29 February 2020

சின்ன ஊட்டியில் பெரிய ஓட்டம்


வாழ்க்கை முன்வைத்திருக்கும் சவால்களை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் கொஞ்ச நாட்களாக கவிதைகள், கட்டுரைகள், தினசரி நம்பிக்கை வரிகள் (MyQuotes), என பலவற்றை குறித்து எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறேன். ஆனாலும் மிக முக்கியமான சில நிகழ்வுகளை அவ்வப்போது பதிவு செய்துவிடுதல் நலம் எனக்கருதி "குடியரசுதின மாரத்தான், காதலர் தினம், கல்யாணநாள்" என எழுதியதைத் தொடர்ந்து அந்த வரிசையில் ஏற்காடு மாரத்தான் பற்றியும் எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. காரணம் அதுவொரு மறக்க முடியாத அனுபவம்.
--------------------------------------------------------------------
ஏற்காடு மாரத்தான் பற்றி நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதெல்லாம் எனக்கும் ஆசையாக இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் கலந்துகொள்ள முடியுமா முடியாதா என்பது பற்றிய ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. சரி பதிவு செய்யும் காலம் முடிவடையும் முன் பதிவு செய்து வைப்போம், அப்பறம் போக முடியலனா விதின்னு நெனைச்சி விட்டுடுவோம்னு தான் பதிவு செய்தேன். பிப்ரவரி பிறந்ததுமே கட்டாயம் போக முடியாதுன்னு ஒரு சூழல் உருவாச்சி, சரி அடுத்த வருசம் பார்த்துக்கலாம்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கும் போது தான், ஆழ்மனசு ஒன்னு சொல்லுச்சி. "இப்போ இருக்கும் இந்த சூழல் நாளைக்கோ, அடுத்த வாரமோ, அடுத்த மாதமோ கூட மாறிவிட வாய்ப்புண்டு, ஆனால் இந்த மாரத்தான் மறுபடியும் அடுத்த வருஷம் தான் வரும்." நான் ஆழ்மனசு சொன்னதை கேக்க முடிவு பண்ணிட்டேன், சென்னையிலிருந்து ஒருநாள் முன்னாடியே ஊருக்கு கிளம்பிட்டேன்.

சனிக்கிழமை மதியம் ஈரோட்டில் இருந்து ஆருத்ரா ரமேஷ் அவர்களுடைய காரில் நான், ரமேஷ், லதா அக்கா, மைதிலி மேடம், அவங்க பையன் ஸ்ரீகாந்த் ன்னு எல்லோரும் ஒருவழியா 4 மணிக்கு கிளம்பினோம். அதே நேரத்தில் கிருத்திகாவும் சக்திவேல் சாரும் பவானில இருந்து கிளம்பினார்கள். சங்ககிரி டோல் கேட்டில் காபி குடிக்க நிறுத்தும் போது நாங்கள் அனைவரும் சந்தித்துக்கொண்டு ஒன்றாக புறப்பட்டு சேலம் நோக்கி போனோம். போகும்போதே நேரம் ஆகிவிட்டபடியால் ஜெயஸ்ரீ கிட்ட சொல்லி எங்களுடைய BIB களை வாங்கி வைக்க சொல்லி இருந்தோம். 20 கொண்டை ஊசி வளைவுகளையும் கடந்து, கூகுள் மேப் காட்டிய வழியில் பயணித்து ஒருவழியாக மாரத்தான் நடக்கும் ரெட்ரீட் மைதானத்தை அடைந்தோம்.

