Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

20 December 2021

வீடென்பது வாழமட்டுமல்ல

பறவைகள் இரைதேடி முடித்தபின்னே மாலை நேரங்களில் கூடடைவதைப்போல வாழ்வைத்தேடி தினம் தினம் எங்கெங்கோ பயணிக்கும் மனிதர்கள் இரவுகளில் வந்து அடைந்துகொள்ளும் இடமாக இருப்பது வீடுகள்தான். மனிதர்களுக்கு வீடுகள் தரும் பாதுகாப்பையும், ஓய்வையும், நினைவுகளை அசைபோடும் நேரத்தையும் வேறெதுவும் அத்தனை சுலபத்தில் கொடுத்துவிட முடியாது. வீடற்ற மனிதர்கள் பாதுகாப்பையும், ஓய்வையும் தங்களுக்குள் பகிர்ந்துகொள்கிறார்கள்.

குகைகளிலும், மரங்களிலும் ஆதி மனிதர்கள் வாழ்ந்து வந்த காலங்களில் வீடுகள் தேவைப்படவில்லை. காலங்கள் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியதிலிருந்து தான் தங்கிக்கொள்ளும் இடங்களும் மாறத்தொடங்கின. அப்போதிருந்து இந்த நிமிடம் வரை எத்தனை எத்தனை மாற்றங்களை வீடுகளின் பொருட்டு மனித சமுதாயம் கட்டமைத்திருக்கின்றன. இன்றைய தலைமுறை பிள்ளைகளிடம் இருக்கும் பெருங்கனவுகளில் ஒன்று "சொந்த வீடு" கட்டவேண்டுமென்பது. சொந்த வீடென்பது தேவைக்கென்பதைத்தாண்டி ஒரு கெளரவமாக, லட்சியமாக மாற்றியதின் பெரும்பங்கு "சொந்தக்காரர்களுக்குண்டு".

சொந்த வீடு கட்டிமுடித்த பின்புதான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்ன சில பையன்களுக்கும், சொந்த வீடு இருக்கும் பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்ன சில பெண்களுக்கும் இன்னுமே கூட கல்யாணம் நடக்காமல் இருக்கலாம். ஆசை ஆசையாய் கட்டிய வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்காமலே சிலருக்கு வாழ்க்கையே முடிந்திருக்கலாம். வீடுகட்டுவதென்பது சிலருக்கு கனவாகவே போயிருக்கலாம். இன்னும் சிலர் வீட்டையும் கட்டி, கல்யாணமும் பண்ணி, கனவுகளையும் நிறைவேற்றி ஒருகட்டத்தில் அந்த வீட்டையே பாழடைந்து போகவும்  விட்டிருக்கலாம்.

மனிதர்கள் யாரும் வசிக்காமல் பாழடைந்து கிடக்குமொரு வீட்டில் நுழைந்து பார்த்திருக்கிறீர்களா? ஒருகாலத்தில் எல்லோருக்கும் எல்லாமுமாக இருந்த வீடு இப்போது யாருக்கும் எதுவுமில்லாமல் இருப்பதை யோசித்திருக்கிறீர்களா? உங்களுக்கு சிறுதுளி கூட தொடர்போ, சொந்தமோ இல்லாத அந்த வீட்டுக்குள் என்னென்ன நிகழ்ந்திருக்கும் என்பதை கற்பனை செய்திருக்கிறீர்களா? அந்த வீடு பல காலங்களாக சுமந்து கொண்டிருக்கும் கதைகளை கேட்டிருக்கிறீர்களா? காலம் எல்லோருக்கும் அந்த வாய்ப்பை கொடுத்துவிடுவதில்லை, ஆனாலும் கடக்கும் இடமெங்கிலும், நடக்கும் தடமெங்கிலும் எதுவோ ஒன்றை தேடிக்கொண்டே இருப்பவர்களை காலம் ஏமாற்றுவதும் இல்லை. 

