரல்கள் காணாமல் போயிருந்தன...

அடுத்த நாள் தரைதேய்த்து இழுத்ததில்
ஆங்காங்கே சில சிறாய்ப்புகள்...

உடைந்துபோன கால்கள் இன்னும்
ஊனமாகவே இருக்கின்றன ....

நகம் கிழித்த வயிற்றுப்பகுதியில் இருந்து
சரிந்து கிடக்கிறது கொஞ்சம் குடல்கள் ...

சாயம்போன உடையின்
எல்லா இடங்களிலும் காயங்கள் ....

கலைந்துபோன கூந்தலால்
அலங்கோலமாய்  கிடக்கிறது தலை ....

ஒரு காதும் ஒரு கண்ணும்
லேசான காயங்களோடு தப்பியிருந்தன ....
மூக்கு முட்டும் முழுதாய் இருந்தது ....

ஆனாலும் ....!

இன்னும் இரவு நேரங்களில்
அந்த பொம்மையை கட்டிப்பிடித்துக்கொண்டுதான்
தூங்குகிறாள் எங்கள் வீட்டு இளவரசி ...! 

சிற்பம்

நீ
நகம்  கடிக்கும் அழகைப்பார்த்து
நினைத்துக்கொண்டேன்....!
ஒரு சிற்பம் தன்னைத்தானே
செதுக்கிகொள்கிறதென...!

வெறுமை




நீ இல்லாத வாழ்க்கை 
வெறுமைதான் 
எழுதப்படாத
வெள்ளைப்பக்கங்களைப்போல..!

துளசிச்செடி



தினமும் நீ சுற்றி சுற்றி வருகிறாய்
அதனால் தான் துளிர்விடுகிறது
உன் வீட்டு முற்றத்தில் இருக்கும்
துளசிச்செடி ...!

ஒரு சில மழைகள்


ஒரு அழகான சாயங்கால வேளை..
வானம் தண்ணீர் துளிகளை அனுப்பி
பூமியின் நலம் விசாரிக்கிறது ....

ஜன்னலோர கம்பிகலோடு
நானும் நனைந்து கொண்டிருக்கிறேன் ...
முகத்தில் தெறிக்கிறது
ஒரு சில சாரல்கள் ...
வானவில்லில் வந்து போகிறது
அவள் வெட்க்கத்தின் நிறம் ...
கூடுகளைத்தேடி ஓடுகிறது
ஒரு சில பறவைகள் ....
குடைகள் தேடி அலைகிறது
ஒரு சில கண்கள் ...
தேநீர் தேடி அலைகிறது
ஒரு சில உதடுகள் ....
ஒழுகும் வீடுகளை அடைக்க
பொருள்தேடி அலைகிறது
ஒரு சில கைகள் ...
மழைநீரை வாரி இறைத்து விரைகின்றன
ஒரு சில நகர பேருந்துகள் ...
நனைந்த படி நகர்கின்றன
ஒரு சில கிராமத்து மாட்டுவண்டிகள் ...
கோணிப்பைகளில் குருகிக்கிடக்கிறது
ஒரு சில உயிர்கள் ....

எல்லாவற்றுக்கும் நடுவே
இந்த வருடமாவது வறுமை தீரவேண்டுமென
வருத்தமுடன் வேண்டிக்கொண்டிருக்கிறான்
எங்கோ ஒரு விவசாயி ....!

ஆனாலும் ..
இன்னும் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கிறது
ஒரு சில மழைகள் ....

நீ .....நீ .....நீ .....


நீ பூமிக்கு வந்த தேவதை ...
நடைபழகும் நிலா ...
நட்சத்திரங்களின் தோழி ...
பூக்களின் ராணி ...
இப்படியெல்லாம் சொல்லி
உன்னை அந்நியப்படுத்த
விரும்பவில்லை...!
நீ .....
என் நிழலின் பாதி
நிஜத்தின் மீதி ...
என் விரலின் நகம் ...
நகத்தின் நிறம் ...
இதயத்தின் பாதை ...
துடிப்புகளின் ரேகை ...
இமைகளின் கண்கள் ...
கண்களின் பார்வை ...
நடமாடும் உடல்...
உடலுக்குள் ஒளிந்திருக்கும் உயிர்..!!!

