11 August 2016

இந்தியாவும் ஒலிம்பிக்கும்





ஒலிம்பிக் எல்லா விளையாட்டு வீரர்களும் தூக்கி சுமந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய கனவு. உலக நாடுகளின் பெருமையை, வீரத்தை,திறமையை, பங்களிப்பை வெளிப்படுத்த நான்கு ஆண்டுகளுக்கு  ஒருமுறை கிடைக்கும் அறிய வாய்ப்பு.

இந்தியாவும் அதில் பங்கேற்று விளையாடி பல விமர்சனங்களை எதிர்கொள்ளும் இந்த வேளையில், பதக்கப்பட்டியலில் இன்னும் இந்தியாவின் பெயர் வராததற்கு காரணம் இந்த வீரர்கள் மட்டும் தானா என ஒவ்வொரும் இந்தியனும் தனக்குள் எழும் கேள்விகளுக்கு விடை சொல்லவோ அல்லது விடை தேடவோ கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்தியா ஆரம்பத்திலிருந்தே வீரமும் திறமையும் நிறைந்த நாடுதான், வெறும் அகிம்சையை மட்டுமே கையாண்டு வெள்ளையனை வெளியேற்றிய நம் தலைவர்கள் வீரத்தையும் கோவத்தையும் கையாளத் தெரியாமல் இல்லை. தன் வீரத்தாலும் திறமையாலும் படையெடுத்து உலகையே வென்று தன் காலடியில் வைத்து ஆட்சி செய்த மன்னர்களும் இங்கு உண்டு என்பது நம் எல்லோருக்குமே தெரியும்.

ஆனால் இப்போது ..?

 அரசியல் ,துரோகம், வன்மம் , வெறுப்பு ,பொறாமை ,பழியுணர்ச்சி என இன்னும் எத்தனையோ ஜீரணிக்க முடியாத விஷயங்களால் திணறிக்கொண்டு தான் இந்தியா இந்த 70 ஆவது சுதந்திரதினத்தை கொண்டாட தயாராகி வருகிறது. பல காலங்களாக நடந்து வரும்  ஒலிம்பிக்கில் பதக்கப்பட்டியலில் நம் நாட்டின் பெயர் வந்தாலும் கூட நாம் பின்தங்கியே இருக்கிறோம் என்பதை வலியோடு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.

இதற்கு காரணம் சூழ்நிலையெனவோ , முழுதும் அரசியலெனவோ , திறமையில்லையெனவோ சொல்லி அவ்வளவு எளிதாய் நகர்ந்து விட முடியாது. கடந்த தலைமுறை பிள்ளைகளைப்போல இந்த தலைமுறை பிள்ளைகள் இல்லை , அவர்களின் விளையாட்டுகளும் சந்தோஷங்களும் நான்கு சுவர்களுக்குள்ளும் ஒரு கைப்பேசிக்குள்ளும் அடங்கிவிட்டது அல்லது அடக்கி அவர்களிடம் கொடுத்து விட்டோம்.

 இதற்கு முந்தைய தலைமுறையில் பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் புத்தகப்பையை வைத்துவிட்டு சீருடையை கூட மாற்றாமல் வீட்டை விட்டு வெகுதூரம் போய் விழுந்து விழுந்து விளையாடிய குழந்தைகளுக்கு தெரியும் மாலை நேரமென்பது எத்தனை வரமென்று,

திறந்தவெளி மைதானத்தில் நண்பர்களோடு விளையாடும் அத்தனை விளையாட்டுகளின் வெற்றியும் ஏதோ ஒரு திறமையை சார்ந்தே இருந்தது. அவர்களை ஊதாரி , வீட்டுக்கு அடங்காதவன் , சோம்பேறி , முட்டாள் என வலிநிறைந்த சொற்களால் முடக்கி விட முடியாது.

இந்த தலைமுறையில் குழந்தைகளை விளையாட விடாமலும் அவர்களுக்கு பிடித்த துறையில் அவர்களை வளரவிடாமலும் இருப்பதற்கு தொலைக்காட்சி சேனல்களுக்கும், பெற்றோரின் பிடிவாதத்திற்கும் மிகப்பெரும் பங்கு இருக்கிறது, அதை இல்லை என்று மேம்போக்காக மறுத்துவிட முடியாது.

