இடம் பெயர்தல் என்பது எப்போதுமே மனதில் ஒரு நிரந்தர வலியைத்தந்துவிடுகிறது.
தாயின் கருவறையை விட்டு பூமிக்கு இடம்பெயர்வதைத்தவிர....
பள்ளிக்கூடங்களில் வகுப்புகள் மாறுவதும், கல்லூரிகளில் வருடங்கள் மாறுவதும் ஒருவகை இடம் பெயர்தல் என்றாலும் அவை அவ்வளவு வலியைக்கொடுப்பதில்லை.
பல வருடங்களாய் குடி இருந்த தெரு, ஊர் , மாநிலம் என மாறும்போது மனசு ஒரு குறிப்பிட்ட
இடத்தில் உட்கார்ந்து கொண்டு எழுந்து வர மறுக்கும்.
என் ஊரில் 15 வருடங்களாய் சொந்த வீட்டில் வாசித்துவிட்டு 15 வருடங்கள் பக்கமுள்ள தெருக்களில் மட்டுமே மாறி மாறி குடி பெயர்ந்தோம். அதனால் நெருங்கிய சொந்தங்கள் , நட்பு வட்டாரம், டீ கடை , மளிகை கடை, பரோட்டா கடை, சினிமா தியேட்டர், கோவில்கள், திருவிழாக்கள், சாமி ஊர்வலங்கள்,கரகாட்டம், பாட்டு கச்சேரிகள், சில நேர சண்டைகள்,எதிர் வீட்டு பெண்கள் , மொட்டை மாடி சாயங்காலங்கள், நூலகம், பேருந்து நிறுத்தம் என எல்லாமே கைக்குள்ளே இருப்பதாய் ஒரு உணர்வு இருந்தது.வேலை காரணமாக சென்னைக்கு இடம்பெயர்ந்த போதோ பெங்களூருக்கு இடம்பெயர்ந்த போதோ இத்தனை வலிகள் இல்லை, காரணம் விடுமுறையில் வந்து போவது அதே இடம் என்பதால்.
இப்போது இடம் பெயர்ந்திருக்கிறோம், அதே ஊர் தான் என்றாலும் அந்த 2 கீ மீ தூரம் எனக்கு சீனப்பெருஞ்சுவராய் தெரிகிறது. பழகிய எல்லாவற்றையும் தொலைத்து விட்டு புது இடத்திருக்குப்போனதாய் பொருந்த மாட்டேன்கிறது மனது. வேரோடு பிடுங்கிய மரத்தை வேறு இடத்தில் நட்டால் எப்படி வளரும்? புது இடம், புது மனிதர்கள், புது தெரு என எல்லாமே புதிதாய் இருக்கிறது.
தூக்கத்திலிருந்து எழுந்த குழந்தை அம்மாவைத்தேடுவது போல்
மிகவும் பிடித்த பொம்மையை தொலைத்த குழந்தைப்போல்
முதன் முதலாய் காதலி கொடுத்த பரிசை தொலைத்த காதலன் போல்
முதல் மதிப்பெண்ணை தவறவிட்ட மாணவனைப்போல்
கடைசி பேருந்தை தவறவிட்ட பயணியைப்போல்
பரிதவிக்கிறது மனசு பிரிந்த வந்த தெருவை எண்ணி....
எங்களுக்குப்பரவாயில்லை பைக் எடுத்தால் பத்து நிமிஷம்
சைக்கிள் எடுத்தால் இருபது நிமிடம் அந்த தெருவை அடைய....
ஆனால் அம்மாவுக்கு....?
தினமும் வாசல் தெளித்து கோலமிடும் அம்மாவை இனி அந்த வாசல் காணப்போவதில்லை..
பால்காரரிடம் இருந்து இனி அந்த அழைப்பு மணி வராது...
மொட்டை மாடி கொடிக்கம்பிகள் இனி எங்கள் துணிகளை உலர்த்தப்போவதில்லை ...
சோறெடுக்க வரும் காகம் ஏமாந்து போகுமே....
பக்கத்து தெருக்கோயில் அம்மாவுக்கு அந்நியமாகிவிட்டது...
எதிர் வீட்டு தோழிகளோடு இனி தாயம் ஆட முடியாது....
பாப்பாவுக்கு ஊஞ்சல் கட்டிய இடம் இனி எங்களுக்கு இல்லை...
பழைய பாடல் கேட்டு , பழங்கதை பேச இனி அந்த திண்ணை கிடைக்கப்போவதில்லை...
இப்படி எத்தனையோ இழப்புகள் இருக்கிறது இடம் பெயர்தலின் காரணமாக......!
வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு மாறிவிட்டோம் என்ற போதிலும்
சொல்ல முடியாத சோகங்களால் சுமையாகி இருக்கிறது மனசு....
அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வர சில காலம் பிடிக்கும்...!
==========================================================
No comments:
Post a Comment