13 April 2017

மெளனத்தின் சத்தம்

அன்பின் அடுக்குகளில்
என்னை இன்னும் இன்னும்
உயர்த்துகிறது படைப்பு ...!

மார்ச் மாதத்திற்கான
"மின் இதழ் - 11" (01.04.2017)இல்
எனது கவிதையும்

என் கவிதையை தேர்வு செய்த
படைப்பு குழுவுக்கு
அளவில்லா நன்றிகளும்
அழகான வடிவமைப்புக்கு
வற்றாத வாழ்த்துகளும் ...!
***************************
ரகசியங்கள் நிறைந்த
ராத்திரியின் நடுநிசியில்
அடர் மெளனத்தை குலைக்கிறது
கோடங்கியின் குடுகுடுப்பை சத்தம்

இரண்டு வீதி தாண்டி
நீளும் ஒரு குறுகிய சந்துக்குள் கேட்கிறது
ஊளையிடும் நாயின் சத்தம்

வெக்கை நிமித்தமாய்
வெளித்திண்ணையில் புரண்டு படுக்கிறது
ஒரு பெரியவரின் இருமல் சத்தம்

முக்கிய சாலையின் வழியே
சுழலும் விளக்கோடு வேகமாய் விரைகிறது
அவசர ஊர்தியின் அபாயச் சத்தம்

இரைதேடும் இரவில்
பறந்தபடியே பயமாய் கேட்கிறது
ஒரு ஆந்தையின் அலறல் சத்தம்

பாதிக்கதவு சாத்தியபடி
விற்கப்படும் தேநீர்க் கடையிலிருந்து சூடாய்க் கசிகிறது
இளையராஜாவின் பாட்டுச் சத்தம்

முழுதாய் மூடிய கதவுகளின்
சாவித் துவாரத்தின் வழியே
காற்றில் கசிகிறது ஒரு
முத்தச் சத்தம்

இத்தனையும் மீறி இப்போதும்
யாராவது வருவார்களென்ற நம்பிக்கையில் ஒலிக்கிறது
குல்ஃபி ஐஸ் விற்பவனின் சைக்கிள் மணிச்சத்தம் ...!



No comments:

Post a Comment