BIB வழங்கும் இடத்தில் நம்ம U2 குழுமத்தின் ஜாம்பவான்கள் நிறைய பேரை பார்க்க முடிந்தது, முகநூலின் வழியாக என்னை அறிந்தவர்கள் தானாக வந்து பேசி அறிமுகமாகி அந்த பனி நிறைந்த இரவை கதகதப்பாக்கினார்கள். மனோகரன், சிந்துமனோகரன், பூங்கொடி மேடம்,  அவங்க வீட்டுக்காரர், மகேஸ்வரி மேடம், வித்யான்னு இன்னும் நிறைய பேரிடம் பேசிவிட்டு அப்படியே டீ ஷர்டை போட்டு அளவு பார்த்து, bib எண்ணில் பேரை சரிபார்த்து எல்லோரிடமும் விடைபெற்று சாப்பிட போலாம்னு பார்த்தா U2 மக்கள் அனைவரும் மைதானத்திற்கு வரவும் ன்னு அறிவிப்பு. அங்க போய் பார்த்தால் U2 மூலமாக பதிவு செய்து 2019ல் 100 நாட்கள் ஓட்ட சவாலை முடித்தவர்களுக்காக அழகான மெடலும், அருமையான சான்றிதழும் இருந்தன. நான் 100 நாள் சவாலை ஆரம்பித்து இடையில் உடல்நலம் சரியில்லாமல் நிறுத்தியிருந்தேன். ஆனாலும் நம்ம மக்கள் வாங்கும் போது நானே வாங்குவதாக உணர முடிந்தது. சில பல போட்டோக்களுக்கு பிறகு சாப்பிட போனோம். நாங்கள் சாப்பிட்டு கொண்டிருக்கும் வேளையில் துரை சகோ, கோபி மற்றும் அவர்களோடு அவர்களின் நண்பர்களும் வந்திருந்தனர். சாப்பிட்டு முடித்த பிறகு கேசவன் சார் கேங் வந்தது, அவர்கள் அனைவரையும் பார்த்து ரொம்பவே ஆச்சரியப்பட்டேன் வயது, பயணம், நம்பிக்கை, தொடர் மாரத்தான்கள், எப்போதும் புத்துணர்ச்சி, சின்ன பசங்களே தோற்றுப்போய்விடும் அளவு காமெடி சென்ஸ் னு அதற்கு பல காரணங்கள் உண்டு. பிறகு எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைகளை அடைந்தோம். (ஆனாலும் இந்த மூர்த்திதான், கொண்டு வந்த லக்கேஜ் லாம் ரூம்ல வெச்சிட்டு போலாம்னு சொல்லியும், அதற்கு ரொம்ப தூரம் போகணும் லேட் ஆகும்னு சொல்லி சொல்லி எல்லா இடத்துக்கும் அந்த லக்கேஜ்களை தூக்க வெச்சிட்டாப்பல, அப்பறம் பார்த்தா அவ்ளோ பக்கத்துல தான் ரூம்ஸ் இருக்கு.)

நாளைக்கு நேரமா எந்திரிக்கணும் அதனால சீக்கிரமா தூங்கணும்னு எல்லோரும் அவங்க அவங்க ரூமை ரெடி பண்ணிட்டு இருந்தாங்க, ஆனா நம்ம கால் தான் சும்மா இருக்காதுல்ல, ரூம்ல எல்லாத்தையும் வெச்சிட்டு, அப்படியே ஒருநடை கீழ வரைக்கும் போய்ட்டு, என்னென்ன எங்கெங்கே இருக்குன்னு பார்த்துட்டு வந்தோம். கார்த்தியும் நந்தகுமாரும் அப்போதான் வந்தாங்க. நான், ரமேஷ், துரை, நந்தகுமார் ஒரு அறையிலும், கோபி, கார்த்தி, கோபியின் நண்பர்கள் ஒரு அறையில் என எதிர் எதிரில் 8 பேரும் செட்டில் ஆனோம், ஆனா 10 மணிக்கு மேல ஆகியும் தூக்கம் வரல, ரொம்ப நேரமா கதை பேசி கலாய்த்து, சிரித்து எப்படியோ தூங்கிப்போனோம். என்னத்த நினைச்சிட்டு படுத்தனோ தெரியல எனக்கு 2 மணிக்கே தூக்கம் தெளிஞ்சிருச்சி. சரி நாம எழுந்தா மத்தவங்களுக்கும் தூக்கம் போய்டும்னு அப்படியே படுத்திருந்தேன். நந்தகுமார் 25கிமீ ஓட்டத்துக்காக 3 மணிக்கு மேல எழுந்தார், நானும் அவர்கூட எழுந்து சும்மா அப்படியே வெளிய வந்து பக்கத்து ரூம்ல பார்த்தா 50கிமீ ஓடற அல்போன்ஸ் ஒரு மணப்பெண் ரெடி ஆக எடுத்துக்கொள்ளும் பாங்கைப்போல தனக்கு வேண்டியதை ஒவ்வொன்றாக எடுத்துவைத்து ரெடியாகிக்கொண்டிருந்தார். அப்பறம் ஒவ்வொரு நண்பர்களாக எழுந்து ரெடியாக, கடுங்குளிர் எங்களுக்கு முன்பாக ரெடியாகி வெளியே காத்திருப்பது தெரியாமல், ஸ்டார்டிங் பாயிண்டை நோக்கி (நடக்க) நடுங்கத்தொடங்கினோம் அல்லது தொடங்கி நடுங்கினோம்.