மூன்று தலைமுறைகள் முழுதாய் வாழ்ந்து நான்காம் தலைமுறை நகரங்களை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்துவிட்டதால் பாழடைந்து கிடக்கும் அந்த வீட்டின் வயது கிட்டத்தட்ட 100 வருடங்களாகிறது. கோவில்களின் மதில் சுவர்களைப்போல அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட மதில் சுவர்கள் இப்போதும் கம்பீரமாய் நிற்கின்றன. உடைந்த கதவுகளின் வழியே அவ்வப்போது வரும் ஆடுகள் பசியாற வீடெங்கிலும் முளைத்து நிற்கின்றன செடி கொடிகள். நெசவுத்தறிகள் பூட்டியிருந்த கூடத்தின் மேற்கூரையில் ஒருபக்க ஓடுகள் விழுந்து வானத்தின் நீலம் நீள்கிறது. வீட்டுக்குள் படரும் கொடிகளின் நுனிகள் வேருக்குள் மறைந்துவிட்ட நினைவுகளை கொஞ்சம் கீறிவிட முயல்கின்றன.

காதலையும் காலத்தையும் சுமந்தபடி பந்தாவாக நிற்கிறது ஒரு பழைய ஸ்கூட்டர், வெட்கத்தையும், புன்னகையையும் ஏந்தியபடி கிடக்கிறது ஒரு பழைய புகைப்படம், அடுக்குபானைகளில் மிஞ்சிய கடைசி பானையில் தேங்கியிருக்கிறது ஒரு துண்டு வானம் எப்போதோ பெய்தமழை நீராய், ஏதோ ஒன்றின் பொருட்டு எப்போதும் அணையாமல் எரிந்துகொண்டே இருந்த மண்அடுப்பு நெருப்பைத் தின்று பல வருடங்கள் ஆகின்றன, ஆட்டுக்கல், அம்மிக்கல், குளியல் தொட்டி, பழைய சுவிட்ச்கள், வண்ண மாடங்கள், பனைமரத்தூண் தாங்கிய பட்டாசாலை, கையோடு வேய்ந்த கூரைகள் என அத்தனையிலும் பழமைகள் சுமந்திருக்கும் வீட்டில் இப்போது மறக்க முடியாத நினைவுகள் மட்டுமே நிரம்பியிருக்கின்றன.

அந்த காலத்தில் இந்த பொடக்காலிலதான் (பாத்ரூமில்) பாட்டி 11 பிள்ளைகளையும் பெத்தெடுத்தாள், இங்கதான் தாத்தா தறி நெய்வார், இந்த வராந்தாவுல தான் நாங்க விளையாடுவோம், இது தான் சாமி ரூம், இந்த பானைல இருந்துதான் நாங்க அரிசி அள்ளி அள்ளி திம்போம், இந்த இடத்துல தான் நாள் கீழ விழுந்துட்டேன், இங்கதான் பெரிய பாட்டி எல்லோரையும் வரிசையா உக்கார வெச்சி நிலாச்சோறு   உருட்டி கொடுப்பாங்க, இங்கதான் பெரிய ஜமக்காளத்தை விரிச்சி போட்டு வரிசையா படுப்போம், பாட்டி நிறைய கதைகள் சொல்லுவாங்கன்னு அவங்க பக்கத்துல படுக்க ஒரு சண்டையே நடக்கும், நடு சாமத்துல ஒன்னுக்கு போக சின்னவ எழுப்புவா அப்போன்னு பார்த்து தெருநாய் குரைக்க அவளும் பயந்து என்னையும் பயப்படுத்துவான்னு எத்தனையெத்தனை கதைகள்.

மனிதர்கள் வசிக்காத எல்லா வீடுகளிலும் சொல்லிக்கொள்ள அத்தனை கதைகள் இருந்தும். இப்போது அங்கெல்லாம் நினைவுகள் மட்டுமே குடியிருக்கின்றன. தலைமுறைகள் கடந்து நீளும் நினைவுகளின் தொகுப்பை சேமித்து வைக்க எல்லோருடைய மனங்களின் மூலைகளிலும் சில அடுக்குப் பானைகள் உள்ளன, அவற்றைக் கிளறி உள்ளிருக்கும் பழமையின் ருசியை பரிமாறத்தான் யாருமில்லை. சமீப காலங்களில் எல்லா ஊர்களையும் போல எங்கள் ஊரிலும் சில பழைய வீடுகளை இடித்துவிட்டு புதிதாக கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இடிக்கப்படும் முன்னே வெளியிலிருந்து பார்த்த சிலவீடுகளின் முகப்புத் தோற்றங்கள் எதையெதையோ நினைவுகளுக்குள் உருட்டிவிடுகின்றன.


ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையம்தான் மாமனார் வீடு. அவர் வீடு இருக்கும் தெருவில் முன்னொரு காலத்தில் கம்பீரமாய் இருந்து இப்போது பயன்படுத்தாத சூழலில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு பெரிய வீடு உள்ளது. இந்த வீட்டைக்கடக்கும் போதெல்லாம் கடவுளின் மீது அதீத பக்தி உள்ளவர்கள் எந்தவொரு கோவிலைக்கடக்கும் போதும் அனிச்சையாய் கன்னத்தில் போட்டுக்கொள்வார்களே அப்படி என் கண்கள் அனிச்சையாக அந்த வீட்டை நோக்கி போகும். சாலையின் ஓரத்தில் அமைந்திருக்கும் அந்த வீடு பழங்காலத்தில் கட்டியிருக்க வேண்டும். நுழைவுவாயிலின் இரண்டு பக்கமும் மிகப்பெரிய ஜன்னல்கள், பட்டாசாலை என்று சொல்லக்கூடிய இடத்தில் ஓடுகள் இல்லாத சட்டங்கள், சுவரெங்கும் கருப்பு வெள்ளையில் அந்தக்கால புகைப்படங்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மேஜை நாற்காலி, முதல் மாடியில் தூண்கள் வைத்த பால்கனி, இரண்டு பக்கமும் மாடங்கள், வெளியில் திண்ணைகள் என இந்த வீடு இப்போது யாரும் படிக்காத கவிதை போல இருக்கிறது.

அந்த வீட்டைப்பற்றிய வரலாறை தெரிந்து கொள்ள விசாரித்த போது பழைய தலைமுறை மனிதர்கள் மறைந்த பின்பு, பிள்ளைகள் வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும் இருந்ததால் கொஞ்ச காலங்களுக்கு முன்புவரை ஊர் பொறுப்பில் விடப்பட்டு  பள்ளிக்கூடமாகவும் அதன் பிறகு தபால் நிலையமாகவும் இருந்திருக்கிறது. தபால் நிலையத்தில் வேலை செய்பவர்கள் தங்கிக்கொள்ள மாடியில் வசதி இருந்திருக்கிறது. அதன்பின் வீட்டு உரிமையாளர்களின் வாரிசுகள் வந்திருக்க வேண்டும், அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஏதோ ஒரு தருணத்தில் இப்படி கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. 

ஒருகாலத்தில் இங்கு வசித்தவர்கள் எப்படியெல்லாம் இருந்திருப்பார்கள், சொந்த பந்தங்களோடு, குழந்தைகளோடு கூடிக்களித்திருப்பார்கள், பண்டிகைகளை கோலாகலமாக கொண்டாடி இருப்பார்கள், திருவிழாக்களில் திளைத்திருப்பார்கள். மொட்டை மாடி நிலாச்சோறு, ஆடிமாத தூரியாட்டம், முற்றத்து ஊஞ்சலாட்டம், திண்ணையில் அமர்ந்து வேடிக்கை, கல்யாண வீடாய் தடபுடல் விருந்து, புதிதாய் பிறந்த குழந்தையின் அழுகுரல், வயதான பாட்டியின் பொக்கை வாய் சிரிப்பென எத்தனை எத்தனை விஷயங்களை இந்த வீடு பார்த்திருக்கும் தானே. இப்போது யாராலும் திறக்கப்படாத கதவுகள் மக்கிப்போய், ஜன்னல் கம்பிகள் துருப்பிடித்து, தூண்கள் சிதைந்து, ஓடுகள் உடைந்து, பக்கச்சுவர்கள் இடிந்து, மாடங்கள் அழகிழந்து, தன் இறுதி மூச்சை இழுத்துக்கொண்டிருக்கிறது அந்த வீடு.

