29 July 2017

வயலும்... வாழ்வும்...!


வார இறுதியில் வரும் இரண்டு விடுமுறை நாட்களை எப்படி கழிப்பதென வாரம் முழுவதும் யோசனை செய்ய ஒரு கூட்டம் இருக்கிறது. வயலும் வயல்சார்ந்த நிலமுமாய் ஒரு நாளைக்கழிக்கவோ அல்லது ஒரு நாள் முழுவதும் விவசாயம் செய்யவோ வேண்டுமென்று நீண்ட நாட்களாக மனதில் ஊரித்திளைக்கும் சின்னச்சின்ன ஆசைகளில் ஒன்று நிறைவேறிய நாளாய் இன்று மாறிப்போனதில் மனம் பரவசத்தில் இனிக்கிறது.

நண்பரின் உறவினர்கள் வீட்டுக்கு சென்று வர கிருஷ்ணகிரி வந்திருக்கிறோம். நலம் விசாரிப்புகளும் புன்னகைகளும் பரிமாறிக்கொண்ட பின்பு, இங்குள்ள சிறப்புகளை பார்க்கலாமென நினைத்த பொழுது உச்சிவெயிலின் வெப்பம் உச்சந்தலைக்குள் ஆழமாய் இறங்கியது. இந்த வெப்பத்தை குளித்துதான் குறைக்க வேண்டுமென
வயல்களும் கிணறுகளும் நிறைந்த ராயக்கோட்டை போகும் வழியை நோக்கி புறப்பட்டோம்.

இருபக்கமும் பச்சை கம்பளங்கள் விரித்தது போன்ற வயல்களின் நடுவே கருப்புச்சாலையில் வலுக்கிச் செல்கிறோம்.  கற்றைக்கூந்தலில் விலகிப் பறக்கும் ஒற்றை முடியென நெடுஞ்சாலையில் இருந்து ஊருக்குள் பிரியும் ஒரு குறுகிய சாலைக்குள் சென்று காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு வரப்புகளின் மீது நடக்கிறோம்.

வயல் தேவதையின் இடுப்பில் வற்றாத நீரோடும் முத்தமிட்டபடி நீந்தும் மீன்களோடும் ஒரு கருப்புக்குடமென உட்கார்த்திருந்தது அந்த கிணறு.
வெட்கம் ததும்ப சிரிக்குமொரு பேரழகியின் பல்வரிசை போல அந்த கிணற்றின் படிக்கட்டுகள் அத்தனை அழகு. தென்னை மரநிழலில் தன் ஈரங்களை துடைத்துவிட்டு இளப்பாறிக் கொண்டிருந்தது ஒரு பம்புசெட்.
காதலிக்கும் மீன்களின் கனவுகள் மீது எங்கள் சத்தங்களால் கல்லெறிய வேண்டாமென நீளும் வரப்பில் மீண்டும் நடக்கிறோம்.

வலப்புறம் கதிர் அறுக்கும் பெண்களும் இடப்புறம் ஏர் உழுவும் ஆண்களுமாய் காணும் நொடியில் திறந்துவிடப்பட்ட பம்புசெட்டிலிருந்து வயல் துளைத்து ஓடுகிறது ஒரு குட்டி வாய்க்கால். ஒற்றைப்பல் உடைந்து சிரிக்கும் சிறுமியென
இங்கொரு கிணறு ஒற்றைப்படி உடைந்தபடி. தரை காணக்கிடைக்கா தண்ணீரில் அது தன் இருப்பை ஆழமாய் உணர்த்தியது.ஆறுகளிலும் வாய்க்கால்களிலும் ஆசை தீர நீந்திக் குளித்திருந்தாலும் கிணறு  என்பது கொஞ்சம் அச்சமூட்டக்கூடியது. ஆனாலும் வருடங்கள் பல கழிந்தபின் இத்தனை அழகாய் ஒரு இடத்தையும் இவ்வளவு அடர்த்தியாய் ஒரு கிணற்றையும் பார்க்கும்போது பயம் துறந்து ஒரு துள்ளல் தொற்றிக்கொண்டது. ஆடை களைந்து ஆழம் தெரிந்து அந்த குளிர்ந்த நீரில் குதித்த நொடியில் உடம்பெங்கும் பரவிய சிலிர்ப்பு இன்னும் பல நாட்கள் இந்த உடம்பில் உலாவரும்.

