22 August 2014

உறங்காத இரவுகளும் உன் நினைவுகளும்..!


உறக்கம் தொலைத்த இரவுகள்
உணவாய்த் தின்கிறது
உன் நினைவுகளை....

இருள் படிந்த என் அறையின்
ஜன்னல் வழியே வந்து விழும்
வெளிச்சக்கீற்றுகள்
தோண்டி எடுக்கின்றன
உன் வெள்ளைச் சிரிப்புகளை...

கைப்பேசியின் உள்டப்பியில்
இருந்து அழிக்கப்படும் தேவையற்ற
குறுந்தகவல்களைப்போல்
அவ்வளவு சுலபமாய்
அழிக்க முடியவில்லை
இதயத்திலிருந்து
உன் கடைசி பார்வையை ...

அருகில் உறங்கும் நண்பனின்
அலைபேசி அலறும் அர்த்த ராத்திரி
மீட்டெடுக்கிறது
நீ அழைத்த நிமிடங்களை....

கொசுக்கள் வந்து கடிக்கும் 
தருணங்கள் முன் வைக்கிறது 
உன் விலை மதிப்பில்லாத 
முத்தங்களை... 

தூரத்து மசூதியில் ஓதும்
ஒரு குரல், விடிந்து விட்டதை
விவரிக்கும் போது
தொடங்குகிறது என் உறக்கம் ...!





சென்னை தினம் .... !!!


இது தமிழ் நாட்டின் தலை நகரம் மட்டுமல்ல இந்திய இளைஞர்களின் தலையெழுத்தையும் மாற்றும் இடம்...!!!

கண்கள் நிறைய கனவுகளோடும், மனது நிறைய லட்சியங்களோடும் தினம் தினம் ரயில் ஏறும் கால்கள் எத்தனை...? படிப்பு தந்த அறிவை மூளையில்  சுமந்துகொண்டு 
உடம்பு தரும் பசியை வயிற்றில் சுமந்து கொண்டு ஒரு டீ யோடும் ஒரு தம்மோடும் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் மனங்கள் எத்தனை...? நகல்கள் நிறைந்த ஃபைல்களை  தூக்கிக்கொண்டு நனைந்த கைக்குட்டையால் முகத்தை துடைத்துக்கொண்டு நேர்காணளுக்கான  இடத்தின் முகவரி தேடி அலையும் முகங்கள் எத்தனை...? கிராமத்து அம்மா அப்பாவின் அன்பை துறந்து உடன்பிறந்தவர்களோடு செல்ல சண்டைக்கு ஏங்கி திறக்காத சினிமாவின் கதவுகளை மீண்டும் மீண்டும் தட்டிக்கொண்டிருக்கும் விரல்கள் எத்தனை...? தொடர்பு எல்லைக்கு அப்பால் வந்ததால் உடைந்து போன நட்புகள் எத்தனை...? ஒரு சிறு வெற்றியெனும் கிடைக்காமல் திருமணம் செய்ய கூடாதென இளமையை தொலைத்த இதயங்கள் எத்தனை...?

சொந்த ஊர்களில் அடுத்த தெரு மளிகை கடைக்கு  கூட போகாத அழகு பெண்கள் IT கம்பெனிகளில் இரவெல்லாம் விழித்து  வேலை பார்க்கிறார்கள், தோழிகளோடு ஆலமர ஊஞ்சல் ஆடியவர்களுக்கு சுழலும் நாற்காலிகள் அந்த சந்தோசத்தைக் கொடுக்குமா? அம்மாவின் மடியில் தலை சாயும் சந்தோஷ நிமிடங்களை அமெரிக்க டாலர்களால் கொடுக்க முடியுமா ?மெகந்தியின் வளைவுகளில் மயங்கும் மனம் மருதாணியின்  வாசத்தை மறக்குமா? வாய்க்கால்களில் முங்கிக் குளித்த ஈரத்தை கால்களை நனைக்கும்  மெரினா கடல் அலை கொடுக்குமா? நகரப்பேருந்துகளில் சிக்கிச் சிதையும் வேளைகளில் மாட்டு வண்டியில் பயணித்த நியாபகம் வராமலா போகும்? போகிற போக்கில் தெருவோர பிள்ளையாரைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்ளும் போது ஊர் திருவிழாக்கள் கண்களுக்குள் வந்து போகாது?