இன்னும் கொஞ்ச காலத்தில் அது முற்றிலுமாக இடிக்கப்பட்டு அங்கு பெரிய அடுக்குமாடி வீடுகள் கட்டப்படலாம், பல குடும்பங்கள் வந்து வாழலாம். ஆனால் அது போன்ற வேலைப்பாடுகள் நிறைந்த வீட்டை யாராலும் கட்ட முடியாது, கட்ட மாட்டார்கள். வாழ்க்கை ஒவ்வொரு கட்டத்தை நோக்கி நகரும்போதெல்லாம் இந்த மாதிரி பழமையான பல விஷயங்களை நம் தலைமுறைகள் இழந்து கொண்டிருக்கிறோம், கூடவே பல மனிதர்களையும். எங்கள் ஊரிலும் பல வீடுகள் அந்த மாதிரி இருக்கின்றன. எல்லா ஊர்களிலும் அந்த வீடு மாதிரி பழைய வீடுகள் இன்னும் தன் கம்பீரத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கும். அதன் பின்னும் சொல்லப்படாத கேட்கப்படாத பல கதைகளும் இருக்கும். நாமதான் வாழ்க்கை துரத்தும் அவசரத்தில் அதையெல்லாம் நின்று ரசிக்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

எப்போதாவது அந்த வீட்டைக் கடந்து செல்பவர்களுக்கு இதுவொரு பாழடைந்த பங்களாவாக, பேய் வீடாக, சபிக்கப்பட்ட இடமாக, வழி சொல்லும் குறியீடாக தோன்றலாம் ஆனால் அதில் தான் ஆகச்சிறந்த மனிதர்களும் வாழ்ந்திருப்பார்கள். ஆத்மார்த்தமான அன்போடு கலையோடு பார்த்தால் அந்த வீட்டில் இன்னும் கூட குழந்தைகளின் கொலுசு சத்தங்களும், பெண்களின் வெட்கச்சிரிப்புகளும், ஆண்களின் வீரமும், வயதானவர்களின் அன்பும் எதிரொலித்துக்கொண்டே இருக்கலாம். 

வீடென்பது பலருக்கு சொத்தாக, கெளரவமாக, மூலதனமாக இருக்கலாம். சிலருக்கு சொந்த வீடென்பது வாழ்ந்துவிட்டுப்போவதற்கு மட்டுமல்ல வாழ்ந்துகாட்டவும் தேவைப்படுகிறது.

21 May 2021

பற்றுதலில் உதிரும் துகள்

"திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன" என்னும் வாக்கியம் எதற்காக சொல்லப்பட்டது? இப்போதும் திருமணங்கள் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றனவா? அப்படியெனில் சொர்க்கத்திலிருந்து இந்த திருமணங்களை யார் நிச்சயிக்கிறார்கள்?என்னும் கேள்விகள் பல நாட்களாக மனதுக்குள் ஓடிய வண்ணம் இருக்கிறது. இதற்கெல்லாம் விடைகள் காண கட்டாயம் திருமணம் செய்திருக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் அது குறித்த தேடலும் அறிந்துகொள்ளும் ஆர்வமும் இருக்கும் பட்சத்தில் வயதின் மீது பொழியும் நினைவு மழையென காலம் பின்னோக்கி இழுத்துச்சென்று மறக்கமுடியா நாட்களின் ஈரத்தை மனமெங்கும் பரவச்செய்யும்.   

