14 July 2017

டெண்ட் கொட்டாய்


வார இறுதி  விடுமுறையில் சினிமாவுக்கு போக அலுவலகத்தில் இருந்தபடியே டிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தான் நண்பனொருவன். எந்த வரிசையில் இடம் வேண்டும், கூட வரும் நபர்களின் எண்ணிக்கை, இடைவேளையில் கொறிக்க வேண்டியவை என ஒரு பெரும்தொகை கொடுத்து எல்லாம் தேர்வுசெய்துவிட்டான். உட்கார்ந்த இடத்திலிருந்தபடியே எல்லாம் கிடைத்தது. டிக்கெட் கிடைத்த ஆவலில் அவன் புன்முறுவல் செய்ய என் நினைவுகளின் படச்சுருள் பின்னோக்கிச் சுழன்று நான் விபரமறிந்து பார்த்த "முதல்  படத்தில்" போய் நின்றது.

பவானி வடக்குப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது குரங்குளின் வாழ்க்கையைப்பற்றிய ஒரு "டாக்குமெண்ட்ரி" படத்துக்கு கூட்டிப்போவதாகவும் அதற்கு ஒவ்வொரு மாணவனும் ஒரு ரூபாய் கொண்டுவர வேண்டுமெனவும் அறிவிப்பு வந்தது. எனக்கு வாரம் முழுவதும் சேர்த்தே ஒரு ரூபாய் கிடைக்காது இதில் ஒரே நாளில் ஒரு ரூபாயா என விழிபிதுங்கி எப்படியோ போராடி வீட்டில் ஒரு ரூபாய் வாங்கி என் பெயரையும் சினிமாவுக்கு வருபவர்களின் வரிசைப்பட்டியலில் இணைத்துவிட்டேன். கண்களுக்குள் கனவாய் நிறைந்திருந்த அந்த நாளும் வந்தது. பெயர்பட்டியல் படித்து வரிசையாய் நிற்கவைத்து பள்ளியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுள்ள ஒரு “டெண்ட் கொட்டாய்க்கு” அழைத்துப் போனார்கள்.

அப்போது பவானி வர்ணபுரத்தில் இருந்த "சங்கமேஸ்வரி திரையரங்கம்" என்று எல்லோராலும் அறியப்பட்ட டெண்ட் கொட்டாயில்  பரந்து கிடந்த மணற்பரப்பும் மரப்பலகை பெஞ்சுமாய், ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் நடுவில் நேர்க்கோடு போல ஒரு சின்ன சுவரால் பிரித்து வைத்திருந்தார்கள். பெரிய வெள்ளைத்திரையை கண்களுக்குள் வாங்கியபோது அது அந்த வயதுக்கான தேவலோகமாகவே தெரிந்தது. அப்போது கல்யாணமண்டபம், கோவில்கள், அரசு மருத்துவமனை தாண்டி நான் பார்த்த மிகப்பெரிய கூடாரம் அதுதான். எப்போதும் திரையரங்கின் வெளியே கட்டி இருக்கும் மிகப்பெரிய ஒலிபெருக்கியில் "விநாயகனே வினை தீர்ப்பவனே" பாடல் போடுவார்கள் அது முடிந்தவுடன் படம் போடுவார்கள்.  இந்த பாடல் ஒலிபரப்புவதை வைத்தே அப்போதைய நேரத்தை தெரிந்துகொண்டவர்களும் உண்டு.
காட்டில் வாழும் குரங்குகளை வேட்டையாட வருபவர்களிடமிருந்து தன் குட்டியை  காப்பாற்ற உயர்ந்த மரத்தின்மீது ஏறும் தாய்க்குரங்கு ஒரு கட்டத்தில் அந்த குட்டியை தவறவிடும், அந்த குட்டி குரங்கு ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லும்போது தாய்க்குரங்கு அதை எப்படி காப்பாற்றுகிறது என்பதை அழகாக சொல்லி இருப்பார்கள். சிறுவயதில் பார்த்த அந்த படம் நினைவுகளில் பசைபோல ஒட்டிக்கொண்டது. இடைவேளையில் பெரிய கூடையில் முறுக்குகளும், சோளப்பொரியும் சுமந்த ஒருவர் இருக்குமிடம் தேடிவந்து விற்கும் வாசம் இப்போதும் நாசிகளில் நுழைகிறது. இன்று எத்தனை பெரிய மால்களில் குளுகுளு வசதியோடு குஷன்கள் வைத்த சோபாவில் அமர்ந்து பல படங்கள் பார்த்துவிட்ட போதிலும்கூட கால்களில் மண்துகள்கள் குறுகுறுக்க மண்ணால் மேடை அமைத்து அதில் அமர்ந்து கண்கள் விரிய வியந்து பார்த்த அந்த முதல் படத்தின் பிரமிப்பை இப்போது இருக்கும் எந்த தொழில்நுட்பமும் கடுகளவும் கொடுத்துவிட முடியாது.