எங்களுக்கு முன்னால் மைதானத்தில் கூடியிருந்தவர்கள் ஸ்ட்ரெச்சஸ் பண்ணிட்டு இருந்தாங்க நாங்களும் ஐக்கியமாகி கொஞ்சம் பண்ணிட்டு, குருஜிக்களோடு போட்டோஸ் எடுத்துட்டு சரியாக 6 மணிக்கு 12.5கிமீக்கான ஓட்டம் துவங்கியது. அதற்கு முன்னால் ஒவ்வொரு மணிநேர இடைவெளியில் 50கிமீ ஓட்டமும், 25கிமீ ஓட்டமும் தொடங்கி அவர்கள் தங்கள் பாதி தூரத்தை கிட்டத்தட்ட கடந்திருந்தார்கள். இந்த ஓட்டம் தொடங்குவதற்கு முன்னால் பாலமுரளி சகோவிடம் கேட்டது "எவ்ளோ நேரத்துல முடிக்கணும்?" அவர் சொன்னது "நாங்க ஈவெண்ட் முடிச்சிட்டு சாயங்காலம் இங்க இருந்து கிளம்பரத்துக்குள்ள வந்தாக்கூட போதும்". 2019 ஜனவரியில் சென்னை மாரத்தானில் 10கிமீ ஓடியதும், 2020 ஜனவரியில் குடியரசு தினம் அன்று ஈரோட்டில் விர்ச்சுவல் மாரத்தனாக 25கிமீ ஓடியதும் தான் எனது மாரத்தான் அனுபவங்கள். முறையாக சொல்ல வேண்டுமெனில், இது எனக்கு இரண்டாவது மாரத்தான் முதல் மலை ஓட்டம். சமதளத்தில் ஓடி கொஞ்சம் அனுபவம் இருந்தாலும், மலை ஓட்டம் பற்றி எந்த அனுபவமும் இல்லை இதற்கான முறையான பயிற்சியும் போதுமான அளவு இல்லை என்பதால் அத்தனை கேள்விகள், மற்றும் 25கிமீ தூரத்தை 4 மணி நேரத்தில் தான் முடித்தோம் இது அதில் சரிபாதி தான் ஆனாலும் மலை ஓட்டம், எப்படியும் 3 மணி நேரத்திற்குள்ளாவது முடித்துவிடலாம்னு எனக்கு நானே சமாதானமும் நம்பிக்கையும் சொல்லிக்கொண்டே ஓட இல்ல.. நடக்கத் தொடங்கினோம் காரணம் முதல் அரை கிமீ அவ்ளோ பெரிய மேடு கூடவே கும்மிருட்டு (கும்முரு டப்பருன்னு படிக்க கூடாது).

மேடு கடந்து, சமதளத்தில் ஓடி திடீரென பள்ளத்தில் இறங்கி, மெல்ல மெல்ல விடிந்த அழகான விடியலை ரசித்தபடி, காதுகளுக்குள் இறக்கும் குளிரின் சிலிர்ப்பை அனுபவித்து, இரண்டாவது கிமீ ல் ஆரஞ்சு சுளைகள், கடலமிட்டாய், எனர்ஜி ட்ரிங்க் ன்னு குடிச்சி U டர்ன் போட்டு வந்த வழியே ஓடி, வேற பாதைக்கு திரும்பி வழியெங்கும் சோர்ந்து நடப்பவர்களை உற்சாகப்படுத்தி, நாங்கள் சோர்ந்துவிடும் போது கைமாற்றப்படும் உற்சாகங்களை பெற்று, உதவி மைய நண்பர்களின் புதிய அறிமுகங்கள் சுமந்து, ஏற்காடு ஏரி மற்றும் அழகான இடங்களில் நின்று  படங்கள் எடுத்து, குளிருக்கு இதமாய் டீ/காபி  குடித்து, மீண்டும் மீண்டும் ஓடி தொடங்கிய இடத்தை அடையவும் 12.5 கி.மீட்டரை முடிக்கவும் இன்னும் 500 மீட்டர்கள் தான் என ஸ்ட்ராவா சொல்லியதை "நம்பி" தொடங்கிய இடத்தின் அருகே வந்த போது வேறு பாதைக்கு திருப்பிவிடப்பட்டோம். ஒருவேளை இது 25கிமீ ஓடும் பாதையாக இருக்குமோ என சந்தேகம் வர, எனக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தவர்களை கேட்டால் இது 12.5க்கான பாதை தான் என்பதை உறுதி செய்தார்கள். சரி இவ்ளோ தூரம் வந்துட்டோம் இன்னும் கொஞ்சம் தான் என ஒரு பள்ளத்தில் இறங்கி ஒரு மேட்டில் ஏறினால் முடிக்கும் இடம் கண்ணுக்கு தெரிந்தது, அதைவிட பேரழகாக ஏற்காடு மலையிலிருந்து கீழே பார்த்த அந்த இடம் அத்தனை அழகு. ஒருவழியாக முடிக்கும் போது 13.3கிமீ தூரமும் 1.50 மணி நேரமும் காட்டியது. ஒருவேளை சிலருக்கு ஸ்ட்ராவாவில் எங்கியோ தவறு நடந்திருக்கலாம். எண்ட் பாய்ண்ட்டில் கழுத்தில் போடப்பட்ட மெடலில் இருந்த களைப்பெல்லாம் காணாமல் போனது.

