24 March 2021

பெண் என்னும் கம்பீரம்

ஆதாம் என்னும் ஆண் மகனால் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்துவிட முடியாது என்னும் கருணையால் ஏவாள் படைக்கப்பட்டிருக்கலாம், அல்லது ஆதாம் எங்கே நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்துவிடுவானோ என்னும் பொறாமையால் கூட ஏவாள் படைக்கப்பட்டிருக்கலாம். எப்படியாகினும் இந்த உலகம் மனித இனம் தோன்றிய காலம் தொட்டே பெண்ணின் துணையில்லாமல் உருமாறி நிறம் மாறி இப்போதிருக்கும் இந்த நிலையை அடையவில்லை. காலங்காலமாக பெண்ணின் பங்களிப்பு இல்லாமல் முன்னேறிய குடும்பம் என்பது அரிதிலும் அரிதாகவே இருக்கக்கூடும். பூமிக்கு ஒன்றை நிலவும், ஒன்றை சூரியனும் போல, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் ஆணிவேராக இருப்பாள். அவள் தான் ஏதேதோ வழிகளில் எங்கெங்கோ கைமீறிச் செல்லும் குடும்பத்தின் பொருளாதாரத்தை இழுத்து தன் முந்தானையின் முனையில் முடிச்சி போட்டுவைத்திருப்பாள், வந்தவழி தெரியாமல் போக இருக்கும் சில்லறை நாணயங்களையெல்லாம் சிறுவாட்டுக்காசென பானைகளுக்குள்ளும், கடுகு டப்பா, சீரக டப்பாக்களிலும் சேர்த்து வைத்திருப்பாள். ஆபத்து காலங்களிலோ அவசர நேரங்களிலோ கைகளில் எதுவுமற்று திணறி நிற்கையில் அவள் சேமிப்புதான் கைகளுக்குள் வந்து எதுவோ ஒன்றுக்குள் சிக்குண்டு கிடக்கும் குடும்பத்தைக் காப்பாற்றும். 

ஒரு ஆண் அத்தனை எளிதில் சேமிப்பை தொடங்க மாட்டான். தன் உடன்பிறப்புகளுக்கு, உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, என அவன் செய்யும் செலவுகள் ஏராளம். அத்தை பெண்களுக்கும் மாமா பெண்களுக்கும் பிரியங்களின் மிகுதியால் செய்யப்படும் தாராள செலவுகளும் கணக்குகளுக்குள் வராதவை. ஆனால் ஒரு பெண் அப்படி எடுத்த எடுப்பில் சட்டென செலவு செய்து விடுவதில்லை. ஒவ்வொரு ரூபாய்க்கும் அவளுக்கென சில பொறுப்புகள் இருக்கிறது. அதையும் மீறி இந்த செலவு அவசியமா அவசியமில்லையா என்று ஆராயும் அறிவும் இருக்கிறது. ஆண்களில் இந்த ஆராயும் அறிவு வெகு சிலருக்கு மட்டுமே இருக்கிறது. மளிகைக்கடையில் காசு கொடுத்து வாங்கும் கருவேப்பிலை தொடங்கி பட்டுச்சேலை வரை அவர்கள் செய்யும் செலவுகளுக்கு நிகராக மிச்சம் பிடிப்பதிலும் கொஞ்சமும் சமரசம் செய்து கொள்வதில்லை. இதற்கு நேர்மாறான பெண்களும் இருக்கவே செய்கிறார்கள். போகிற போக்கில் காரணமே இல்லாமலும் அவசியமே இல்லாமலும் செய்துகொள்ளும் செலவு அவர்களுக்கானது அல்ல, இந்த சமூகத்தின் பார்வையில் தங்களையும் தங்களுக்கு இணையாகவோ அல்லது மேலாகவோ உள்ளவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு தாங்களும் இப்படி வாழ்கிறோம் என்பதைக் காட்டுவதற்கான அறிகுறிகள் தான் அந்த செலவுகள். இவை பெரும்பாலும் தற்பெருமைக்காகவும், கெளரவுத்திற்காகவும் மட்டுமே செய்யப்படுபவை. 

கணவனை இழந்து முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஒரு பெண் தெருவோரத்தில் கட்டிலில் கடை போட்டு மாங்கா, எழந்தபழம், நவாப்பழம், கொய்யா, நெல்லிக்கா, மாலை வேளைகளில் பஜ்ஜி, போண்டா போட்டும் விற்பனை செய்து தன் நான்கு பிள்ளைகளுக்கும் தனியாளாக நின்று கல்யாணம், சீர் செணத்தி செய்துவைத்து இப்போதும் அந்த கடையை அதே இடத்தில் நடத்திக்கொண்டிருக்கிறார். வாழ்வின் மீதான பேரார்வம் மட்டுமே அவரை இன்னும் தொடர்ந்து இயங்கவைக்கிறது. தனாக்கா கடை என்பது அந்த பகுதிக்கான அடையாளமாய் மாறியதில் தான் அவர் வெற்றி இருக்கிறது. 

