வள்ளுவன் எழுதிய குறள்களை
வான்கடந்து அந்நிய காதுகளுக்குள்
ஊற்றியது உங்கள் குரல் ...!
யாரும் சொல்லாத உயரத்தை
கைநீட்டித் தொட கனவுகள்
விதைத்தது உங்கள் விரல் ...!
மழுங்கிய மூளை மடிப்புகளை
அறிவுக்குச்சியால் திருகி
திருத்தி அமைத்தவர் நீங்கள் ...!
புத்தகங்கள் சொல்லித்தராத
அறிவியலை அன்பால் அழகாய்
கற்றுக்கொடுத்தவர் நீங்கள் ...!
உங்களை விதைத்த மண்ணில்
இன்னும் இன்னும் மிச்சமிருக்கிறது
எங்கள் எல்லோருக்குமான கனவுகள் ...!
இன்று
உங்கள் நினைவு தினமல்ல
நீண்ட உறக்கத்தில் ஒரு வருடம்
முடிந்திருக்கிறது ...!
நீங்கள் இன்னும் வாழ்கிறீர்கள்
இரவுகளில் மூடும்
எங்கள் எல்லா கண்களிலும்
பகல்களில் திறக்கப்படும்
உங்கள் எல்லா சிலைகளிலும் ...!!!