தொடக்கத்தில் 12.5கிமீ அதுவும் மலையில் ஓடிவிட முடியுமா என எனக்குள் ஒரு சந்தேகம் இருந்தது, ஆனால் முடிவில் 12.5கிமீ ஓடியதற்கான எந்த வலியும் தெரியவில்லை. 25கிமீ தூரத்தைக் கூட தாராளமாக ஓடியிருக்கலாம் காரணம், சேலம் ரன்னர்ஸ் செய்திருந்த ஏற்பாடுகள், உதவி மையங்கள், புகைப்படக்காரர்கள், ஓட்டம் முடிந்ததும் கிடைத்த பிசியோதெரபி, ஈவெண்ட் ஒருங்கிணைப்பு, டீசர்ட், மெடல் என எல்லாமே அற்புதம்.  பாலமுரளி, ராஜ்குமார், ஜெயஸ்ரீ, மூர்த்தி, இதை இத்தனை அழகாய் நடத்தி முடித்த நண்பர்கள் மற்றும் சேலம் ரன்னர்ஸ் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகளும் நன்றிகளும். முதல் மலை ஓட்டமே மறக்க முடியாத ஓட்டமாக மாறி மனதின் ஓரத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. இனி எத்தனை மலை ஓட்டங்கள் ஓடினாலும் இந்த ஏற்காடு மலை ஓட்டம் தான் மனதில் முதலில் வந்து நிற்கும்.

ஓடி முடிச்சதும் என்னை புகைப்படங்கள் எடுக்க கூட்டிட்டு போய்ட்டாங்க அதனால நெறைய பேர்கிட்ட சரியா பேசவே முடியல, ஒருசிலரை பார்க்க கூட முடியல. நெறைய U2 நண்பர்களை சந்திக்க முடிந்தது. நெறைய புது நட்புகளும் கிடைத்தன. U2 நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து மிஸ் பண்ணின ஒரே விஷயம் ஷான் அண்ணா தான்.

இந்த மாதிரி செலவு பண்ணிட்டு, ஊர் ஊரா போய் மாரத்தான் ஓடறதால என்ன வருதுன்னு நெறைய பேர் கேக்கறாங்க அவங்களுக்கெல்லாம் சொல்றது ஒன்னுதான். புது இடங்கள், புது மனிதர்கள், புது பாதைகள், இயற்கையின் ஒரு துளி, முன்பின் அறிமுகமில்லாமல் கிடைக்கும் திடீர் நட்பு, எதையும் எதிர்பார்க்காமல் கிடைக்கும் அதீத அன்பு ன்னு எவ்வளவோ விஷயங்கள் இருக்கு அதையெல்லாம் வீட்டுக்குள்ள உக்காந்து மொபைல் நோண்டறதாலயோ, டிவி சேனல்களை மாற்றுவதாலயோ வாங்கிட முடியாது என்பதே.

இந்த ஓட்டத்திற்கு அடுத்தநாள் (17.02.2020) தான் எங்களோட முதல்வருட கல்யாண நாள். இந்த மறக்கமுடியாத ஓட்டத்தை என் மனைவிக்கும், மகனுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

---தனபால் பவானி
21.02.2020

#ஏற்காடு_மாரத்தான்
#முதல்மலைஓட்டம்
#YHU_2020
#U2_FamilyMeetAtYercaud

1 comment:

  1. அருமையான அனுபவப் பகிர்வு கவியே!


    ReplyDelete