Showing posts with label குழந்தைகள். Show all posts
Showing posts with label குழந்தைகள். Show all posts

05 June 2012

குழந்தைகளின் உறக்கம் போல் 
ஒரு நாள் கூட விடிவதில்லை...   
அடுத்த நாளைப்பற்றிய 
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ...!



எல்லா கவலைகளையும்
மறக்க வைத்து விடுகிறது
குழந்தைகளின் புன்னகை....!  

பல வருடங்களாய் 
உபயோகப்படுத்திய 
மின்னஞ்சல் முகவரியின் 
கடவுச்சொல் மாறிவிடுகிறது 
சில நாட்களுக்கு முன் வைக்கப்பட்ட 
குழந்தையின் பெயரில்...!  


06 December 2011

குழந்தையின் சமையல்....!

சின்ன சின்ன பாத்திரங்கள் வைத்து
சமையல் செய்கிறேனென சொல்லி
இல்லாத காய்கறிகளை எடுத்துப்போட்டு
சில நிமிடங்கள் கழிந்தபின் நீட்டுகிறாள்
வெற்றிடம் நிறைந்த பாத்திரத்தை...

அதில் எதுவுமே இல்லையென்றாலும்
இருந்த பசியையும் அடக்கிவிடுகிறது
குழந்தையின்   சமையல்....!

19 December 2010

பிச்சை



குழந்தைகள் தின
சிறப்பு நிகழ்ச்சி
உள்ளூர் தொடர்வண்டிகளில்
எடுக்கிறார்கள் ...

பேட்டியல்ல... பிச்சை ...!

உறக்கம்



இன்று இரவு உறக்கம்
வராது குழந்தைக்கு ...
மழை நனைத்துவிட்டுப் போயிருக்கிறது
பொம்மைகளையும் ....!
குழந்தையின் கனவுகளையும் ....!

எதுவுமே நடக்கவில்லை ..!



படுக்கைதலையணைகள்
கலையவில்லை ....

அலமாரி புத்தகங்கள்
கிழியவில்லை ...

பொம்மைகள் இடம்
மாறவில்லை .....

சுவற்றில் புதிய
கிறுக்கல்கள் இல்லை ...

பலூன்கள் வெடிக்கவில்லை ...

டம்ளர் தண்ணீர்
கொட்டவில்லை ...

பூக்கள் பறிக்கப்படவில்லை ....
கைப்பேசிகள் வீசப்படவில்லை ...

இப்படி எத்தனையோ இல்லைகள் ...
இன்னும் சில நாட்கள்
இப்படித்தான் இருக்கும் ....

ஆம் ...
எங்கள் வீட்டு இளவரசி
ஊருக்குப் போயிருக்கிறாள்....!

16 December 2010

மேகஉருவம்



மேகங்கள் உருவங்களாய்
வருவதால் ....
பொம்மைகள் உறங்கிவிட்டன
குழந்தைகள் இல்லாமல்...!

15 December 2010

சின்ன உலகம்


முதல் இரண்டு நாள்
முழுதாய் இருந்தது...

மூன்றாவது நாள் வலது கையின்
நான்கு விரல்கள் காணாமல் போயிருந்தன...

அடுத்த நாள் தரைதேய்த்து இழுத்ததில்
ஆங்காங்கே சில சிறாய்ப்புகள்...

உடைந்துபோன கால்கள் இன்னும்
ஊனமாகவே இருக்கின்றன ....

நகம் கிழித்த வயிற்றுப்பகுதியில் இருந்து
சரிந்து கிடக்கிறது கொஞ்சம் குடல்கள் ...

சாயம்போன உடையின்
எல்லா இடங்களிலும் காயங்கள் ....

கலைந்துபோன கூந்தலால்
அலங்கோலமாய்  கிடக்கிறது தலை ....

ஒரு காதும் ஒரு கண்ணும்
லேசான காயங்களோடு தப்பியிருந்தன ....
மூக்கு முட்டும் முழுதாய் இருந்தது ....

ஆனாலும் ....!

இன்னும் இரவு நேரங்களில்
அந்த பொம்மையை கட்டிப்பிடித்துக்கொண்டுதான்
தூங்குகிறாள் எங்கள் வீட்டு இளவரசி ...! 

ரசனை


தவறுகள் கூட
ரசனைக்குரியதாகிவிடுகிறது ...!
குழந்தைகள் பேசும் போது...!

14 December 2010

பொம்மைகள் ....!

 

 

அமைதி இறந்து கிடக்கும் வீட்டில்
உயிரோடு இருக்கின்றன ....
குழந்தைகள் வைத்து
விளையாடும் பொம்மைகள் ....!