24 August 2020

நிறம் மாறும் உலகம்

எதையும் வேடிக்கை பார்ப்பதும், அந்த வேடிக்கை முடிந்த பின்பு  அடுத்த வேடிக்கை நோக்கி விளையாடிக்கொண்டே நகர்ந்துவிடுவதுமாய் வாழ்ந்திருந்த வயதுகளில் நிரம்பிய நினைவுகளை மூளை மடிப்புகள் பொத்தி பொத்தி வைத்திருக்கும், அதை வளர்ந்த மனதோடு இணைத்து வைத்து அவ்வப்போது காலம் நம்மை நினைவுகளில் குழந்தையாக்கி கைப்பிடித்து கூட்டிப்போய் மீண்டும் பழைய காலத்தில் நிறுத்தும். கற்பனையின் உச்சத்தில் நின்றுகொண்டு நம் சிறுவயது நிகழ்வுகளை இப்போதிருக்கும் நாமே கைகட்டி வேடிக்கை பார்ப்பதன் உள்ளிருக்கும் ஆனந்தமென்பது உயிருக்குள் பூ பூக்கும் தருணத்திற்கு நிகரானது.

யானைதான் சிறுவயதில் பார்த்து வியந்த பிரம்மாண்டமான கம்பீரம். அந்த வயதில் யானையின் உருவம் ஒரு வித பயத்தைக் கொடுத்தாலும் பிடிக்காமல் போகாது. தூரத்திலிருந்தபடியேனும் அதை ரசிக்கச்சொல்லும், அம்மாவின் முந்தானைக்குள் பதுங்கியபடியோ, தாத்தாவின் பின்னால் ஒளிந்தபடியோ யானை கண்களை விட்டு மறையும் வரை பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

பவானி கூடுதுறையில் இருந்த வேதநாயகி என்னும் பெயர் கொண்ட யானைதான் நாங்கள் பார்த்து ரசித்த முதல் யானையாக இருக்கும். பண்டிகை காலங்களில் கோவிலுக்குள் இருந்தபடி ஆசிவழங்குவது, சாமி ஊர்வலத்துக்கு முன்னால் வரவேற்பளித்தபடி நடப்பது, தேர் போகும் தெருவெல்லாம் மணியோசை குலுங்க குலுங்க ஆடி அசைந்து அழகாய் கடப்பதென இந்த யானையை ஒரு ஆச்சரியமாய் பார்த்ததுண்டு.


 பண்டிகையற்ற காலங்களில் பெரும்பாலும் விடுமுறை நாட்களில் ஊருக்குள் உள்ள தெருக்களுக்கு பாகன்கள் கூட்டி வருவார்கள். "யானை வரும் பின்னே மணியோசை முன்னே" ன்னு சொல்ற பழமொழிக்கெல்லாம் அர்த்தங்கள் இப்போதான் புரிகிறது. பக்கத்து தெருவில் யானை வரும்போதே அடுத்த தெருவுக்கு மணியோசை கேட்கும், எந்த வேலையா இருந்தாலும் அப்படியே போட்டுட்டு ரோட்டுக்கு வந்துடுவோம். கொஞ்சம் வசதி படைத்தவர்கள் யானைமேல் தங்கள் குழந்தையை வைத்து அழைத்துப்போக சொல்வார்கள், குழந்தை பாகனோடு அமர்ந்து கொஞ்ச தூரம் போய் அதே அழகோடு பின்னாலேயே வந்து நிற்கும். பார்க்க அவ்ளோ அழகா இருக்கும். வசதியற்ற வீட்டுக் குழந்தைகள் அம்மாக்களிடம் காசு கேட்டு அடம்பிடித்து வாங்கி வரும் இருபது பைசா, ஐம்பது பைசாக்களை யானையின் தும்பிக்கையில் வைத்து ஆசிர்வாதம் வாங்குவதற்குள் எல்லா வகையான நடனமும் ஆடிவிடுவார்கள். ஒரே ஒருமுறை நான் சிறுவயதில் இந்த யானைக்கு காசு கொடுத்திருக்கேன், பயந்தபடியே போய் நான் கையை நீட்ட அது சாதாரணமாக தும்பிக்கையை நீட்டி காசை வாங்கிக்கொண்டு ஆசிர்வாதம் செய்தது, தும்பிக்கையை தலையில் வைத்ததும் ஏதோ ஒரு பாறை தலையில் மோதியது போல அவ்வளவு கனம், அதன் சொரசொரப்பும், தும்பிக்கையில் இருந்த முடியின் அடர்த்தியும், மூச்சுக்காற்றின் வேகமும் என அத்தனை நெருக்கத்தில் இந்த யானையை தரிசித்த நாள் நினைவுகளில் இருந்து நீங்காமல் இருக்கிறது. இப்போதெல்லாம் கோவில் யானைகள் ஊருக்குள் வருவதில்லை, எங்காவது வழியில் யானைப்பாகன்களைப் பார்த்தால் மெல்லிய புன்னகை உதிர்த்து கடந்து விடுகிறேன்.

