24 September 2020

சொல்லப்படாத கதைகள்

"ஒரு ஊருல ஒரு ராஜாவாம்..." ன்னு தொடங்கும் கதைகளின் வழியே நாம் பார்த்திராத ராஜாக்களின் காலத்துக்குள் கைப்பிடித்து அழைத்துச்செல்ல நம் எல்லோருக்கும் கதை சொல்லிய தாத்தா பாட்டிகள் இருந்திருப்பார்கள், இப்போதும் இருப்பார்கள். இருள் கவ்விய இரவுகளில் சிம்னி விளக்கின் சிறு வெளிச்சத்தில் போர்வையை விட கதகதப்பான பாட்டியின் மடியில் படுத்துக்கொண்டு  விக்ரமாதித்தன் வேதாளத்தின் கதைகள், தேவதையும்    கோடாரிகளும் கதை, பீர்பால் கதைகள், ராஜா ராணி கதைகள், காக்கா வடை "சுட்ட"   கதைகள்தாத்தாவின் குறும்புத்தனங்கள் சொல்லும் கதைகள் எனக் கேட்ட நாட்களை கடலுக்குள் தவறவிட்ட தங்க நாணயம் போல மனதின் ஆழத்தில் காலம் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறது.  அனுபவங்களை விவரிக்கவோ, அழகான கற்பனையை கதைகளாக மாற்றிக்கூறவோ எல்லோராலும் முடிந்துவிடுவதில்லை, அதற்கென ஒரு பொறுமையும் கேட்பவர்களைக்  கதையோடு சேர்த்துக் கட்டிப்போடும் வல்லமையும் வாய்த்திருக்க வேண்டும். அப்படிக்  கட்டுண்டு கிடந்த காலங்கள் இனி வாழ்வில் திரும்பக்கிடைக்குமா என்பதெல்லாம் பதில் தெரிந்த கேள்வி தான். கிடைக்காது என்பதே அதன் பதிலாகவும் இருக்கிறது.

 இந்த தொழில்ப  நுட்யுகத்தில் "கதை சொல்லி" என்னும் அடையாளத்தோடு நிறைய பேர் இருக்கிறார்கள். எதோ  ஒரு எழுத்தாளரின் கதையை படித்து, அந்தக் கதை சொல்ல வரும் கருத்தை அதன் சுவை குறையாமல் ஏற்ற இரக்கத்தோடு  விளக்கி அல்லது தங்களது கதை ஒன்றை கடந்துவந்த வாழ்வின் வலிகளோடும் அதன் மூலம் அடைந்த வெற்றிகளோடும் சேர்த்து அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்கும் பணியையும் பலர் அழகிய முறையில் செய்துகொண்டிருக்கிறார்கள்.                அதற்கென கட்டணம் வாங்கிக்கொண்டோ அதன் மூலம் லாபம் ஈட்டிக்கொண்டோ இருப்பதையெல்லாம் தாண்டி, அதை யாருக்கும் எளிதில் கைகூடிவிடாத  ஒரு அற்புதக்  கலையாக மாற்றி தங்களை இன்னும் மெருகேற்றி இன்னும் உயரத்தில் வைத்துக்கொண்டவர்கள் வாழ்வின் சூட்சமத்தைக்கூட மிக அழகாக கையாளுபவர்களாக தங்களை மாற்றிக்கொண்டதில் தான் இந்த வாழ்வின் மீதான ஈர்ப்பும் மனிதர்களின் மீதான காதலும் கொண்டவர்களாய்  நிறைந்திருக்கிறார்கள்.

 நான் சின்ன பையனா இருந்தபோது எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு தாத்தா இருந்தார். ஆண்டு, அனுபவிச்சு, ஓய்வு எடுக்கும் வயதிலும் கூட அத்தனை கம்பீரமாய் முறுக்கு மீசையோடு இருந்தார். சாயங்கால நேரங்களில் விளையாடிக்களைத்து வீட்டுக்கு திரும்பும் முன் அந்த தாத்தா அமர்ந்திருக்கும் கயிற்றுக்கட்டிலின் ஓரத்தில் என் வயது பெண்களும் பசங்களும் வரிசையாக  நிற்போம். அவர் வேட்டைக்கு போகும் பரிவார ராஜா போல மெல்ல மெல்ல கதை சொல்ல தயாராவர். வெத்தலையை துப்பிவிட்டு சுண்ணாம்பு கையை கழுவிவிட்டு வேட்டியை இறுக்கிக்கட்டிக்கொண்டு தொழில் போட்டிருக்கும் துண்டை உதறி சரியாக போட்டுக்கொண்டு "ரெடியா போலாமா?"ன்னு கேப்பார். சில சமயங்களில் முந்தைய    நாள் பாதி கதையை சொல்லி முடித்திருந்தால் "நேத்து எதோட விட்டோம்?" ன்னு கூட்டத்தில் கேப்பார், அதை சொல்வதற்கே போட்டியாக இருக்கும். சில சமயங்களில் புதுக் கதைகள் சொல்லுவார், அந்த கதைகள் அவர் தாத்தா அவருக்கு சொல்லியதாகவோ, வேறொருவர்  மூலமாக  அவர் வாய்வழியா கேட்ட கதையாகவோ, அவருடைய சிறு வயதில் நடந்த கதையாகவோ கூட இருக்கலாம். ஆனால் எந்த கதையாக இருந்தாலும் அதை சொல்வதில் அத்தனை நேர்த்தி இருக்கும். இடையில் யாராவது சேர்ந்து கொண்டால் மறுபடியும் அவர்களுக்காக முதலில் இருந்து சுருக்கமாக ஒருமுறை சொல்லுவார். 

 அந்த தாத்தா கதை சொல்லும் விதத்தில் அத்தனை உயிர்ப்பு இருக்கும். கதையை வெறுமனே சொல்லாமல் கொஞ்சம் கொஞ்சம் நடித்துக்காட்டவும் செய்வார். மழை நேரத்து இரவுகளில், மின் இணைப்பு துண்டிக்கப்படும் நேரங்களில் கூட அவர் வீட்டு திண்ணையில் அவரோடு உட்கார்ந்து மழைச்சாரல் தெறிக்க தெறிக்க கதைகள் கேட்ட நியாபகங்கள் இன்னும் மனதோரங்களில் நிழலாடுகிறது. குழந்தைகளைக் காணவில்லை என தேடிக்கொண்டு வரும் பெற்றோர்களோடு அத்தனை எளிதில் எங்களை அனுப்ப மாட்டார். யாரோட அம்மா வராங்களோ அவங்ககிட்ட ஒரு விடுகதை போடுவார் அந்த விடுகதைக்கான பதிலை சரியாக சொன்னா தான் குழந்தையை அனுப்புவார் இல்லனா கதையை முழுசா சொல்லி முடிச்சபிறகு வந்து கூட்டிட்டு போங்கன்னு சொல்லிடுவார். அவரு சொல்ற விடுகதைகளுக்கு பதில் சொல்வது அத்தனை சுலபமல்ல, இந்த விடுகதைக்கு பயந்துகொண்டே கதை கேட்கும் எங்களை கூட்டிப்போக யாரும் வராமல் இருப்பதுதான் எங்களுக்கான அதீத சுதந்திரம். அவரு கதை சொல்ல சொல்ல நாங்க "ம்ம் ம்ம்" ன்னு கேக்கணும் அந்த "ம்ம்" அவருக்கு நல்லா கேக்கலைனா கதை சொல்லுவதை நிறுத்திட்டு குறுகுறுன்னு எல்லா முகங்களையும் பார்ப்பார் அப்பறம் திட்டிட்டு மறுபடியும் கதை சொல்லுவார். விடியத்தொடங்கியிருந்த ஒரு அதிகாலையில் தூக்கத்திலேயே இறந்து போனதாய் சொன்னார்கள். தெரு முழுக்க ஒரு தாத்தா இறந்ததாக மட்டும் தான் தெரிந்தது. எங்களுக்கு மட்டும் தான் தெரியும் "அந்த கதைகளின் நாயகனோடு சேர்ந்து எங்களுக்கு சொல்வதற்காக சேர்த்து வைத்திருந்த அத்தனை கதைகளும் கூட செத்துப்போய்விட்டன" என்பது.

 அவன் பேரு மோகன், எங்களை விட இரண்டு வயது மூத்தவன் ஆனாலும் அவனை அண்ணா என்று அழைப்பதைவிட மோகன் என்றே அழைக்க எங்களை பழக்கப்படுத்தி இருந்தான். எண்பதுகளின் இறுதியில் பன்னிரண்டு வயதில் ஒருவன் கதைசொல்லியாக மாறி எல்லோரையும் தான் பார்த்த படங்களில் இருந்து, தான் படித்த புத்தகங்களில் இருந்து, தான் கேட்ட மொழிகளில் இருந்து அத்தனை கதைகளை எங்களுக்காக சுமந்து வருவான். ஜேம்ஸ்பாண்ட் படத்தை பார்த்துவிட்டு வந்து அதன் கதையை விவரித்து சொல்லுவதில் அவனுக்கு அத்தனை ஆர்வமும், அதை கண்கொட்டாமல் கேட்பதில் எங்களுக்கு அத்தனை ஆச்சரியங்களும் இருந்தன. அந்த படத்தில் வரும் கார் சத்தத்தில் இருந்து, துப்பாக்கி சத்தம், வெடிகுண்டு சத்தம்ன்னு என்னென்ன இருக்கோ எல்லாத்தையும் கண்முன்னாடி கொண்டு வந்து நிறுத்தற மாதிரி கதை சொல்லுவான்.

 அந்த தெருவில் மூனு படிக்கட்டு வெச்சி, நீளமான திண்ணை ஒன்னு இருக்கும் அதுதான் எங்களின் கதைக்களம். அவன் நடு படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு கதை சொல்லுவான் அப்பத்தான் எல்லோருக்கும் நல்லா கேட்கும். திண்ணையின் பக்கவாட்டில் ரெண்டு பக்கமும் திறந்திருக்கும் சாக்கடையில் ஓரங்களில் நின்றுகொண்டு அவன்  சொன்ன கதைகளைக்கேட்ட நாட்கள் தான் அப்போது கிடைத்த வாரஇதழ் மாதஇதழ் புத்தகங்களில் இருந்த சின்ன சின்ன கதைகளை படிக்கத்தூண்டியது. ஜாக்கிஜான் படங்களின் மீதான ஆசைகளும் ஆங்கிலப்படங்களின் மீதான மோகங்களும் வரக் காரணமாக இருந்த மோகன் திடீரென படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அப்பாவோடு சொந்த தொழிலுக்கு போய்ட்டான். பல ஆண்டுகள் கழித்து எதிரெதிரே பார்த்துக்கொண்ட போது மெல்லிய புன்னகையை கசியவிட்டு அப்பாவின் பின்னாடி அமைதியாக நடந்துகொண்டிருந்தான். அத்தனை சொற்களைக்கொண்டு பல கதைகள் சொல்லியவனிடமிருந்து ஒற்றை சொல்கூட உதிராத காரணம் என்னவாக இருக்குமென அவன் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன். கொஞ்ச நாளில் உடல்நிலை சரியில்லாமல் திடீரென இறந்து விட்டதாக சொன்னார்கள். அவனோட அப்பாவை எப்போதாவது அந்த தெருவில் பார்க்க நேரிடும், அப்போது அவரிடம் அவனைப்பற்றி கேட்க பல கேள்விகள் முளைக்கும் ஆனாலும் அவன் சொல்லிய கதைகளின் வழியே இப்போதும் எங்களோடு வாழ்ந்துவிட்டுப் போகட்டுமென அமைதியாய் கடந்துவிடுவேன்.

இப்போதும் பாட்டி, அம்மா பெரியம்மா, சின்னம்மான்னு சந்திக்கும் எல்லோரும் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை, பட்ட சிரமங்களை, அனுபவிக்க மறந்த சந்தோசங்களை, சேமித்து வைத்திருக்கும் கனவுகளை கதைகளைப்போல சொல்லுவதுண்டு. அவை வாழ்வியல் அனுபவங்களின் அடர்த்தியாக இருக்கின்றன. மனிதர்களின் மனங்களில் குவிந்து கிடக்கும் கதைகள் பலவுண்டு. கேட்பதற்கு காதுகள் கிடைக்கும் தருணங்களில் தான் அவை வெடித்துக்கிளம்புகின்றன. சொல்லப்படாத கதைகளில் மறைந்திருக்கும் சோகங்களை சொல்லாமல் புரிந்துகொள்ளும் மனங்கள் அத்தனை எளிதில் வாய்ப்பதில்லை. ஆணோ பெண்ணோ அப்படி வாழ்வின் வலிகளை விளக்கும்போது கைப்பேசியை நோண்டாமல், தொலைக்காட்சிக்குள் தொலைந்துவிடாமல், சமையலுக்குள் மூழ்கிப்போகாமல், குழந்தையைக் காரணம் காட்டி நகராமல் கொஞ்ச நேரம் காதுகொடுத்துக்கேட்கும் துணை தான் வாழ்வின் ஆகச்சிறந்த வரம்.

 

 

24 August 2020

நிறம் மாறும் உலகம்

எதையும் வேடிக்கை பார்ப்பதும், அந்த வேடிக்கை முடிந்த பின்பு  அடுத்த வேடிக்கை நோக்கி விளையாடிக்கொண்டே நகர்ந்துவிடுவதுமாய் வாழ்ந்திருந்த வயதுகளில் நிரம்பிய நினைவுகளை மூளை மடிப்புகள் பொத்தி பொத்தி வைத்திருக்கும், அதை வளர்ந்த மனதோடு இணைத்து வைத்து அவ்வப்போது காலம் நம்மை நினைவுகளில் குழந்தையாக்கி கைப்பிடித்து கூட்டிப்போய் மீண்டும் பழைய காலத்தில் நிறுத்தும். கற்பனையின் உச்சத்தில் நின்றுகொண்டு நம் சிறுவயது நிகழ்வுகளை இப்போதிருக்கும் நாமே கைகட்டி வேடிக்கை பார்ப்பதன் உள்ளிருக்கும் ஆனந்தமென்பது உயிருக்குள் பூ பூக்கும் தருணத்திற்கு நிகரானது.

யானைதான் சிறுவயதில் பார்த்து வியந்த பிரம்மாண்டமான கம்பீரம். அந்த வயதில் யானையின் உருவம் ஒரு வித பயத்தைக் கொடுத்தாலும் பிடிக்காமல் போகாது. தூரத்திலிருந்தபடியேனும் அதை ரசிக்கச்சொல்லும், அம்மாவின் முந்தானைக்குள் பதுங்கியபடியோ, தாத்தாவின் பின்னால் ஒளிந்தபடியோ யானை கண்களை விட்டு மறையும் வரை பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

பவானி கூடுதுறையில் இருந்த வேதநாயகி என்னும் பெயர் கொண்ட யானைதான் நாங்கள் பார்த்து ரசித்த முதல் யானையாக இருக்கும். பண்டிகை காலங்களில் கோவிலுக்குள் இருந்தபடி ஆசிவழங்குவது, சாமி ஊர்வலத்துக்கு முன்னால் வரவேற்பளித்தபடி நடப்பது, தேர் போகும் தெருவெல்லாம் மணியோசை குலுங்க குலுங்க ஆடி அசைந்து அழகாய் கடப்பதென இந்த யானையை ஒரு ஆச்சரியமாய் பார்த்ததுண்டு.