பத்து வருடங்களுக்கு முன்னாள் பவானி ராயல் தியேட்டரில் படம் பார்க்காதவர்களே இல்லையென்று சொல்லலாம். இப்போது புதர் மண்டி பாம்புகளும் பலவித விஷ ஜந்துக்களும் வாழுமிடமாக மாறி இருந்தாலும் ஒரு காலத்தில் யாராலும் ஒதுக்கிவிட இடமாகவும், முக்கிய அடையாளமாகவும் திகழ்ந்தது. ராயல் தியேட்டரில் தான் எத்தனை காதல்கள், எத்தனை பிரிவுகள், எத்தனை சண்டைகள், எத்தனை நட்புகள், எத்தனை சந்தோஷங்கள் இப்போது அத்தனையும் நினைவுகளின் பரண்கள்மேல் பத்திரமாய் இருக்கிறது. அப்பள பஜ்ஜியும், பன்னீர் சோடாவும் பல கைகள் மாறி காதலியிடம் சேரும்போது காதலனுக்குள் வரும் சந்தோசத்தை பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் "உயிரே" படம் ஓடிக்கொண்டிருந்த போது கூட்டம் நிரம்பி வழிய "தைய தைய" பாடலின்போது நண்பர்கள் ரயில் போல நின்றுகொள்ள என்ஜினாய் நிற்பவன் வாயில் சுருட்டோடு நிறைய  புகைவிட்டபடி பாடல் முடியும் வரை அங்குமிங்கும் ஓட, பாட்டு முடியுமுன்னே குடும்பத்தோடு வந்தவர்கள் தெறித்து ஓடிய காட்சி குறும்பாய் நிழலாடுகிறது. இப்போது விஷ்ணு தியேட்டர் என்று பெயர் மாறியிருக்கும் மோகன் தியேட்டரில் திரைக்கு முன்னால் தடுப்பு கம்பியிருக்கும் அதில் தீ என்று எழுதிய மணல் பக்கெட்டுக்கள் தொங்கிகொண்டிருக்கும் அந்த கம்பியில் ஏறி ஒருபக்கமிருந்து மறுபக்கம் போக பந்தயம் கட்டி கயிற்றில் நடப்பது போல் நடந்து விளையாடிய நாட்கள் பால்யத்தின் வரம்.  படம் போடுவதற்குமுன் திரைக்கு முன்னால் இருக்கும் பெரிய ஸ்கிரீன் முனைகளில் விளக்கெரிந்த படி மேலெழும்பும் அதிசயத்தையும் அதில் நெக்குருகி நெகிழ்ந்து கிடந்த தருணங்களையும் இந்த தலைமுறை பார்க்க வாய்ப்பு மிகக்குறைவு.