கிணற்றின் உடம்பில் நிரம்பியிருந்த பாசம் நகங்களின் இடுக்குகளில் நுழைந்து, நீரில் மிதந்த தென்னங்கீற்றை பார்த்து பாம்பென பயந்து, நெடுநாட்களுக்குப்பின் ஒரு குட்டிக்கரணம் அடித்து, பாயும் பம்புசெட்டில் பரவசமாய் நனைந்து, இந்த அழகியலை பிரிய மனமில்லாமல் தலை துவட்டுகையில் தெறித்து விழுகின்றன சுமக்க முடியா சோம்பல்களும், சொல்ல முடியா சோகங்களும்.

கடந்த தலைமுறையில் இதுவெல்லாம் அன்றாட சாதாரண நிகழ்வு, ஆனால் இந்த தலைமுறைக்கு வாழ்வின் பின்னால் எதற்கெனத் தெரியாமலே ஓடும் அவசரத்தில் எப்போதாவது வாய்க்கும் சிறு ஆறுதல். அடுத்த தலைமுறையில் இந்த வயல்வெளி ஒரு அடுக்குமாடி குடியிருப்பாகவும், இந்த கிணறு அங்கே நீச்சல் குளமாகவும் மாறக்கூடும். பரிமாறவும், பசியாறவும் சோறும், தாகம் தீர்க்க தண்ணீரும் கிடைக்க வாய்ப்பே இல்லாமல் போகும் ஒரு துயர வாழ்வை நோக்கி வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதில் மனம் கனத்துத்தான் போகிறது.

---தனபால் பவானி
29.07.2017

#வயலும்_வாழ்வும்
#பயணக்கட்டுரை
#கிராமம்_விவசாயம்


14 July 2017

டெண்ட் கொட்டாய்


வார இறுதி  விடுமுறையில் சினிமாவுக்கு போக அலுவலகத்தில் இருந்தபடியே டிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தான் நண்பனொருவன். எந்த வரிசையில் இடம் வேண்டும், கூட வரும் நபர்களின் எண்ணிக்கை, இடைவேளையில் கொறிக்க வேண்டியவை என ஒரு பெரும்தொகை கொடுத்து எல்லாம் தேர்வுசெய்துவிட்டான். உட்கார்ந்த இடத்திலிருந்தபடியே எல்லாம் கிடைத்தது. டிக்கெட் கிடைத்த ஆவலில் அவன் புன்முறுவல் செய்ய என் நினைவுகளின் படச்சுருள் பின்னோக்கிச் சுழன்று நான் விபரமறிந்து பார்த்த "முதல்  படத்தில்" போய் நின்றது.

பவானி வடக்குப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது குரங்குளின் வாழ்க்கையைப்பற்றிய ஒரு "டாக்குமெண்ட்ரி" படத்துக்கு கூட்டிப்போவதாகவும் அதற்கு ஒவ்வொரு மாணவனும் ஒரு ரூபாய் கொண்டுவர வேண்டுமெனவும் அறிவிப்பு வந்தது. எனக்கு வாரம் முழுவதும் சேர்த்தே ஒரு ரூபாய் கிடைக்காது இதில் ஒரே நாளில் ஒரு ரூபாயா என விழிபிதுங்கி எப்படியோ போராடி வீட்டில் ஒரு ரூபாய் வாங்கி என் பெயரையும் சினிமாவுக்கு வருபவர்களின் வரிசைப்பட்டியலில் இணைத்துவிட்டேன். கண்களுக்குள் கனவாய் நிறைந்திருந்த அந்த நாளும் வந்தது. பெயர்பட்டியல் படித்து வரிசையாய் நிற்கவைத்து பள்ளியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுள்ள ஒரு “டெண்ட் கொட்டாய்க்கு” அழைத்துப் போனார்கள்.