அதே தெருவில் தான் பணியாரக்காரம்மாவும் இருந்தார். பலபேரின் காலை பசியை போக்கியது அவர்தான். விடியற்காலையிலேயே மண் அடுப்பை பற்றவைத்து ஒரு அடுப்பில் பணியாரம், ஒரு அடுப்பில் இட்லி என ஊற்றி வைத்து காலை உணவை தயாரித்து விற்பவர். கூடவே கஞ்சி கொலாப் புட்டும் விற்பார். அத்தனை சூட்டிலும் அத்தனை வயதிலும் அத்தனை சுறுசுறுப்பாக இருப்பார். அடுப்பு சூட்டில் முகமெல்லாம் வியர்த்து வழியும் அதை முந்தானையில் துடைத்தபடி காத்திருக்கும் எல்லோருக்கும் இட்லி, பணியாரம் போட்டு சட்னி சாம்பார் ஊத்தி, காசை வாங்கி போட்டு சில்லறை கொடுத்து, விறகு மாற்றி, அங்கேயே சாப்பிட்டவர்களின் தட்டுகளைக் கழுவி, அடுத்த நாளுக்கான தேவைகளை கடைக்கு, மார்க்கெட்டுக்கு போய் வாங்கி வருவதென எல்லாமே ஒரே ஆள் தான். எத்தனையோ பேர் கடை வைத்தும் அந்தம்மா கொடுக்கும் ருசியை யாராலும் கொடுக்க முடியல. அதான் அவர் பட்ட கஷ்டத்திற்கான பரிசும் உழைப்பிற்கான அங்கீகாரமும். 

பாவாயக்கா டீக்கடைன்னா ஏரியாவில் தெரியாத ஆட்களே இருக்க மாட்டார்கள். ஆண்களே கொஞ்சம் பயப்படும் அளவுக்கு அத்தனை கம்பீரமும் ஆண்களுக்கு நிகராக தைரியமும் கொண்ட பெண் அவர். என் சிறுவயதில் டீ வாங்கப்போகும் போதெல்லாம் கைல தினத்தந்தியோட அவங்க டீ போடும் அழகை பார்த்துட்டே இருப்பேன். மளமளவென கண்ணாடி டம்ளர்களைக் கழுவி, வரிசையாக வைத்து பாலையும் டிக்காசனையும் கலந்து மேல தூக்கி ஒரு ஆத்து ஆத்தி வரிசையாக ஊற்றி அவர் எடுத்துக்கொடுக்கும் அழகே தனி தான். இப்போ அவர் இல்ல ஆனாலும் பெண்கள் நடத்தும் டீக்கடைகள் அந்த பகுதியில் இருக்கின்றன. பாவாயக்கா மாதிரி டீ போடும் பெண்கள் இப்போது இருந்தாலும் அவரிடம் இருந்த கம்பீரமும் தைரியமும் எல்லா பெண்களிடமும் இல்லை. 

தேர்வீதியில் செளடேஸ்வரி அம்மன் கோவில் எதிரில் ஒரு அம்மா அரிசி கொலாப்புட்டு செய்து விற்பார். ஒரு குட்டிப்பானையில் நீரூற்றி சுட வைத்து ஒரு பக்கம் அடைக்கப்பட்ட மூங்கிலை வைத்து மறு பக்கம் ஒரு துணியை வைத்து அதில் கொலாப்புட்டு செய்யத் தேவையான அரிசி மாவை மிக நேர்த்தியாக நிரப்புவார். வெந்த கொலாப்புட்டை இறக்கி துணியை நகர்த்தி கத்தியில் அறுத்து வாழை இலையில் வைத்து கட்டி சர்க்கரை பாகை ஊற்றிக்கொடுப்பார். வீட்டில் வைத்து சர்க்கரை பாகை மட்டும் குடித்துவிட்டு விக்க விக்க கொலாப்புட்டை சாப்பிட்டிருக்கிறேன். அதன் ருசி ஒவ்வொரு நரம்பிலும் இறங்கி இருக்கிறது. வெளியூர் ஓட்டல்களின் விலைப்பட்டியலில் கொலாப்புட்டு கொண்டைக்கடலை என்னும் எழுத்துகளைப் பார்க்கும் போதெல்லாம் இந்தம்மாதான் நினைவுகளுக்குள் நிரம்புவார். இப்போ அவங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் தன் மருமகள் மூலம் அந்த கொலாப்புட்டு கடையை நடத்துகிறார். ஆனால் அந்த ருசி இன்னும் அப்படியேதான் இருக்கிறது. இப்போதும் காத்திருந்து வாங்கி வந்து சாப்பிடுவது வாடிக்கையாகவே இருக்கிறது. 

கார வேலை செல்லமக்கான்னு சொன்னா எல்லோருக்குமே தெரியும். அவங்க கட்டிட வேலைகள் செய்யரவங்க. நல்ல உயரம், கணீர்க் குரல், உடம்பில் அவ்ளோ வலு இருக்கும். ஒரே நடையில் பத்து செங்கல்னாலும் தூக்கிட்டு ரெண்டு மாடி ஏறிப்போவாங்க. பெரிய பெரிய கருங்கல்லாக இருந்தாலும் அலாக்கா தூக்கிட்டு போய் போடுவாங்க, சாரத்தின் மேல நிற்கும் மேஷன் ஆளுக்கு ரெண்டு செங்கல்லை லாவகமா தூக்கி போடுவாங்க. நான் கடைசியா பார்த்த வரைக்கும் கூட அதே வேலைக்குத்தான் போய்ட்டு இருந்தாங்க. தன்னைப்போலவே தன் இரு பெண் பிள்ளைகளுக்கும் எல்லா வேலைகளையும் நல்லா பழக்கிவிட்டவங்க. இப்பவும் எங்க பார்த்தாலும் அந்த கணீர்க் குரலில் கூப்பிட்டு பேசுவாங்க. அவரை மாதிரி கட்டிட வேலை செய்யும் பெண்ணை இதுவரைக்கும் பாக்கல.