மெத்தகொட்டாய் என்று செல்லமாய் சொல்லப்படும் RAS தியேட்டரில் பல ரஜினி-கமல் படங்கள் மிகப்பெரிய கட்டவுட்டுகளோடும் பெரியபெரிய மாலைகளோடும் பார்த்த நாட்கள் மறக்கமுடியாதவை, இங்கு கிடைக்கும் முட்டை போவண்டாவிற்க்காகவே பலமுறை அடம்பிடித்து வந்ததுண்டு. இதை ஒட்டி இருக்கும் லட்சுமி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியேறுவதற்குள் வண்டிகளை வெளியே எடுக்க படும் சிரமம் இப்போது இருக்காது என நம்பலாம். காதலுக்கு மரியாதையும், WHO AM I? படங்களும் வந்தபோது பல ஞாயிறுகளின் சாயங்காலங்கள் கெளரி தியேட்டரில் விசில் சத்தங்களிலும் கைத்தட்டல்களிலும் நிறைந்தது. காதலர் தினம் பாடல்கள் வந்தபோதே துளிர்த்த கற்பனைகள் அந்த படத்தை KON  தியேட்டரில் பார்த்தபோது முழுமையடைந்து. டிப்ளமோ வாழ்வின் கடைசி தேர்வை முடித்த ஒரு வெள்ளிக்கிழமை காலையில் முருகன் தியேட்டரில் வெளியானது கில்லி படம், மதிய காட்சிக்கு பார்த்த அதுதான் அந்த தியேட்டரில் கடைசி படம். இப்போது அந்த இடம் வீடுகள் கட்ட தயாராகி விட்டது. தியேட்டரில் கேண்டீன் இருந்த இடத்தில் பலவருடங்கள் டாஸ்மாக் இருந்தது. மிகக்குறுகிய சந்துக்குள் போய் டிக்கெட் வாங்கும் சரஸ்வதி தியேட்டரில் பார்த்த பல ஜாக்கிஜான் படங்கள் நினைவுகளை விட்டு நீங்காதவை. வித்தியாசமான வடிவமைப்பில் நாற்காலிகளும் மாடிப்படிகளும் கொண்ட சரவணா தியேட்டர் அதன் அழகுக்காகவே நிறைய கூட்டம் சேர்த்தது காலச் சூழ்நிலையால் இப்போது அது பள்ளிக்கூடமாய் மாறியிருக்கிறது. பல பலான படங்களை மட்டுமே வெளியிடும் ராஜம் தியேட்டர் இப்போது நாகரீகம் கருதி பல நல்ல படங்களை மட்டுமே வெளியிடுகிறது.

மனித வாழ்வில் சினிமா என்பதையும் அது சார்ந்த கொண்டாட்டங்களையும் அத்தனை எளிதாய் ஒதுக்கி விட முடியாது. இப்போதும் கூட ஊருக்கு போகும்போதெல்லாம் நண்பர்களோடு இரவுக்காட்சிக்கு போவதுண்டு என்னதான் பெங்களூரு, சென்னை போன்ற பெரு நகரங்களில் பெரிய பெரிய தியேட்டர்களில் சினிமாக்கள் பார்த்தாலும் கூட சொந்த ஊரில் சிறு தியேட்டர்களில், மறக்க முடியா பழைய நினைவுகளின் மடியில் அமர்ந்தபடி நண்பர்களோடு படம் பார்ப்பது அலாதியானது. காலத்தின் வளர்ச்சிகளாலும், வரிகளின் கொடுமைகளாலும் இனி வரும் காலங்களில் தியேட்டர்கள் இல்லாமல் கூட போகலாம் அப்போது நினைத்துப்பார்ப்பதற்கும் சொல்லி மகிழ்வதற்கும் சில கதைகளை இந்த டெண்ட் கொட்டாய்களும் தியேட்டர்களும் கொடுத்திருக்கின்றன என்பது மறுக்கமுடியாத, மறக்கமுடியாத உண்மை.

No comments:

Post a Comment