அப்போது பவானி வர்ணபுரத்தில் இருந்த "சங்கமேஸ்வரி திரையரங்கம்" என்று எல்லோராலும் அறியப்பட்ட டெண்ட் கொட்டாயில்  பரந்து கிடந்த மணற்பரப்பும் மரப்பலகை பெஞ்சுமாய், ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் நடுவில் நேர்க்கோடு போல ஒரு சின்ன சுவரால் பிரித்து வைத்திருந்தார்கள். பெரிய வெள்ளைத்திரையை கண்களுக்குள் வாங்கியபோது அது அந்த வயதுக்கான தேவலோகமாகவே தெரிந்தது. அப்போது கல்யாணமண்டபம், கோவில்கள், அரசு மருத்துவமனை தாண்டி நான் பார்த்த மிகப்பெரிய கூடாரம் அதுதான். எப்போதும் திரையரங்கின் வெளியே கட்டி இருக்கும் மிகப்பெரிய ஒலிபெருக்கியில் "விநாயகனே வினை தீர்ப்பவனே" பாடல் போடுவார்கள் அது முடிந்தவுடன் படம் போடுவார்கள்.  இந்த பாடல் ஒலிபரப்புவதை வைத்தே அப்போதைய நேரத்தை தெரிந்துகொண்டவர்களும் உண்டு.
காட்டில் வாழும் குரங்குகளை வேட்டையாட வருபவர்களிடமிருந்து தன் குட்டியை  காப்பாற்ற உயர்ந்த மரத்தின்மீது ஏறும் தாய்க்குரங்கு ஒரு கட்டத்தில் அந்த குட்டியை தவறவிடும், அந்த குட்டி குரங்கு ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லும்போது தாய்க்குரங்கு அதை எப்படி காப்பாற்றுகிறது என்பதை அழகாக சொல்லி இருப்பார்கள். சிறுவயதில் பார்த்த அந்த படம் நினைவுகளில் பசைபோல ஒட்டிக்கொண்டது. இடைவேளையில் பெரிய கூடையில் முறுக்குகளும், சோளப்பொரியும் சுமந்த ஒருவர் இருக்குமிடம் தேடிவந்து விற்கும் வாசம் இப்போதும் நாசிகளில் நுழைகிறது. இன்று எத்தனை பெரிய மால்களில் குளுகுளு வசதியோடு குஷன்கள் வைத்த சோபாவில் அமர்ந்து பல படங்கள் பார்த்துவிட்ட போதிலும்கூட கால்களில் மண்துகள்கள் குறுகுறுக்க மண்ணால் மேடை அமைத்து அதில் அமர்ந்து கண்கள் விரிய வியந்து பார்த்த அந்த முதல் படத்தின் பிரமிப்பை இப்போது இருக்கும் எந்த தொழில்நுட்பமும் கடுகளவும் கொடுத்துவிட முடியாது.