 பண்டிகையற்ற காலங்களில் பெரும்பாலும் விடுமுறை நாட்களில் ஊருக்குள் உள்ள தெருக்களுக்கு பாகன்கள் கூட்டி வருவார்கள். "யானை வரும் பின்னே மணியோசை முன்னே" ன்னு சொல்ற பழமொழிக்கெல்லாம் அர்த்தங்கள் இப்போதான் புரிகிறது. பக்கத்து தெருவில் யானை வரும்போதே அடுத்த தெருவுக்கு மணியோசை கேட்கும், எந்த வேலையா இருந்தாலும் அப்படியே போட்டுட்டு ரோட்டுக்கு வந்துடுவோம். கொஞ்சம் வசதி படைத்தவர்கள் யானைமேல் தங்கள் குழந்தையை வைத்து அழைத்துப்போக சொல்வார்கள், குழந்தை பாகனோடு அமர்ந்து கொஞ்ச தூரம் போய் அதே அழகோடு பின்னாலேயே வந்து நிற்கும். பார்க்க அவ்ளோ அழகா இருக்கும். வசதியற்ற வீட்டுக் குழந்தைகள் அம்மாக்களிடம் காசு கேட்டு அடம்பிடித்து வாங்கி வரும் இருபது பைசா, ஐம்பது பைசாக்களை யானையின் தும்பிக்கையில் வைத்து ஆசிர்வாதம் வாங்குவதற்குள் எல்லா வகையான நடனமும் ஆடிவிடுவார்கள். ஒரே ஒருமுறை நான் சிறுவயதில் இந்த யானைக்கு காசு கொடுத்திருக்கேன், பயந்தபடியே போய் நான் கையை நீட்ட அது சாதாரணமாக தும்பிக்கையை நீட்டி காசை வாங்கிக்கொண்டு ஆசிர்வாதம் செய்தது, தும்பிக்கையை தலையில் வைத்ததும் ஏதோ ஒரு பாறை தலையில் மோதியது போல அவ்வளவு கனம், அதன் சொரசொரப்பும், தும்பிக்கையில் இருந்த முடியின் அடர்த்தியும், மூச்சுக்காற்றின் வேகமும் என அத்தனை நெருக்கத்தில் இந்த யானையை தரிசித்த நாள் நினைவுகளில் இருந்து நீங்காமல் இருக்கிறது. இப்போதெல்லாம் கோவில் யானைகள் ஊருக்குள் வருவதில்லை, எங்காவது வழியில் யானைப்பாகன்களைப் பார்த்தால் மெல்லிய புன்னகை உதிர்த்து கடந்து விடுகிறேன்.

அந்த கூண்டுக்குள் அடைபட்டுக்கிடக்கும் கிளிக்கு தேவை இரண்டு நிமிஷ சுதந்திரமும், இரண்டு நெல்மணிகளும் மட்டுமே அதை வேண்டி, திறக்கும் போதெல்லாம் வெளிவந்து ஏதோ ஒரு சீட்டை எடுத்துக்கொடுத்துவிட்டு மீண்டும் கூண்டுக்குள் போய்விடும் கிளி யோசியத்தை அத்தனை ஆர்வமாய் வேடிக்கை பார்ப்போம், ஓரங்களில் கிழிந்த பாய் போன்ற துணியையும் கிளிக்கூண்டையும் தூக்கிக்கொண்டு ஊருக்குள் வரும் கிளி ஜோசியக்காரர்களை அவ்வளவு பிடிக்கும். ஓரளவு வசதியானவர்கள் மட்டுமே ஜோசியம் பார்த்தாலும் அவ்வப்போது வறுமையில் இருப்பவர்களும் மன திருப்திக்காக பார்ப்பார்கள். ஏதோ ஒரு வீட்டு திண்ணையிலோ, வாசலிலோ அமர்ந்து அவர் பாயை விரித்து, சீட்டுகளை வரிசையாக கிடத்தி, குறிப்பு சொல்லும் புத்தகத்தை மனப்பாடம் செய்து வைத்திருக்கும் பாடலோடு ஒப்பித்து, காசை கண்ணில் பார்த்தால் மட்டுமே வெளி வர வேண்டுமென்ற பயிற்சி செய்யப்பட்ட கிளியை நோக்கி "அய்யாவோட முக ராசிக்கு நல்ல சீட்டு ஒன்னு எடுத்துக்கொடு ராஜாண்ணோ, அம்மாவோட ராசிக்கு நல்ல சீட்டு ஒன்னு எடுத்துக்கொடு தாயிண்ணோ" சொல்லி மெல்ல அழைப்பார், ஜோசியம் கேட்டவர் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்ததும் கூண்டுக்குள் இருந்து கொஞ்சம் மிரண்டபடி வெளிவரும் கிளி ஒரு சீட்டை எடுத்து அவர் கையில் கொடுத்துவிட்டு அவர் தரும் நெல்மணிகளை வாங்கிக்கொண்டு கூண்டுக்குள் போய்விடும். வந்திருக்கும் படத்திற்கு ஏற்ப அவர் படிக்கும் குறிப்புகளை ஜோசியம் பார்ப்பவர் கேட்டுக்கொண்டிருக்க வேடிக்கை பார்க்கும் எங்கள் பார்வைகளும் கிளியோடு சேர்த்து கூண்டுக்குள் போயிருக்கும். விசில் அடித்து கிளியின் கவனத்தை எங்கள் பக்கம் திருப்ப முயற்சித்தாலும் அது கொஞ்சம் மிரண்டபடியே பார்த்துக்கொண்டிருக்கும். குறிப்பு படித்து முடித்து, பாயை மடித்து அவர் கிளம்பும்போது அவர் பின்னாலே நாங்களும் போவோம், தெருமுனை வரை போய்விட்டு திரும்பி வந்து விளையாட ஆரம்பித்துவிடுவோம். ஒரே தெருவில் பத்து பேர் கூட கிளி ஜோசியம் பார்ப்பாங்க, ஒரு தெருவில் ஒருத்தர் கூட பார்க்காமலும் இருப்பாங்க. அது கிளி யார் முகத்தில் விழித்தது என்பதைப்பொருத்தும், கிளி யோசியக்காரர் யார் முகத்தில் விழித்தார் என்பதையும் பொருத்தும் மாறுபடலாம். கிளியின் கூடவே ஒரு குட்டி முயல் அளவு வெள்ளை எலிகளை வைத்தும் யோசியம் பார்ப்பார்கள். ஆனால் அவர்களுக்கான ஜோசியத்தை எதை வைத்து பார்ப்பார்கள் எனத்தெரியவில்லை.


உடம்பில் ஒரு குட்டி கவுன் மாட்டிக்கொண்டு, அழகாய் பவுடரும் லிப்ஸ்டிக்கும் போட்டு, நெற்றியில் பெரிய பொட்டு வெச்சி, கழுத்தில் மணி கட்டிக்கொண்டு, காலில் கொழுசுகள் சிணுங்க சிணுங்க வீதிகளுக்குள் கூட்டி வருவார் கட்டிப்போட்டு ஒரு குட்டிக்குரங்கை. குரங்கை பல்டி அடிக்க சொல்லி, ஒரு குண்டாவை தூக்கி தலையில் வைத்து குதிக்க சொல்லி, குட்டி சைக்கிள் ஓட்ட வைத்து, என என்னென்னவோ சொல்லி வித்தை காட்டி வீதி வீதியாக வலம் வரும் அவரோடு நாங்களும் சுத்துவோம். பசி நேரத்தில் தேநீர் கடை வாசலில் ஒரு ஓரத்தில் அமர்ந்து குரங்குக்கு ஒரு பண் வாங்கிக்கொடுத்துவிட்டு அவர் ஒரு டீயை குடிக்கும் காட்சி இன்னும் கண்களுக்குள் அப்படியே இருக்கிறது. எல்லாத் தெருக்களையும் சுற்றிவிட்டு கிடைக்கும் சொற்ப காசுகளோடு குரங்கை தோளில் வைத்துக்கொண்டு அவர் கண்களை விட்டு மறையும் வரை பார்த்துக்கொண்டே இருப்போம். இப்போதெல்லாம் அவர் வேலையை மனைவிகள் எடுத்துக்கொண்டதால் அவர் நினைவுகள் எப்போதாவது இது மாதிரி வந்தால் தான் உண்டு.


நன்றாக பயிற்சி கொடுத்து பழக்கி வைக்கப்பட்ட கரடி ஊருக்குள் வருவதாக கேள்விப்பட்டாலே ஆர்வத்தோடு கொஞ்சம் பயமும் வந்து ஒட்டிக்கொள்ளும். கரடியை கூட்டி  வருபவர் கரடியின் அளவில் நாளில் ஒரு பகுதி கூட இருக்க மாட்டார். ஆனால் அவருக்கு கட்டுப்பட்டு அந்த கரடி இடுப்பை ஆட்டி ஆட்டி நடந்து வரும், தீராத காய்ச்சல், நழுங்கிய குழந்தைகள், இருட்டுக்கு பயப்படறவங்க, தூக்கத்துல உளர்றவங்கன்னு யாருக்கு வேணா கரடி தாயத்து கட்டலாம்னு சொல்லி, ஒரு கருப்பு கயிறையோ, சிவப்பு கயிறையோ எடுத்து கரடியிடம் கொடுப்பார், அது கையில் வைத்து கொஞ்சம் சுத்த சுத்த இவர் ஏதோ மாத்திரம் சொல்லுவார், அப்பறம் அதை வாங்கி சம்மந்தப்படவர்கள் கையிலோ, காலிலோ கட்டி அனுப்புவார். அந்த கரடி உக்காந்திருக்கும் அழகே தனி. நல்லா பொசு பொசுன்னு முடியோட, மொட்டை கண்ணையும், கூர்மையான பற்களையும், நகங்களையும் வெச்சிக்கிட்டு அது பார்க்கும் பார்வை பயமாகவும், சமயங்களில் பாவமாகவும் இருக்கும்.


மாதத்தில் ஒருநாள் வெள்ளிக்கிழமையிலோ விசேஷ நாட்களிலோ அலங்கரிக்கப்பட்ட பூம் பூம் மாட்டை பிடித்துக்கொண்டு, உறுமி மேளத்தை அடித்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக வருவார் உருமாலை கட்டிய மாட்டுக்காரர். பழைய கதாசிரியர்கள், கவிஞர்கள் வைத்திருக்கும் ஜோல்னா பை போன்ற ஒரு பையை மாட்டிக்கொண்டு, வீடுகளில் கிடைக்கும் அரிசி, பருப்பு, மாட்டுக்கு கொடுக்கும் தீவனம், கொஞ்சம் நாணயங்கள் என தனக்கு கிடைக்கும் எல்லாவற்றையும் அதற்குள்ளே ஒரு பொக்கிஷம் போல சேகரிப்பார். அந்த மாட்டை அத்தனை அழகாய் ஒப்பனை செய்திருப்பார், கொம்புகளில் கலர் ரிப்பன்கள், காலில் சலங்கை, மூக்கில் சங்குகளால் ஆன கடிவாளம், முதுகில் ஒரு பொன்னாடை என என்னென்னவோ இருக்கும். ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு ஊருகளுக்கு போவதில் தான் அவர் வாழ்வும் அந்த மாட்டின் நாட்களும் நகரும். இப்போதெல்லாம் அந்த மாதிரி மனிதர்களையும் மாடுகளையும் பார்க்க முடியறதில்லை.


திடீரென பக்கத்து தெருவில் இருந்து சத்தம் கேட்டுகிட்டே இருக்கும், பசங்க புள்ளைங்களாம் ஓடுவாங்க. போய் பார்த்தா ஒரு மர நிழலில், சுற்றியும் சிறு வேலி போடப்பட்டு உள்ள நூத்துக்கணக்கான கலர் கோழிக்குஞ்சுகள் கத்திக்கிட்டு ஒன்னுமேல ஒன்னு ஏறிக்கிட்டு குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு இருக்குங்க, அப்போ ஒரு ரூபாய்க்கு ஒரு கோழிக்குஞ்சு, வீட்ல அடம்புடிச்சி காசு வாங்கிட்டு வந்து ரோஸ்ல ஒன்னு பச்சைல ஒன்னு வாங்குவோம், கைல காசு அதிகமா இருந்தா எல்லா கலர்லயும் ஒவ்வொன்னு வாங்குவோம். அதை வீட்ல வளர்த்த முடியாது, அது பெருசாகாது, சீக்கிரம் செத்துரும்ன்னு எவ்வளவோ சொல்லுவாங்க, காதுலயே வாங்க மாட்டோமே. அவரோட மல்லுக்கட்டி கலர் மாத்தி அதை ஒரு பொட்டுக்கூடைல போட்டு தினமும் வெளிய மண்ணுல பூச்சி கொத்த விட்டு பார்த்துகிட்டா ஏமாந்த நேரத்துல கழுகு வந்து கொத்திக்கிட்டு போய்டும். அதுக்கு அழுது, சொன்னா கேக்கறியான்னு வீட்ல ரெண்டு மிதி வாங்கி அப்படியே தூங்கி போன நாட்களெல்லாம் சொர்க்கமின்றி வேறென்ன. 


சிறு கிராமங்களில், சிறு ஊர்களில் மட்டுமே இது போன்ற மனிதர்களையும் மனிதர்களோடே சேர்ந்து பயணிக்கும் உயிர்களையும் காண முடிகிறது. பெருநகரங்களில் எல்லா வேடிக்கைகளும் குறைந்து விட்டன அல்லது மறந்துவிட்டன. இந்த உலகம் அதிவேகமாக நிறம் மாறிக்கொண்டே வருகிறது. எளிய மனிதர்களையும் அவர்களோடு பழகும் உயிர்களையும் அது சார்ந்த சந்தோஷங்களையும் சட்டென பிடுங்கிக்கொள்கிறது. சமீபத்தில் எங்கள் தெருவில் ஒரு கிளி ஜோசியக்காரர் போனார், அம்மா அவரை கூப்பிட்டு ஜோசியம் பார்க்க சொல்லி கேட்டுக் கொண்டிருந்தார் நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன், அவரும் கிளியும் மட்டும் மாறியிருந்தார்கள், அந்த கூண்டும், சீட்டுகளும், பாயும், குறிப்புகளும், அவர்களுடைய வாழ்க்கையும் எதுவும் மாறவில்லை.

26 July 2020

கடந்து போவதுதானே வாழ்க்கை


வழியெங்கும் சந்திக்கும் மனிதர்களிடத்தில் தவழும் புன்னகைகளையெல்லாம் நெஞ்சுக்கூட்டில் சேமித்து வைக்கவும், பதிலுக்கு கொஞ்சம் புன்னகைக்கவும் காலம் எல்லோருக்குமே சிரிப்பென்ற வரத்தைக் கொடுத்திருக்கிறது. அதை நாம் எல்லோரிடத்திலும் ஒரே மாதிரிதான் பயன்படுத்துகிறோமா என்பதில் தான் வாழ்வின் மிகப்பெரிய கேள்விக்குறி மீன் தூண்டில் கொக்கியைப்போல மனதில் மாட்டிக்கொண்டிருக்கிறது. சொந்தங்களிடம் காட்ட ஒரு புன்னகை, நட்புகளுக்கென ஒரு புன்னகை, நம்மைவிட உயர்ந்தவர்களுக்கு ஒரு புன்னகை, தாழ்த்தவர்களுக்கு ஒரு புன்னகை, எதிர்பாலிடத்தில் ஒரு புன்னகை, குழந்தைகளுக்கென ஒரு புன்னகை என எல்லோரிடத்திலும் வெவ்வேறு புன்னகைகள் இருக்கின்றன. நாம் எதை பயன்படுத்த வேண்டுமென்பதை  பெரும்பாலும் எதிரில் இருப்பவர்களின் செயல்தான் தீர்மானிக்கிறது.