ஒருகாலத்தில் கல்யாணத்துக்கு போறோம் என்பதே பெரும் கொண்டாட்டமாக இருக்கும். புதுத்துணி போட்டுக்கலாம், இனிப்பு பலகாரங்கள் பாயாசத்தோடு நல்ல சாப்பாடு கிடைக்கும், கல்யாணம் வார நாட்களில் வருமெனில் பள்ளிக்கூடத்திற்கு லீவு போட்டுக்கலாம் என்பதையெல்லாம் தாண்டி, வெவ்வேறு ஊருகளில் இருக்கும் உறவுகளை ஒரே இடத்தில் சந்திக்கலாம் என்னும் சந்தோசம் மிகுந்திருக்கும். சிறுவயது கொண்டாட்டங்களுள் என்றைக்குமே மறக்க முடியாதவையாக அத்தை மாமா கல்யாணத்திலோ, சித்தி சித்தப்பா கல்யாணத்திலோ, தூரத்து உறவுகளின் கல்யாணத்திலோ விளையாடிக்களைத்து பரட்டை தலையோடு படிந்த பவுடர் முகத்தோடு ஒளிந்து ஒளிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் இன்னும் இருக்கத்தான் செய்யும். இவையெல்லாம்  ஆண்பிள்ளைகளுக்கு மட்டும் பொருந்தும். பெண் பிள்ளைகள் பெரும்பாலும் மருதாணி விரல்களோடும் கலையாத ஒப்பனைகளோடும் வலம் வருவார்கள்.


திருமண வீடுகளில் பெரிய பெரிய ஸ்பீக்கர்களில் "மணமகளே மருமகளே வா வா உன் வலதுகாலை எடுத்துவைத்து வா வா"ன்னு மணமகளுக்கான பாடல்கள் ஒலித்தபடி இருக்கும். மணமகனுக்கான பாடலை இதுவரை கேட்டதாய்  நினைவில்லை. பழைய மடக்கு சேர்கள், "வெல்கம் ட்ரிங்க்" என "லவ்ஓ , ரஸ்னா" க்களோடு உண்மையான அன்பையும், நியாமான கோபங்களையும் சுமந்தபடி நடந்து முடிந்த திருமணங்கள் ஏராளம். கூலிங்கிளாஸ் போட்டபடி அண்ணன்களும், ஊதா ரிப்பனோடும் கனகாம்பரம் பூவோடும் இருக்கும் சடையை முன்னாடி போட்டபடி அக்காக்களும் போட்டோவுக்கு போஸ் கொடுத்த காலங்கள் பேரழகு. பந்தியில் பரிமாற சிறுவர்களுக்கென ஒதுக்கப்படும் தண்ணீர் டம்ளர்களும் ஒடுங்கிய ஜக்குகளும் பால்யத்தின் நினைவுச்சின்னங்கள்.


 ஆண்டுகள் பல கடந்த பின்பு எல்லாவற்றையும் கான்ட்ராக்ட்  விட்டுவிட்டு ஆடம்பரத்திற்காகவும் கெளரவத்திற்காகவும் பல திருமணங்கள் நடந்தன. அவையெல்லாம் ரொக்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள். திருமணமென்னும் ஒருவார கொண்டாட்டங்கள் இரண்டு நாள் சம்பிரதாயங்களாக மாறிப்போயின. ஒருபக்கம் கல்யாண வயதைக்கடந்தும் ஆண்களும் பெண்களும் கனவுகளைச் சுமந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம்  சிறுவயதிலேயே மணமக்களின் அரைகுறை புரிதல்களோடு கல்யாணங்களும் நடந்தவண்ணம் இருப்பது முரண். இந்த அவசரயுகம் திருமணத்தை மட்டுமல்ல சேர்ந்து வாழ்வதையும் அவசர அவசரமாக முடித்துக்கொள்கிறது என்பதுதான் உண்மையான வேதனை. பிரிவதற்காக அத்தனை போராடும் பலருக்கு வாழ்வதற்காக அதில் பாதியாவது போராட வேண்டுமென்பது தெரிவதே இல்லை. அல்லது முயற்சிப்பதே இல்லை.


