09 July 2016

உள்ளத்தனைய உடல்

#உள்ளத்தனைய உடல்
#21DaysChallenge
#Completed

இந்த குழுவில் இணைவதற்கு முன்னால் நானும் சோம்பேறிதான்
ஆனாலும் எப்போதாவது நண்பர்கள் கிடைத்தால் உடற்பயற்சி செய்வதுண்டு,  துணைக்கு யாருமில்லையென்றாலோ தூக்கம் என்னை எழ விடவில்லையென்றாலோ பெங்களூர் குளிருக்கு கதகதப்பாய்  போர்வைக்குள் புதைந்துவிடுவதுண்டு.

எதேச்சையாய் இந்த குழுவில் இணைந்து ஒரு ஆர்வத்தில் முதல் நாளே ஓவராக ஓடிவிட்டேன்.  நீண்ட நாள் இடைவெளியோ அல்லது திடீரென அதிகமாய் உடலுக்கு வேலை கொடுத்ததாலோ காய்ச்சல் வந்து மூன்று நாளாய் பெரும் அவஸ்தை.  இனி இதை முயற்சிக்க வேண்டாமெனவும் குழுவிலிருந்து வெளியேறி விடலாமெனவும் தோன்றியது. அதே சமயம் இன்னொரு முறை முயற்சித்துதான் பார்ப்போமே என ஏதோ ஒரு உள் மனம் சொல்ல மீண்டும் தொடங்கினேன் .

முதலில் எடுத்ததும் ஓடாமல் மெதுவாய் நடைப்பயிற்சியில் தொடங்கி 3km நடந்து பின் ஒவ்வொருநாளும் தூரத்தை அதிகப்படுத்தி வேகமாய் நடந்து மெதுவாய் ஓடி உடலை ஒரு புதிய பழக்கத்துக்கு கொண்டு வந்தேன்.
தினமும் எதாவது ஒரு வகையில் என் பயிற்சியை தொடர்ந்தேன்

பக்கத்திலிருக்கும் கடைக்கு கூட பைக் எடுத்துக்கொண்டு போகும் நான் இப்போதெல்லாம் 7 அல்லது 8 KM தூரமானாலும் சிரமமில்லாமல் யார் துணையுமில்லாமல் நடக்க முடியுமென நம்புகிறேன். பவானியிலிருந்து சித்தோடு-ஈரோடு வரைகூட  நடந்து போக முடியும்.

இந்த சவாலை நான்  பெங்களூரில்  தொடங்கியபோது வெளியூர் பயணம் , சுற்றுலா திட்டம் , சொந்த ஊர் பயணம் என பல இடஞ்சல்கள் வந்தன , அதையெல்லாம் சமாளித்து  போகும் இடங்களிலெல்லாம் பயிற்சியை எதோ ஒருவகையில் தொடர்ந்தேன்.  நடக்க, ஓட முடியாத போது சைக்கிள், வெளியூர் போனால் நடைபயிற்சி தடைபடும்  நேரங்களில் நிறுத்தத்திற்கு 5km முன்னாடியே இறங்கி நடப்பது , மழை காரணமாக வெளியே போக முடியாத தருணங்களில் ஜிம்மில் அல்லது தங்கியிருந்த அறைக்குள் பயிற்சி செய்வதென நான் தோற்கப்போகும் தருணங்களில் எல்லாம் என்னை நானே வென்றெடுத்தேன் .

ஒவ்வொரு முறையும் என் தூரத்தையும் என் நேரத்தையும் அதிகமாக்கி என்னால் முடிந்தவரை இந்த 21 நாட்களாய் மிகச்சரியாக  பயன்படுத்தினேன் . இந்த 21 நாட்களில் நான் இழந்தவையென  பார்த்தால் ..
இடையும்-எடையும் அலுப்பும்-கொழுப்பும் உணவும்-வியர்வையும் துக்கமும்-தூக்கமும்

கிடைத்தவையெனப் பார்த்தால்
அன்பும் நட்பும்
உந்துதலும் பாராட்டுக்களும்
அறிவுரைகளும் ஆலோசனைகளும்
வாழ்த்துக்களும் வரவேற்புகளும்
முயற்சிகளும் வெற்றிகளும்
என இன்னும் இன்னும் நிறைய.

வழக்கமாய் அலுவலகம் விட்டு வந்தவுடன் கதவைத் தாழிட்டு கைப்பேசியோடு கடினமாய் கடக்கும்  என் சாயங்கால நேரங்கள் இந்த நாட்களில் எத்தனையோ புது உறவுகளை புது இடங்களை புது வ(லி)ழிகளை புது நம்பிக்கைகளை புது வெற்றிகளைக் கொடுத்திருக்கிறது.  இதெல்லாம் இந்தக் குழுவிலுள்ள ஒவ்வொருவராலுமே சாத்தியம் .

இதை இன்னும் இன்னும் தொடரனும் இன்னும் பல தடைகளை இன்னும் பல இடங்களைக் கடந்து பயணிக்கணும் ... பயணிப்பேன்.

என் சின்னச் சின்னப் பதிவுகளுக்கும் லைக் போட்டு என்னை ஊக்கப்படுத்தி என்னை வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் இதயம் நிரம்பிய நன்றிகள்.

குறிப்பாக குருநாதர் ஷான் கருப்பசாமி
அவர்களுக்கும் , ஈரோடு கதிர் அண்ணன் அவர்களுக்கும் குறையாத நன்றிகள் .

---தனபால் பவானி
#பெங்களூரிலிருந்து

சிறகைப் பறக்கவிடு

உன் மீதான வெறுப்பு
இன்னும் கூட கூடியிருக்கலாம்
இல்லையெனினும் குறையாமல்
பார்த்துக்கொள்கிறேன்

நினைவுகளில்
அலைந்து கொண்டிருக்கும்
நிறைவேறாத ஆசைகளைக் கூட்டிவந்து
தீயிட்டுக் கொளுத்துகிறேன்

கடந்தகால பரண்களின்மேல்
மடித்து வைத்திருக்கும்
நம் நாட்களின் மீதுபடிந்த தூசிகளை
தவறியும் தட்டுவதில்லை

சுவாசப்பையின் பள்ளத்தாக்கிலிருந்து
சுத்தமாய் துடைத்தெறிந்த உன் வாசனையை
மீண்டும் நிரப்ப முயற்சிப்பதில்லை

கனவுகளில் தோன்றி மறையும்
உன் முக பிம்பத்தை உடைக்க மனமில்லை
தடைகளில்லை உன் திசையில் பயணி
தேடல்களுண்டு என் சிறகைப் பறக்கவிடு

வேண்டாமென
விலகிச்செல்லும் உறவுகளை
என்ன செய்வது
மறப்பதையும் மன்னிப்பதையும் தவிர