திருக்கோவில்


உன் வீட்டு திண்ணை கூட
திருக்கோவில் தான் ...
தங்கச் சிலையாய்
நீ அமர்ந்திருக்கும் வேலைகளில் ..!

மகிழ்ச்சியின் உயரம்



நான் தனியாக போகும்
என் இரு சக்கர வாகனம் ...
நீ ஏறியவுடன்
விமானமாகிவிடுகிறது...!

வெட்கம்




நீ இறங்கிப்போய்விட்டாய்
ஆடிய ஊஞ்சலில்
உட்கார்ந்திருக்கிறது ...
உன் வெட்கம் ....

காத்திருப்பு



புகைவண்டியின் பயணத்திற்க்காக
வாகனங்கள் காத்திருக்கிறது ....
நீ பயணிக்கிறாய் என்றதும்
புகைவண்டி காத்திருக்கிறது ......!

உன் பிறந்தநாளுக்காக




என் நிழலின் விரல் பிடித்து
நீண்ட தூரம் நடக்க இருப்பவளே......
ஒவ்வொரு அணுவிலும்
என் உயிரோடு கலந்திருப்பவளே ......
பெரிதாய் பெய்யும் மழையில்
துளித் துளியாய் நனைவது போல் .....

உன் பெரிய அன்பில்
சின்ன சின்னதாய் நனைகிறேன்....

ஒரு தேவதையின்
எல்லா அம்சங்களோடும்
அழகாகவே இருக்கிறாய் ....

உன் புன்னகை
உன் வெட்க்கம்
உன் கண்ணீர்
உன் கோபம்
உன் சிணுங்கள்
உன் கெஞ்சல்
உன் கொஞ்சல்
உன் சோம்பல்
எல்லாம் ....
எல்லாம் ...
உன்னைப்போலவே
அழகாக இருக்கின்றன ...

அவைதான் உன்னை
இன்னும் அழகாக மாற்றுகின்றன....

எல்லா கண்களும்
உன்னையே பார்ப்பது போல் .....
எல்லா புகைப்பட கருவிகளும்
உன்னையே படம் பிடிக்க நினைக்கிறது ......
இன்று நீ அணிந்து அழகு பார்த்தது
ஒரு உடைதான்...
உன்னை அணிய முடியாமல்
அழுது கொண்டிருக்கின்றன
பல உடைகள்...

உன் விரல் பிடித்து நடக்க விண்மீன்களும்
உன் முகம் பார்த்துக்கிடக்க முழுநிலவும் ...
உன் சுவடுகள் ஏந்த கடற்க்கரையும் ...
உன் பாதம் நனைக்க கடல் அலையும் ...
உன் கூந்தல் பிடிக்க பூக்கடையும் ...
உன் குறும்பை ரசிக்க நானும்
காத்திருக்கிறோம் ....

நீ வந்து ஏற்றாமல் தீபங்கள் எரியாது ..
நீ வந்து பார்க்காமல் கடவுளும் கிடையாது ...

உலகப் பூக்களெல்லாம்
ஒன்று கூடினாலும்
உன் புன்னகை தோற்காது ....

உன் விரல்களின் ரேகை
மறையாமல் இருப்பது போல்...
உன் உதடுகளின் புன்னகை
குறையாமல் இருக்கட்டும் ...

உன் எல்லா பிறந்த நாளிலும்
உலகம் சிரிக்கட்டும்.........
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ... !!

வெட்கத்தின் நிறம்



எந்த தூரிகையாலும்
தீட்டிவிட முடியாது ...
அம்மாவுடைய வெட்கத்தின் நிறத்தை ....!

நினைவுகள் ....


நானும்..! நீயும்..!
தொட முடியாத தொலைவில் இருக்கிறோம்..!
தொட்டு தொட்டு
விளையாடிக்கொண்டிருக்கிறது
நம் நினைவுகள்...!

தொட்டில்



உன் இரவு பயணத்தின் போதெல்லாம்
ஒரு தேவதையை தாலாட்டி தூங்க வைக்கும்
மிகப்பெரிய தொட்டிலாய் மாறிவிடுகிறது
புகைவண்டி .....!!!

நீ இல்லாத இரவுகள்....!


வெறுமையாகவே விடிகிறது
நீ இல்லாத இரவுகள்.....!