பூக்காரம்மா, பலாச்சுளைக்காரம்மா, மீன்காரம்மா ன்னு இன்னும் ஊருக்குள்ள நெறைய பெண்கள் இருக்காங்க, ஆண்களோடு துணையில்லாமல் தைரியமாக முட்டி மோதி, பல அவமானங்களைத் தாண்டி மேலே வந்தவங்க. இப்போதும் உழைத்துக்கொண்டே இருப்பவர்கள். அவர்களையெல்லாம் ஏதோ ஒரு தருணங்களில் காணும் போதும் கடக்கும் போதும் வாழ்வின் மீதான நம்பிக்கை பிறக்கிறது. அவர்கள் தான் பலபேருக்கு ஆகச்சிறந்த நம்பிக்கை கடத்திகளாக இருக்கிறார்கள். சோர்ந்து விழும்போதெல்லாம் சட்டென எழுந்துகொள்ளத் தூண்டுகிறார்கள். ஆண்களின் துணை இல்லையெனில் இந்த சூன்யம் நிறைந்ததாக மாறிவிடும் என்று நினைத்து வருத்தப்படும் பல பெண்களுக்கான பலமாக பாடமாக இவர்கள் இருக்கிறார்கள். 

யுகம் யுகமாய் மனித இனம் வாழ்வதற்கு இன்றியமையாத தேவைகளாய் இருப்பது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் மட்டுமல்ல பெண்களும் தான்.

24 February 2021

தடுமாறும் தலைமுறை

அறிவியலும் விஞ்ஞானமும் போட்டிபோட்டு வளர்ந்துகொண்டிருக்கும் காலத்தில் வருடங்கள் சட்டென ஓடிவிடுகின்றன. போட்டிகளும் பொறாமைகளும் நிறைந்ததாய் ஒரு தலைமுறை எதையோ நோக்கி, எதையெதையோ தேடி வேகமாய் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வேகத்தால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் அடுத்தவர்களுக்கும் சேர்த்தே பல அசெளகரியங்களை போகிறபோக்கில் திணித்துவிட்டுப் போகிறார்கள் என்பது தான் ஏற்றுக்கொள்ள முடியாத வேதனை. 

காலத்தின் கைகளில் எல்லோருக்குமான நல்ல விஷயங்களைப்போலவே சில கெட்ட விஷயங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு தலைமுறை தன் நல்ல விஷயங்களையும் கூட கெட்ட விஷயமாக மாற்றிக்கொண்டிருப்பதுதான் இங்கே ஏற்றுக்கொள்ளவே முடியாத மாற்றமாக இருக்கிறது. அம்மாவுக்கு ஓய்வு கொடுக்கணும், அப்பாவின் சுமையை கொஞ்சம் தானும் ஏற்றுக்கொள்ளனும், தன் கூடப்பிறந்தவர்களை நல்லா படிக்கவைக்கணும், நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி கொடுக்கணும், அப்பறம் தான் நம்ம கல்யாணத்தை பற்றி யோசிக்கணும் என்று முப்பது வயதான பின்னும் தன் குடும்பத்தை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வராமல் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நல்ல இளைஞர்கள் கடந்த தலைமுறையோடு நின்றுவிட்டார்கள்.
யாருக்கு என்ன நடந்தாலும் நடக்காவிட்டாலும் அதைப்பற்றிய கவலையோ, அக்கறையோ எனக்கு இல்லை என்று அணைபோட முடியாத காட்டாற்று வெள்ளம் போல ஒரு தலைமுறை இங்கு கண் முன்னே உருவாகிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. 

தன் சந்தோசமே பெருசு அதற்காக என்ன விலை கொடுத்தாலும், யார் எத்தனை துன்பப்பட்டாலும் அதை அடைந்தே தீருவது என பலர் "சுயபோதை" ஒன்றுக்குள் மூழ்கிப்போய்க் கிடக்கிறார்கள். அவர்களால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களைச்சார்ந்த குடும்ப உறவுகளும், நட்பு வட்டமும் அடையும் வருத்தங்கள் ஏராளம். பதின் பருவ வயதென்பது மதில்மேல் இருக்கும் பூனையைப்போல எப்போது எந்த பக்கம் குதிக்குமென கணித்துவிட முடியாத வயது. சிலசமயங்களில் சட்டென இறக்கை முளைத்து வானத்தையும் தாண்டி பறக்க நினைக்கும், சில சமயங்களில் தனிமைகளின் இருளுக்குள் புதைந்துகொண்டு தலைகாட்ட மறுக்கும். அந்த வயதின் மூர்க்கங்களை அடக்கி அது தடுமாறும் போதெல்லாம் தமக்கு வேண்டிய பக்கங்களில் திருப்பி ஒரு கட்டுக்குள் வைத்துக்கொள்கின்ற கலை எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. 

குழந்தை வயதென்பது பெற்றோர் சொல்லும்படி முழுவதுமாக கேட்கவில்லையெனினும் அடிவிழுமென்ற பயத்தின் பொருட்டு தேவையானவற்றை கேட்கும். கல்யாணமானபின்பு புதிதாய் இணைந்த இன்னொரு உறவையும் அது சார்ந்த இடங்களையும் பொறுத்து கொஞ்சம் தன்னிலை உணர்ந்து செயல்படும். முதிர் பருவமென்பது பேரன் பேத்திகளுக்காக, இனி தனித்து இயங்க முடியாத சூழலின் வலியை மறைப்பதற்காக, பல இடங்களில் ஆறுதலாக பல இடங்களில் அன்பாக இருக்கவேணும் சில விஷயங்களுக்குள் அடங்கும். ஆனால் இந்த இளவயதென்பது யார் சொன்னாலும் கேட்காத, யார் வலியையும் பொருட்படுத்தாத, யார் வழியையும் பின்பற்றாத தற்காலிக சுகத்துக்கான பாதைகளில் அதீத ஆசைகளோடு அதி வேகமாக பயணிக்கக்கூடிய ஒன்று.