இவை அத்தனையையும் பறித்துக்கொண்டு இந்த பெரு நகர வாழ்க்கை கொடுத்தது என்ன? 

பள்ளிக்கு போகும்  மகனுக்கு ஆட்டோவில் டானிக் கொடுக்கும் ஒரு தாய் , நடைபாதையில் கடைவிரித்து மகளுக்காக புத்தகம் சுமந்து செல்லும் ஒரு தகப்பன், பேரனுக்கு முந்தானை குடை பிடிக்கும் ஒரு பாட்டி , பேத்திக்கு இளநி வாங்கிக்கொடுக்கும் ஒரு தாத்தா, வயதான அம்மாவை வைத்துக்கொண்டு பிச்சை எடுக்கும் ஒரு மகன் , தாமதமாக வரும் காதலிக்காக சாக்லேட்டோடு காத்திருக்கும் காதலன் , பிறந்த நாள் பரிசு கொண்டு வரும் காதலனுக்காக முத்தங்களோடு காத்திருக்கும் காதலி, காலையிலேயே குடித்துவிட்டு மட்டையாகிக் கிடக்கும் 'குடிமகன்' இவர்களோடு சிக்னல்களில் சிக்கிகொள்ளக்கூடாது என பறக்கும் வாகனங்கள்,ஐந்து நிமிட தாமதத்திற்காக அரை மணி நேரம் வாங்கும் திட்டு , எல்லாம் சரியாக இருந்தும் கொடுக்கப்படும் லஞ்சம் , தண்டவாளம் கடக்கையில் வரும் மரணம், நடைமேடையில் நடக்கையில் வரும் பயணச்சீட்டு பரிசோதனை, சில்லறைக்காக நடத்துனரிடம் நடத்தும் சண்டை இப்படி  எல்லாம் கடந்து வீட்டுக்குள் நுழைகையில் சம்பாதித்ததை விட இழந்தது அதிகமாக இருக்கும் .

Inline image 1

ஆனாலும் இதே சென்னை தான் கடற்கரை சாயங்காலங்களிலும், சினிமா படப்பிடிப்புகளிலும் , வடபழனி முருகன் கோவிலும், தியாகராய நகர் தெருக்களிலும் , தொங்கிக்கொண்டு போகும் தொடர்வண்டிகளிலும் , திருவல்லிக்கேணி மேன்சன்களிலும், MGR , அண்ணா சமாதிகளிலும்,
மகாபலிபுர மணல் மேடுகளிலும், கோயம்பேடு எலைட் வெளிநாட்டு சரக்குகளிலும்,சத்யம் சினிமா தியேட்டர்களிலும் , சிட்டி சென்டர், போனிக்ஸ் மால்களிலும், கண்ணகி சிலை பக்க  புத்தாண்டுக் கொண்டாட்டங்களிலும் கலங்கரைவிளக்கத்தின் உச்சியிலும் இன்னும் இன்னும் வாழ்க்கை மிச்சமிருப்பதை உணர்த்திக்கொண்டு தான் இருக்கிறது.

இங்கே வலிகளுக்கு நிகராய் சந்தோசங்களும் ,பயங்களுக்கு நிகராய் கொண்டாட்டங்களும்,  கண்ணீருக்கு நிகராய்  புன்னகையும் , நரகத்திற்கு நிகராய் சொர்க்கமும், தோல்விகளுக்கு நிகராய் வெற்றிகளும், ஏமாற்றங்களுக்கு நிகராய் வாய்ப்புகளும் இறப்புக்கு நிகரான வாழ்க்கையும் இன்னும்  இருக்கின்றன.

சாதனை படைக்க சென்னை வருவதை விட சென்னையில் இருப்பதே பெரிய சாதனைதான்.
வாழ்க்கை பயணத்தில் சிகப்பு விளக்கு எறிந்தால் கொஞ்சம் பொறுமையாய் காத்திருங்கள் 
உங்களுக்கான பச்சை விளக்கும் கண்டிப்பாய் ஒளிரும் .....!!!

வாழ்க்கைக்காக சென்னை வந்தவனின்  வாழ்த்துக்கள் ...!!!