அன்புக்காகவும் பிரியங்களுக்காகவும் ஏங்கும் மனிதர்கள் இங்கு ஏராளம். அதே அன்பையும் பிரியங்களையும் செலவு செய்யத் தெரியாமல் கைவசம் வைத்திருப்பவர்களும் ஏராளம். வழக்கத்தை விட கொஞ்சம் கூடுதலாக காட்டவேண்டிய அன்பை, நேசத்தை வாய்ப்புகளிருந்தும் நாம் எல்லோரிடத்திலும் அதைக் காட்டுவதில்லை. அந்தந்த நேரத்தில் வசப்படும் பொய்களை நம் வசதிக்கேற்ப முலாம் பூசி மழுப்பி விடுகிறோம். காற்றில் உதிரும் சில மலர்களை நினைத்து மரங்கள் வருத்தப்படுவதில்லை, மாறாக இன்னும் இன்னும் பல மலர்கள் பூக்க வேர்கள் தொடர்ந்து உதவுகின்றன. மனிதர்களிடத்தில் காட்டவேண்டிய நேசங்களும் அதைப்போலவே இருக்கணும். இவனால் எனக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதையும் தாண்டி என் சிறு புன்னகை இவருக்கான நாளை நல்லவிதமாக மாற்றுமென்ற நம்பிக்கை இருந்தால் போதும் கடக்கும் எல்லா மனிதர்களிடத்திலும் ஒரே மாதிரியான புன்னகையால் கை குலுக்கலாம்.

எங்க ஊருல ஒரு பையன் இருக்கான், எத்தனையோ பையன்கள் இருந்தாலும் இவன் கொஞ்சம் வித்தியாசமானவன். அவன் பெயர் ராஜேஷ்ன்னு ஒருமுறை சொன்னான் அதான் உண்மையான பெயரான்னுதெரியல. அவன்கிட்ட எப்போதும் கிலோ கணக்கில் காகிதங்கள், விசிட்டிங் கார்டுகள், நோட்டீஸ்கள், மடித்துவைக்கப்பட்ட கல்யாண அழைப்பிதழ்கள் என கட்டு கட்டாக ரப்பர் பேண்டுகளைப் போட்டு சட்டை பாக்கெட்டுகள், பேண்ட் பாக்கெட்டுகள் மட்டுமல்லாமல் கைகளில் கக்கத்தில் என எல்லா பக்கங்களில் வைத்திருப்பான், ஆனால் யாரிடமும் எதையும் கொடுக்க மாட்டான். எப்போதும் முழுக்கால் பேண்ட், கைகளில் பட்டன் போட்ட முழுக்கை சட்டையோடு இருப்பான். யாராவது டீ, காபி வாங்கிக்கொடுத்தால் குடிப்பான் இன்னும் கொஞ்சம் போய் வறுக்கி, பண், போண்டா, பஜ்ஜிகளும் வாங்கிக்கொடுப்பவர்களும் உண்டு. பவானி கூடுதுறையில் இருந்து பவானி எல்லையம்மன் கோவில் வரை நடந்தே போய் வந்து கொண்டு இருப்பான். அவனை போலீசுக்கு உதவியா சிஐடி வேலை பாக்கறான்னு கூட கிண்டலா சொல்லுவாங்க.

அவன்கிட்ட இருக்கும் காகித கட்டுகளை யாரும் அவ்வளவு சீக்கிரம் தொட்டுவிட முடியாது. ஆனாலும் அன்பானவன், யாரிடமும் கோபப்பட மாட்டான், அநாகரிகமாக நடந்துகொள்ள மாட்டான். இப்போ டச் போன் கூட வெச்சிருக்கான், ஆனால் அதை அத்தனை கவர்களில் போட்டு அவ்ளோ பத்திரமா உள் பாக்கெட்டில் வெச்சிருப்பான். அவனைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு தோணுவது, இவனும் மற்றவர்களைப் போல இருந்திருந்தால் இந்நேரம் எப்படி இருந்திருப்பான், இப்போ
இவன் மூன்று வேளையும் சாப்பிடுவானா, எப்பவாவது புதுத்துணி போடுவானா, உடம்பு சரியில்லைனா ஹாஸ்பிடல் போய் வைத்தியம் பார்த்துக்கொள்வானான்னு சாதாரண மனிதர்களுக்கு உண்டான எல்லா கேள்விகளும் வந்து போகும். ஆனாலும் எல்லாக் கேள்விகளையும் மனதுக்குள் வைத்துக்கொண்டு எல்லோரும் கொடுக்கும் புன்னைகையிலிருந்து மாறாக கொஞ்சம் கூடுதல் பிரியங்கள் நிறைந்த புன்னகையை அவனுக்கு கொடுப்பேன் அவனும் அதே போன்றதொரு புன்னகையைக் கொடுப்பான்.

என் நண்பர் வீட்ல ஒரு அக்கா இருப்பாங்க, உறவுக்கார பெண்ணான அவங்களை கூட மாட ஒத்தாசைக்கு இருக்கட்டும்னு நண்பனோட வீட்டோட வச்சிருக்காங்க. இப்போ சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளிடம் மொபைலை கொடுத்துவிட்டால் அது சமர்த்தாக சாப்பிட்டு விடும். கைப்பேசிகள் வந்திருக்காத காலங்களில் குழந்தைகளை சாப்பிட வைக்க "பூச்சாண்டி வரான்" ன்னு ஒரு சொல்லி சாப்பிட வைக்கும் ஒரு பழக்கமிருந்தது. இப்பவும் கூட அந்த தெருல சின்ன குழந்தைகள் சாப்பிடலனா இந்த அக்கா பேரைச் சொல்லி தான் சாப்பிட வைப்பாங்க. அந்த அக்கா பேரு என்னன்னா "ஆயா பொண்ணு". இது நிச்சயமா அந்த அக்காவோட உண்மையான பேரா இருக்காது, உண்மையான பேர் என்னன்னு அந்த அக்காவுக்கும் கூட தெரியாமல் இருக்கலாம். ஒருமுறை அந்த அக்காகிட்ட "உங்க பேர் என்னங்க அக்கா" ன்னு கேட்டேன், "எதுக்குடா கேக்கற" ன்னு கொஞ்சம் புரியாமை கலந்த கோபத்தோடு கேட்டுட்டு போய்ட்டாங்க.

வீட்டு வேலைகள் செய்து கொண்டே இருப்பதால் எப்போதும் அழுக்கு நிறைந்த உடை, சரியாக வகிடெடுத்து சீவாத தலை, கறை படிந்த பற்கள், கரகரத்த குரல், பயமுறுத்தும் கண்களென அவர்கள் கொஞ்சம் சாதாரண மனிதர்களுக்கு அப்பாற்பட்டு இருந்தாலும் அவங்க அவ்ளோ அழகு. அவங்க மற்றவர்களைப்போல இருந்திருந்தால் இந்நேரம் கல்யாணமாகி இரண்டு குழந்தைகளோடு எல்லோரையும் போல ஒரு நல்ல வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பார். அதேசமயம் எல்லோரையும் போல இருப்பதைக் கொண்டாடாமல் எதையோ தேடி ஓடிக்கொண்டே இருந்திருப்பார். இப்போ அவங்களுக்குன்னு பெருசா கனவுகள் இருக்காது, கவலைகள் இருக்காது, இழப்புகள் தெரியாது, மன ரீதியான வலிகள் இல்லாமல்,  உடல் ரீதியான வலிகள் மட்டும் இருக்கலாம். மூன்று வேளை சாப்பாடும், நல்ல தூக்கமும் இருந்தால் போதுமென நினைத்திருக்கலாம். எப்போதாவது தான் அவங்க சிரிப்பாங்க ஆனால் அந்த சிரிப்பில் அத்தனை அன்பு இருக்கும், வாஞ்சை இருக்கும், வெட்கமும் கலந்தே இருக்கும். எல்லோரும் அவரின் உருவத்தை வைத்து பயந்து விலகி நின்றாலும் பூச்சாண்டிக்கு நிகராக ஒப்பிட்டு அழைத்தாலும் அவங்க இப்போதும், எப்போதும் ஒரு அழகிய தேவதைதான்.

பவானி மேற்குத்தெரு வட்டாரத்தில் "மாது"ன்னு சொன்னா நெறைய பேருக்கு தெரியும். சாதாரண மனிதர்களிடமிருந்து மாறுபட்ட குணங்கள், கொஞ்சம் முரட்டுத்தனம் நிறைந்த வளர்ந்த குழந்தை மனம், பயம் தெரியும் வெட்கம் தெரியாது, பசி தெரியும் பாவம் தெரியாது, நிழல் தெரியும் வெய்யில் உரைக்காது, வேகம் தெரியும் வேலை தெரியாது, கணுக்காலுக்கு மேலே தூக்கி போட்டிருக்கும் பேண்டை அரைஞாண்கயிறு கீழே விழாமல் பிடித்துக்கொள்ளும், கைகள் மடக்கிய கசங்கிய சட்டையில் எங்காவது ஒரு பீடி ஒளிந்திருக்கும். எப்போதாவது எண்ணெய் பார்க்கும் தலையும், வெத்தலை பாக்கு போட்ட வாயும் பதினாறு வயதினிலே சப்பாணியை நினைவுபடுத்தும்.

எல்லா மனிதர்களைப்போலவும் பிறப்பெடுத்து வந்தவர் தான், வாழ்க்கை மாற்றிப்போடும் கணக்குகளில் கொஞ்சம் பிணக்குகள் உண்டாவதைப்போல, இலக்கியங்கள் கொட்டிக்கிடக்கும் போது கொஞ்சம் பிழைகளும் இருப்பது போல இவரும் இருக்கிறார். மாதுவுக்கு சரியா பேச வராது, அரை குறை வார்த்தைகள் அவ்வப்போது உடைந்து உடைந்து வரும், அவர் வாய் பேசும் வார்த்தைகளை விட கைகாட்டும் சைகைகள் தான் அதிகமிருக்கும். பண்டிகை, திருவிழா காலங்களில் மட்டும் புதுத்துணிகள் போட்டிருப்பார், "என்ன மாது புதுத்துணி போல"ன்னு யாராவது கேட்டா ஓரத்துல கொஞ்சம் வெட்கத்தோடு சிரிப்பார். கோவில் திருவிழாக்களில் கைகளை மேலே தூக்கியபடி வானுக்கும் பூமிக்கும் குதித்தபடி இவர் ஆடும் ஆட்டத்திற்கு "மாது ஆட்டம்னே" பேர் இருக்கு. இவர் காலில் செருப்பு போட்டு நடந்து நான் பார்த்ததே இல்ல, எவ்ளோ வெயில் அடிச்சாலும் வெறுங்காலில் தான் நடப்பார். ஆற்றுக்கு, அணைக்கு குளிக்க போனா சட்டையை கழற்றி கோவணம் கட்டிட்டு குளிச்சிட்டு அப்படியே ஈரத்தை பிழிந்து போட்டுக்கிட்டு வந்துடுவார், வீட்டுக்கு வரத்துக்குள்ள அது காய்ஞ்சிரும்.

ஆமா... இவருக்குன்னு வீடு இருக்கு, தம்பி, தம்பி மனைவி, அவங்க குழந்தைங்கன்னு நெறைய உறவுகள் இருக்காங்க. நல்லா பார்த்துக்கறாங்க. ஊர் பெரிய மனிதர்களிடம் நல்ல அடையாளம் இவருக்கு உண்டு. மற்றவர்களுக்கு இல்லை என்பதைக்கூட மாதுக்குன்னு கேட்டா கொடுப்பாங்க. அப்பப்போ டீக்கடைக்கு வருவார் யாராவது டீ வாங்கி கொடுத்தா குடிப்பார், ஒரு பீடி வாங்கி பற்றவைத்துவிட்டு வேக வேகமா புகையை விடுவார், தனக்குள்ள ஏதோ பேசிட்டே இருப்பார். மதிய நேரத்துல எங்காவது திண்ணைல தூங்குவார், மழை வந்தா ஏதாவது திண்ணை, முற்றத்துல இருப்பார், அப்பறம் வீட்டுக்கு போய்டுவார். நம்மைப்போன்ற சக மனிதர்களைக் காணும் போதெல்லாம் அவரது வேலை, சம்பளம், வசதி, பேர், புகழ் போன்ற விஷயங்களை ஒட்டி நமக்குள் ஒரு குறுகுறுப்பு இருந்துகொண்டே இருக்கும். ஆனால் இவரை போன்றவர்களைப் பார்க்கும் போதெல்லாம் இவரும் நம்மள மாதிரி நல்லா இருந்திருந்தா இந்நேரம் எப்படி இருப்பார், என்னென்ன பண்ணிக்கிட்டு இருந்திருப்பார், இவர் வண்டி ஓட்டிட்டு போனா எப்படி இருப்பார், குழந்தைகளை எப்படி பார்த்துப்பார்ன்னு அவர்கள் நினைத்துப் பார்க்காத ஒரு வாழ்க்கையை நான் நினைத்துப்பார்ப்பதுண்டு.

இவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் பலர் இருக்கிறார்கள், கிழிந்த சட்டை, பேண்டை அணிந்துகொண்டு சாலையின் இருபக்கங்களிலும் போக்குவரத்தை சரிசெய்யும்  சிறுவன், சமயங்களில் பீடியை இழுத்தபடி புகைவண்டியாய் மாறிப்போவான், எப்போதாவது ஒரு தேனீருக்காக கையேந்தும் அவனுக்கு வாழ்வு எல்லா மொழிகளிலும் உணர்த்தும் வலி என்பது பசி மட்டுமே. கேரிபேக்கில் கிழிந்த வெத்தலைகளையும் உடைந்த வெட்டுப்பாக்குகளையும் சேகரித்துக்கொண்டே கூன் விழுந்த உடலை சுமந்து எங்குங்கோ அழைந்துகொண்டும், ஏதோ ஒரு வீட்டு வாசலிலோ திண்ணையிலோ கிழிந்த பாய் போல தான் உடலை ஒடுக்கி படுத்திருக்கும் அந்த பாட்டியும், நடக்க முடியாமல் கைகளில் தட்டேந்தியபடி சாலையை தவழ்ந்தே கடக்கும் ஒருவருமென ஒரு சின்ன ஊருக்குள் இத்தனை ஜீவன்கள் வலி சுமந்தபடி காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

காலம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான அபிப்ராயத்தைக் கொடுப்பதில்லை. சிலர் தங்களது தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளவும், சிலர் தங்களது கிண்டல்களுக்கு பயன்படுத்திக்கொள்ளவும், சிலர் இவர்களின் குறைகளைக்காட்டி தங்களை பெரியதாய் அடையாளப்படுத்திக்கொள்ளவும் செய்கிறார்கள் இவை எதையும் தெரிந்துகொள்ளலாம் இவர்கள் இதையெல்லாம் கடந்து போய்க்கொண்டே இருக்கிறார்கள்.

அப்படிக்கடந்து போவதில்தானே  வாழ்வின் அர்த்தம் நிறைந்திருக்கிறது.


