14 December 2010

சீக்கிரம் வந்துவிடு ......!


மீண்டும்
உன் வருகைக்காக காத்திருக்கிறது
என் வீடு ......

முதல் நாள் நீ வந்த போது
வீட்டுக்குள் பரவிய வெளிச்சம்
இன்னும் இறைந்து கிடக்கிறது
எல்லா அறைகளிலும் ...

உன் மெளனங்கள்
அலைந்து கொண்டிருக்கிறது
நான் செலவழித்த வார்த்தைகளைத்தேடி.....

நான் வீட்டுக்குள் நுழையும்போதெல்லாம்
என்னை வரவேற்பது
நீ விட்டுச்சென்ற
வெட்கங்கள் தான் ....

நீ அணிந்து அழகு பார்த்த
என் சிகப்பு கலர் சட்டை
சிறைபிடித்து வைத்திருக்கிறது
உன் வாசங்களை .....

நீ முத்தமிட்ட என் புகைப்படம்
பொக்கிசமாய் வைத்திருக்கிறது
உன் உதட்டு ஈரங்களை.....

நீ பேசிய ஒரு சில வார்த்தைகளும்
உட்கார்ந்துகொண்டு எழுந்து வர மறுக்கிறது
என் வீட்டு அலமாரியில் இருந்து ...

நீ முகம் பார்த்த கண்ணாடி
உன்னை முழுதாய் படம் பிடித்து வைத்துக்கொண்டு
அடம் பிடிக்கிறது தரமாட்டேன் என்று ...

வேண்டுமென்றே நீ மறந்து விட்டுப்போன
கைக்குட்டை அழகாய்
அலங்கரித்துக்கொண்டிருக்கிறது
என் அலமாரியை .....

இன்னும் திகைப்பிலிருந்து
மீளாமல் இருக்கிறது
நீ உதடு வைத்து குடித்த
தேநீர் கோப்பை....

நீ படித்த என் கவிதை புத்தகம்
உன் பெயர்தான் கவிதை என்று
புலம்பிக்கொண்டிருக்கிறது ....

உன் வெட்கங்களோடும்...
உன் வாசனைகளோடும் ...
வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறேன்....

நீ எப்படி வருவாய் .....
எப்போது வருவாய்....என்று
எதிர்பார்ப்பதில்லை நான் ......

எப்படியும் வந்து விடுவாய் என்ற
நம்பிக்கை இருப்பதால் ......

இருந்தாலும் ......

சீக்கிரம் வந்துவிடு ....!

No comments:

Post a Comment