வெளியூரில் வேலை செய்து விட்டு
விடுமுறையில்
வீடு திரும்பும்போதெல்லாம்
ஏதாவது ஒன்று மாறியிருக்கிறது ....!
வீடு புதிதாய்
வெள்ளையடிக்கப்பட்டிருக்கிறது...
எப்போதும் கலைந்து கிடக்கும்
என் புத்தக அலமாரி
அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது..!
மீன் தொட்டியில்
இரண்டு மீன்கள் புதிதாய் வந்திருந்தன...!
டி வி யும், பீரோவும்
இடம் மாறி இருந்தன ...!
முகம் பார்க்கும் கண்ணாடி
பெரிதாகி இருந்தது ...!
ஆனாலும் ....
ஒவ்வொருமுறை
வீட்டுக்குள் நுழையும் போதும்...
"என்னடா
உடம்பு இப்படி இளைச்சி போயிருச்சி
ஒழுங்கா சாப்படறியா இல்லையா ?"
என்கிற அம்மாவின் வார்த்தைகள் மட்டும்
இன்னும் மாறவே இல்லை ....!
No comments:
Post a Comment