27 June 2020

வியர்வையில் பூக்கும் மலர்கள்

உழைப்பதற்கு வயது எப்போதும்
ஒரு பொருட்டல்ல என்பதை மனிதர்கள் எல்லா தருணங்களிலும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள். பேருந்து நிறுத்தத்திலிருந்து வீடு திரும்பும் வழியெங்கும் அருகருகே கடை விரித்தபடி  அமர்ந்திருக்கும் வயதான மனிதர்களை கவனித்திருக்கிறீர்களா? பொங்கல், தீபாவளி, கோவில் திருவிழா போன்ற நாட்களில் முக்கிய சாலைகளில் முளைக்கும் வாழைக்கன்று, கலர் கோலப்பொடி, மஞ்சக்கோம்பு, கரும்பு, சேமியா சர்பத், குடைதூரி, கட்டில் துணிக்கடை, பலூன் கடை என வரிசையாக புதுப்புது கடைகள் அழகழகாய் முளைத்திருக்கும். இவர்களெல்லாம் கடைவிரித்து ஒரே நாளில் பெரும் பணக்காரர்களாகவோ, செல்வச் சீமான்களாகவோ, சீமாட்டிகளாகவோ மாறிவிடப்போவதில்லை, மாறாக உழைத்து உழைத்து களைத்தாலும் மீண்டும் உழைப்பின் மூலமாக மட்டுமே ஓய்வெடுக்கவும் கற்றுக்கொண்டவர்கள் தான் அந்த வயதான தலைமுறை மனிதர்கள்.

வாழ்க்கை எப்போதெல்லாம் புரட்டிப்போட்டு அடிக்கிறதோ, எப்போதெல்லாம் என்னடா வாழ்க்கையிது என புலம்ப வைக்கிறதோ, எப்போதெல்லாம் ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது என கேட்க வைக்கிறதோ அப்போதெல்லாம் நான் நினைத்துக்கொள்வது வாழ்வின் வழிகளெங்கும் பார்த்து பார்த்து மனமெங்கும் நிரப்பி வைத்திருக்கும் இந்த வயதான உழைப்பின் மனிதர்களைத்தான். வண்டியை எடுத்துக்கொண்டு ஊருக்குள் ஒரு சுற்று வருவேன், கடக்கும் சாலைகளெங்கும் காணும் வயதான உழைப்பாளிகள் தங்கள் புன்னகை மூலமோ, தோற்றத்தின் மூலமோ, அணிந்திருக்கும் உடைகளின் மூலமோ வாழ்க்கை எப்போதும் ரசிக்கக்கூடிய ஒன்று எனவும், எந்த நிலையிலும் வாழ்ந்தே தீர வேண்டும் என்றும் உணர வைப்பார்கள்.

அப்படி ஒரு நாள் வண்டியில் சுற்றிக்கொண்டிருக்கும் போதுதான் பவானி மேற்குத்தெரு நான்கு சாலையின் சந்திப்பில் 60 வயதுகளைக் கடந்த அந்த இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் நான் சிறு வயதிலிருந்தே பார்க்கும் சேமியா சர்பத் விற்பவர், இன்னொருவர் குழந்தைகளுக்கான குட்டி ராட்டினம் சுற்றுபவர்.

எல்லோரும் ஓய்வெடுக்கும் அந்த ஞாயிற்றுக்கிழமையில் கொஞ்சம் மழை மேகம், கொஞ்சம் இளம் வெய்யில் சுமக்கும் அழகிய காலையை தங்கள் உழைப்புக்காக வார்த்திருக்கிறார்கள். தங்களின் வாழ்வாதாரத்தை வார்த்துக்கொடுக்கும் சர்பத் வண்டியையும் குடை ராட்டின தூரியையும் வெவ்வேறு திசைகளை நோக்கி நிறுத்தியிருந்த போதும் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

அவசரத்தில் அவர்களை பலமுறை கடந்துபோனதுண்டு, அதுவொரு ஞாயிற்றுக்கிழமை என்பதால் மெதுவாக அவர்களிடம் நெருங்கி பேச்சு கொடுத்தேன்.

"இப்போ எவ்ளோங்க அண்ணா தூரிக்கு?"

"ஊருக்குள்ள வந்தா 5 ரூபாய் தம்பி கோவில் விசேஷம், திருவிழானா 10, 20 வாங்குவோம்"

"இப்போ எப்படி அண்ணே இருக்கு இந்த தொழில், வாழ்க்கை எல்லாம்?"

"முன்ன மாதிரி இல்ல, ஏதோ போகுது தம்பி, வேற வேலை தெரியாதுன்னு பண்ணிக்கிட்டு இருக்கேன்"

அவரிடம் பேசிக்கொண்டே ராட்டினத்தை போட்டோ எடுக்கிறேன், "இந்தா.. அப்டியே இதையும் போட்டோ எடேன்.." என்கிறார் சர்பத் வண்டிக்காரர். கண்டிப்பா எடுப்பேன்னு சொல்லி ஆயத்தமானதும், "இரு இரு நானும் நிக்கறேன்னு" ஒரு குழந்தையின் குதூகலத்தோடு சொல்லி ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்து சர்பத் போட்டு நீட்டுவதைப்போல புன்னகைத்தபடி போஸ் கொடுக்கிறார். அதுதான் அந்த நாளில் அவரின் முதல் புன்னகையாக கூட இருக்கலாம்.

"இப்போ சர்பத் எவ்ளோங்க அண்ணா"

"20 ரூபாய்"

"முன்ன விட இப்போ இந்த தொழில் எப்படி இருக்குங்க"

"நெறைய கூல்ட்ரிங்ஸ் வந்துருச்சு இப்போலாம் ரொம்ப கம்மியாதான் வியாபாரம் ஆகுது, பாரு காலைல இருந்து இன்னும் யாரும் வாங்கல, இனிமேல் தான் ஊருக்குள்ள போவேன்... ஏதோ போகுது தம்பி" என்றார்.

"சரிங்கண்ணே... போய்ட்டு வரேன் பார்த்துக்கோங்க..!" என்று சொல்லிவிட்டு அவர்களிடமிருந்து நகர்ந்ததும் பின்னோக்கி சுழன்ற என் வாழ்வின் ராட்டினத்தில் 25 வருடங்களுக்கு முன்னால் இதே சர்பத்காரர் வண்டியை சுற்றி அத்தனை பேர் நின்றிருப்பார்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் இவரின் வருகைக்காவே காத்திருந்தவர்களும் உண்டு.  வாங்கி திங்க வாரம் முழுவதும் கொடுக்கும் காசுகளில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து, இந்த தூரிக்காக காத்திருந்தவர்களில் நானும் ஒருவன். தெரு முனையில் நின்று பேசிக்கொண்டிருக்கும் இவர்களை கடந்து போகும் யாரும் கண்டுகொள்ளவே இல்லை, இவர்களிடம் பேசிக்கொண்டே புகைப்படம் எடுத்த என்னை ஒருமாதிரி பார்த்தவாறே கடந்து போனார்கள். இந்த சேமியா சர்பத்தையும், குடை ராட்டினத்தையும் இப்போது இருக்கும் நகரத்து பிள்ளைகள் அனுபவிக்க முடியுமா? அல்லது நகரங்கள் நோக்கி நகர்ந்துவிட்ட கிராமத்து பிள்ளைகளிடம் இதன் நினைவுகள் எஞ்சி இருக்குமா? நாமே நினைத்தாலும் இத்தனை வயதுக்குப் பிறகு அந்த குடை ராட்டினத்தில் அமர்ந்து விளையாடத்தான் முடியுமா?  வாழ்க்கை சிரித்தபடி வழங்கிவிட்டு முறைத்தபடி வாங்கி வைத்துக்கொள்ளும் பல விஷயங்களில் இவைகளும் இருக்கத்தான் செய்கின்றன.



தெருக்களுக்குள் புகுந்து விற்கும் பொருளின் பெயரை  ராகமாய் பாடி, காந்தக்குரலில் வீட்டுக்குள் இருப்பவர்களை வீதிக்கு வரவைத்து விற்பவர்கள் பெரும்பாலும் நம்ம ஊரில் மட்டும் தான் இருப்பார்கள். அவருக்கு 70 வயசுக்கு மேல இருக்கும், அவரு மனைவிக்கு 65கிட்ட இருக்கும் ரெண்டு பேரும் கோலப்பொடியை மூட்டை மூட்டையாய் எடுத்துக்கிட்டு ஒற்றை மாட்டு வண்டியில் ஊருக்குள் வருவார்கள். அவர் வண்டியை ஓட்டுவார் அந்தம்மா கோலப்பொடியை படியில் அளந்து விற்பார்கள். அவர் அந்த கோலப்பொடியை விற்க கூவும் அழகுக்கே வாங்கலாம் அப்படி இருக்கும் அவர் குரல். அந்த குரலில் அத்தனை கம்பீரம் இருக்கும், இன்னும் நான் எவனையும் நம்பி இல்லை என்னும் கர்வம், உழைப்பாளி என்னும் ஆற்றல், எனக்கு இன்னும் வயசாகல என்னும் நம்பிக்கை, இந்த வயதிலும் உழைக்க வேண்டுமென்ற ஆர்வம் என அவ்வளவு வசீகரத்தை வைத்திருக்கும் அவரை நான் வெகுவாக ரசித்ததுண்டு. கண்ணாடி போட்டபடி அழுக்கு வெள்ளை வேட்டி, கிழிந்த பனியன், முண்டாசு என ஒரு அய்யனார் குதிரையில் போவது போல அவர் மாட்டு வண்டியை ஓட்டி வரும் அழகே தனிதான். அந்தம்மா வருபவர்களிடம் கோலப்பொடியை கொடுத்து காசை வாங்கி சுருக்குப்பையில் வைத்துக்கொண்டு "போலாம்"னு சொல்லி நகருவதை இப்போது நினைத்தால் தேவைதைகளுக்கு அழகென்பது வயதில் இல்லை என்பது புரிகிறது.

வாழைப்பழம், மைதா மாவு, ஏலக்காய், டால்டா எல்லாம் போட்டு அரைத்த மாவை கட்டம் கட்டமாக நிறைந்திருக்கும் மூடிய பணியார கல் போன்றதொரு பாத்திரத்தில் ஊற்றி இரண்டுபக்கமும் மாற்றி மாற்றி திருப்பி வேகவைத்து ஓரங்களை வெட்டிக்கொடுப்பார் அந்த அண்ணா. ஒவ்வொரு தெரு முக்கிலும் அவர் வந்து நின்றுவிட்டால் கூட்டமாக வந்து காத்திருந்து வாங்கிட்டு போவாங்க. பாலம் பாலமாக வெந்து நான்கு பாகமாக உப்பியிருக்கும். இதன் பெயரோ என்னென்ன பொருட்கள் சேர்ப்பார்கள் என்ற விவரங்களெல்லாம் தெரியாமல் இது வரும் போதெல்லாம் அடம்பிடித்து வாங்கி தரச்சொல்லி ஒவ்வொரு கட்டமாக கடித்து ரசித்து ருசித்த நியாபகங்கள் நிழலாடுகின்றன.
ஆண்டுகள் பல கழிந்தபின் மேலை நாடுகளில் மிகவும் பிரபலமான உணவாக கருதப்படும் இதன் பெயர் "வாஃப்பில்" எனச் சொல்கிறார்கள்.



நினைவுகளின் அலமாரியில் இருந்து தொலைந்து போன அவரையும் அவர் விற்கும் தின்பண்டத்தையும் பல வருடங்கள் கழித்து பார்க்க நேர்ந்தது ஒருமுறை, அவரிடம் பேச்சு கொடுத்ததில் எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் இழப்புகளும், வலிகளும் இவருக்கும் இருந்ததை அவர் குரல் உணர்த்தியது. முப்பத்தைந்து ஆண்டுகளாகவே இதே தொழிலை அவர் அத்தனை நேசித்து செய்கிறார். அதனால் தானோ என்னவோ 25 வருடங்கள் கழித்தும் அந்த ருசி மாறாமல் அப்படியே இருந்தது. இரண்டு ரூபாய்க்கு விற்ற அது 15 ரூபாயாக மாறியிருந்தது. ஆனால் மாறாத அந்த ருசிக்கும், மனக்குளத்தில் தூண்டில் போட்டு நினைவுகளை மீட்டுக்கொடுத்ததற்கும் என்ன விலை கொடுப்பது.?

பீட்ஸாக்களும் பர்க்கர்களும் இப்போது வந்தவை, 35 வருடங்களுக்கு முன்பே இப்படி ஒரு தின்பண்டத்தை தயாரித்துக்கொடுத்த இது போன்ற எளிய மனிதர்களின் வாழ்க்கைத்தரம் அத்தனை பெரிதாய் மேம்படவில்லையென்றாலும், சொற்ப வருமானமே வந்தாலும் கூட தனக்குத் தெரிந்ததை மிக நியாயமாக நேசித்து செய்யக்கூடியவர்கள் எல்லா ஊர்களிலும் வலம் வந்துகொண்டே இருக்கிறார்கள்.  வளர்ச்சி என்ற பெயரில் இது போன்ற எத்தனையோ சிறு வியாபாரிகளை, உழைப்பாளிகளை, எதார்த்தமான மனிதர்களை, உடலுக்கு நல்லது செய்தும் தீனிகளை இழந்துவிட்டோம். அந்த வகையில் இழப்பு நமக்கு மட்டுமல்ல நம் அடுத்த தலைமுறைகளுக்கும் தான்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்க தெருவுல ஒரு பாட்டு சத்தம். சத்தம்னா "சத்தமா", எங்கியோ கேட்ட பாட்டு சத்தம் காற்றில் கலந்து கலந்து பெரிதாகி வருது, "வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா" ன்னு பாட்டு சத்தம் வந்த வாசலை எட்டிப்பார்த்தால் எழுபது வயசு பெரியவர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் கூடையில் வைத்து அம்மாவிடம் வெள்ளரிக்காய் விற்றுக்கொண்டிருந்தார். படித்த பெரிய பெரிய ஆளுமைகள் உள்ள கடைகளின் விளம்பரங்களை கேசட்டில் குரல்பதிவு செய்து கோவில் திருவிழா நேரங்களில், பண்டிகை காலங்களில்,  முக்கிய விசேச தினங்களில் ஒளிபரப்புவது வழக்கம். அதுபோலவே இவர் இந்த வயதில் அறிவியல் தொழில்நுட்பத்தை எத்தனை அழகாய் பயன்படுத்துகிறார் என்பதை நினைத்த போது ஆச்சரியமாக இருந்தது. அவர் வெள்ளரிக்கா மட்டுமல்லாமல இன்னும் பலவற்றை விற்பனை செய்வார் சீசனுக்கு தகுந்தமாதிரி. இப்போதும் என்னென்ன விற்பனை செய்கிறாரோ அதற்கு தகுந்த பாடலை அல்லது குரல்பதிவை ஒளிபரப்பி வண்டியில் போய் விற்றுவிட்டு வருவார்.

உழைப்பின் மீது பெரும் காதல் வைத்திருக்கும் இந்த எளிய மனிதர்களின் வாழ்வுதான் எத்தனை அழகானது. தான் செய்யும் தொழிலை எத்தனை நேசிக்கிறார்கள். இத்தனை வயதில் இப்படி உழைக்கிறார்களென்றால் இவர்களின் சின்ன வயதில் எப்படி இருந்திருப்பார்கள், மனைவியின் பிரிவோ, மகன்களின் கோபமோ, மருமகள்களின் பிடிவாதமோ,  தொழிலின் மீது விழுந்து பெருத்த நஷ்டமோ, சொந்த பந்தங்களின் கைவிடலோ என  ஏதோ ஒன்று இவர்களை நகர்த்தி நகர்த்தி இந்த உழைப்பின் மீது கொண்டுவந்து ஓய்வெடுக்க வைத்திருக்கலாம். கடந்து வந்த வாழ்வை ஒருகணம் திரும்பிப்பார்க்கும் வேளையில் இவர்களின் வழிகளெங்கும் வியர்வையில் நனைந்த உழைப்பின் வேர்கள் நம்பிக்கை கிளைகளெங்கும் வெற்றியின் பூக்களை மலரவிட்டிருக்கும்.

