ஆதாம் என்னும் ஆண் மகனால் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்துவிட முடியாது என்னும் கருணையால் ஏவாள் படைக்கப்பட்டிருக்கலாம், அல்லது ஆதாம் எங்கே நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்துவிடுவானோ என்னும் பொறாமையால் கூட ஏவாள் படைக்கப்பட்டிருக்கலாம். எப்படியாகினும் இந்த உலகம் மனித இனம் தோன்றிய காலம் தொட்டே பெண்ணின் துணையில்லாமல் உருமாறி நிறம் மாறி இப்போதிருக்கும் இந்த நிலையை அடையவில்லை. காலங்காலமாக பெண்ணின் பங்களிப்பு இல்லாமல் முன்னேறிய குடும்பம் என்பது அரிதிலும் அரிதாகவே இருக்கக்கூடும். பூமிக்கு ஒன்றை நிலவும், ஒன்றை சூரியனும் போல, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் ஆணிவேராக இருப்பாள். அவள் தான் ஏதேதோ வழிகளில் எங்கெங்கோ கைமீறிச் செல்லும் குடும்பத்தின் பொருளாதாரத்தை இழுத்து தன் முந்தானையின் முனையில் முடிச்சி போட்டுவைத்திருப்பாள், வந்தவழி தெரியாமல் போக இருக்கும் சில்லறை நாணயங்களையெல்லாம் சிறுவாட்டுக்காசென பானைகளுக்குள்ளும், கடுகு டப்பா, சீரக டப்பாக்களிலும் சேர்த்து வைத்திருப்பாள். ஆபத்து காலங்களிலோ அவசர நேரங்களிலோ கைகளில் எதுவுமற்று திணறி நிற்கையில் அவள் சேமிப்புதான் கைகளுக்குள் வந்து எதுவோ ஒன்றுக்குள் சிக்குண்டு கிடக்கும் குடும்பத்தைக் காப்பாற்றும்.
தொலைந்துபோன என் தூக்கங்களை தொகுத்து வைத்திருக்கிறேன் கவிதைகளாய்..! இந்த கடந்து போன நிமிடங்களில்...!
24 March 2021
பெண் என்னும் கம்பீரம்
24 February 2021
தடுமாறும் தலைமுறை
25 January 2021
அவசர சிறகுகள்
22 January 2021
நட்பின்றி அமையா வாழ்க்கை
நடக்கத் தொடங்கி வீட்டுக்கு வெளியே போய் விளையாட எத்தனிக்கையில் தொடங்கியிருக்கலாம், பள்ளிக்கூட வாழ்வின் முதல்நாள் பக்கத்திலிருந்தவனின் புன்னகையில் பூத்திருக்கலாம், சத்துணவுக்கூடத்தின் அருகில் அடிபம்பில் தண்ணி பிடிக்க உதவியவனிடமிருந்து ஒட்டிக்கொண்டு வந்திருக்கலாம், தன் பணத்தில் முதல் சினிமாவை பார்க்க வைத்தவனிடமிருந்து கசிந்திருக்கலாம், தன் சைக்கிளில் முதல் சவாரியாக கூட்டிப்போனவன் காட்டியிருக்கலாம், தேர்வு நேரத்தில் காப்பியடிக்க காட்டி மாட்டிக்கொண்டவன் காப்பாற்றியபோது கண்டிருக்கலாம், வேலை தேடி அலைந்த நாட்களில் ஒரு தேநீரில் பசி போக்கியவன் புகட்டி இருக்கலாம், இப்போதும் எப்போதாவது ஊரிலிருந்து அழைத்து நலம் விசாரிப்பவனாய் இருக்கலாம் இந்த எல்லா தருணங்களிலும் நனைந்து, கலந்து, கசிந்துருகி, பிரிந்து, எதிர்பார்த்து, ஏங்கி, நசுங்கி, இன்னும் தொலைந்துவிடாமல் தொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு நிஜம் "நட்பு".
24 September 2020
சொல்லப்படாத கதைகள்
"ஒரு ஊருல ஒரு ராஜாவாம்..." ன்னு தொடங்கும் கதைகளின் வழியே நாம் பார்த்திராத ராஜாக்களின் காலத்துக்குள் கைப்பிடித்து அழைத்துச்செல்ல நம் எல்லோருக்கும் கதை சொல்லிய தாத்தா பாட்டிகள் இருந்திருப்பார்கள், இப்போதும் இருப்பார்கள். இருள் கவ்விய இரவுகளில் சிம்னி விளக்கின் சிறு வெளிச்சத்தில் போர்வையை விட கதகதப்பான பாட்டியின் மடியில் படுத்துக்கொண்டு விக்ரமாதித்தன் வேதாளத்தின் கதைகள், தேவதையும் கோடாரிகளும் கதை, பீர்பால் கதைகள், ராஜா ராணி கதைகள், காக்கா வடை "சுட்ட" கதைகள், தாத்தாவின் குறும்புத்தனங்கள் சொல்லும் கதைகள் எனக் கேட்ட நாட்களை கடலுக்குள் தவறவிட்ட தங்க நாணயம் போல மனதின் ஆழத்தில் காலம் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறது. அனுபவங்களை விவரிக்கவோ, அழகான கற்பனையை கதைகளாக மாற்றிக்கூறவோ எல்லோராலும் முடிந்துவிடுவதில்லை, அதற்கென ஒரு பொறுமையும் கேட்பவர்களைக் கதையோடு சேர்த்துக் கட்டிப்போடும் வல்லமையும் வாய்த்திருக்க வேண்டும். அப்படிக் கட்டுண்டு கிடந்த காலங்கள் இனி வாழ்வில் திரும்பக்கிடைக்குமா என்பதெல்லாம் பதில் தெரிந்த கேள்வி தான். கிடைக்காது என்பதே அதன் பதிலாகவும் இருக்கிறது. இப்போதும் பாட்டி, அம்மா பெரியம்மா, சின்னம்மான்னு சந்திக்கும் எல்லோரும் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை, பட்ட சிரமங்களை, அனுபவிக்க மறந்த சந்தோசங்களை, சேமித்து வைத்திருக்கும் கனவுகளை கதைகளைப்போல சொல்லுவதுண்டு. அவை வாழ்வியல் அனுபவங்களின் அடர்த்தியாக இருக்கின்றன. மனிதர்களின் மனங்களில் குவிந்து கிடக்கும் கதைகள் பலவுண்டு. கேட்பதற்கு காதுகள் கிடைக்கும் தருணங்களில் தான் அவை வெடித்துக்கிளம்புகின்றன. சொல்லப்படாத கதைகளில் மறைந்திருக்கும் சோகங்களை சொல்லாமல் புரிந்துகொள்ளும் மனங்கள் அத்தனை எளிதில் வாய்ப்பதில்லை. ஆணோ பெண்ணோ அப்படி வாழ்வின் வலிகளை விளக்கும்போது கைப்பேசியை நோண்டாமல், தொலைக்காட்சிக்குள் தொலைந்துவிடாமல், சமையலுக்குள் மூழ்கிப்போகாமல், குழந்தையைக் காரணம் காட்டி நகராமல் கொஞ்ச நேரம் காதுகொடுத்துக்கேட்கும் துணை தான் வாழ்வின் ஆகச்சிறந்த வரம். |