உலகை கைக்குள் கொண்டுவந்து அடக்கிய காலத்திற்கு முன்னால் இருந்த கூட்டுக்குடும்பங்களில் திருமணம், காதுகுத்து, வளைகாப்பு, சீர் போன்ற விசேஷங்கள் எத்தனை அழகாய் இருந்தன. மாமா-அத்தைகள், சித்தி-சித்தப்பாக்கள், பெரியப்பா-பெரியம்மாக்கள் அவர்களின் பிள்ளைகளென ஒட்டுமொத்த குடும்பத்தையும் வழிநடத்தும் தாத்தா பாட்டிகளென ஒரே கூடாரத்தின் கீழ் ஒட்டுமொத்த பிரியங்களும் அன்பும் கொட்டிக்கிடக்கும். கடந்த தலைமுறை மனிதர்கள் சந்தித்துக்கொள்ளும்போது அவர்களது சிறுவயது பட்டப்பெயர்களையோ குடும்பப்பெயர்களையோ சொன்னால் சட்டென அடையாளம் கண்டுகொண்டு உரையாடத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இப்போது..?  மிக நெருங்கிய சொந்தத்தில் நடக்கும் திருமணமொன்றில் கலந்திருப்பவர்கள் யார், என்ன உறவுமுறை எனத் தெரியாமல் கைப்பேசிகளுக்குள் மூழ்கிவிடுகிறோம். 


பிழைப்புக்காக வேறு வேறு ஊர்களுக்கு மாறிப்போனபின்பு எப்போதாவது உறவுகளின் திருமணத்திற்காக பிறந்த ஊருக்குப் போகும் மனிதர்களின் மனநிலை எத்தனை சந்தோசங்களால் நிரம்புகிறது. "இந்த தெருக்குழாயிலிருந்துதான் நான் தினமும் தண்ணி பிடிப்பேன், இந்த கடையில் தான் நாங்கள் வளையல்கள், தோடுகள் வாங்குவோம், அப்போ இங்க ஒரு திண்ணை இருக்கும் அதில் தான் பேருந்துகளுக்காக காத்திருக்கும்போது உட்கார்ந்திருப்போம், இந்த மண்டபத்தில் தான் எனக்கு சீர் வெச்சிருந்தாங்க" என்று பல கதைகளை தன் பிள்ளைகளிடம் சொல்லும் அம்மாக்களின் மனது  மருதாணியைப்போல மாதக்கணக்கில் சிவந்துகிடக்கும். "இந்த பள்ளிக்கூடத்துலதான் நான் படிச்சேன், இங்கதான் நான் முடிவெட்டிக்க வருவேன், இந்த மைதானத்தில் தான் நான் சைக்கிள் ஓட்டிப் பழகினேன், இந்த கோவில் திருவிழா அப்போதான் நீ பொறந்த" என்று தன் பால்யத்தை மகன்களிடம் சொல்லிக்கொண்டே நடக்கும் ஆண்களின் மனது பழைய காதலியைப் பார்த்ததைப்போல பல நினைவுகளை மீட்டெடுக்கும். அந்த அழகிய நினைவுகளின் ஈரத்தை, மருதாணி போன்ற வாசத்தை, கனவுகள் சுமந்து கொண்டிருக்கும் ஏக்கத்தை பல நாட்கள் மனம் அசைபோடும். சென்ற இடத்தில் கல்யாணநாளோ, பிறந்தநாளோ வந்துவிட்டால் உறவுகளோடு கூடித் திளைக்கும் அந்த நாள் இன்னுமொரு மறக்க முடியாத நாளாய் மாறும்.


இப்போது இருக்கும் சூழலில் இந்த சந்தோஷங்கள் எதுவுமில்லை. வாட்சப்பில் வந்து விழும் அழைப்பிதழ்களுக்கு வாட்சப் வழியாகவே வாழ்த்துகளையும் அனுப்ப வைத்திருக்கிறது காலம். நெருங்கிய சொந்தமென்றாலும் கூட திருமணத்திற்கு நேரடியாக வரவேண்டாமென சொல்லிவிட்டு வீட்டிலிருந்தபடியே நேரலையில் வாழ்த்துச்சொல்ல வைத்திருக்கிறது. தவிர்க்கவே முடியாமல் அழைக்கப்படும் உறவுகளும் கைகுலுக்கியோ, கட்டிப்பிடித்தோ நலம் விசாரிக்க முடியாமலும், வாழ்த்துகளை சொல்ல முடியாமலும், பாதங்கள் பணிந்து ஆசீர்வாதங்கள் வாங்க முடியாமலும் தனித்து நிற்கின்றன. இந்த சூழலை அறிவோடு பொருத்திப்பார்ப்பவர்கள் எதார்த்தத்தை எளிதாக கையாளுகிறார்கள். உணர்வோடு பொருத்திப்பார்ப்பவர்கள் வெளியில் புன்னகைத்தாலும் உள்ளுக்குள் ஒரு வெறுப்பு நெருப்பை அணையாமல் வைத்திருப்பார்கள்.