#உழைப்பு
#எளிய_மனிதர்கள்
#பவானிமக்கள்

24 May 2020

இசை கசியும் கடிகாரம்


வாழ்க்கையின் அதீத ஓட்டத்தில் மனிதர்களோடு சேர்ந்து காலத்தைப்போலவே பொருட்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. பொருட்களில்லாத வீட்டையும், வீடுகளற்ற பொருட்களையும் நினைத்துப் பார்க்கும் நேரங்களில் மனமெங்கும் வெறுமையின் பிசிபிசுப்பும் வறுமையின் கசப்புகளும் வந்து அப்பிக்கொள்கின்றன. வாசல் முதல் மாடிவரை, குடிசை முதல் கோட்டை வரை இடங்களை அடைத்துக்கொண்டு ஏதோவொன்றை தன்னுள்ளே வைத்திருக்கும் பொருட்களின் இருப்பு எல்லா வீடுகளிலும் தேவைகளைச் சுமந்தும் ஆடம்பரத்தை அணிந்தும் காட்சியளிக்கின்றன.

தேவைக்கென காசு கொடுத்து வாங்கிய காலங்கள் கடந்து இலவசமென வீட்டுக்குள் நுழைந்த பொருட்களும், வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட பொருட்களும் கலந்தே இன்றைய வீடுகள் எல்லாவற்றையும் சுமக்கின்றன.
எண்பதுகளின் நடுவில் எங்கிருந்தோ வீதிகளுக்குள் வந்த அந்நிய மனிதர்கள் மக்களுக்கு தேவையான பொருட்களையும் அவர்களிடம் திணிப்பதற்கு தேவையற்ற ஆசைகளையும் கொண்டு வந்தார்கள். தவணை முறை திட்டத்தில் தேவையோ இல்லையோ பக்கத்து வீட்ல இருக்கு, எதிர்வீட்ல இருக்கு, மேல் வீட்ல இருக்கு நம்ம வீட்லயும் ஒன்னு கிடக்கட்டுமே என டேப் கட்டில், பிளாஸ்டிக் நாற்காலி, சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், ரேடியோ பெட்டி, அடுப்பு என ஏதோ ஒன்றை வாங்கி வைப்பார்கள். வாரம் ஒருமுறை வந்து காசு வாங்கிக்கொண்டு போகும் அவர்கள் எல்லா பொருட்களையும் விற்ற பிறகு வேறு ஊருக்கு போய்விடுவார்கள். வாங்கிய பொருட்கள், வேறு ஒன்றை வாங்குமளவுக்கு போய்விடும்.

எல்லா வீடுகளுக்கும் மின்சாரம் வந்திராத காலமொன்றில் எங்கள் வீட்டிலும் சிம்னி விளக்கு எரிந்திருக்கிறது. குட்டி சிம்னியில் மண்ணெண்ணெய் ஊற்றுவதற்கு முன்னால் நன்றாக துடைத்து, திரியை சொருகி அது நன்றாக மேலும் கீழும் ஏறி இறங்குகிறதா என திருகியில் சரி செய்து பார்த்து திரி எங்கேயும் சிக்கிக்கொள்ளவில்லை என்பதை உறுதி செய்தபின், மண்ணெண்ணை ஊற்றி அதை இப்போதைய பிறந்தநாள் கேக் மேல் இருக்கும் மெழுகுவர்த்தியை பற்ற வைப்பது போல ரசித்து பற்ற வைத்து காலங்களில் இருந்து ஒரு சிறு வெளிச்சம் மண்ணெண்ணை வாசத்தோடு தெரிகிறது. மண்ணெண்ணைக்கும் வசதியற்ற இரவுகளை விட்டில் பூச்சிகள் வராத மெழுகுவர்த்திகள் கடத்தியிருக்கின்றன. வைதேகி காத்திருந்தாளில் வரும் வசனம் போல பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமான்னு தேவைப்பட்ட ஒன்றை வாழ்க்கை அத்தனை எளிதாய் வழங்கிவிடவில்லை.



மேல் மூடி தொலைந்து கீழ் மூடி உடைந்து போன ஒற்றை சோப்பு டப்பாவில் ஒரே ஒரு லைபாய் சோப்பு குடும்பமே மாதக்கணக்கில் பயன்படுத்தியும் கூட கரைந்து கரைந்து குறைந்து தான் போயிருக்கும். மிக நீளமாய் வாங்கி வந்து அறுத்து வைத்துக்கொண்ட அழுக்கு சோப்புதான் துணிகளைத் துவைக்க, பாத்திரம் கழுவ, சாமி விளக்கு கழுவ, குடங்கள் கழுவ என எல்லாவற்றுக்கும். ஒரே சோப்புதான் ஒட்டுமொத்த குடும்பமும் குளிக்க. ஒரே சோப்பு டப்பாதான் குளிக்கும் சோப்பையும், துவைக்கும் சோப்பையும் சுமக்க. இப்போது அப்படி இருந்துவிட முடிகிறதா.? இந்த இரண்டாயிரமாவது ஆண்டில் எங்கள் வீட்டில் பனிரெண்டு சோப்பு டப்பாக்கள் தினப்புழக்கத்தில் உள்ளன,  எல்லோருமாக சேர்ந்து  விதவிதமான வண்ண வண்ணமான எட்டு வகையான சோப்புகளை பயன்படுத்தறோம்.
பாத்ரூம் கழுவ ஒரு கலர் ஆர்பிக், டாய்லெட் சிங்க் கழுவ ஒரு கலர் ஆர்பிக், பாத்திரங்கள் கழுவ ஒரு சோப்பு, துணிகள் துவைக்க ஒரு சோப்பு, வாசிங்மெசினில் போட ஒரு சோப்புத்தூள் அதில்லாம ஒரு லிக்விட். என பாத்ரூம்கள் சோப்புகளாலும், சோப்பு டப்பாக்களாலும் நிறைந்திருக்கின்றன. இது போக வேப்பங்குச்சியை துரத்திவிட்டு பல வண்ண டூத் பிரஸ்கள், அதற்கு இணையாய் செங்கல் தூள், கருவேலம் பல்பொடி, கோபால் பல்பொடிக்கு மாற்றாக பல பேஸ்ட்கள். அரப்பையும், நல்லெண்ணெய்க் குளியலையும் மறந்துவிட்டு பல வண்ண டப்பாக்களில் வழுவழுப்பான ஷாம்புகள். காலம் எங்கிருந்து எங்கு கூட்டி வந்து நிறுத்தியிருக்கிறது என்பதை மெல்ல அசைபோட்டால் மாற்றம் மட்டுமே மாறாமல் இருப்பது உண்மைக்குள் உரைக்கிறது.

வீடுபெருக்க வைத்திருக்கும் ஒற்றை விளக்கமாரில் வீடு, வராண்டா, திண்ணை, கொள்ளப்பக்கம், வாசல்ன்னு எல்லாத்துக்கும் பயன்படுத்திய நாமதான் இப்போ சமையல் ரூமுக்கு, சாமி ரூமுக்கு, வாசலுக்குன்னு தனித்தனியா விளக்கமாருகள் வாங்கி வெச்சிருக்கோம். அதில்லாம சாமி படங்கள் வைக்கும் அலமாரிகளுக்கு கிளீனிங் பிரஸ்கள் வேற. "ஆத்துக்கு போற குண்டா"ன்னு பேர் வெச்ச ஈய குண்டா பெருசா ஒன்னு இருக்கும், அழுக்கு துணிலாம் துவைக்க ஆத்துக்கு எடுத்துட்டு போற குண்டா. பேருக்கு ஏத்த மாதிரி நல்லா "குண்டா" இருக்கும், ஒரு 30 , 40 லிட்டர் தண்ணி பிடிக்கும். ஆத்துக்கு போக, குளிக்க, வாசல் தெளிக்க, கவுத்து போட்டு உக்கார, மழை நீர் பிடிக்க, குழந்தைகளை குளிக்க வைக்க, ரேஷன் பொருட்கள் வாங்கன்னு அந்த ஒரு குண்டாவை பல வேலைகளுக்கு பயன்படுத்துவோம். இப்போ ஒவ்வொரு பாத்ரூம்லயும் மூனு பிளாஸ்டிக் பக்கெட்டுகள் இருக்கு. அந்த ஆத்துக்கு போற குண்டாவும் ஒன்னு இன்னும் ஓரமா இருக்கு. அதே மாதிரி தான் வாட்டர் பாட்டிலும் ஏதாவது விசேஷத்தில், விருந்தில் கிடைக்கும் கூல்ட்ரிங்ஸ் பாட்டில் தான் ஒன்னு ரெண்டு இருக்கும், இப்போ 10க்கு மேல டப்பர்வேர் தான் இருக்கு, சாதாரண கூல்ட்ரிங்ஸ் பாட்டில்களை பெனாயில், மண்ணெண்ணை, மோட்டார் வேஸ்ட் ஆயில் ஊத்தன்னு பல வேலைகளுக்கு பயன்படுது.

தலையில் குட்டு வைத்து நிறுத்தும் அலாரம் கிளாக்குகள் தான் அப்போதெல்லாம், ட்ரிங்ன்னு தொடர்ந்து சத்தமெழுப்பும் கடிகாரத்தை எழுந்து தான் அணைக்க முடியும், இப்போது கைபேசி அலாரத்தைப்போல "ஸ்னூஷ்" பண்ண முடியாது, அந்த மாதிரி அலாரம் கிளாக் ஒன்னுதான் வீட்ல இருந்தது இப்போதும் கூட ரிப்பேர் ஆன நிலைமைல அது இருக்கு. எங்க தாத்தா வீட்ல மாமா புதுசா ஒரு பெரிய சதுர கடிகாரம் வாங்கிட்டு வந்தப்போ அவ்ளோ ஆச்சரியமா பார்த்தோம், அது கடிகாரம் என்பதற்காக அல்ல, ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு இசை வரும்னு சொல்லி எங்களை உசுப்பேத்தி வெச்சிருந்தாங்க, சின்ன வயசு தான் எதைச் சொன்னாலும் கொஞ்சம் அதிகமாவே நம்பும்ல, அந்த மாதிரிதான் இதையும் அதிகமா நம்பிட்டு இருந்தோம். தெருவுல விளையாடிக்கிட்டு இருக்கும் போது ஒவ்வொரு மணி முடியும் போதும் அந்த கடிகாரம் அழகா ஒரு இசையெழுப்பும் அது கேக்க அவ்ளோ அருமையா இருக்கும், அந்த கடிகாரத்தை கருப்பு வெள்ளை போட்டோக்களோடு சேர்த்து சுவர்ல ரொம்ப உயரத்துல மாட்டி வெச்சிருப்பாங்க அந்த சத்தம் வரும் போதெல்லாம் அப்படியே வாய போலந்துகிட்டு பாப்போம். நைட்லாம் அந்த சத்தம் தூக்கத்துலயும் காதுல கேட்டுகிட்டே இருக்கும். இப்போலாம் எங்க திரும்பினாலும் விதவிதமான சுவர் கடிகாரங்கள், கைக்கடிகாரங்கள், கைபேசி கடிகாரங்கள், உடற்பயிற்சி கடிகாரங்கள், தண்ணிக்குள்ள போட்டாலும் ஓடும் கடிகாரங்கள்ன்னு எத்தனையோ வந்துடுச்சு ஆனாலும் அந்த பழைய கடிகாரத்தோட இசையை இப்போ கேக்க முடியறதில்லை.
கைபேசிகளில் கதறும் அலாரத்தை ஆப் பண்ணிட்டோ இல்ல ஸ்னூஸ் பண்ணிட்டோ மறுபடியும் தூங்கிடறோம்.




ஒரு பக்கம் வாறு பிஞ்சி போய் பின்னூசி குத்தி வெச்சிருக்கும் செருப்புதான் இருக்கும். பள்ளிக்கூடம், கல்யாணம், கோவில் திருவிழா, வெளியூர், ஆறு, குளம், மளிகை கடை, மார்க்கெட், விளையாட்டு, சினிமான்னு எங்க போனாலும் அந்த செருப்பு மட்டும் தான் போட்டுட்டு போவோம். கூட்டமா செருப்பு இருக்கும் இடங்களில் நம்ம செருப்பை ஈஸியா கண்டுபிடிச்சிடலாம் ஏன்னா, யாரும் தூக்கிட்டு போய் இருக்க மாட்டாங்க எப்படி விட்டோமோ அப்படியே இருக்கும். இப்போலாம் அப்படி இல்லை, பாத்ரூம்க்கு ஒரு ஜோடி, ஆபீசுக்கு ஒரு ஜோடி, வெளிய போனா ஒரு ஜோடி, வீட்டுக்குள்ள ஒரு ஜோடி, ரன்னிங் ஷு, கேசுவல் ஷு, பார்மல் ஷு, எக்ஸ்டரா ஷு ன்னு செருப்பு வைக்க மட்டும் தனியா பெரிய ஸ்டாண்ட்டே தேவைப்படுது. தீபாவளிக்கு மட்டும் தான் புதுத்துணி எடுத்து தருவாங்க, எப்பவாவது ஒரு வருஷம் பிறந்தநாளுக்கு புதுத்துணி கிடைக்கும், எனக்கு தீபாவளி நேரத்துல தான் பிறந்தநாள் வரும், ஒரு செட் துணிதான் எது முன்ன வருதா அதுக்கு முதல்ல போட்டுட்டு ரெண்டாவதா வரதுக்கும் அதையே தான் போட்டுக்கணும் புதுசுலாம் கிடைக்காது அப்போ, ஆனா இப்போ அப்படியா இருக்கோம், வாரம் ஒருமுறை அல்லது மாசம் ஒருமுறை கூட ஷாப்பிங் பண்ண முடியுது. நாலு செட் துணிகள் கூட ஒண்ணா வாங்க முடியுது. இது ஆடம்பரமா அத்தியாவசியமான்னு தெரியாமலே பல பொருட்களை வாங்கி குவிக்கறோம். ஆன்லைன்ல ஆபர்னா அடிச்சி பிடிச்சி வாங்கிடறோம், வாங்குற எல்லா பொருட்களையும் நல்லா பயன்படுத்தறோமா அதுவும் இல்ல, அப்பறம் பெருமை வேற. நாம பொருட்களை பயன்படுத்தியது போய் இப்போ பொருட்கள் நம்மை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன, இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது, பல குடும்பங்கள் பிழைக்கிறது என்பது மட்டுமே ஆறுதலான விஷயம். இந்த மாதிரி இன்னும் எத்தனையெத்தனை பொருட்கள் நம்ம தேவைக்கும், சௌகரியத்திற்கும்  மாறிக்கொண்டு நம் வாழ்வோடு கலந்தே இருக்கின்றன. 

