சுவர்களெங்கும்
அப்பிக்கிடக்கும்
உன் முத்தங்களுக்கும்
அவன் சிரிப்புகளுக்கும் நடுவே
என் இரவுகள் விழித்துக்கிடக்கின்றன
உன்னைக்காணாத
கண்ணாடியும்
அவனைக்காணாத
பொம்மைகளும் போல
உங்களைக் காணாத நானும்
அறையின் ஒருபொருளாய்
மாறிப்போனேன்
கோப்பையில் நிரம்பிய
தேநீரிலிருந்து
வெளியேறும்
புகையைப்போல
தனித்த மனமொன்று
ஆவியாகி
ஆதிக்காற்றில்
பாதியாய்க் கலக்கிறது
தூரத்து கோபுரத்திலிருந்து
சட்டென வானில் பறந்து
மீண்டும் மாடத்தில் வந்தமறும் புறாக்களைப்போல
உங்களிடம் வந்து திரும்ப
அவசர சிறகுகள் இல்லையென்பதே
இப்போதைய வருத்தம்