ஒருகாலத்தில் அடர்ந்த கருவேல மரங்களைக்கொண்டிருந்த காடுகள் அவை. இப்போது வளர்ச்சியின் பொருட்டு நகரத்தின் முக்கிய மையப்புள்ளியாக மாறியிருக்கும் இடம். பேருந்து நிலையம், நீதிமன்றம், பெரிய மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என்று எல்லாவிதமான வசதிகளும் வந்து குவிந்திருக்கும் இடம். அங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் சொந்த வீட்டுக்காரர்கள், பெரிய பெரிய வேலைகளில், சொந்த தொழில்களில் முன்னேறியவர்கள். அவர்களின் வீடுகளில் இருக்கும் பதின் பருவப்பிள்ளைகளின் போக்கு எதிர்காலத்தை நினைத்து நமக்கே பயத்தை சுரக்க வைக்கும் நேரங்களில் கூட அவர்களின் பெற்றோர் அவர்களைக் கண்டிப்பதோ கடிந்து கொள்வதோ அடக்கி வைப்பதோ இல்லையென்பதுதான் கூடுதல் கொடுமை. பெரிய இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் பண்ணியதும் சட்டென வேகமாய் முறுக்கி எடுத்த எடுப்பில் டாப் கியரில் பயணிக்கும் நொடி நமக்குள் பலவிதமான பயத்தை கொடுக்கிறது. நண்பர்களோடு சேர்ந்து இரவு நேரங்களில் ரேஸ் போவது சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களைப்போல இங்கேயும் வந்துவிட்டது. இரவு நேரம் ஆள் நடமாட்டம் இல்லாத நேரமென்பதால் சாதாரணமாக மணிக்கு 80கிமீ வேகத்தில் வீடுகளும் குழந்தைகளும் அதிகமுள்ள தெருக்களில் பயணிப்பதை பார்க்கமுடிகிறது. அந்த பெரிய பெரிய வண்டிகளின் சத்தம் தூங்கிக்கொண்டிருக்கும் வயதானவர்களை, குழந்தைகளை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்குகின்றன.

பள்ளிக்கூட படிப்பை முழுவதுமாக முடிக்காத பதின்பருவப்பிள்ளைகள் அவர்கள். ஆண்ட்ராய்ட் மொபைல்களின்மேல் அதிக நாட்டம் கூடவே போட்டோகிராபி/மாடலிங் மீது ஆர்வம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறை சார்ந்த ஆர்வமே அவர்களை படிக்கவிடாமல் செய்திருக்க வேண்டும். சொல்லி வளர்க்கவோ, பார்த்து வளரவோ கூடப்பிறந்தவர்களும், உறவுகளும் இல்லாமல் வளர்ந்த பிள்ளைகள். திருடவோ, குற்றச்செயல்களிலோ ஈடுபடாமல் பொருளீட்டும் வண்ணம் சின்ன சின்ன வேலைகள் செய்து அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து தங்களது சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்தவர்கள். ஒருகட்டத்தில் திருமண விழாக்களில் சமையல், பரிமாறும் வேலை என செய்து கொஞ்சம் அதிக பொருளீட்டும் இடம் நோக்கி நகர்ந்த பின்பு அவர்களது ஆசைகளும் அதிகமாகியிருக்கின்றன. கைகளில் தாராளமாய் காசு தங்க, மது, புகை, புகையிலை உள்ளிட்ட அவர்களின் கூடவே தங்கிவிட்டது. ஒருவனைப்பார்த்து மற்றொருவன் என எல்லோரும் குடிக்கு வெகு சீக்கிரமே சிநேகமாகிப்போனார்கள். தங்களது வாழ்க்கை இந்த பதினெட்டு வயதுக்குள் மிகக் கோரமாக முடிவுக்கு வரப்போகிறது என்பது தெரியாமலே ஒரு பெரிய தீம் பார்க் நோக்கிய பயணத்தை அந்த அர்த்த ராத்திரியில் தொடங்கினார்கள். 

நட்புக்கூட்டத்தில் கார் வைத்திருந்த ஒருவனோடு சேர்த்து எட்டு பேர் ஆம்னியில் புறப்படுகிறார்கள் போகும்போதே வாங்கிவைத்த சரக்கு பாட்டில்கள் காலியாக காலியாக இவர்கள் போதைக்குள் முக்கால்வாசி மூழ்கிப்போனார்கள். தேசிய நெடுசாலையில் பயணிக்கத்தொடங்கும் போது வேகத்தால் பறக்கத்தொடங்கியிருக்கிறார்கள். போகிற வழியெங்கும் வேறுவேறு ஆட்கள் காரை ஓட்டிக்கொண்டு போகிறார்கள் போதையோடு. தங்களுக்கு முன்னால் போன அரசுப்பேருந்து யாரோ ஒரு பயணியை இறக்கிவிட நிறுத்த, அந்த பயணியும் இறங்கி சாலையைக்கடக்க அதிவேகத்தில் ஆம்னியில் வந்தவர்கள் அவரையும் அடித்துத்தூக்கி காரைக்கொண்டு போய் அரசுப்பேருந்தில் மோத சாலையைக்கடந்த பயணி உட்பட காருக்குள்ளிருந்த ஐந்து பேர் என மொத்தம் ஆறுபேரும் சம்பவ இடத்திலேயே கோரமாக மரணிக்கிறார்கள். மீதமுள்ளவர்களுக்கு பலத்த அடி, ஒருவனுக்கு கால் போய் விட்டதாகவும் சொல்கிறார்கள். இதை விதி என்று எல்லோரும் ஒற்றை வார்த்தையில் விளக்கம் சொல்லி விலகிப்போனாலும் அந்த வேகமும் போதையும் எத்தனை குடும்பங்களைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. 