மிக நெருங்கிய உறவுகள் கூடவே இருந்து திருமணத்தை சிறப்பித்துவிட்டு ஆசீர்வாத மழையை அள்ளி வீசினாலும் கூட, மணமக்களுக்கு சந்தோஷமென்பது உடைந்துபோன கனவுகளின் மீது தெளிக்கப்படும் ஆறுதல் துளிகளாகத்தான் அவை இருக்கும். இப்போது திருமணம் செய்துகொள்ளும் இருவரும் எத்தனை  திருமணங்களுக்கு போயிருப்பார்கள், நண்பர்கள், உறவுகள்,  கூட படித்தவர்கள், வேலை செய்பவர்கள் என எல்லோரோடும் எத்தனை குதூகலமாய் கேலியும் கிண்டலுமாய் அந்த திருமணங்களைக் கடந்து வந்திருப்பார்கள், தங்களது கல்யாணமும் இப்படியெல்லாம் நடக்க வேண்டுமென எத்தனை கனவுகளை மனதுக்குள் அடுக்கி வைத்திருப்பார்கள். எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி, மிகச்சிலரோடு விரைவில் முடிக்கவேண்டுமென்ற நிபந்தனைகளோடு, போட்டோக்களுக்கு கூட முழுப்புன்னகையை கொடுக்க முடியாமல் நடந்தேறும் இந்த கொரோனா காலத்திருமணங்கள் எல்லாமே  நினைவுகளின் அலமாரியில் எப்போதுமிருக்கும் நிறைவேறாக்கனவுகளில் ஒன்றுதான். 


இந்த காலம் நிச்சயம் மாறும் இழந்து போன அத்தனை சந்தோஷங்களையும் இன்னொரு காலம் மூட்டை கட்டிக் கொண்டு வந்து கைகளில் திணிக்கும், அப்போது மனம் சுமந்த கனவுகளில் சிலவேனும் நிறைவேறும் வாய்ப்பு வரும். உறவுகளோடு கூடிக்களிக்க, நண்பர்களோடு ஆடித்திளைக்க, பயணங்கள் மூலம் பூமி அளக்க, வானம் நோக்கி சிறகுகள் விரிக்க இந்த வாழ்க்கை வழங்கும் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளவேனும் இப்போதைக்கு சில சங்கடங்களை தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். சில உறவுகளுடன் வரும் பிணக்குகள் நீர்க்குமிழி போல சட்டென உடைவதும், உடைந்த கண்ணாடியைப்போல சிதறியே கிடப்பதும் நேசத்தின் மீதான முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு தேவையான கடவுச்சொற்கள் மறந்துபோன தருணங்களாய் காலத்தின் பரணில் கைக்கு எட்டாத தூரத்தில் தூக்கி எறியப்பட்டுவிடுகின்றன. தொடுத்துக்கொண்டிருக்கும் ஈகோவை அன்பால் கட்டிவிட ஒரு பக்கம் தயாராய் இருந்தாலும் வெறுப்பின் கயிறுகளைக்கொண்டு இன்னும் கொஞ்சம் இறுக்கிக்கட்டிவிட மறுபக்கம் வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறது. 


எதன் பொருட்டும் உறவுகளின் அன்பை, பிரியங்களை இன்னும் இன்னும் நெருங்கி பற்றிக்கொள்ளவே கைகள் நீளுகின்றன. அந்த பற்றுதலில் உதிரும் ஒரு துகள் ஒட்டுமொத்த ஈகோவையும் உடைத்துத் தகர்க்குமெனில் கைகளை இன்னும் கொஞ்சம் இறுகப்பற்றுவோம். பிரியங்களின் கூடாரத்தில் அலங்காரங்களாய் இருக்கும் பொய்களைவிட அவசியமாய் இருக்கும் உண்மைகளை இன்னும் கொஞ்சம் நேசிப்போம்.