அந்த கூண்டுக்குள் அடைபட்டுக்கிடக்கும் கிளிக்கு தேவை இரண்டு நிமிஷ சுதந்திரமும், இரண்டு நெல்மணிகளும் மட்டுமே அதை வேண்டி, திறக்கும் போதெல்லாம் வெளிவந்து ஏதோ ஒரு சீட்டை எடுத்துக்கொடுத்துவிட்டு மீண்டும் கூண்டுக்குள் போய்விடும் கிளி யோசியத்தை அத்தனை ஆர்வமாய் வேடிக்கை பார்ப்போம், ஓரங்களில் கிழிந்த பாய் போன்ற துணியையும் கிளிக்கூண்டையும் தூக்கிக்கொண்டு ஊருக்குள் வரும் கிளி ஜோசியக்காரர்களை அவ்வளவு பிடிக்கும். ஓரளவு வசதியானவர்கள் மட்டுமே ஜோசியம் பார்த்தாலும் அவ்வப்போது வறுமையில் இருப்பவர்களும் மன திருப்திக்காக பார்ப்பார்கள். ஏதோ ஒரு வீட்டு திண்ணையிலோ, வாசலிலோ அமர்ந்து அவர் பாயை விரித்து, சீட்டுகளை வரிசையாக கிடத்தி, குறிப்பு சொல்லும் புத்தகத்தை மனப்பாடம் செய்து வைத்திருக்கும் பாடலோடு ஒப்பித்து, காசை கண்ணில் பார்த்தால் மட்டுமே வெளி வர வேண்டுமென்ற பயிற்சி செய்யப்பட்ட கிளியை நோக்கி "அய்யாவோட முக ராசிக்கு நல்ல சீட்டு ஒன்னு எடுத்துக்கொடு ராஜாண்ணோ, அம்மாவோட ராசிக்கு நல்ல சீட்டு ஒன்னு எடுத்துக்கொடு தாயிண்ணோ" சொல்லி மெல்ல அழைப்பார், ஜோசியம் கேட்டவர் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்ததும் கூண்டுக்குள் இருந்து கொஞ்சம் மிரண்டபடி வெளிவரும் கிளி ஒரு சீட்டை எடுத்து அவர் கையில் கொடுத்துவிட்டு அவர் தரும் நெல்மணிகளை வாங்கிக்கொண்டு கூண்டுக்குள் போய்விடும். வந்திருக்கும் படத்திற்கு ஏற்ப அவர் படிக்கும் குறிப்புகளை ஜோசியம் பார்ப்பவர் கேட்டுக்கொண்டிருக்க வேடிக்கை பார்க்கும் எங்கள் பார்வைகளும் கிளியோடு சேர்த்து கூண்டுக்குள் போயிருக்கும். விசில் அடித்து கிளியின் கவனத்தை எங்கள் பக்கம் திருப்ப முயற்சித்தாலும் அது கொஞ்சம் மிரண்டபடியே பார்த்துக்கொண்டிருக்கும். குறிப்பு படித்து முடித்து, பாயை மடித்து அவர் கிளம்பும்போது அவர் பின்னாலே நாங்களும் போவோம், தெருமுனை வரை போய்விட்டு திரும்பி வந்து விளையாட ஆரம்பித்துவிடுவோம். ஒரே தெருவில் பத்து பேர் கூட கிளி ஜோசியம் பார்ப்பாங்க, ஒரு தெருவில் ஒருத்தர் கூட பார்க்காமலும் இருப்பாங்க. அது கிளி யார் முகத்தில் விழித்தது என்பதைப்பொருத்தும், கிளி யோசியக்காரர் யார் முகத்தில் விழித்தார் என்பதையும் பொருத்தும் மாறுபடலாம். கிளியின் கூடவே ஒரு குட்டி முயல் அளவு வெள்ளை எலிகளை வைத்தும் யோசியம் பார்ப்பார்கள். ஆனால் அவர்களுக்கான ஜோசியத்தை எதை வைத்து பார்ப்பார்கள் எனத்தெரியவில்லை.