பயன்படுத்திவிட்டு பழசாகிப்போனாலோ, உடைந்து போனாலோ அதை உதறிவிட்டு புதிய ஒன்றை சுலபமாக வாங்கிக்கொள்ள முடிகிறது ஆனால் அதன் நினைவுகளை முற்றிலும் அழிப்பதென்பது முடியாத காரியம். நாம் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் உடைந்த நிலையில், அறுந்த நிலையில், சிறு கீரலோடு, கொஞ்சம் கோணலோடு மனக்கிடங்கின் மூலையில் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அதை கையிலெடுத்து தூசு தட்டி, அணைத்துக்கொள்ள, யாருக்கும் தெரியாமல் பிடித்த பொருளுக்கு ஒரு முத்தமிட, அதன் உழைப்பை நினைத்து கொஞ்சம் கண்ணீர்விட, அதன் நினைவுகளோடே உறங்கிப்போக ஒரு கனவையேனும் சுமந்து வரணும் ஏதோ ஒரு இரவு.



26 April 2020

இசைதனில் தொலைதல்

அழுத குழந்தைக்கான தாலாட்டு முதல் இறந்த உயிருக்கான ஒப்பாரி வரை இந்த மண்ணில் பாட்டும், இசையும் எப்போதும் இருக்கின்றன. இசையை ரசிக்காமல் எந்த உயிரும் வந்து போனதில்லை. வாழ்வின் ஆகச்சிறந்த கணங்களில் எல்லாம் சந்தோசமாக இருந்தாலும், துக்கமாக இருந்தாலும் இசை அதை இரட்டிப்பாக்கி கொடுத்திருக்கிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. உயிர் ஒடுங்கிக்கிடக்கும் தருணங்களில் உள்ளுக்குள் நுழைந்து ஏதோ ஒரு மாயாஜாலத்தை எப்போதும் இசை செய்துகொண்டே இருக்கும். அப்போதெல்லாம் வாங்கி வந்த வாழ்வு சாபமாக இருந்தாலும் அதை வரமாக மாற்றிவிடும் வல்லமை இசைக்கு எப்போதுமுண்டு. காலங்கள் மாற மாற இசையும் பாடல்களும் மக்களுக்கு தகுந்தவாறு அவர்களின் ரசனைகளுக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. இதைத்தான் நீ ரசிக்க வேண்டுமென்றோ இதைத்தான் நீ கேட்க வேண்டுமென்றோ யாரும் யாரையும் சொல்லிவிட முடியாத காலங்களில் இசை தன்னை இன்னும் இன்னும் மெருக்கேற்றியே வைத்திருந்தது.

ஒவ்வொரு தலைமுறையிலும் இசை ஒவ்வொரு மாதிரியாக உருமாறி வந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இசைக் கடவுளென கொண்டாட யாரையாவது காலம் அனுப்பிக்கொண்டே இருக்கவும் செய்கிறது. MSV, இளையராஜா, ரகுமான் இன்னும் பலர் இல்லையெனில் இந்த மனித குலத்தின் பாதி ஏதோ ஒரு சிக்கலுக்குள் குமைந்து வாழ்வில் மிச்சமிருக்கும் நாட்களுக்கு நிச்சயமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கும். இவர்கள் வாழ்ந்த, வாழும் காலத்தில் நாம் பிறந்திருக்கிறோம் என்பதே வாழ்வு வழங்கிய வாய்ப்புதான். தாலாட்டு, தெம்மாங்கு, நாடுப்புறப்பாடல்கள், பக்திப் பாடல்கள், திரைப்பாடல்கள், ஒப்பாரி என 50க்கும் மேற்பட்ட பாடல் வகைகளும் அதற்குத் தோதான இசைக்குறிப்புகளும் உள்ளடங்கிய தொகுப்பாய் மிகச்சிறந்த ஒரு பொழுதுபோக்காக இசை தன்னை வேறொரு வடிவத்தில் வார்த்துக்கொண்டு தொழிநுட்பத்தையும் சேர்த்துக்கொண்டு ஒவ்வொரு காலகட்டத்திலும் வளர்ந்து வந்திருக்கிறது.

என் சிறுவயதுகளில் பக்கத்து வீட்டு ரேடியோவில் பாடல்கள் ஒலிபரப்பும் போதெல்லாம் யாரோ அதற்குள் இருந்து பாடுகிறார்கள் எனவும் அதற்குள் இருக்க வேண்டுமெனில் அவர்கள் எத்தனை குட்டியாக இருக்க வேண்டும், எப்படி உள்ளே போவார்கள், எப்படி வெளியே வருவார்கள் என பல கேள்விகள் வந்து போனதுண்டு, இந்த முரண்பாடான  சிந்தனைகளுக்கு செய்தி வாசிப்பாளர்களும் தப்பியதில்லை. வளர்ந்த பின்பு விபரம் தெரியத்தொடங்கிய காலங்களில் எங்கள் வீட்டில் படுக்க போட்ட வாக்கில் ஒரு டேப் ரெக்கார்டர் இருந்தது. ஒரு பெட்டி முழுவதும் டேப் கேசட்டுகள் இருந்தன அதில் பெரும்பாலும் டி ராஜேந்தர் பாடல்கள், எம்ஜிஆர், சிவாஜி, பழைய ரஜினி, கமல், மோகன் பாடல்கள் இருந்தன. எனக்கு அந்த டேப்பில் பாடல்கள் கேக்கும் போதெல்லாம் வேறொரு அழகிய உலகத்தில் இருப்பதாக தோன்றும். அந்த டேப்பை இயக்கத் தெரிந்த போது ஒரு தேவலோகத்தில் இருப்பதாகவே நினைத்திருக்கிறேன். பக்கத்தில் அமர்ந்து கேக்கும் போது பாடல் வரிகளில் கவனமில்லாமல் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, பள்ளிக்கூடத்தில் பாடங்களுக்கு நடுவே பாட்டு புத்தகங்களை வைத்து வரிகளை மனப்பாடம்  செய்ததுண்டு. தொலைக்காட்சிகளில் வெள்ளிக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் ஒளியும் ஒலியும் பாடல்களில் பிடித்த பாடல்களின் வீடியோவை பார்த்து பிரமித்துப்போய் இருக்கிறேன். புதுப்பாடல்கள் எப்போது எங்கள் டேப் ரெக்கார்டருக்குள் வருமென நினைத்து ஏங்கியதுண்டு.

எண்பதுகளின் இறுதி காலகட்டத்தில் எங்க வீட்டு பக்கத்துல ஒரு அக்கா வாக்மேன் வைத்திருந்தார்கள், அவங்க மாமா வெளிநாட்ல இருந்து வாங்கிக்கொடுத்ததாக கூறும்போது, "வெளிநாடுனா மெட்ராசா?" ன்னு கேட்டதையெல்லாம் இப்போது நினைக்கும் போது பால்யத்தின் மீதான பிரியங்கள் கூடுகிறது. இரண்டு செல்கள் போட்டு, பஞ்சு வைத்த ஹெட்போனை காதில் மாட்டிக்கொண்டு அவங்க தலைய தலைய ஆட்டும்போது என்னமோ அவங்கதான் இந்த உலகத்துல ரொம்ப சந்தோஷமா இருக்கிறதா தோணும். நிறைய சின்ன பசங்களை கூட்டி வெச்சிக்கிட்டு ஒவ்வொருத்தர் காதுலயும் ஹெட்போனை மாட்டிவிட்டு டக்குனு எடுத்துருவாங்க, என்னிடம் வைத்து எடுக்கும் போது எனக்கே எனக்கு மட்டுமே கேட்ட முதல் இசையாய் அது இருந்தது.
அதை நாங்களாக தொட்டால் அவங்களுக்கு கோபம் வந்துரும் அப்பறம் கிட்ட சேர்க்க மாட்டாங்க. அந்த வாக்மேனும் ஹெட்போனும் இன்னும் நினைவுகளில் இசைத்துக்கொண்டே இருக்கின்றன. என்கிட்டயும் இன்னும் ஒரு வாக்மேன் ரிப்பர் ஆகி சரி செய்யப்படாமல் அப்படியே இருக்கு.

என் தாத்தா வீட்டில் மாமாக்கள் வாங்கி வைத்திருந்த ஒரு டேப் ரெக்கார்டரில் தான் முதன் முதலாக பேசி "ரெக்கார்ட்" செய்து பார்த்தோம். "ஹலோ ஹலோ" ன்னு சம்மந்தமே இல்லாம எதையாவது பேசி அதை போட்டு மீண்டும் கேட்கும் போது கரகரப்பான குரலில் யாரோ கிணத்துக்குள்ள இருந்து பேசுவது போல கேட்கும் போது கிடைத்த மகிழ்வு இப்போது இருக்கும் மொபைல்களில் பேசி கிடைப்பதில் வரவில்லை.
எட்டாவது படிக்கும்போது தான் டிவிகள் அதிகம் புலங்கத்தொடங்கிய காலம். ஆனாலும் எங்கள் வீட்டில் டிவி இல்லை அதற்கு பதிலாக சிகப்பு கலர் டேப் ரெக்கார்டர் இருந்தது. (பழுதான நிலையில் இப்போதுமிருக்கிறது) 80களில் இருந்து 90களின் முடிவு வரை வெளிவந்த பாடல்களை தேடித் தேடி பதிவு செய்து திகட்ட திகட்ட கேட்டிருக்கிறேன். ஒரு கேசட் முழுவதும் மான் என்ற சொல் வரும் பாடல்கள், ஒரு கேசட் முழுவதும் நிலா சொல் பாடல்கள், ஒரு கேசட் முழுவதும் காதல் சொல் பாடல்கள் என ஒரு தாளில் படம் பேரையும் பாடல் பேரையும் எழுதிக்கொடுத்து பதிவு செய்யும் கடைக்கு நடையாய் நடந்து வாங்கிவந்த பின் ரசித்து ரசித்து கேட்டதெல்லாம் மறக்க முடியா காலங்களின் நினைவுக்குவியல்கள்.


எங்கள் வீட்டில் இருந்த டேப் ரெக்கார்டரில் ஸ்பீக்கர்கள் அதிலேயே இருக்கும். அதனால வெளியே வெச்சி கேக்குமளவுக்கு எஸ்ட்ரா ஸ்பீக்கர்கள் தேவைப்படல அப்போ, பவானி ஆத்துக்கு குளிக்க போகும்போதெல்லாம் மூனு நாலு பேச்சிலர்ஸ் தங்கி இருக்கும் வீட்டைக் கடந்துதான் போவோம், அவர்கள் வீட்டு படுத்தாவில் "சீறி வரும் பாம்பை நம்பினாலும் சிரித்து வரும் பெண்ணை நம்பாதே" ன்னு எழுதி இருக்கும் ஏனோ அந்த வாக்கியத்தின் மூலம் நட்பாகிப்போனவர்கள் சகஜமாக பழகத் தொடங்கிய போது அவர்கள் வீட்டினுள் இருந்த இரண்டு ஆளுயர
ஸ்பீக்கர்களைக் காட்டினார்கள். ஹிட்டான ஒரு மெலடி பாட்டை போட்டு ரொம்ப கொஞ்சமா சவுண்ட் வெச்சாங்க நான் ஸ்பீக்கரில் காதை வைத்து கேட்கும் போது திடீரென அதிகரித்த சவுண்டில் உடம்புக்குள் ஒரு இடி இறங்கியது போல இருந்தது. அந்த அறையின் பெரிய அலமாரி முழுவதுமே 90வகை கேசட்டுகள். அப்போது 60 வகை 90 வகை ன்னு கேசட்டுகள் இருக்கும். 60 வகையில் 12 பாட்டுகள் பதிஞ்சா 90 வகையில் 18 பாட்டுகள் பதியலாம். அந்த கேசட்டுகளைப் பார்த்து நான் பிரமித்துப் போயிருக்கிறேன். அவர்கள் வீட்டில், அந்த சவுண்டில் பாடல்கள் கேட்பதற்காகவே அங்கு அடிக்கடி போவோம். பிறகு அவர்களில் இரண்டு பேர் காதல் கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிட்டாங்க. படுத்தாவில் இருந்த வசனம் அந்த படுத்தாவைப்போலவே ஒரு கட்டத்தில் மக்கிப் போய்விட்டது. எல்லாவற்றையும் மாற்றும் சக்தி பெண்மைக்கு உண்டுதானே.

வழக்கமா மெயின் ரோட்ல இருக்கும் RSP, புது பஸ் ஸ்டாண்ட் ல இருக்கும் ராகதேவ் ரெக்கார்டிங் ன்னு நெறைய இடங்களில் பாடல்களை பதிவு பண்ணுவோம் அங்கெல்லாம் ஒரு செட்ல ஒரிஜினல் கேசட் போட்டு இன்னொரு செட்ல புது கேசட்டைப் போட்டு பதிவு பண்ணி தருவாங்க. எங்களுக்கு வேண்டிய தேதியில் அவர்களால் கொடுக்க முடியலனா தான் வேறு கடைகளுக்கு போவோம். நானும் நண்பர்களுமாக சேர்ந்து வெவ்வேறு பாடல்களை பதிவு செய்து கேசட்டுகளை மாற்றிக்கொண்டு கேட்போம். செலவும் குறைவு, நிறைய பாடல்களும் கேட்ட

மாதிரி இருக்கும். ஒருமுறை ஒருரூபாய் காயின் போன்ல பேசிக்கிட்டு இருந்தேன் அப்போ பக்கத்துல எங்கியோ பாட்டு சத்தம் கேட்டது நொடி நேரத்தில் சட்டென வேற பாட்டு பாடியது, அடுத்த நொடி வேற பாட்டு இப்படியே மாறி மாறி கேட்டது, ஒரு பாட்டிலிருந்து இன்னொரு பாட்டுக்கு மாற ஒன்னு ரிவர்ஸ் பிளே பண்ணனும், இல்ல பார்வர்டை பிளே பண்ணனும் அதுக்கு எப்படியும் கொஞ்சம் நேரம் பிடிக்கும் இது எப்படி உடனுக்குடன் மாறுதுன்னு குழப்பத்தோடு வெளியே வந்து பாட்டு சத்தம் வந்த கடையை நோக்கி போனேன் அப்போதான் முதன் முதலா கம்ப்யூட்டர் மூலமா பாட்டு பதிவு செய்யும் தொழிநுட்பத்தை பார்த்தேன். பவானில மிஸ்டர்.ரோமியோ ஆடியோ ரெக்கார்டிங் அண்ட் ஸ்டிக்கர்ஸ் ன்னு இருந்த அந்த கடை நடத்திய கண்ணன் அண்ணா ஒரு சாயலில் மின்சார கனவு பிரபுதேவாவை நியாபகப்படுத்துவார். அங்குதான் எனக்கு CD கேசட்டுகள் அறிமுகமாயின.  ரேடியோவில் பிடித்த பாடல்களைக் கேட்க காத்திருந்தது முதல் CD யில் வேண்டிய பாடல்களை நூற்றுக்கணக்கில் பதிவு செய்து கேட்கும் காலம்வரை நடந்தவைகள் எல்லாம் இசையின் மீதான ஆர்வத்தையும் தாண்டி மனதுக்கு ஆத்மார்த்தமான நண்பனாக, தனிமையின் துணைவனாக, கற்பனைக் காதலியாக, கனவு மனைவியாக என எத்தனையோ வடிவங்களில் இசையும் பாடல்களும் எனக்குள் ஊறியிருக்கின்றன.