பத்து வருடங்களுக்கு முன்னாள் பவானி ராயல் தியேட்டரில் படம் பார்க்காதவர்களே இல்லையென்று சொல்லலாம். இப்போது புதர் மண்டி பாம்புகளும் பலவித விஷ ஜந்துக்களும் வாழுமிடமாக மாறி இருந்தாலும் ஒரு காலத்தில் யாராலும் ஒதுக்கிவிட இடமாகவும், முக்கிய அடையாளமாகவும் திகழ்ந்தது. ராயல் தியேட்டரில் தான் எத்தனை காதல்கள், எத்தனை பிரிவுகள், எத்தனை சண்டைகள், எத்தனை நட்புகள், எத்தனை சந்தோஷங்கள் இப்போது அத்தனையும் நினைவுகளின் பரண்கள்மேல் பத்திரமாய் இருக்கிறது. அப்பள பஜ்ஜியும், பன்னீர் சோடாவும் பல கைகள் மாறி காதலியிடம் சேரும்போது காதலனுக்குள் வரும் சந்தோசத்தை பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் "உயிரே" படம் ஓடிக்கொண்டிருந்த போது கூட்டம் நிரம்பி வழிய "தைய தைய" பாடலின்போது நண்பர்கள் ரயில் போல நின்றுகொள்ள என்ஜினாய் நிற்பவன் வாயில் சுருட்டோடு நிறைய  புகைவிட்டபடி பாடல் முடியும் வரை அங்குமிங்கும் ஓட, பாட்டு முடியுமுன்னே குடும்பத்தோடு வந்தவர்கள் தெறித்து ஓடிய காட்சி குறும்பாய் நிழலாடுகிறது. இப்போது விஷ்ணு தியேட்டர் என்று பெயர் மாறியிருக்கும் மோகன் தியேட்டரில் திரைக்கு முன்னால் தடுப்பு கம்பியிருக்கும் அதில் தீ என்று எழுதிய மணல் பக்கெட்டுக்கள் தொங்கிகொண்டிருக்கும் அந்த கம்பியில் ஏறி ஒருபக்கமிருந்து மறுபக்கம் போக பந்தயம் கட்டி கயிற்றில் நடப்பது போல் நடந்து விளையாடிய நாட்கள் பால்யத்தின் வரம்.  படம் போடுவதற்குமுன் திரைக்கு முன்னால் இருக்கும் பெரிய ஸ்கிரீன் முனைகளில் விளக்கெரிந்த படி மேலெழும்பும் அதிசயத்தையும் அதில் நெக்குருகி நெகிழ்ந்து கிடந்த தருணங்களையும் இந்த தலைமுறை பார்க்க வாய்ப்பு மிகக்குறைவு.

மெத்தகொட்டாய் என்று செல்லமாய் சொல்லப்படும் RAS தியேட்டரில் பல ரஜினி-கமல் படங்கள் மிகப்பெரிய கட்டவுட்டுகளோடும் பெரியபெரிய மாலைகளோடும் பார்த்த நாட்கள் மறக்கமுடியாதவை, இங்கு கிடைக்கும் முட்டை போவண்டாவிற்க்காகவே பலமுறை அடம்பிடித்து வந்ததுண்டு. இதை ஒட்டி இருக்கும் லட்சுமி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியேறுவதற்குள் வண்டிகளை வெளியே எடுக்க படும் சிரமம் இப்போது இருக்காது என நம்பலாம். காதலுக்கு மரியாதையும், WHO AM I? படங்களும் வந்தபோது பல ஞாயிறுகளின் சாயங்காலங்கள் கெளரி தியேட்டரில் விசில் சத்தங்களிலும் கைத்தட்டல்களிலும் நிறைந்தது. காதலர் தினம் பாடல்கள் வந்தபோதே துளிர்த்த கற்பனைகள் அந்த படத்தை KON  தியேட்டரில் பார்த்தபோது முழுமையடைந்து. டிப்ளமோ வாழ்வின் கடைசி தேர்வை முடித்த ஒரு வெள்ளிக்கிழமை காலையில் முருகன் தியேட்டரில் வெளியானது கில்லி படம், மதிய காட்சிக்கு பார்த்த அதுதான் அந்த தியேட்டரில் கடைசி படம். இப்போது அந்த இடம் வீடுகள் கட்ட தயாராகி விட்டது. தியேட்டரில் கேண்டீன் இருந்த இடத்தில் பலவருடங்கள் டாஸ்மாக் இருந்தது. மிகக்குறுகிய சந்துக்குள் போய் டிக்கெட் வாங்கும் சரஸ்வதி தியேட்டரில் பார்த்த பல ஜாக்கிஜான் படங்கள் நினைவுகளை விட்டு நீங்காதவை. வித்தியாசமான வடிவமைப்பில் நாற்காலிகளும் மாடிப்படிகளும் கொண்ட சரவணா தியேட்டர் அதன் அழகுக்காகவே நிறைய கூட்டம் சேர்த்தது காலச் சூழ்நிலையால் இப்போது அது பள்ளிக்கூடமாய் மாறியிருக்கிறது. பல பலான படங்களை மட்டுமே வெளியிடும் ராஜம் தியேட்டர் இப்போது நாகரீகம் கருதி பல நல்ல படங்களை மட்டுமே வெளியிடுகிறது.