உடம்பில் ஒரு குட்டி கவுன் மாட்டிக்கொண்டு, அழகாய் பவுடரும் லிப்ஸ்டிக்கும் போட்டு, நெற்றியில் பெரிய பொட்டு வெச்சி, கழுத்தில் மணி கட்டிக்கொண்டு, காலில் கொழுசுகள் சிணுங்க சிணுங்க வீதிகளுக்குள் கூட்டி வருவார் கட்டிப்போட்டு ஒரு குட்டிக்குரங்கை. குரங்கை பல்டி அடிக்க சொல்லி, ஒரு குண்டாவை தூக்கி தலையில் வைத்து குதிக்க சொல்லி, குட்டி சைக்கிள் ஓட்ட வைத்து, என என்னென்னவோ சொல்லி வித்தை காட்டி வீதி வீதியாக வலம் வரும் அவரோடு நாங்களும் சுத்துவோம். பசி நேரத்தில் தேநீர் கடை வாசலில் ஒரு ஓரத்தில் அமர்ந்து குரங்குக்கு ஒரு பண் வாங்கிக்கொடுத்துவிட்டு அவர் ஒரு டீயை குடிக்கும் காட்சி இன்னும் கண்களுக்குள் அப்படியே இருக்கிறது. எல்லாத் தெருக்களையும் சுற்றிவிட்டு கிடைக்கும் சொற்ப காசுகளோடு குரங்கை தோளில் வைத்துக்கொண்டு அவர் கண்களை விட்டு மறையும் வரை பார்த்துக்கொண்டே இருப்போம். இப்போதெல்லாம் அவர் வேலையை மனைவிகள் எடுத்துக்கொண்டதால் அவர் நினைவுகள் எப்போதாவது இது மாதிரி வந்தால் தான் உண்டு.


நன்றாக பயிற்சி கொடுத்து பழக்கி வைக்கப்பட்ட கரடி ஊருக்குள் வருவதாக கேள்விப்பட்டாலே ஆர்வத்தோடு கொஞ்சம் பயமும் வந்து ஒட்டிக்கொள்ளும். கரடியை கூட்டி  வருபவர் கரடியின் அளவில் நாளில் ஒரு பகுதி கூட இருக்க மாட்டார். ஆனால் அவருக்கு கட்டுப்பட்டு அந்த கரடி இடுப்பை ஆட்டி ஆட்டி நடந்து வரும், தீராத காய்ச்சல், நழுங்கிய குழந்தைகள், இருட்டுக்கு பயப்படறவங்க, தூக்கத்துல உளர்றவங்கன்னு யாருக்கு வேணா கரடி தாயத்து கட்டலாம்னு சொல்லி, ஒரு கருப்பு கயிறையோ, சிவப்பு கயிறையோ எடுத்து கரடியிடம் கொடுப்பார், அது கையில் வைத்து கொஞ்சம் சுத்த சுத்த இவர் ஏதோ மாத்திரம் சொல்லுவார், அப்பறம் அதை வாங்கி சம்மந்தப்படவர்கள் கையிலோ, காலிலோ கட்டி அனுப்புவார். அந்த கரடி உக்காந்திருக்கும் அழகே தனி. நல்லா பொசு பொசுன்னு முடியோட, மொட்டை கண்ணையும், கூர்மையான பற்களையும், நகங்களையும் வெச்சிக்கிட்டு அது பார்க்கும் பார்வை பயமாகவும், சமயங்களில் பாவமாகவும் இருக்கும்.