பெங்களூரின் பிரபலமான பாலமொன்றில் நடந்த கார் ரேஸில் விபத்து நடந்து பதினெட்டு வயது பூர்த்தியாகாத மருத்துவரின் மகன் தலை துண்டாகி இறந்ததாகவும் கார் பாலத்தை தாண்டி மறுபக்கம் விழுந்து நொறுங்கியதாகவும் ஒரு செய்தி படிக்கும் போதே பதைபதைக்க வைக்கிறது. இதுபோன்ற பல செய்திகளை தினமும் பத்திரிக்கைகளும் இணையப்பக்கங்களும் தாங்கி வருகின்றன. இவற்றையெல்லாம் படித்து நாம் சாதாரணமாக கடந்து போய்விடுவோம் ஆனால் அந்தந்த குடும்பங்களுக்கு அது எப்போதும் ஆறாத ரணமாகவே இருக்கும். வருட வருட புத்தாண்டு இரவுகள் கொண்டாட்டமாக தொடங்கும் அதே நேரத்தில் எத்தனையோ விபத்துகள் நடக்கின்றன, திடீர் மரணங்கள், கை கால்கள் இழப்புகள், மேனியெங்கும் சிராய்ப்புகள் என ஒரு இரவு கொண்டாட்டங்களையும் துக்கங்களையும் சரிசமமாக கொண்டு வந்து நம்முன்னே வைக்கிறது ஆனால் நமக்கு நடக்காத வரை கொண்டாட்டங்கள் மட்டுமே நம் கண்களுக்கு தெரிகின்றன. 

இந்த மாதிரியான விஷயங்களால் அதிகம் பாதிக்கப்படுவது பெரும்பாலும் இளைய தலைமுறை பிள்ளைகள் தான். என் மகன் ஆறாவது தான் படிக்கிறான் இப்பவே என்னைய வெச்சி வண்டில கூட்டிட்டு போறான்னு பெருமையாக சொல்லிக்கொள்ளும் அம்மாக்களும், உங்க பையன் மூனு பேரை வெச்சிக்கிட்டு வேகமா வண்டி ஓட்டிட்டு போறான் கொஞ்சம் சொல்லிவைங்க என்று பக்கத்துவீட்டுக்காரரோ, தெருவில் வசிப்பவரோ சொல்லும் போதும் அதை கண்டிக்காத அப்பாக்களுமே தங்கள் பிள்ளைகளுக்கு நேரும் விபத்துகளுக்கு பாதை அமைத்துக்கொடுக்கின்றனர். வசதியில்லாத பிள்ளைகளுக்கு கிடைக்கும் புது சைக்கிளில் எல்லா சந்தோஷங்களையும் ஒரு வரையறைக்குள் அனுபவித்துக்கொள்கிறார்கள். அதீத செல்லமும், வசதியும் கிடைக்கப்பெறும் பிள்ளைகள் கொஞ்சம் வழி மாறிப்போவது உண்மை. அதனால் உண்டாகும் வலியும் உண்மையே. 

தடுமாறும் நாட்டையோ நாட்டின் பொருளாதாரத்தையோ ஒரு தனிமனிதனாக ஒரு குடும்பமாக நம்மால் சரி செய்யவே முடியாது அது அத்தனை சுலபமான காரியமும் அல்ல. ஆனால் தடுமாறும் அடுத்த தலைமுறை பிள்ளைகளை தனியாளாக, குடும்பமாக சேர்ந்து நல்வழிப்படுத்துவது அத்தனை கஷ்டமும் அல்ல. அன்போடு சேர்த்து கொஞ்சம் கோபத்தையும் , சுதந்திரத்தோடு சேர்த்து கொஞ்சம் இறுக்கிப்பிடித்தலையும், புன்னகையோடு சேர்த்து கொஞ்சம் கண்டிப்பையும் கையாளுங்கள். உங்கள் பிள்ளைகளின் ஆசைகளை, கனவுகளை நிறைவேற்றத்துடிக்கும் அதே சமயம் அவனுக்கான ஒரு முழு வாழ்க்கை இருக்கிறது என்பதையும் உணர்த்துங்கள்.