மனித வாழ்வில் சினிமா என்பதையும் அது சார்ந்த கொண்டாட்டங்களையும் அத்தனை எளிதாய் ஒதுக்கி விட முடியாது. இப்போதும் கூட ஊருக்கு போகும்போதெல்லாம் நண்பர்களோடு இரவுக்காட்சிக்கு போவதுண்டு என்னதான் பெங்களூரு, சென்னை போன்ற பெரு நகரங்களில் பெரிய பெரிய தியேட்டர்களில் சினிமாக்கள் பார்த்தாலும் கூட சொந்த ஊரில் சிறு தியேட்டர்களில், மறக்க முடியா பழைய நினைவுகளின் மடியில் அமர்ந்தபடி நண்பர்களோடு படம் பார்ப்பது அலாதியானது. காலத்தின் வளர்ச்சிகளாலும், வரிகளின் கொடுமைகளாலும் இனி வரும் காலங்களில் தியேட்டர்கள் இல்லாமல் கூட போகலாம் அப்போது நினைத்துப்பார்ப்பதற்கும் சொல்லி மகிழ்வதற்கும் சில கதைகளை இந்த டெண்ட் கொட்டாய்களும் தியேட்டர்களும் கொடுத்திருக்கின்றன என்பது மறுக்கமுடியாத, மறக்கமுடியாத உண்மை.

09 July 2017

நிறம் மாறும் முகங்கள்...!


பிரியங்களின் ஒரு துளியையோ
அன்பின் ஒரு துகளையோ
நம்மீது தெளிப்பவர்களைக்
கொண்டாடும் மனதுக்கு புரிவதேயில்லை
சிலசமயம் அவர்களின் முகங்கள்
நிறம் மாறுமென்பதை

பழகவும் முடியாமல்
விலகவும் முடியாமல்
தவிக்கும் தருணங்களில்
பழைய சொற்களின் மேல் விழுந்த
நம்பிக்கை மெல்ல நழுவும்

மகிழ்வைக் கொண்டாடிய நாட்களை
சந்தேகத்தின் துருப்பிடித்த நேசமொன்று கிளறிப்பார்க்கும்

பிரமிப்பின் உச்சியில் இருந்த கணத்தை
வெறுப்புகளின் அதள பாதாளத்தில்
போட்டு மூடச்சொல்லும்

ஒரு வரியோ
ஒரு வார்த்தையோ
சுட்டிக்காட்டும் நிகழ்வை
சொற்களின் கூர்மை சோதிக்கும்

மனம் திருந்தி
தவறுகள் திருத்தி
திரும்பி வந்து ரோஜாக்களோடு கைகுலுக்கும் பொழுதில்
முட்கள் மட்டுமே ஆழமாய்  இறங்கும்....!


25 June 2017

புதுப்பித்த பழைய புன்னகை

இத்தனை
வருடங்களுக்குப் பிறகு
நீ வந்தபோது நெகிழ்ச்சியால்
நிரம்பியது என் வீடு

உள்நுழைகையில்
நீ எந்தக்காலெடுத்து வைத்தாயோ தெரியாது என்கால்கள் தரையிலில்லாமல்
இருந்ததை நீ பார்த்திருக்க மாட்டாய்

நீ குடித்துவிட்டு வைத்த பழச்சாற்றின் கடைசிச்சொட்டில் நூற்றுக்கணக்கான முத்தங்கள் மிதந்ததை
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை

ஆட்டோகிராப் நோட்டில்
அடைப்புக்குறிக்குள் நீ எழுதித்தந்த வார்த்தைகளை அதே வெட்கத்துடன்தான் இப்போதும் படித்தாய்

புரட்டிப்பார்த்த புகைப்பட தொகுப்பில்
உன்படத்தில் கசிந்த நினைவுகளின் மேல்  புதுப்பிக்கிறாய்
பழைய புன்னகையை

விடைபெற்று வீடுதிரும்ப
பேருந்தில் புறப்பட்டபோதுதான்
புரிந்துகொண்டேன்
போய்க்கொண்டிருப்பது
நீ மட்டுமல்ல என்பதை...!