கனவில் பேசிய வார்த்தைகள் கூட
காலையில் மறந்து போகிறது
மனப்பாட பகுதிகளைப்போல ...

நீ கொடுத்த முத்தங்கள்........
அலைபேசியின் எந்த பகுதியில்
ஒளிந்து கிடக்கிறதோ இப்போது ....!
மவுனத்தின் நிசப்தங்களில்
எதிரொளித்துக்கொண்டே இருக்கிறது
நீ பேசிய வார்த்தைகள் ....

எங்கிருந்தாலும் என்னை
நெட்டித்தள்ளி
இழுத்துக்கொண்டு போகிறது
உன் நினைவுகள் ....

உன்னைப்பற்றி எழுதும்போதெல்லாம்
இளமையை கொட்டுகிறது
என் பேனா....!

வீதியில் போகும் பலூன்காரனை
வேடிக்கை பார்க்கும் குழந்தையைப்போல்
வேடிக்கை பார்க்கிறேன்
என்னைக்கடந்து போகும்
காதல் ஜோடிகளை .....!

கடை வாசலில் தொங்கும்
உடையை உனக்கு போட்டு
அழகு பார்க்கிறேன்
கற்பனையில்....

எங்கோ கேட்கும் ரயிலின் சத்தம்
நினைவுபடுத்துகிறது
நீ வழியனுப்பி வைத்த நிமிடங்களை ...!

வானம் பார்த்து படுத்திருக்கும்
மொட்டைமாடி இரவுகளில்
நிலவு நினைவுபடுத்துகிறது
ஒப்பனையற்ற உன் முகத்தை ....!

ஒட்டைக்குடிசையில் ஒழுகும்
மழைத்துளிகளைப்போல்
உள்ளுக்குள் சில்லிடுகிறது
சில நிமிடங்கள் ......!


உன்னால் அனுபவிக்கும்
தனிமையின் வலியை
உனக்கும் தர மனமில்லை
அதனால் அனுப்புகிறேன்
உனக்கு துணையாய்
என் கவிதைகளை.....!

ரசனை


தவறுகள் கூட
ரசனைக்குரியதாகிவிடுகிறது ...!
குழந்தைகள் பேசும் போது...!

14 December 2010

அடம்



உன் விரல் பிடித்து நடக்க
அடம் பிடித்துக்கொண்டே இருக்கிறது
இந்த அடங்காத அலைகள் ....

புகைவண்டி



உன்னை சுமந்து
செல்லும் புகைவண்டி
வெளிவிடுவது புகையல்ல .....
புன்னகை..!!!

உன் பெயர் சொல்லியே....


இமைகளின் அரவணைப்புக்காக
இரவு வருகிறது ...
என் இதயத்தின் துடிப்புக்காக
உன் நினைவு வருகிறது ...
தூரத்து வானம்
தூவும் மழைத்துளிகள் எல்லாம்
உன் பெயர் சொல்லியே
உடைந்து போகிறது ...
என் எல்லா இரவுகளும்
உன் பெயர் சொல்லியே
விடிந்து போகிறது ....

யாரிடமடா சொல்லித்தொலைப்பது..?


புள்ளிகளை மட்டும் வைத்துவிட்டு ...
கோலம் போடாமல் திரும்புகிறேன்

பிரஸ்சில் பேஸ்ட்டை எடுத்துக்கொண்டு
வெறும் விரலால்
பல் தேய்க்கிறேன்......

குளிக்கவே இல்லை
தலை துவட்டுகிறேன்......

நெற்றியில் வைக்க வேண்டிய
ஸ்டிக்கர் பொட்டை
மூக்கில் வைக்கிறேன் ......

கல்லூரி போகிறவள்
தம்பியின் ஏழாவது
புத்தகங்களோடு பயணிக்கிறேன் .......

தோழிகள் என்று நினைத்து
மரங்களுடன்
பேசிக்கொண்டிருக்கிறேன்.......

கோவிலுக்கு சென்றால்
பிரகாரத்தை
பின்பக்கமாக சுற்றுகிறேன்...

வெறும் தட்டிலேயே
வயிறு நிறைய சாப்பிடுகிறேன்.....

மெத்தையில்
தலையணையை வைத்துவிட்டு
தரையில் படுக்கிறேன்....

