23 November 2017

தூரத்தில் நாம் இருப்போம்

தூரத்தில் பெய்யும் 
மழையின் சாரலாய் 
எப்போதும் மனதை ஈரமாகவே 
வைத்திருக்கிறது உன் நினைவுகள் ....!

அறை முழுவதும்  நிறைந்து கிடக்கும் 
அமைதியை அறுக்கும் 
கடிகாரத்தின் முட்களைப்போல
எப்போதும் இசைத்துக்கொண்டிருக்கிறது 
உன் மௌனங்கள் ....!

இருளை விரட்டும் 
மெழுகுவர்த்தியின் வெளிச்சம் போல் 
உறக்கத்தை விரட்டி 
உட்கார்ந்து விடுகிறது 
கண் வழி புகும் உன் கனவுகள் ...!

யாருமற்று தவிக்கும் தனிமையில் 
என்னோடு பேசியபடி 
நிழலாய் கைகோர்த்து நடக்கிறது 
உன் விரல்கள் ...!

தேனில் நனைந்து 
பூக்களில் தவழ்ந்து 
காதுக்குள் வந்து குதிக்கிறது 
காற்றில் மிதந்து வரும் 
 உன் குரல்கள்...!

என் வாழ்க்கைப்  புத்தகத்தின் 
எல்லா பக்கங்களிலும் 
பிழையில்லாமல் எழுதப்பட்டிருக்கிறது 
உன் பெயர் ....!

நேசிக்கவும் வாசிக்கவும் 
நானிருக்கிறேன் .....
காதல் தொட்டுக்கொண்டே இருக்கும் 
தூரத்தில் நாம் இருப்போம்...!


No comments:

Post a Comment