15 December 2010

சின்ன உலகம்


முதல் இரண்டு நாள்
முழுதாய் இருந்தது...

மூன்றாவது நாள் வலது கையின்
நான்கு விரல்கள் காணாமல் போயிருந்தன...

அடுத்த நாள் தரைதேய்த்து இழுத்ததில்
ஆங்காங்கே சில சிறாய்ப்புகள்...

உடைந்துபோன கால்கள் இன்னும்
ஊனமாகவே இருக்கின்றன ....

நகம் கிழித்த வயிற்றுப்பகுதியில் இருந்து
சரிந்து கிடக்கிறது கொஞ்சம் குடல்கள் ...

சாயம்போன உடையின்
எல்லா இடங்களிலும் காயங்கள் ....

கலைந்துபோன கூந்தலால்
அலங்கோலமாய்  கிடக்கிறது தலை ....

ஒரு காதும் ஒரு கண்ணும்
லேசான காயங்களோடு தப்பியிருந்தன ....
மூக்கு முட்டும் முழுதாய் இருந்தது ....

ஆனாலும் ....!

இன்னும் இரவு நேரங்களில்
அந்த பொம்மையை கட்டிப்பிடித்துக்கொண்டுதான்
தூங்குகிறாள் எங்கள் வீட்டு இளவரசி ...! 

No comments:

Post a Comment