திறமைகள் முழுவதும் மழுங்கடிக்கப்பட்டு எத்தனையோ குழந்தைகளை மிகச் சரியாய் ஐந்தாவது மாடி பால்கனிக்கு பேப்பர் போடும் பையனாக, இருபது லிட்டர் தண்ணீர் கேனை 6 மாடி தூக்கிச்செல்லும் பையனாக , மிகப்பெரிய கண்ணாடிக்கு கட்டிடத்தில் கயிற்றில் ஒரு கட்டையைக் கட்டிக்கொண்டு அதில் உக்கார்ந்து கண்ணாடி சுத்தம் பண்ணும் பையனாக , சீறிவரும் வாகனங்களுக்கு நடுவே வேகவேகமாய் நுழைந்து சிக்கனலில் பிளாஸ்டிக் பொம்மைகள் விற்கும் பையனாக , வரிசைகட்டி நிற்கும் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் பையனாக , மிகச் சரியான ஒழுங்கில் மிக அழகாய் பூத்தொடுக்கும் பெண்ணாக , 10 வயதில் தன்தலைமேல் 15 செங்கற்களை சுமக்கும் பெண்ணாக ,கடற்கரையில் பலூன் விற்கும் பெண்ணாக , தீப்பெட்டி தொழிற்சாலைகளில் கருகும் குறுத்துக்களாக மாற்றி வைத்திருப்பது சமுதாயம் மட்டுமல்ல நீங்களும் நானும் தான் ஏனெனில் நீங்களும் நானும் சேர்ந்தது தான் இந்த சமுதாயம்.

பாதுகாப்பு முக்கியம் தான் ஆனாலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் உங்கள் குழந்தைகளை விளையாட விடுங்கள் , தோல்வியைத்தாங்கும் பக்குவத்தையும் வெற்றிக்கு போராட நம்பிக்கையையும் விதையுங்கள் , சிறுவெற்றிக்கு கூட பெரிதாய் பாராட்டுங்கள் , தோல்வியை தள்ளிப்போன வெற்றியென தட்டிக்கொடுங்கள் எதிர்வரும் காலத்தில் உங்கள் குழந்தையும் ஒலிம்பிக்கில் சாதிக்கலாம்.

திறமையானவர்களை அரசும் , தகுதி உள்ளவர்களை அரசியல்வாதிகளும் , வெற்றிக்கான ஊக்கத்தை பெற்றோரும் , நம்பிக்கைகளை நண்பர்களும் , வேண்டிய வசதிகளை சமூகமும் கொடுத்து அடுத்த தலைமுறை குழந்தைகளை ஊக்கப்படுத்தி முன்னிறுத்தினால் பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடத்தில் கூட வரக்கூடும்.

இதோ.. எல்லோரும் தொட பயந்த ஜிம்னாஸ்டிக்கை தன் 6 வயதில் தொடங்கி, தட்டையான கால்களை வளைக்க தினமும் 6 மணி நேரம் பயிற்சி செய்து ,எல்லாவிதமான போட்டிகளிலும் சேர்த்து 77 பதக்கங்களில் 67 தங்கப்பதக்கங்களை வென்று ,ஜிம்னாஸ்டிக் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இன்று இந்தியா மட்டுமல்லாமல் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் தீபா கர்மாகர். இவர் பதக்கம் வாங்கவில்லையெனிலும் இந்தியாவிற்கு பெருமைதான் பதக்கம் வாங்கிவிட்டால் அந்தப் பதக்கத்திற்க்கே பெருமை.

தோல்விகளைச்  சொல்லி புலம்புவதை விடுத்து வெற்றிகளை நினைத்து பெருமைகொள்ளுங்கள். இந்த ஒலிம்பிக்கில் எதிர்வரும் நாட்களில் இந்தியா சில பதக்கங்களை வெல்லும் அப்போது வாழ்த்துவதற்கு வார்த்தைகளையும் தட்டுவதற்கு கைகளையும் தயாராய் வைத்திருங்கள். வாழ்த்துக்கள் இந்தியா.