25 January 2021

அவசர சிறகுகள்

தாழிட அவசியமில்லா அறையின் 
சுவர்களெங்கும் அப்பிக்கிடக்கும் 
உன் முத்தங்களுக்கும் 
அவன் சிரிப்புகளுக்கும் நடுவே 
என் இரவுகள் விழித்துக்கிடக்கின்றன 
உன்னைக்காணாத கண்ணாடியும் 
அவனைக்காணாத பொம்மைகளும் போல 
உங்களைக் காணாத நானும் 
அறையின் ஒருபொருளாய் மாறிப்போனேன் 
கோப்பையில் நிரம்பிய தேநீரிலிருந்து 
வெளியேறும் புகையைப்போல 
தனித்த மனமொன்று ஆவியாகி 
ஆதிக்காற்றில் பாதியாய்க் கலக்கிறது 
 தூரத்து கோபுரத்திலிருந்து 
சட்டென வானில் பறந்து 
 மீண்டும் மாடத்தில் வந்தமறும் புறாக்களைப்போல 
உங்களிடம் வந்து திரும்ப 
அவசர சிறகுகள் இல்லையென்பதே இப்போதைய வருத்தம்

22 January 2021

நட்பின்றி அமையா வாழ்க்கை

 நடக்கத் தொடங்கி வீட்டுக்கு வெளியே போய் விளையாட எத்தனிக்கையில் தொடங்கியிருக்கலாம், பள்ளிக்கூட வாழ்வின் முதல்நாள் பக்கத்திலிருந்தவனின் புன்னகையில் பூத்திருக்கலாம், சத்துணவுக்கூடத்தின் அருகில் அடிபம்பில் தண்ணி பிடிக்க உதவியவனிடமிருந்து ஒட்டிக்கொண்டு வந்திருக்கலாம், தன் பணத்தில் முதல் சினிமாவை பார்க்க வைத்தவனிடமிருந்து  கசிந்திருக்கலாம், தன் சைக்கிளில் முதல் சவாரியாக கூட்டிப்போனவன் காட்டியிருக்கலாம், தேர்வு நேரத்தில் காப்பியடிக்க காட்டி மாட்டிக்கொண்டவன் காப்பாற்றியபோது கண்டிருக்கலாம், வேலை தேடி அலைந்த நாட்களில் ஒரு தேநீரில் பசி போக்கியவன் புகட்டி இருக்கலாம், இப்போதும் எப்போதாவது ஊரிலிருந்து அழைத்து நலம் விசாரிப்பவனாய் இருக்கலாம் இந்த எல்லா தருணங்களிலும் நனைந்து, கலந்து, கசிந்துருகி, பிரிந்து, எதிர்பார்த்து, ஏங்கி, நசுங்கி, இன்னும் தொலைந்துவிடாமல் தொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு நிஜம் "நட்பு". 

வாழ்வில் ஆதிமுதல் அந்தம் வரை எந்த உறவும் இல்லாமல் கூட வாழ்ந்துவிடலாம்  நட்பு இல்லாமல் வாழ்வதென்பது அத்தனை சுலபமல்ல. வாழ்வின் ஆகப்பெரும் உறவாய் நல்ல நட்புகள் அமைந்துவிடுவது வரம். வகுப்புத்தலைவனாய் பேசிக்கொண்டிருந்தவர்களின் பெயர்களை கரும்பலகையில் எழுதிவிட்டு வெளியே வந்ததும் தோள்மேல் கைபோட்டுக்கொள்ளும் நண்பனாய் அவதாரமெடுப்பதும், நகராட்சி பள்ளிகளின் மத்தியான வேளையில் சத்துணவு வாங்கும் வரிசையில் நமக்காக இடம் பிடித்து காத்திருப்பதும், மீசை முளைக்காத சிறுவயதில் தெருவில் போகும் அக்காக்களை தேவதைகளாய் நினைக்க சொல்லித்தருவதும்,  ஆசைப்பட்ட பெண்ணுக்கு கடிதம் கொண்டு போகும் தூதுப்புறா வேலையை ரசித்து செய்வதும், நிரம்பி வழியும் கூட்டத்தில் கசங்கி, சட்டையை நனைத்துக்கொண்டு சினிமா டிக்கெட் வாங்கி தந்ததும், நம் வீட்டு விசேஷங்களில் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்வதும் நமது நண்பர்களே. போடா என கோவித்துக்கொள்ள தோழர்களும், போடி என கொஞ்சிப்பேச தோழிகளும் நிறைந்த நிமிடங்களில் இதயத்தின் இசைதட்டில் சுழலும் பாடல்கள் இதமானவை. பல வருடங்களுக்கு பிறகு பழைய காதலியையோ/காதலனையோ பார்க்கும் நொடிகளில் வார்த்தைகளை தடுத்துவிட்டு கண்ணீர் முதலில் வர வாய்ப்பிருக்கிறது. ஆனால் நட்பில் இதயத்தின் ஆழத்திலிருந்தி பழைய முகம் அதே புன்னகையோடு மிதந்து மிதந்து மேலே வரும். தொட முடியாத தூரத்தில் இருந்தாலும், தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தாலும் எப்போதும் தொட்டுக்கொண்டே இருப்பது நட்பின் விரல்கள் மட்டுமே.

