என் தலையணை உறைக்குள்
நிறைந்து கிடக்கும் முத்தங்களில்
நேற்றைய கனவில் நீ கொடுத்ததை
தேடி எடுத்தேன்
உன் உதடுகளின்
ஈரப் பிசுபிசுப்பில் இன்னும்
உறையாமல் இருந்தது அம்முத்தம்
இதையெனக்கு கொடுத்தபோது
எத்தனை விதமான வெட்கத்தில்
நீ இருந்தாய் என நானறிவேன்
உன் கண்களில் விழுந்து
கழுத்தடியில் தொலைந்து
உயிர்ப்பள்ளத்தில்
நான் காணாமல் போனதை நீயறிவாய்
உதடுகள் பிரிந்த அந்த நொடியில்
உள்ளுக்குள் வயதின் பெருங்காடொன்று
பற்றியெரிந்ததை நாமறிவோம்
கொடுக்க கொடுக்க தீராத
முத்தங்கள் உன்னிடத்திலும்
தின்ன தின்ன பசியாறாத உதடுகள்
என்னிடத்திலும் இருக்கின்றன
முத்தங்களின் நினைவுகளை
எடுத்துப்பார்க்க இரவுகளும்
எழுதிப்பார்க்க கவிதைகளும்
இருக்கும் வரை நீயும் நானும்
நாமாகவே இருப்போம்.
No comments:
Post a Comment