மாதத்தில் ஒருநாள் வெள்ளிக்கிழமையிலோ விசேஷ நாட்களிலோ அலங்கரிக்கப்பட்ட பூம் பூம் மாட்டை பிடித்துக்கொண்டு, உறுமி மேளத்தை அடித்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக வருவார் உருமாலை கட்டிய மாட்டுக்காரர். பழைய கதாசிரியர்கள், கவிஞர்கள் வைத்திருக்கும் ஜோல்னா பை போன்ற ஒரு பையை மாட்டிக்கொண்டு, வீடுகளில் கிடைக்கும் அரிசி, பருப்பு, மாட்டுக்கு கொடுக்கும் தீவனம், கொஞ்சம் நாணயங்கள் என தனக்கு கிடைக்கும் எல்லாவற்றையும் அதற்குள்ளே ஒரு பொக்கிஷம் போல சேகரிப்பார். அந்த மாட்டை அத்தனை அழகாய் ஒப்பனை செய்திருப்பார், கொம்புகளில் கலர் ரிப்பன்கள், காலில் சலங்கை, மூக்கில் சங்குகளால் ஆன கடிவாளம், முதுகில் ஒரு பொன்னாடை என என்னென்னவோ இருக்கும். ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு ஊருகளுக்கு போவதில் தான் அவர் வாழ்வும் அந்த மாட்டின் நாட்களும் நகரும். இப்போதெல்லாம் அந்த மாதிரி மனிதர்களையும் மாடுகளையும் பார்க்க முடியறதில்லை.


திடீரென பக்கத்து தெருவில் இருந்து சத்தம் கேட்டுகிட்டே இருக்கும், பசங்க புள்ளைங்களாம் ஓடுவாங்க. போய் பார்த்தா ஒரு மர நிழலில், சுற்றியும் சிறு வேலி போடப்பட்டு உள்ள நூத்துக்கணக்கான கலர் கோழிக்குஞ்சுகள் கத்திக்கிட்டு ஒன்னுமேல ஒன்னு ஏறிக்கிட்டு குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு இருக்குங்க, அப்போ ஒரு ரூபாய்க்கு ஒரு கோழிக்குஞ்சு, வீட்ல அடம்புடிச்சி காசு வாங்கிட்டு வந்து ரோஸ்ல ஒன்னு பச்சைல ஒன்னு வாங்குவோம், கைல காசு அதிகமா இருந்தா எல்லா கலர்லயும் ஒவ்வொன்னு வாங்குவோம். அதை வீட்ல வளர்த்த முடியாது, அது பெருசாகாது, சீக்கிரம் செத்துரும்ன்னு எவ்வளவோ சொல்லுவாங்க, காதுலயே வாங்க மாட்டோமே. அவரோட மல்லுக்கட்டி கலர் மாத்தி அதை ஒரு பொட்டுக்கூடைல போட்டு தினமும் வெளிய மண்ணுல பூச்சி கொத்த விட்டு பார்த்துகிட்டா ஏமாந்த நேரத்துல கழுகு வந்து கொத்திக்கிட்டு போய்டும். அதுக்கு அழுது, சொன்னா கேக்கறியான்னு வீட்ல ரெண்டு மிதி வாங்கி அப்படியே தூங்கி போன நாட்களெல்லாம் சொர்க்கமின்றி வேறென்ன. 


சிறு கிராமங்களில், சிறு ஊர்களில் மட்டுமே இது போன்ற மனிதர்களையும் மனிதர்களோடே சேர்ந்து பயணிக்கும் உயிர்களையும் காண முடிகிறது. பெருநகரங்களில் எல்லா வேடிக்கைகளும் குறைந்து விட்டன அல்லது மறந்துவிட்டன. இந்த உலகம் அதிவேகமாக நிறம் மாறிக்கொண்டே வருகிறது. எளிய மனிதர்களையும் அவர்களோடு பழகும் உயிர்களையும் அது சார்ந்த சந்தோஷங்களையும் சட்டென பிடுங்கிக்கொள்கிறது. சமீபத்தில் எங்கள் தெருவில் ஒரு கிளி ஜோசியக்காரர் போனார், அம்மா அவரை கூப்பிட்டு ஜோசியம் பார்க்க சொல்லி கேட்டுக் கொண்டிருந்தார் நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன், அவரும் கிளியும் மட்டும் மாறியிருந்தார்கள், அந்த கூண்டும், சீட்டுகளும், பாயும், குறிப்புகளும், அவர்களுடைய வாழ்க்கையும் எதுவும் மாறவில்லை.