பம்பரத்திற்கு ஆணி அடிக்கவும், கிட்டிப்புள்ளின் முனை செதுக்கவும், கிரிக்கெட்டில் கேட்ச் பிடிக்கவும், காவிரியில் நீச்சல் அடிக்கவும், கை விட்டபடி சைக்கிள் ஓட்டவும், மாரியம்மன் திருவிழாவில் ஆட்டம் ஆடவும், கண்ணாமூச்சியில் கண்டுபிடிக்கவும், பாட்டில் கொடுத்து ஐஸ் வாங்கவும், பட்டாசு வெடிக்க பயம் போக்கவும், உண்டிவில்லில் குறி பாக்கவும், உண்டியல் உடைத்து காசு எடுக்கவும், கன்னித்தீவின் கதை படிக்கவும், தேநீரில் பசி போக்கவும், தேடிவந்து ருசிகூட்டவும், வாழ்வின் வெற்றிகளில் பக்கமிருப்பதும், தோல்விகளில் துணையிருப்பதும் எந்தவித சொந்தமுமில்லாத நட்பு மட்டுமே. அவர்களால் மட்டும் தான் நம் கைவசம் இருந்துதொலைத்துவிட்ட தருணங்களையெல்லாம் எந்த சேதாரமுமின்றி அப்படியே கொடுக்க முடியும். காதல் மட்டுமல்ல, நட்பும் அதுவாக அமையும்போது அதற்கு கிடைக்கும் மதிப்பு உயரியதாய் இருக்கும். ஆண் பெண் என்கின்ற பேதங்களில்லாமல் எல்லா மனிதர்களுக்கும் பெரும்பாலும் படிக்கும் காலங்களில் தான் நட்புகள் அமையும். ஆரம்பப் பள்ளிகளில் ஒருவகை, மேல்நிலைப்பள்ளிகளில் ஒருவகை, கல்லூரிகளில் ஒருவகையென வெவ்வேறு காலகட்டங்களில் அமையும் நட்புகளில் எது எதுவரை வருமென்பதை கணிக்கவே முடியாது. இவனோடு /இவளோடு சண்டையே வராது என நினைத்துக்கொண்டிருக்கும் போது சட்டென முட்டிக்கொள்ளும் வாய்ப்பும் உண்டு, இவனை/இவளை பார்த்தாலே கோவமா வருதுன்னு நினைக்கறவங்க கடைசிவரை எந்த நிலையிலும் கூடவே வரும் வாய்ப்புகளும் அமைவதுண்டு. யாருமற்ற தனிமையில் அமர்ந்திருக்கும் போதெல்லாம் எதோ ஒரு நட்புதான் மனதுக்குள் தோன்றி குளத்தில் எறிந்த கல்லைப்போல அலையலையாய் பல நினைவுகளைக் கிளறிவிட்டுச்செல்லும். அப்படிப்பட்ட நட்புகள் எல்லோரிடத்திலும் எப்போதுமுண்டு.

பவானி நகராட்சி வடக்குப்பள்ளியில் தான் தமிழ்வழிக்கல்வி மூலமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். முதல்நாள் கைநிறைய இனிப்புகளோடும் கண்கள் நிறைய பயத்தோடும் வகுப்புக்குள் நுழைந்து மிரள மிரள விழித்த நியாபகங்கள் இப்போதும் அப்படியே இருக்கிறது. எல்லோரும் சீருடையில் இருக்க முதல்நாள் என்பதால் எனக்கு மட்டும் வண்ணத்தில் உடையணிய அனுமதி கூடவே நாளை முதல் சீருடையில் வரவேண்டுமென உத்தரவும், கோவில் மாடு மாதிரி தலையை ஒரு மாதிரி ஆட்டிவிட்டு உட்கார இடம் தேடுகையில் யாரோ ஒருவன் தன் பக்கத்தில் இடமிருந்தும் போட்டுவைத்த சம்மனத்தை பெரிதாக்கி அந்த கொஞ்சூண்டு இடத்தையும் கொடுக்க மறுத்தான் அவன் இப்போது மிகப்பெரிய அரசியல்வாதியாக இருக்கலாம். அவனுக்கு பின் வரிசையில் புன்னகைத்தபடி ஒருவன் அழைக்க அவனிடம் அடைக்கலமானேன். வகுப்புகள் மாற மாற நண்பர்களும் சேர்ந்துக்கொண்டே இருந்தார்கள். எல்லோரும் ஒரே தெரு, பக்கத்துக்கு தெருக்கலாக இருந்ததால் கூடுதல் சந்தோஷமென்பது ஒன்றாக விளையாட பள்ளிக்கூடம் முடிந்தும் கூட வாய்ப்புகள் அமைந்தது. 

காலப்பெருவெளி எல்லோரையும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வைப்பதில்லையே, ஆறாம் வகுப்பிலிருந்து எல்லோரும் வேறு வேறு பள்ளிகளுக்கு, ஒரே பள்ளியின் வேறு வேறு வகுப்புகளுக்கு மாறிப்போனோம். ஆனால் விளையாட்டுகளும் அதையொட்டிய சந்தோஷங்களும் சாயங்காலங்களில் கைகூடியது வரம். பின்னாளில் காலம் சுழற்றிய சவுக்கில் படிப்பை பாதியில் நிறுத்தி நான் மட்டும் தனித்து விடப்பட்டேன். நாட்கள் மாதங்களாக வருடங்களாக உருமாறி பத்துவருடங்களை வேகமாக விழுங்கியிருந்தது. நண்பர்களும் திசைக்கொருவராய் மாறிப்போயிருந்தனர். சிறகு வளர்ந்த பறவைகள் கூட்டை விட்டுப் பறந்துபோனால் மரங்கள் வருத்தப்படுவதில்லை, மாறாக வேறு பறவைகள் வந்து கூடு கட்டிக்கொள்ள தன் கிளைகளைத் தயாராகவே வைத்திருக்கும் என்பதைப்போல என மனக்கூட்டில் வேறு வேறு நண்பர்கள் வந்து கூடு கட்டினார்கள். ஆண்டுகள் பல கழிந்தபின்பு என திருமணத்தையொட்டி ஆட்டோகிராப் சேரனைப்போல நண்பர்களைத்தேடி தேடி என் திருமண அழைப்பிதழை அனுப்பியும் நேரில் சேர்ப்பித்தும் எனக்குள் வற்றிப்போயிருந்த நட்பின் குளத்தை அவர்களின் அன்பால் நிரப்பிக்கொண்டேன். நேரில் வந்து வாழ்த்தியவர்கள் இன்னும் கொஞ்சம் ஆழமாய் நெருங்கியிருந்தார்கள்.

