05 February 2017

பொம்மை

நீ
நொண்டி விளையாடிக் கொண்டிருந்தபோது 
சிதறிய உன் அழகையெல்லாம் அள்ளிவந்து 
பொம்மையொன்று செய்தேன்

நீ
கண்ணாமூச்சி ஆடும்போது உன்
கண்களில் கட்டிய துணியை 
அந்த பொம்மைக்கு ஆடையாக்கினேன்

நீ
பல்லாங்குழி விளையாடிய போது
குழிகளில் நிரம்பிய உன் வெட்கத்தை 
அந்த பொம்மைக்கும் ஊட்டி விட்டேன்

நீ
ஊஞ்சலாடிய மரத்தடியில்
விழுந்து கிடந்த உன் சிரிப்புகளை
கொலுசுகளாக்கி பொம்மைக்கு
மாட்டி விட்டேன்
உன்னுடைய எல்லாவற்றையும்
எடுத்துக்கொண்டு நீயாகவே 
மாறிப்போயிருந்த அந்த பொம்மை

இப்போது
என்னை பொம்மையாக்கி
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது ...!


No comments:

Post a Comment