25 June 2012

நண்பன்



அம்மா , காதல் என்ற சொல்லுக்கு அடுத்த படியாய் இந்த உலகில் உள்ள எந்த மொழியில் உச்சரித்தாலும் இனிக்கும் இன்னொரு சொல் நண்பன்.....! மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்கும் எப்போதும் இருக்கும் உறவு இந்த நண்பன் உறவு. நண்பர்களாய் வருபவர்கள் நம் வாழ்க்கையை கடந்து போவார்கள் இல்லையென்றால் கற்றுக்கொடுத்து விட்டுப்போவர்கள். எனக்கு கிடைத்த ஒரு நண்பன் வாழ்க்கையை கற்றுக்கொடுத்து விட்டுப்போனான். அவன்தான் இந்த படத்தில் இருக்கும் துரைராஜ்.

நான் படித்த SSM டிப்ளமோ கல்லூரியில் ஒரு பெட்டிக்கடைக்காரரின் மகனாய் எனக்கு கிடைத்தவன், எனக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுத்தவன். டிப்ளமோ கல்லூரிகளில் முதல் வருடம் இரண்டு  அல்லது மூன்று வெவ்வேறு துறைகளைச்சேர்ந்த மாணவர்களை ஒன்றாக அமரவைத்து பாடம் நடத்துவது ஒரு சில கல்லூரிகளில் வழக்கம், அப்படித்தான் எங்கள் கல்லூரியிலும். நான் எலெக்ட்ரிக்கல் இவன் கம்ப்யூட்டர் பிரிவு, எங்கள்  நட்பு ஆரம்பித்தது ஒரு சண்டையில் தான், ஆனால் அதுதான் முதலும் கடைசி சண்டையுமாய் இருந்தது. அப்போது எங்கள் கல்லூரியில் வகுப்புகள் பற்றாக்குறையின் காரணமாய் ஒவ்வொரு பாடப்பிரிவு ( PERIOD) முடிந்தவுடன் வேறு வகுப்பறைக்கு செல்ல வேண்டும். செய்முறை வகுப்புக்கு போய்விடும் மற்ற மாணவர்களின் வகுப்புகளில் நாங்கள் சென்று அமர்ந்து கொள்வோம், இது எப்போது நடக்கக்கூடிய ஒரு வாடிக்கை, 

அப்படி ஒரு நாள் நான் வகுப்பு மாறும் வேளையில் இரண்டாவது பெஞ்சில் அமர்ந்து விட்டேன்.( அப்போது யார் வேண்டுமானால் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து கொள்ளலாம் காரணம் அது கல்லூரியில் சேர்ந்த முதல் மாதம். ஆனால் அவர்கள் எப்போதும் இரண்டாவது பெஞ்சில் தான் உட்காருவார்கலாம், அது எனக்கு தெரியாது. ) இவன் தன் இன்னொரு நண்பனோடு (அருள் (DD&W) ) வந்து இது எங்கள் இடம் எழுந்திருங்கள் என்று கேட்டனர் அதற்கு நான் முடியாது நான் முதலில் வந்தவன் அதனால் நீங்க வேற சீட்ல போய் உக்காருங்கன்னு சொல்லிட்டேன். அவர்களும் என்னிடம் அதிகம் சண்டை போடாமல் எனக்கு  பின்னால் இருந்த சீட்ல போய் உக்காந்துட்டாங்க. இடைவேளையில் எல்லோரும் எழுந்து போகும்போதுதான் அதைகவனித்தேன், இவனுக்கு ஒரு கால் இல்லை, கட்டைக்கால் பொருத்திக்கொண்டு மெதுவாய் என்னைகடந்து  போனான் நான் இடிந்து போனேன். இவனிடமா சண்டை போட்டேனென மனசு குறுகிப்போனது. பிறகு அவன் திரும்பி வந்த போது மன்னிப்பு கேட்டு அவனை இரண்டாவது பெஞ்சில் அமரவைத்து நான் அவனுக்கு பின்னால் அமர்ந்து கொண்டேன். அப்போது அறிமுகமாகி நல்லா நண்பர்கள் ஆனோம், அன்று முதல் அவன் இரண்டாவது பெஞ்சிலும் நான் மூன்றாவதிலும் அமர்ந்தோம், அன்று இவனிடம் கற்றுக்கொண்டேன் எந்த சூழ்நிலையிலும் நாம் எதையாவது விட்டுக்கொடுத்தால் நமக்கு நல்லது நடக்குமென.