கோவித்துக்கொண்ட மாடிவீட்டு காதலி படியேறும் போதெல்லாம் "கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் கிளியே கோவமா" என்னும் பாடலை ஓட விட்டவனும், காதல் சொல்லி பல நாட்கள் ஆகியும் பதில் வராத போது "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி" ன்னு பாட்டு போட்டவனையும், "ஊருசனம் தூங்கிடுச்சி ஊத காத்தும் அடிச்சிடுச்சி" ன்னு மாமாவுக்கு பாட்டு மூலம் தூது விட்ட பெண்ணும், அவர்களையே கல்யாணம் செய்தார்களான்னு தெரியல. எந்த பாடலாக இருந்தாலும் வரிக்கு வரி மாறாமல் பாடி ஒரே குரலில் ஜானகி, சுசீலா, சித்ரான்னு பெண்குரல்களை மட்டுமல்லாமல் எல்லா ஆண் குரல்களையும் தன் குரலுக்குள்ளும் எல்லா வரிகளையும் தன் மனதுக்குள்ளும் வைத்திருந்த பரமேஸ் அக்கா இப்பவும் வரிக்கு வரி பாடுறாங்களான்னு தெரியல.

எல்லோருக்குள்ளும் எல்லா சூழ்நிலைகளுக்கும் தேவையான, அழகாக பொருந்தக்கூடிய, நமக்காகவே எழுதி இருப்பார்களோ என்று எண்ணக்கூடிய பாடல்களும் வசனங்களும் ஆயிரம் ஆயிரமாய் இருக்கின்றன. குடிக்கும் தண்ணீரைத் தவிர்த்து எப்படி வாழ முடியாதோ அப்படி இசையையும் பாடல்களையும் தவிர்த்து ஒரு வாழ்க்கையை வாழவே முடியாது. அப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதில் என்ன பலன் இருந்துவிடப்போகிறது.
நினைவுகளை விட்டு நீங்காமல் உதடுகளை விட்டு இறங்காமல் எத்தனையோ பாடல்கள் நமக்காகவும் நமக்குள்ளும் இருக்கத்தான் செய்கின்றன அவற்றையெல்லாம் பிளே பண்ணிக்கொண்டே இருக்கும் நேரங்களில் சிறுவயது அழகிய வாழ்க்கையொன்று ரிவர்ஸில் பிளே ஆகி கண் முன்னே காட்சிகளாக வந்து  போகிறது இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகாக.

31 March 2020

ஊரடங்கு




மனித நடமாட்டங்களும், வாகன ஓட்டங்களும் இல்லாத தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாக குருவிகள் பறந்து பறந்து விளையாடுவதை, காக்காவுக்காக வைத்த ரொட்டித்துண்டுகளை அணிலொன்று வந்து கவ்விக்கொண்டுபோய் குட்டிகளுக்கு ஊட்டுவதை, மண்ணைக் கிளறி கிடைக்கும் பூச்சிகளை குஞ்சுகளுக்கு கொடுக்கும் கோழியின் பாசத்தை, எந்தவித தொல்லையும் இல்லாமல் நடுரோட்டில் உறங்கும் நாயை, நீண்ட கொட்டாவி விட்டபடி சோம்பல் முறிக்கும் பூனையை என மனித இனத்தை தாண்டிய உயிர்களை, பூட்டிய கதவுகளுக்குப் பின்னால் நின்று பார்ப்பதில் எத்தனை ஆனந்தம் இருக்கிறது. இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல என்பதை உணர்த்த இந்த பெரிய ஊரடங்கு எத்தனை அவசியமாய் தெரிகிறது.

ஊரடங்கு உத்தரவு என்பது வெள்ளைக்காரர்களின் காலம் முதலே இருந்து வந்திருக்கிறது.  தலைவர்கள் படுகொலை, கலவரம், அரசியல் போராட்டம், ஜாதிசண்டை, வன்முறை, மதப்போராட்டங்கள், நோய் பரவுதல் போன்ற காரணங்களுக்காக ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். பொது சொத்துகளுக்கு சேதாரம் ஏற்படும் வகையிலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், நாட்டின் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் நடக்கும் சம்பவங்களை தடுக்கும் அல்லது குறைக்கும் வகையில் இந்த ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது.

இதுபோன்ற ஊரடங்கு நாட்களில் அரசு சார்பாக பல நிபந்தனைகள் விதிக்கப்படும், அவற்றையெல்லாம் அப்போது இருந்த மக்கள் ஏறக்குறைய கடைபிடித்தார்கள், இந்த காலத்தில் அப்படி நடக்கிறதா என்னும் கேள்விக்கு இல்லை என்ற பதிலைத்தான் சோசியல் மீடியாக்களும்,மக்களின் அலட்சியங்களும் காட்டுகின்றன. கலவரம், வன்முறை சமயங்களில் கூட மக்கள் "கண்டதும் சுடும்" உத்தரவுகளுக்கு பயந்து வீட்டுக்குளேயே இருந்து விடுகின்றனர், ஆனால் கண்ணுக்கு தெரியாத ஒரு கிருமி உலகையே ஆட்டிப்படைக்கும் சூழலில் அதை எத்தனை சுலபமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது காணும் காட்சிகளெங்கும் தெரிகிறது. எனக்கு விபரம் தெரிந்து, என்னோட பத்து வயதில் (1991), முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களின் படுகொலையின் போது எங்கள் ஊரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நினைவு, அப்போதெல்லாம் அதிகமாக ரேடியோவும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி செய்திகள் மட்டுமே. இப்போது இருப்பதைப்போல இத்தனை வசதிகள் இல்லை. அத்தியாவசிய பொருட்களுக்காக மட்டும் யாராவது ஒருவர் இருவர் சாலைகளில் நடந்து போவதாக சொல்லிக்கொள்வார்கள், ரோந்து வாகனங்கள் எல்லா வீதிகளுக்கும் வரும், காவலர்கள் ஒவ்வொரு வீடாக எச்சரிக்கை செய்வார்கள். பெரும்பாலும் கல்வியறிவு இல்லாத மக்களிடம் பயம் ஒருபக்கம் இருந்தாலும் இதுபோன்ற உத்தரவுகளை அத்தனை மதித்தார்கள்.

கொரோனா என்னும் கொடிய வைரஸ் தன் பசிக்கு கிடைப்பவர்களையெல்லாம் இரையாக்கிக்கொண்டிருக்கும் வேளையிலும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், இயற்கைக்கும் அது வழங்கியிருக்கும் வாழ்க்கையை பார்க்கும் போது மனிதன் எத்தனை சல்லிப்பயலாய், சுயநலவாதியாய் வாழ்ந்திருக்கிறான், வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது புரிகிறது. முன்னொரு காலத்தில் வேட்டையாடித்திரிந்த காடுகள் கட்டிடங்களாய், சாலைகளாய் மாறிப்போனதை மீண்டும் ஒருமுறை பார்த்து வர விலங்குகளின் அடுத்த தலைமுறை வீதிகளுக்கு வந்திருக்கின்றன. கூட்டம் கூட்டமாய் மான்கள், புழுகுபூனை, காட்டெருமை, கோடிக்கணக்கில் முட்டைகளிட்ட ஆமைகள் என காட்டுக்குள், கடலுக்குள் வாழ்ந்த விலங்குகள் இப்போதும் ஊருக்குள் உலாவருகின்றன. இதை ரசிக்கும் அதே வேளையில் மலைப்பாதைகளில் மனிதர்கள் கொடுக்கும் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கும்? யாரோ வந்து ஊற்றிவிட்டுப்போகும் நீருக்காக காத்திருக்கும் விலங்குகள் இந்த கோடையில் எதைக்குடிக்கும்? கூட்டமாய் வந்து பார்த்துப்போகும் மனிதர்களை வெறுத்தபடியேனும் நேசிக்கும் மிருகக்காட்சி சாலை விலங்குகளை இப்போது யார் போய் பார்ப்பார்கள்? வீட்டை விட்டு விலகியிருக்கும் தோட்டத்தில் கட்டிருக்கும் மாடுகளும், ஆடுகளும் என்ன செய்துகொண்டிருக்கும்? என்னும் கேள்விகள் எழாமல் இல்லை.

சூரிய குடும்பத்தில் இருந்து உடைந்து வந்த ஒரு சிறு துண்டில் உருவானதாய் சொல்லப்படும் பூமி, இன்று கண்ணுக்கே தெரியாத ஒரு நுண்ணுயிரியால் எத்தனை அழிவுகளை சந்திக்கிறது. இது விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் வந்ததா? அறிவியலின் தவறால் நிகழ்ந்ததா? ஆண்டவனின் விளையாட்டால் நேர்ந்ததா? எல்லாவற்றுக்கும் மேல் உள்ள ஏதோ ஒரு சக்தியால் நடப்பதா? உலகம் அழிவதற்கான அறிகுறியா? என எத்தனை எத்தனையோ கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. இது எல்லாமே உயிரின் மீதான பயத்தால் மட்டுமே எழும் கேள்விகள், உயிருக்காக பயப்படாதவர்கள் நடப்பவை நடக்கட்டுமென போய்க்கொண்டே இருப்பார்கள். ஆனால் அந்த மாதிரியான மனிதர்கள் வெகு குறைவு. தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும், தன் தலைமுறைகளுக்காகவும் சேர்த்துக்கொண்டே இருக்கும் மனிதர்களுக்கு நடுவே எல்லோருக்கும் பிடித்தமானவர்களாக, யாருக்கும் உதவி செய்பவர்களாக, எந்த நிலையிலும் மற்றவர்களையும் மனிதர்களாய் எண்ணக்கூடிய, தன்னிடம் இருப்பதையும் மீறி மற்றவர்களுக்கு உதவுபவர்களாக பலரையும் இந்த பூமி இன்னும் சுமந்துகொண்டுதான் இருக்கிறது.

ஒரு விஷயத்தை நன்றாக கூர்ந்து கவனித்தால் கொரோனாவின் கொடும் கைகள் கொத்து கொத்தாய் பிடித்து தின்று கொண்டிருப்பது  மனிதர்களை மட்டுமே என்று புரிகிறது. மனிதன் தான் தொடர்ந்து இந்த பூமியின் மீதும் இயற்கையின் மீதும் அவைகளுக்கு எதிரான கட்டுமானங்களை நிகழ்த்திக்கொண்டே இருந்திருக்கிறான். தன் வசதிக்கு கட்டமைத்துக்கொண்ட  பூமியைத் தானே உருவாக்கியதாக நினைத்துக்கொண்டு செய்து வரும் மாற்றங்களால் இந்த பூமி மனிதர்களிடமிருந்து தற்காலிகமாக தன்னை விளக்கிக்கொள்வது போல இந்த கொரோனாவின் வேகம் இன்னும் பெருகுகிறது. இந்த கொரோனாவின் தாக்குதலால் இந்த பூமியின் இன்னொரு பக்கம் எத்தனை அழகாய் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை கொஞ்சம் ரசிக்கவும் வேண்டியுள்ளது. பிடித்த வீட்டை, பிடித்த தெருவை, பிடித்த ஊரை விட்டு எதன் பொருட்டோ கட்டாயமாக வெளியேற்றப்பட்டு காலங்கள் பல கடந்த பின்பு வாழ்க்கை வழங்கும் ஒரு வாய்ப்பில் வந்து பார்க்க நேர்ந்தால் பல விஷயங்கள் மாறியிருப்பினும் நம் பழைய இடம் என்பதில் எத்தனை ஆனந்தம் வந்து சட்டென ஒட்டிக்கொள்கிறது. அதைப்போலவே தான் இயற்கை இந்த நிகழ்வால் தன்னை கொஞ்சம் கூர்தீட்டிக் கொள்கிறது. தனக்கு முன்னால் இந்த மனித இனம் என்பதும் அவன் செய்த, செய்யும் சாகசங்களும், நிறுவியிருக்கும் மாற்றங்களும் ஒன்றுமே இல்லை என்பதன் அடையாளமாக கொஞ்சம் விளையாடிப்பார்க்கிறது.

விலங்குகளும், பறவைகளும், காற்றும், வானமும், வனமும், அருவிகளும், மலைகளும், கடல்களும் தங்களின் மீது பூசப்பட்டிருந்த அழுக்கை, சுமந்து கொண்டிருந்த பாரத்தை,
தாங்கிக்கொண்டிருந்த வலியை, தவிர்க்க முடியாத கணங்களை இந்த ஊரடங்கின் மூலம் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றன. நம் தலைமுறையில் பார்க்கும் முதல் உலக ஊரடங்கு, முதல் உலக இயக்கத்தின் தற்காலிக நிறுத்தம் இதுவாகத்தான் இருக்கும். இதிலிருந்து மீள்வதில் அத்தனை ஒன்றும் கடினமில்லையென்றே தோன்றுகிறது.  நகரமயமாக்குதலின் மூலம் பழைய வாழ்வின் வேர்களைத் தொலைத்துவிட்ட பலருக்கு பல விஷயங்களை மீட்டெடுக்க இதுவொரு நல்ல வாய்ப்பாகவும் இருக்கிறது.

மொட்டைமாடியில் அமர்ந்து குடும்பத்தோடு பேசி எத்தனை காலங்கள் ஆகிறது? வீட்டில் அனைவரும் அமர்ந்து கொண்டு ஒளியும் ஒலியும் பார்த்தது போல ஒரே சேனலை பார்த்து எத்தனை காலங்கள் ஆகிறது? எல்லோரையும் உட்கார வைத்து பாட்டியோ , அம்மாவோ சாப்பாட்டை உருண்டை பிடித்து கொடுத்து எத்தனை காலங்கள் ஆகிறது? தாயம், பரமபதம், பம்பரம், கண்ணாமூச்சி என மறந்து போன விளையாட்டுகளை மீண்டும் விளையாடி எத்தனை காலங்கள் ஆகிறது? மாலை நேரத்தில் குழந்தைகளோடு மொட்டைமாடியில் பட்டம் பறக்கவிட்டு எத்தனை காலங்கள் ஆகிறது? வீட்டுப்பாடங்கள் இல்லாமல், பரிச்சைக்கு படிக்காமல் விளையாடிய களைப்பில் குழந்தைகள் தூங்கி எத்தனை காலங்கள் ஆகிறது? இன்னும் எத்தனை எத்தனையோ விஷயங்களை மீண்டும் ஒருமுறை வாழ்ந்து பார்த்துக்கொள்ளுங்கள் என்று காலம் வழங்கியிருக்கும் வாய்ப்புதான் இந்த நீண்ட ஊரடங்கு.

பணக்காரன், ஏழை, மாளிகைவாசி, தெருவோரம் இருப்பவர், மேல்ஜாதி, கீழ்ஜாதி, நல்லவன், கெட்டவன், என எல்லோரையும் வீட்டுக்குள் முடக்கியிருக்கும் இந்த ஊரடங்கு உணர்த்த வருவது ஒன்றுதான், எத்தனையோ கடவுள்கள், கோவில்கள், வழிபாட்டுத்தளங்கள் இருந்தும் கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரசுக்கு பயந்து எல்லாமே மூடப்பட்டிருக்கின்றன.  இதுபோன்ற இக்கட்டான சூழல்களில் மனிதர்களைக் காப்பாற்ற சக மனிதர்கள் தான் வர முடியும். நீங்கள் நம்பும் எந்த மதக்கடவுள்களாலும், எந்த சாமியார்களாலும் இந்த சூழலில் இருந்து நம்மைக் காப்பாற்ற முடியவில்லை. சக மனிதர்களாகிய மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், துப்புறவு பணியாளர்கள், தன்னார்வலர்கள் தான் இந்த மனித இனத்தை மீட்டெடுக்க அயராமல் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், அவர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் விதமாகவும் இந்த ஊரடங்கில் வீடடங்கி இருங்கள்.

