பிரியங்களின் ஒரு துளியையோ
அன்பின் ஒரு துகளையோ
நம்மீது தெளிப்பவர்களைக்
கொண்டாடும் மனதுக்கு புரிவதேயில்லை
சிலசமயம் அவர்களின் முகங்கள்
நிறம் மாறுமென்பதை
பழகவும் முடியாமல்
விலகவும் முடியாமல்
தவிக்கும் தருணங்களில்
பழைய சொற்களின் மேல் விழுந்த
நம்பிக்கை மெல்ல நழுவும்
மகிழ்வைக் கொண்டாடிய நாட்களை
சந்தேகத்தின் துருப்பிடித்த நேசமொன்று கிளறிப்பார்க்கும்
பிரமிப்பின் உச்சியில் இருந்த கணத்தை
வெறுப்புகளின் அதள பாதாளத்தில்
போட்டு மூடச்சொல்லும்
ஒரு வரியோ
ஒரு வார்த்தையோ
சுட்டிக்காட்டும் நிகழ்வை
சொற்களின் கூர்மை சோதிக்கும்
மனம் திருந்தி
தவறுகள் திருத்தி
திரும்பி வந்து ரோஜாக்களோடு கைகுலுக்கும் பொழுதில்
முட்கள் மட்டுமே ஆழமாய் இறங்கும்....!
No comments:
Post a Comment