என்னுள்
இவ்வளவு மாற்றங்களையும்
ஏற்படுத்தியவன்
நீதானென்பதை
நான் யாரிடமடா
சொல்லித்தொலைப்பது
இப்போது....?

ஆசை....


மழையோ வெயிலோ
குடை பிடிக்க ஆசை.....
உன் கடிதம் சுமந்து வரும்
தபால்காரனுக்கு ......!

ஒப்புக்கொள்கிறது மனசு ...!


அறுந்து போன பட்டம் போல
அந்தரத்தில் ஊசலாடுகிறது வாழ்க்கை ...

வெயிலோ ..மழையோ ...
எதுவாக இருப்பினும் ...
நிழலோ ..குடையோ ..
ஒரு சிலருக்கே வாய்க்கிறது...!

அலாரங்களுக்கு முன்பாகவே எழுந்து ...
அவசரங்களின் ஊர்வலங்களில் கலந்து ...
ஏதோ ஒன்றின் பின்னால் இருட்டுக்குள் ஓடி ..
வெளிச்சத்தில் தொலைந்து போகிறோம் ...!

இடையில் கால் தடுக்கிய இடத்தில் நின்று
திரும்பிப்பார்த்தால் ....
நேற்றைகளின் சமாதி
நெடுந்தூரம் நீள்கிறது ...!

பின்பு ...
அழுக்கு படிந்த காற்றுக்குள்
பயணித்து... பயணித்து...
புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கிறோம் ..!

எல்லோரும் அவரவர் வீடுகளில்
அடைபட்டவுடன் ஒப்புக்கொள்கிறது மனசு ..
உலகம் உருண்டையென்று...!

கெஞ்சல் மொழி.....!


நாம் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில்
தெரிந்தே உன்னை"போடி" என்று
சொல்லிவிட்டேன் ஒருமுறை ...

நீ முறைத்துப்பார்த்து திட்டுவாய்
என நினைத்தால்...
"நீ சொன்னது அழகாய் இருந்தது
இன்னொருமுறை சொல் "என கெஞ்சினாய் ...

அப்பொழுது காதல் நம்மை
கொஞ்சிக்கொண்டிருந்தது ...!

விரதமிருக்கிறாய் ....


உன் சாயங்கால நேரத்தின்
தேநீராய் நான் இருக்கிறேன் ......

நீயோ ...

என்னைத்தொடாமல் ஏன்
விரதமிருக்கிறாய் ....?

நாட்டியமேடை

புகைவண்டி நிலையத்தின் நடைமேடை
நாட்டியமேடையானது ....

நீ  நடந்துகொண்டிருக்கும் பொழுது ...!


அடம் ...!


சின்ன வயதில் சிலேட்டு பென்சில்
வாங்கித்தரச்சொல்லி அம்மாவிடம்
அழுது அடம் பிடித்தது போல் ..
இப்பொழுது
அழுது அடம் பிடிக்க வேண்டும்போல் உள்ளது ...
என்னைக்கடந்து போகும்
உன்னை வாங்கித்தரச்சொல்லி ...!

விடுதலை செய்....!.


காதல்
ஒரு பகடைக்காய்
அது என்னை உருட்டிவிட்டு சிரிக்கிறது ...
நீயோ ..
உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறாய் ...

என்னை புல்லாங்குழலாக்கி
இசைக்க நினைக்கிறது
நீயோ.....
கண்மூடி காது பொத்துகிறாய்...
உதடு நிறைய
புன்னகை நிரப்ப பார்க்கிறது
நீயோ .......
மௌனத்தை கெட்டியாக
பிடித்துக்கொண்டிருக்கிறாய்

ஆனந்த மழையால்
நம்மை நனைக்க நினைக்கிறது
நீயோ.........
தடை என்னும்
குடை பிடிக்கிறாய் ....

காதல்
ஒரு கவிதையாய்
என்னை எழுதி இருக்கிறது
நீயோ.......
எழுத்துப்பிழைகளைத் தேடுகிறாய்

சிரிக்கும் பனித்துளியே
இந்த கவிதைக்கு
ஒரு முத்தம் கொடுத்து
முற்றுப்புள்ளி வை.....

உன் வெட்கங்களை
விடுதலை செய்.....