17 June 2017

பாலத்தின் சுவடுகள் ...!


"இரும்பு பாலத்துக்கிட்ட போகும்போது பத்திரமா போ, கீழ எட்டிப்பார்க்காத" ன்னு அம்மா சொல்லியனுப்பும்  வார்த்தைகள் இப்போதும் அந்த பாலத்தை கடக்கும்போதெல்லாம்  நினைவுகளுக்குள் வந்துபோகிறது.


பெயர் என்னவோ "பழைய பாலம்" தான் ஆனால் அதுதான் பவானியையும் குமாரபாளையத்தையும் இணைக்கும் மிக முக்கிய பாலம். வெள்ளைக்காரன் காலத்தில் கட்டியிருக்கக்கூடும். லாரிகளோ , பேருந்துகளோ புழக்கத்தில் வராத காலத்தில் வெள்ளையர்களின் சாரட் வண்டிகளுக்காகவும், மிதிவண்டிகளுக்காகவும், மாட்டுவண்டிகள், குதிரை வண்டிகள், சிறு கார்கள் போன்ற மிகச் சாதாரண வாகனங்களுக்காக கட்டப்பட்டதாக தோன்றுகிறது. நிறைய தூண்கள் வைத்து, பாலத்தின் நடுவே இரும்பினாலான சுவர் போன்ற அமைப்பால் கட்டியிருக்கிறார்கள். அந்த இடத்தைத்தான் "இரும்பு பாலம்" என இப்போதும் அடையாளமாய் சொல்லுவதுண்டு. பாலம் உறுதியானதாக இருக்க வேண்டுமென்பதற்காக கலவைகளில் முட்டைகளைக் கலந்து கட்டியிருக்கிறார்கள் எனவும், சிலரை நரபலி கொடுத்திருக்கிறார்கள் எனவும், ஒவ்வொரு தூணுக்குமிடையில் ஒரு மனிதனின் எலும்புக்கூடு இருப்பதாகவும், அப்போது இறந்தவர்கள் இன்னும் பேயாய் சுற்றுகிறார்கள் எனவும், அதனாலேதான் இரும்புப்பாலத்தை கடக்கும்போது கவனமாய் போக வேண்டுமெனவும் சொல்கிறார்கள் என என் சிறு வயதில் நிறைய கதைகளைக் கேட்டிருக்கிறேன். இவையெல்லாம் கதைகளா, கட்டுக்கதைகளா, அவரவர் அனுபவத்தின், வயதின் கற்பனைகளா என்பதையெல்லாம் என் அறிவுக்கு எட்டாத பரணில் தூக்கி போடுகிறேன்.



இந்த பாலத்தினுடனான என் அனுபவங்கள் மிக அலாதியானவை. காய்ந்த மண்ணில் விழும் சிறு மழையைப்போல அதன் ஈரப்பசை என் வயதின் சுவர்களில் இன்னும் அப்பிக்கிடக்கிறது. மிகச் சிறு வயதில் அந்த பாலத்தைக்கடந்து உறவினர் வீடுகளுக்கு போக ஒரு முனையில் நிற்கும் குதிரைவண்டிக்கு பெரியவர்கள் பேரம் பேசிக்கொண்டிருக்கும் போதே கற்பனைகளால் நான் பாதிபாலத்தைக் கடந்திருப்பேன். ஒரு வழியாய் குதிரை வண்டியில் ஏறி வண்டி ஓட்டுபவருக்கு அருகில் உக்கார வைத்துவிடுவார்கள். வழியில் குதிரையின் வால் ஒரு முறையாவது சட்டென அடிக்கும் அதன் சிலிர்ப்பில் வெளியில் சொல்ல முடியாத பயமும் கலந்திருக்கும். இறங்கும் இடம் வரும்போது குதிரைவண்டி அப்படியே பின்னாலே போகாதா என மனம் ஏங்கும். இப்போதெல்லாம் குதிரைவண்டிகளைப் பார்ப்பதே அரிதாய் இருக்கிறது. அடுத்தமுறை எங்கே குதிரைவண்டி சவாரியைப் பார்த்தாலும், எந்த வயதானாலும் ஒரு முறை பயணித்து விட வேண்டும். சாயம் போன என் பால்யத்தின் பயணத்தின் மீது அது நிச்சயம் பல வண்ணங்களைப் பூசும்.