வகுப்பில் மற்ற எல்லோரையும் விட இவன் மீது அன்பும் நட்பும் அதிகமானது, எல்லாவற்றையும் நாங்கள் பகிர்ந்து கொண்டோம் நட்பு இவ்வளவு அழகானது என்பதை இவன்தான் கற்றுக்கொடுத்தான். சினிமா, ஓட்டல், வீடு, ஆற்றுப்பாலம், என எல்லா இடத்திற்கும் என்னோடு வருவான், என்னை இவனுக்கு மிகவும் பிடித்துப்போனதால் கம்ப்யூட்டர் துறையில் இருந்து எலெக்ட்ரிக்கல் துறைக்கு மாற்றம் கேட்டான் ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. பொதுத்தேர்வு வந்தது, எனக்கு பிடிக்காத, புரியாத பாடங்கள் இரண்டு, கணிதம் 1&2 மற்றும் டெக்னிக்கல் டிராயிங் ஆனால் அந்த இரண்டையும் அவ்வளவு பொறுமையாகவும் தெளிவாகவும் கற்றுக்கொடுத்தான்,நன்றாக கணக்கு போடும் மாணவர்கள் கூட தோற்றுப்போக நான் எல்லா பாடத்திலும் பாஸாயிட்டேன் அதுக்கு காரணம் இவன்தான்.அப்போது நமக்கு தெரிந்த நல்ல விசயங்களை  மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை இவனிடம் இருந்த கற்றுக்கொண்டேன்.

தேர்வு முடிந்த மதியம் கில்லி படத்துக்கும் ஒருவாரம் கழித்து ஊட்டியும் போய் வந்தோம், இன்னும் சில நாட்களில் கல்லூரி திறந்து விடும் இரண்டாம் வருடம் அடி எடுத்து வைக்கப்போகிறோம் என்ற நினைப்பில் இடியை இறக்கியது அந்த செய்தி, இவன் காலைத் தின்று பசியாறாத புற்று நோய் மீண்டும் பரவத்தொடங்கி விட்டது என்பதை ஜீரணிக்க முடியவில்லை, என்னென்ன வைத்தியம் செய்தும் இவன் உடல் நலம் தேறவில்லை, பணக்கஷ்டம் வேறு, நான் கல்லூரி முதல்வரின் அனுமதியோடு எல்லா மாணவர்களிடமும் கொஞ்சம் கொஞ்சம் பணம் சேர்த்து இவன் அம்மாவிடம் கொடுத்தேன் அந்த நிலையிலும் இவன் " எதுக்கு மச்சி இதெல்லாம்" என சிரித்தான்  அப்போது என்னால் அழத்தான் முடிந்தது, மருந்து செலவுக்காவது ஆகட்டும் என சொல்லி வந்தேன். எந்த நிலைமையிலும் அடுத்தவர்களிடம் கை ஏந்தக்கூடாது என்பதை அன்று கற்றுக்கொடுத்தான்,

எவ்வளவோ  முயற்சி செய்தும் கடைசியில் இதே நாள் (ஜூன் 26) இறந்து போனான், பதறியடித்து ஓடி இவன் உடலை மட்டும் பார்த்த போது கதறித்துடிக்கத்தான் முடிந்தது, அன்று சிந்திய கண்ணீர் அளவில்லாமல் போனது, 
இத்தனை நட்சத்திரங்களுக்கு மத்தியில் உள்ள ஒரே ஒரு நிலவு காணாமல் போனால் எப்படி இருக்குமோ...
இவ்வளவு பெரிய உலகிற்கு ஒளி கொடுக்கும் ஒரே ஒரு சூரியன் காணாமல் போனால் எப்படி இருக்குமோ...
அப்படி இருந்தது அந்த நாள், இவன் உடல் மீது அடுக்கப்பட்ட ஒவ்வொரு விறகும் இவனுக்கான கனவுகளாகவே எனக்குத் தோன்றியது,
எல்லாம் சாம்பலாய்ப் போனது.

எவ்வளவோ விசயங்களை கற்றுக்கொடுத்த இவன்தான் கடைசியில் இழப்பின் வலி எப்படி இருக்கும் என்பதையும் கற்றுக்கொடுத்தான்.
இன்று இவனது எட்டாவது வருட நினைவு நாள், இன்னும் இவன் என் நிழலோடு இருக்கிறான் என்பதை ஒரு உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கிறது. இவன் இன்று இருந்திருந்தால் நான் வேறு ஒரு ஆளாய் வெற்றி பெற்றிருப்பேன், இழப்புகள் வாழ்க்கையில் இயல்புதான், ஆனால் ஒரு சில இழப்புகள் ஒவ்வொரு நொடியும் வலி தரக்கூடியவை, அப்படித்தான் இவனும்.