05 February 2017

கிளையிலிருந்து வேர்வரை

பள்ளிப் பருவத்தின் போது படிப்பின் மீது அத்தனை ஆர்வமிருக்கவில்லை ஏதோ ஒரு கட்டாயத்தின் பேரில் நாட்களைக்கடத்த பொசுக்கென படிப்போடான தொடர்பு துண்டித்துப்போக நீண்ட நாட்களுக்குப் பிறகு படிப்பின் நிறம் மணம் திடம் மூன்றும் விளங்கியது. சிப்ஸ் சாப்பிட்ட காகிதம் பொரி, போண்டா வாங்கி சாப்பிட்ட காகிதங்களில் உள்ள எழுத்துக்களை வாசிக்க தொடங்கிய போது எழுத்துக்களும் என்னை நேசிக்கத் தொடங்கியதாகவே நினைக்கிறேன்.
எழுத்துக்களின் மீதான நேசம் நிறைய வாசிக்க சொன்னது. வயதின் கோளாறு நிறைய காதல் சார்ந்தே வாசிக்க வைத்தது. வைரமுத்துவும் பா.விஜய்யும் காதலையும் தாண்டி சில விஷயங்களை வாசிக்க தந்தார்கள் அண்ணண் அறிவுமதி நட்பை வாசிக்க தந்தார். இப்படி பலதரப்பட்ட எழுத்தாளர்கள் சினிமாவின் பின்னணியில் இருந்தவர்கள் மிக எளிதாய் படிக்க கிடைத்தார்கள் இவர்களையெல்லாம் தேவ தூதர்களாக நினைத்து போதுதான் இதற்கு குறைவில்லாத சொல்லப்போனால் நிஜத்தை சுமந்து வரலாறாய் மாறிக்கொண்டிருக்கும் மனிதர்களை எழுத்துக்களின் வழியே எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள் சில எழுத்தாளர்கள் அந்த வகையில்
#கதிர் அண்ணா மிக முக்கியமானவர்.

ஷான் அண்ணா,ராஜு முருகன், மாரி செல்வராஜ், கார்த்திக் புகழேந்தி, வக்கீல் பாலமுருகன் என இன்னும் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் எளிய மனிதர்களை பற்றி எழுத அவர்களை இன்னும் அழகாக்கி நம் முன் கொண்டுவந்த நிறுத்த.கதிர்அண்ணாவின் #கிளையிலிருந்துவேர்வரை படித்த போது ஒரு சிறந்த புத்தகத்தை படித்த ஆத்ம சந்தோசம் கிடைத்தது அத்தனை புதிய வார்த்தைகள் அத்தனை புதிய மனிதர்கள் அந்த புத்தகம் முழுவதும் நிரம்பி இருந்தார்கள்.

இதோ #கசியும் மெளனத்திலிருந்து
உருண்டு வந்த வார்தைகளால் ஒரு #பெயரிடப்படாதபுத்தகம்,
அன்பை, அழகியலை, வாழ்வை, நம்பிக்கையை சுமந்து பயணிக்கும் #உறவென்னும்திரைக்கதை என்னும் இந்த இரண்டு புத்தகங்கள் மனதின் ஆழத்தையும் வீட்டு புத்தக அலமாரியையும் அலங்கரிக்க போகின்றன. எத்தனையோ வெளியீட்டு விழாக்களுக்கு சென்றிருந்தாலும் இந்த புத்தக வெளியீட்டு விழா மிகுத்த ஆவலையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த சில நாட்களாக கதிர் அண்ணாவைப்பற்றிய நிறைய பதிவுகள் வாழ்த்துகள் முகநூல் போன்ற ஊடகங்களில் வருவதை பார்க்கும் சிலர் அப்படியென்ன பெரிதாக எழுதுகிறார் என நினைக்கலாம் அவர்கள் இவரின் எழுத்துக்களை ஒரு முறை வாசித்தால் அவர்களையும் வசியம் செய்யும் வாய்ப்புகள் அதிகம்.
இது தனிப்பட்ட முறையில் ஒருவரை புகழ்வதற்கல்ல, கால மாற்றத்தில் மறந்துபோன உறவுகளை பிரிந்துபோன காதலை தொடர முடியாத நட்பை மனதின் ஆழத்தில் புதைந்து போன சில முகங்களை ஒரு சொல்லில் ஒரு வரியில் மீட்டெடுத்து வந்து கண்முன் நிறுத்தும் ஒரு எழுத்தாளருக்கான ஒரு எளிய மனிதனுக்கான சிறு பாராட்டு அவ்வளவே.
எனக்குள் ஒரு கவிஞனோ எழுத்தாளனோ இருக்கிறான் என்பதை என்னால் நிச்சயம் சொல்ல முடியாது, எளிய மனிதர்களை அவர்களின் எழுத்துக்களை நேசிக்கும் தொடர்ந்து வாசிக்கும் ஒரு வாசகன் எப்போதும் இருக்கிறான். என் போன்ற வாசகர்களை கதிர் அண்ணா போன்றவர்கள் எப்போதும் திருப்திபடுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையோடு அள்ள அள்ள குறையாத அன்பையும் வாழ்த்துக்களையும் சொல்வதைத்தவிர வேறொன்றுமில்லை என்னிடம்.


No comments:

Post a Comment