நீங்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டிய கட்டாயம் என்பது உங்களுக்காக மட்டுமல்ல, உங்கள் குடும்பத்திற்காக, உங்கள் உறவுகளுக்காக, உங்களை நேசிக்கும் நண்பர்களுக்காக, உங்களைப்போல இந்த உலகில் வாழ வந்த சக மனிதர்களுக்காக என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


#Corona #Covid19
#Curfew #Quarantine


14 March 2020

காணாமல் போன தேவதைகள்



கற்பனைகளின் மீள முடியாத ஆழங்களில் தேவதைகள் என்பவர்கள் வெள்ளை உடைகளை அணிந்தும், பெரிய  பெரிய சிறகுகள் பொருந்தியும், எப்போதும் புன்னகை சுமந்தும், பறக்கும் வல்லமை கொண்டும், எதைக்கேட்டாலும் கொடுக்கும் மந்திரக்கோலுடனும் இருப்பார்கள் என்றுதான் மூளையின் மடிப்புகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால்.. உண்மையிலேயே தேவதைகள் அப்படிதான் இருக்கிறார்களா?

ஒழுகும் மூக்கை குட்டிப்பாவாடையை தூக்கித் துடைத்தபடி, அம்மாவின் முந்தானைக்குள் மறைந்துகொண்டு கைசூப்பியபடி, ஊர்க்கோவில் பிள்ளையாரிடம் எதையோ வேண்டி முணுமுணுத்தபடி , ஓவியமென்ற பெயரில் மீன்களை தரையிலும் நிலவை நதியிலும் வரைந்தபடி, பாலத்திற்கு கீழே தம்பிக்கு புட்டிப்பால் புகட்டியபடி, பாவாடை தாவணியில் தண்ணீர் குடம் சுமந்தபடி, ஜாக்கெட் தைத்துக்கொண்டே ரேடியோவில் கசியும் பாடலை பாடியபடி, விலகி ஓடும் மகளை இழுத்து ஜடைபின்னியபடி, புள்ளிகளை கோலத்தால் இணைத்தபடி, வேலைக்கு போகும் கணவனுக்கு டாட்டாவையும் பள்ளிக்கு போகும் குழந்தைக்கு முத்தத்தையும் கொடுத்து வழியனுப்பியபடி, சும்மாடு கட்டிய தலையில் வீடுபெருக்கும் விளக்கமாறுகளை விற்றபடி, பற்களில்லாத வாய்க்கு வெற்றிலையை உரலில் இடித்தபடி தேவதைகள் வீடெல்லாம், தெருவெல்லாம், ஊரெல்லாம் நிறைந்தே இருக்கிறார்கள் அவர்களை தேவதைகளாய்ப் பார்க்கும் கண்களும் மனமும்தான் எல்லோரிடத்திலும் இருப்பதில்லை.

குழந்தைப்பருவத்திலிருந்து பால்யத்தின் படிக்கட்டுகளில் பயணிக்கத் தொடங்கிய காலங்களில் கடந்துபோன தேவதைகள் தான் எதார்த்தமான தேவதைகளாக இன்னும் நிரம்பியிருக்கிறார்கள். ஊர்திருவிழாக்களில் எட்டு பெட்டிகள் பத்து பெட்டிகள் கொண்ட  குடை ராட்டிணங்கள் இருக்கும். தோழிகளோடு ஒரு பெட்டியில் ஏறும் பெண்கள், அதற்கு நேரெதிரான பெட்டிகளில் அமரும் மாமா பையன்களிடமோ மனசுக்கு பிடித்த பையன்களிடமோ பந்தயம் கட்டி கைக்குட்டையோ, கால் கொலுசையோ கீழே வைத்துவிட்டு ராட்டிணம் சுழல சுழல அதை எடுக்க வேண்டுமென ஒரு விளையாட்டு விளையாடுவார்கள். கீழிறங்கும் பெட்டியில் பாதி வெளியே தொங்கியவாறு அதை எடுக்கும் போட்டிகள் அத்தனை சுவாரஸ்யமானவை. ஒரு சுற்றில் யார் எடுக்கிறார்களோ அவர்கள் மேலே போயிட்டு கீழே வரும்போது அதை வைக்க வேண்டும், அடுத்த சுற்றில் யார் எடுக்கிறார்கள் என போட்டி நடக்கும். எத்தனை சுற்றுகளில் யார் அதிகம் எடுக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள். பெண்ணுக்காக ஆணும், ஆணுக்காக பெண்ணும் மாறி மாறி விட்டுக்கொடுத்துக்கொண்டாலும் போட்டியென வந்தபின்பு ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை எல்லாப் போட்டிகளிலும் நிரூபித்துக்கொண்டே இருப்பார்கள். பந்தயம் கட்டிய பரிசாக குச்சி ஐஸோ, சர்பத்தோ வசதியைப்பொறுத்து தோடு, வளையல், பாசின்னு திருவிழா கடைவீதிகளில் தாவணி பாவாடைகளில் அத்தனை தேவதைகள் சுற்றி வருவார்கள்.

கல்யாணம், பொங்கல், தீபாவளி போன்ற பெரிய விசேஷங்களுக்கு ரெடிமேடாக கடைகளில் விற்கும் மெகந்தி கோன்களை வாங்கி வைத்துக்கொள்வதில் எங்கோ ஒளிந்திருக்கும் வெட்கமும் கொஞ்சம் புன்னகையும் கூடுதலாக வந்துவிடுகின்றன இன்றைய பெண்களுக்கு. அம்மாக்களிடம் திட்டு வாங்கிக்கொண்டே சில்வர் பாத்திரத்தில் குங்குமத்தைக்கொட்டி சில பல பொருட்களையெல்லாம் சேர்த்து அடுப்புல வெச்சி நல்லா காய்ச்சி, அந்த பாத்திரத்தை வேற எதுக்கும் பயன்படுத்த முடியாதபடி பண்ணி, மெல்லிய குச்சி வெச்சி கைகளில் வைத்துக்கொள்ளும் வடிவங்களில் ரத்தமே வழிந்து வருவதாக அத்தனை சிவப்பாக இருக்கும் கைகளில் சந்தோஷமும் கொஞ்சம் நிரம்பிவழியும். நாலு வீட்டுக்கு ஒரு மருதாணிச்செடி இருக்கும், அதுல மருதாணி இலைகளை பறித்துவந்து, எலுமிச்சை பழ சாறு சேர்த்து நல்லா நெகு நெகுன்னு அரைத்து கொழ கொழன்னு வளித்து திண்ணைல உக்காந்து கதைகள் பேசிக்கிட்டே கைகளில் வெச்சிக்கிட்டு உன்னோடது அழகா என்னோடது அழகான்னு திருப்பித்திருப்பி பார்த்துகிட்டு தூக்கத்துல அரிக்கும் மூக்கை மருதாணி கையோடவே சொறிஞ்சிகிட்டு தூங்கிப்போன தேவதைகள் எல்லார் வீட்லயும் இருந்தாங்க. காலைல எழுந்து கைகளைக்கழுவி கொஞ்சம் தேங்காய் எண்ணெய் போட்டு தேய்த்து பார்க்கும் போது அந்த தேவதைகளின் வெட்கத்தில் கொஞ்சத்தை வாங்கிக்கொண்டு மருதாணி வைத்த கைகள் இன்னும் கொஞ்சம் கூடுதலாய் சிவக்கும்.



வீடுகளில் தெருக்களில் இருக்கும் தேவதைகள் ஒரு ரகம் எனில், பள்ளிக்கூட தேவதைகள் இன்னொரு ரகம். தேர்வு நேரங்களில் சொல்லிக்கொடுப்பதை, உடைந்து போன பென்சில்களுக்கு வேறு தருவதை, இரண்டு சொட்டு இங்க் கொடுப்பதையெல்லாம் தாண்டி, நமக்கென எடுத்துவரும் உணவில் ஒரு அதீத அன்பும் கலந்தே இருக்கும். ஜாமெண்ட்ரி பாக்ஸை வாயில் வைத்து பற்களால் கடித்து உப்பு மிளகாயில் உருண்டுகொண்டிருக்கும் நெல்லிக்காய்களை எடுத்து வாஞ்சையோடு நீட்டும் நேசத்தில், காக்காய் கடி கடித்து கொய்யாக்காயை கொடுத்துவிட்டு கூடவே சேர்ந்து சாப்பிடும் நேரத்தில், பாவாடையின் உள்பக்கமாக வைத்து பீடா மிட்டாயை சரிபாதியாய் கடித்து கொடுக்கும் வேளையில், வாங்கிக்கொடுக்கும் தேன்மிட்டாயை தேவாமிர்த மிட்டாயாக நினைத்து சாப்பிடும் நேரத்தில் அவர்கள் தேவதைகளின் தேவதைகளாக தெரிவார்கள்.
தெரு முக்கில் இருக்கும் மாரியம்மன் பண்டிகைக்கு தீர்த்தக்குடம் எடுக்க வரும் தேவதைகள் பாவாடை சட்டையோடும், தாவணி பாவாடையோடும் சமயங்களில் சேலைகளிலும் வரும்போதெல்லாம் அந்த அம்மனே இறங்கி இவர்கள் வடிவில் வருவதாய் தோன்றும். இப்போது போல சுடிதாரிலோ, சல்வார்கம்மீஸ்களிலோ யாரும் வந்ததில்லை. நெற்றி நிறைய திருநீறும், நடுவில் பெரிதாக குங்குமமும், தலையில் கொஞ்சம் மல்லிகைப்பூவோ, கனகாம்பரமோ, ஊதா நிற டிசம்பர் பூவையோ வைத்துக்கொண்டு வரும்போதெல்லாம் வாய் பிளந்து பார்த்த நியாபகங்கள் அவர்களுக்கு முன் வரிசையில் நின்று இன்னும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன. வாங்கிய விபூதியை தம்பிக்கோ தங்கைக்கோ வைத்துவிட்டு கண்களுக்குள் விழுந்துவிடாதவாறு கைகுவித்து ஊதிவிடும் அழகில் மந்திரக்கோலுக்கு பதிலாக புல்லாங்குழலை உதடுகளில் வைத்திருக்கும் நவீன தேவதைகளாகவே தெரிவார்கள்.

சிறுவயது ஆண் பிள்ளைகளின் விளையாட்டுகள் ஆர்வத்தில் தொடங்கி சண்டைகளில் முடிந்துவிடும். பெண் பிள்ளைகளின் விளையாட்டுகள் பெரும்பாலும் அன்பில் தொடங்கி அன்பிலேதான் முடியும். சின்னச் சின்ன தேவதைகள் கண்ணாமூச்சி ஆடும் போது கண்களைக் கட்டிவிட்டு "கண்ணாமூச்சி ரே ரே, கண்டுபுடி யாரு, ஊள முட்டையை தின்னுபுட்டு, நல்ல முட்டையை கொண்டு வா " ன்னு சொல்லி அனுப்பும் இடத்தில் எப்போதும் ஒரு பெரிய தேவதை உட்கார்ந்திருக்கும். அந்த பெரிய தேவதைதான் கண்ணாமூச்சி விளையாட்டின் ஆணிவேராய் தெரிந்ததெல்லாம் பால்யத்தின் வரம்.  சைக்கிள் பந்தயத்தில், முங்கு நீச்சல் போட்டிகளில், கோலப்போட்டிகளில், லெமன் ஸ்பூன் போட்டிகளில் என தேவதைகள் விளையாடியதை பார்க்கவும், தேவதைகளோடு சேர்ந்து விளையாடவும் வாய்த்த வாழ்க்கையில் தான் அத்தனை ஆனந்தமும் நிறைந்தே இருந்தன. இப்போது இருப்பதைப்போல எந்தக் குழந்தைகளோடும் விளையாடாமல் கைப்பேசிக்குள் மூழ்கியபடி எந்த பெண்களும் இருந்ததில்லை, "அப்போ மொபைல் இல்ல அதனால விளையாடினார்கள், அந்த காலத்திலும் மொபைல் போன் இருந்திருந்தால் இப்படி விளையாடி இருப்பீர்களா?" என்னும் கேள்வி எழுந்தாலும் கூட குழந்தைகளோடு விளையாட தொடங்கும்போதுதான் உண்மையான தேவதைகளும் அருகில் அமர்ந்து வேடிக்கை பார்க்கிறார்கள்.


ஓடிப்பிடித்து விளையாடி, சிறகுகள் இன்றி பறந்து, சிறு சிறு வெற்றிகளில் திளைத்து, அன்பில் கசிந்து, அன்பால் அணைத்து, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் குலதெய்வமாக, கூடப்பிறந்தவர்களுக்கு இன்னொரு அம்மாவாக,  உறவுகளுக்கு வழிகாட்டியாக, ஊருக்கே செல்லமாக, தெருவோர சிறுவர்களுக்கு தேவதைகளாக தெரிந்த பெண்கள் ஏராளம். ஏதோ ஒரு சந்தோசத்தில், ஏதோ ஒரு வெற்றியில், ஏதோ ஒரு சாதிப்பில், ஏதோ ஒரு மகிழ்வில் தனித்து சிரித்துக்கொண்டிருந்த தேவதைகளை பார்க்க வாய்த்த வாழ்க்கையில் ஏதோ ஒன்றை இழந்து, ஏதோ ஒன்றில் தொலைந்து, ஊரைவிட்டு கடந்த போகும்போதெல்லாம் கண்ணீரால் மூழ்கிய தேவதைகளையும் பார்க்க வாய்த்ததுதான் இந்த வாழ்வின் கொடுமைகளுள் ஒன்று.


இப்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தேவதைகள் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆனாலும் தான், தன்குடும்பம், தன் உறவுகள், தனது உலகம் மட்டும் என்று சுயநலமாய் மாறிப்போன பெண்கள் ஏராளமாக இருப்பதாக, அவர்கள் தனித்தனி தீவுகளாக மாறிவிட்டதாக, அவர்களுக்குள் இயற்கையாகவே இருக்க வேண்டிய தேவதைகள் காணாமல் போய்விட்டதாக தோன்றுகிறது. தாவணி பாவாடை கட்டியரெட்டைஜடை போட்டு கனகாம்பர பூவைத்த, மருதாணியை விட வெட்கத்தில் சிவந்த, குழந்தைகளோடு சேர்ந்து விளையாடிய, கடிதமெழுதி தூதுவிட்ட, காத்திருந்து நகம் கடித்த, இலவசமாக டியூசன் எடுத்த, கண்களை மூடியபடி கடவுளிடம் வேண்டுதல்களை முணுமுணுத்து, எப்போதும் கம்பீரம் குறையாத தேவதைகளைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன.


காலம் எல்லாவற்றையும் ராட்டிணமாய் சுழற்றிக்கொண்டிருக்கிறது ஆனால் மேலே போன பெட்டிகள் கீழே அப்படியே வருவதில்லை மாறாக முன்னேற்றம், டெக்னாலஜி, மாற்றம் என்னும் பெயர்களில்  புதுப்புது பெட்டிகளாக தன்னை மாற்றிக் கொண்டு கீழே வருகிறது. எல்லா பெண் குழந்தைகளுக்குள்ளும் ஒரு பெரிய மனுஷி இருப்பது போல எல்லா பெரிய மனுஷிகளுக்குள்ளும் ஒரு பெண் குழந்தை இருக்கத்தான் செய்கிறது. அதை குழந்தையாகவோ , பெரியமனுஷியாகவோ வைத்திருப்பதும் அவ்வப்போது தேவதையாக மாற்றிக்கொள்வதும் பெண்களின் கைகளில் தான் இருக்கிறது. அப்படி மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் காணாமல் போன தேவதைகளைக் கண்டுபிடிப்பதில் ஒரு சிரமமும் இருக்காது.