கொஞ்ச காலம் வேலைக்கு போன போது தினமும் இந்த பாலத்தின் வழியேதான் என் வாழ்க்கை ஓடியது. நண்பர்களோடு நடந்து செல்லும்போது பாட்டு பாடியபடி தூண்களையும் கடந்து போகும் ஆட்களையும் எண்ணிக்கொண்டே போனது இப்போதும் யாராவது என்னை கடக்கும்போது மனதில் இருந்து எட்டிப்பார்க்கிறது. எவனோ ஒருவனின் காமப்பசிக்கோ அல்லது  எவளோ ஒருத்தி ஏமாந்ததாலோ தொப்புள்கொடி கூட அறுக்கப்படாத ஒரு குழந்தையை இரவோடு இரவாக பாலத்திலிருந்து காவிரி ஆற்றுக்குள் வீசி இருந்தார்கள். முந்தையநாள் பனிக்குடத்தில் மிதந்த குழந்தை அடுத்தநாள் காவிரியில் மூழ்கியிருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக எட்டிப்பார்த்துவிட்டு கனத்த இதயத்தோடு நடந்தபோது  அன்று அந்த பாலம் முடியவே இல்லை. அவள் உண்மையானவளாய் இருந்திருந்தால் அன்று கரைபுரண்டு ஓடிய காவிரியில் பாதி அவள் கண்ணீராய்  இருந்திருக்கும்.

பெல் இல்லாத குட்டி வாடகை சைக்கிளில் நண்பர்களோடு போட்டிபோட்டுக்கொண்டு அந்த பாலத்தில் ஓட்டிய மகிழ்வை இப்போது காரிலோ, பைக்கிலோ கடக்கும்போது வருவதே இல்லை. இரவுக்காட்சி சினிமாவுக்கு போய்விட்டு திரும்புகையில் தூரத்து சுடுகாட்டில் பிணம் எரியும் நெருப்பைக்கண்டு  பயந்தபடியே பாலத்தைக் கடந்த நாட்களை நினைத்தால் இப்போதும் முதுகுத்தண்டு சிலிர்க்கிறது. ஊரடங்கிய ஒரு பெருமழையில் யாருமற்ற பாலத்தில் சொட்ட சொட்ட நனைந்தபடி நடந்து வரும்போது ஒரு ஆட்டோக்காரர் அழைத்து வந்து பாலத்தின் மறுமுனையில் விட்டார் இருபது வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்த நிகழ்ச்சி இப்போதும் மனதின் ஒரு ஓரத்தில் பத்திரமாய் இருக்கிறது. பகலில் பாலத்திலிருந்து காவிரியில் குதிக்கும் பசங்களிடம் பயம் கலந்த பரவசம் இருக்கும். பாலத்தின் மேல் உட்கார்ந்துகொண்டு யாரோ சிலர் போடும் தூண்டிகளில் சில நேரம் பெரிய மீன்களும் சிக்கி விடும். காய்ந்துபோன பூக்களையும் மாலைகளையும் நடுப்பாலத்தில் இருந்து காவிரிக்குள் வீசும் பழக்கத்தை யார் கண்டுபிடித்தார்களோ இப்போதுவரை தொடர்கிறது.

