13 April 2017

தவறிய அழைப்பு

ஆழ்ந்த உறக்கத்தின்
அர்த்த ராத்திரியில்
கைப்பேசிக்குள் விழுந்து கிடந்தது
ஒரு தவறிய அழைப்பு

நடுநிசியின்
பெரு மெளன அமைதியிலும்
என் செவிப்பறைக்கு எட்டாத நொடியில்
அது தன் சத்தத்தை
நிறுத்தியிருக்கக்கூடும்

சங்கீதம் வழிந்தபடி
எழுப்பிய அலாரம்
அரைக்கண்ணில் பார்க்க வைத்தது
அந்த தவறிய அழைப்பை

விபரங்கள் ஏதுமற்ற
அந்த புது எண்ணின் மீது
குவியும் கவனத்தில்
தொலைந்துபோன நட்பும்
உடைந்துபோன உறவுகளும்
வந்து போகின்றன

ஆர்வத்தோடும் அன்போடும்
திருப்பி அழைத்தபோது
"நீங்கள் அழைத்த எண் தற்போது
அணைத்து வைப்பட்டிருக்கிறதென" வரும்
பதிவுக்குரலால்

நீளும் சந்தேகத்தையும்
குமுறும் குறுகுறுப்பையும்
பெருகும் பயத்தையும்
எதைக்கொண்டு நிரப்புவது ...???

#குறிப்பு: புலிகேசி படத்தில் வரும் "ஒரு புறாவுக்கெல்லாம் போரா? பெரிய அக்கப்போராகவல்லவா இருக்கிறது" என்பதுபோல்...
"ஒரு மிஸ்டு காலுக்கெல்லாம் கவிதையா ..?" எனக் கொதிப்பவர்களுக்கு ....
"வேற வழியில்லை போற போக்குல அப்டியே படிச்சிட்டு போங்க என்ன இப்போ....!"


No comments:

Post a Comment