12 March 2017

குட்டி உலகத்தைக் கொண்டாடு

மந்திரக்கோலும் சிறகுகளும்
இல்லாமல் பிறந்த தேவதை நீ
கனவுகளாலும் வாஞ்சைகளாலும்
வளர்த்தெடுக்கப்பட்ட  பூவுந்தன் வயிற்றில்
வளர்கிறது மொட்டொன்று

பிரியங்களின் பெருவெளிச்சத்தை
பிரசவிக்கப்போகிறாய்
சுத்தம் செய்யப்பட்ட குட்டி சொர்க்கமொன்றை
உன் கைகளில் கொடுக்கும் போது
ஒட்டுமொத்த முத்தத்தையும்
ஒரேநாளில் கொடுக்க எத்தனிப்பாய்

பேறுவலியிலோ பேரானந்தத்திலோ
நீ கண்ணயரும் கனமொன்றில்
அழுகைமொழியோடு அக்குழந்தை
உன்னை அழைக்க நேரிடும்

சிரிப்பைப் போலவே அதன் அழுகையையும் ரசி
முதல் முறை சுரக்கும்
தாய்ப்பாலின் சுகம் உணர்
கைகால் முளைத்த
உன் குட்டி உலகத்தைக் கொண்டாடு
கடந்தகால காயங்களை மற
எதிர்கால கனவுகள் வளர்

போதும்
இனிமேல் தயவுசெய்து
என் கனவுகளில் வராதே
ஏனெனில்
எனக்கும் கல்யாணம் ஆகப்போகிறது.


உணரவேண்டியிருக்கிறது

அர்த்தராத்திரியோ அதிகாலையோ
கதவு திறக்கும் போது
உதிரும் புன்னகையோ
"வா கண்ணு" என்னும் வார்த்தையோ கேட்காது

கதவுகளுக்குள் வந்தபின்
ஆடை மாற்றுவதற்குள் கொடுக்கப்படும்
ஒரு செம்பு தண்ணீர் கிடைக்காது

காலையில் எழுவதற்கு முன்
படுக்கையில் இருக்கும்போதே
ஒரு கோப்பை தேநீர் வராது

இட்லியோ தோசையோ
இரண்டு சட்னிகளோடு சேர்த்து
கொஞ்சம் கரிசனமும் அக்கறையும்
இருக்காது

எங்கோ வைத்துவிட்ட
இருசக்கர வாகனத்தின் சாவியை
நாமே தேடி எடுக்க வேண்டிவரும்

டீத்தூள் டப்பாவையும்
சர்க்கரை டப்பாவையும் கண்டுபிடிப்பதற்குள்
தேநீர் தயாரிக்கும் ஆசையை
பலமுறை கைவிடவேண்டும்

சமையலறையில் தேடல்
சாப்பாட்டு மேஜையில் வெறுமை
வீட்டில் தெரியும் தனிமை
விளங்க முடியா பொறுமை
எல்லாம் சேர்ந்து உணர்த்தும் அம்மாவின் பெருமை

அம்மா வெளியூர் சென்றிருக்கும் போது
நாம் வெளியூரில் இருந்து வீடு திரும்பும் நாளொன்றில் உணரவேண்டியிருக்கிறது எத்தனையோ விசயங்களை..!