             
                                  

இப்போது அந்த பாலம் தவிர்த்து இரண்டு புதிய பாலங்கள் வந்து விட்டன. பவானி பேருந்து நிலையத்தை ஒட்டிய புது பாலத்தை கடப்பதற்கு மட்டுமல்லாமல், காதலர்களின் சந்திப்பு, வயதானவர்களின் பொதுக்கூட்டம், மதுப்பிரியர்களின் திறந்தவெளி பார், அதிகாலை நடைபயிற்சி, இருசக்கர வாகன பயிற்சி,  மாலை நேர இயற்கை ரசிப்பு என பலவிதமாய் பயன்படுத்துகிறார்கள் எந்த பயமுமின்றி. இந்த பாலத்தில் நிற்கும் போது பெரிய லாரியோ, பேருந்தோ கடக்கும்போது பாலம் கொஞ்சம் ஆடுவதை உணர முடியும் ஆனால் இந்த உணர்வை பழைய பாலம் தந்ததே  இல்லை. அது எவ்வகை கட்டிடக்கலை என தெரியவில்லை, அல்லது புதிய பாலங்கள் எல்லாமே இப்படி அதிரும் வகைதானா என்பது புரியவில்லை. நேர வசதிக்காக இந்த புதிய பாலங்களை பயன்படுத்தினாலும் கூட இப்போதும் ஊருக்கு போகும் போது ஒருமுறையாவது அந்த பழைய பாலத்தில் பயணிப்பதுண்டு, காரணமே இல்லையெனினும் காரணத்தை உண்டாக்கிக்கொண்டு பயணிப்பதில் என் சிறு வயது வாசனை அங்கே இருப்பதாய் உணரமுடிகிறது. பவானி குமாரபாளையத்தில் பிறந்தவர்கள் ஒருமுறையாவது இந்த பாலத்தைக் நிச்சயம் கடந்திருப்பார்கள்.

கடந்தமுறை சென்ற போது அங்கங்கே பழுதாகி இருந்த இடங்களில் ஒட்டு போட்டுக்கொண்டிருந்தார்கள். முகத்தில் சுருக்கம் விழுந்த ஒரு வயதான பாட்டியின் முகமாய் மேடு பள்ளங்களால் நிரம்பிய அந்த பாலம் இப்போதும் அழகுதான். பாலத்தின் நடுவில் நின்று பார்த்தால் வலப்பக்கம் பெருமாள்மலையும் இடப்பக்கம் ஊராட்சிக்கோட்டை மலையும் அத்தனை அழகாய்த் தெரியும். கற்பனைகளின் உயரத்திலிருந்து பார்த்தால் இரண்டு புதிய பாலங்களுக்கு நடுவே இந்த பழைய பாலம் அணில் முதுகில் உள்ள கோடு போல அழகாய் இருக்கும்.  எதையும் ரசிப்பதற்கான மனதையோ நேரத்தையோ இந்த காலம் எல்லோருக்கும் கொடுத்து விடுவதில்லை ஆனாலும் கூட அவ்வப்போது பால்யத்தின் வயதோடு பயணிப்பது ஒரு சுகம்.

காலம் கைகொடுக்கும் நாளொன்றில் இந்த பழைய பாலத்தில் நடந்து அதன் பக்கச் சுவர்களில் படிந்திருக்கும் என் நினைவுகளுடன் கைகுலுக்கி, தூண்களுக்கு நடுவே தொங்கிக்கொண்டிருக்கும் என் சிறு வயதை தொட்டுப்பார்த்து, இரும்பு பாலத்தில் உட்கார்ந்திருக்கும் என் பயத்திடம் நலம் விசாரித்து, பாலம் முழுவதும் நிரம்பிக்கிடக்கும் என் சுவடுகளின் சூடுகளை அதே கதகதப்போடு அள்ளிவர வேண்டும். அதை என் எதிர்காலத்தின் மொட்டை மாடிகளில் உலரவைப்பேன் அப்போது நகரும் வாழ்விடம் சொல்லிக்கொள்ள பல கதைகளை பத்திரமாய் வைத்திருக்கும்
அந்த "பாலத்தின் சுவடுகள்...!"