எழுதத் தொடங்கிய காலங்கள் என்னை இன்னும் நெறைய நண்பர்களிடம் சேர்த்திருக்கிறது நெறைய நண்பர்களையும் என்னிடம் சேர்த்திருக்கிறது. பயணிக்கும் வழிகளெங்கும் ஏதோ ஒரு நட்பின் அன்பில் திளைக்கவும் அவர்களோடு சேர்த்து ஒரு நல்ல திசையில் பயணிக்கவும் பணித்திருக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் கடந்து வந்த வாழ்வில் சந்தித்த காயங்களும் அதை ஆற்றிக்கொள்ள அவர்கள் கையாண்ட விதங்களும், அடைந்த தோல்விகளும் அதிலிருந்து கற்றுக்கொண்ட வழிகளும் சரியான பாதையை தேர்ந்துடுக்க இழந்தவைகளும் என அத்தனை கதைகள் இருக்கின்றன. இந்த மாதிரியான கதைகள் எல்லோரிடத்திலும் ஏகமாய் இருப்பது உண்மை, அதை காது கொடுத்து கேட்பதற்கு யாருமில்லை என்பதுதான் அதிலிருக்கும் சோகம். ஆனாலும் இந்த வாழ்க்கையை நாம் வாழ்த்துதானே ஆகவேண்டும்.

ஏதோ ஒரு நொடியில், ஏதோ ஒரு அவசரத்தில், ஏதோ ஒரு புரிதலின்மையில் பல நாட்களாக பழகிய நட்புகளிடத்திலிருந்து நம்மை வேரோடு பிடுங்கிக்கொண்டு வந்திருப்போம். அதனால் இழப்புகள் என்பதும் இருபக்கமுமாகத்தானே இருக்கும்? அந்த கணத்திலிருந்து இப்போது வரை யோசித்துப்பார்த்தால் எத்தனை அழகான நினைவுகளை தருணங்களை இழந்திருப்போம்? அதையெல்லாம் எ எந்தக்காலம் இனி நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்? அதற்கு ஒரு துளி அளவுகூட வாய்ப்பில்லை தானே? வெறுப்புகளின் முனைகளை கொஞ்சம் கிள்ளிப்போட்டுவிட்டு, கோபத்தின் கொடுக்குகளை கொஞ்சம் ஒடித்துப்போட்டுவிட்டு, மறந்துபோன நட்பையும், பிரிந்துபோன நட்பையும் கொஞ்சம் மயிலிறகால் வருடிவிட, பிரியங்களின் சொற்களை கொஞ்சம் சலவை செய்து புன்னகையில் நனைத்து பரிமாறிக்கொள்ள, கவலைகளால் நிறையும் கணங்களை கொஞ்சம் நட்பின் வார்த்தைகளால் நிரப்பிக்கொள்ள, கடக்கும் காலங்களில் எங்கிருந்த போதும் நல்ல நட்புகளை புரிந்துகொள்ள, புதுப்பித்துக்கொள்ள ஒரு பூங்கொத்தை இப்போதே தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். பிரிந்து போன நட்பை பார்க்க நேரும்போது சட்டென எந்த ஈகோவும் இல்லாமல் நீட்டிவிடுங்கள் அல்லது அவர்கள் நீட்டினாள் அன்போடு பெற்றுக்கொள்ளுங்கள்.

24 September 2020

சொல்லப்படாத கதைகள்

"ஒரு ஊருல ஒரு ராஜாவாம்..." ன்னு தொடங்கும் கதைகளின் வழியே நாம் பார்த்திராத ராஜாக்களின் காலத்துக்குள் கைப்பிடித்து அழைத்துச்செல்ல நம் எல்லோருக்கும் கதை சொல்லிய தாத்தா பாட்டிகள் இருந்திருப்பார்கள், இப்போதும் இருப்பார்கள். இருள் கவ்விய இரவுகளில் சிம்னி விளக்கின் சிறு வெளிச்சத்தில் போர்வையை விட கதகதப்பான பாட்டியின் மடியில் படுத்துக்கொண்டு  விக்ரமாதித்தன் வேதாளத்தின் கதைகள், தேவதையும்    கோடாரிகளும் கதை, பீர்பால் கதைகள், ராஜா ராணி கதைகள், காக்கா வடை "சுட்ட"   கதைகள்தாத்தாவின் குறும்புத்தனங்கள் சொல்லும் கதைகள் எனக் கேட்ட நாட்களை கடலுக்குள் தவறவிட்ட தங்க நாணயம் போல மனதின் ஆழத்தில் காலம் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறது.  அனுபவங்களை விவரிக்கவோ, அழகான கற்பனையை கதைகளாக மாற்றிக்கூறவோ எல்லோராலும் முடிந்துவிடுவதில்லை, அதற்கென ஒரு பொறுமையும் கேட்பவர்களைக்  கதையோடு சேர்த்துக் கட்டிப்போடும் வல்லமையும் வாய்த்திருக்க வேண்டும். அப்படிக்  கட்டுண்டு கிடந்த காலங்கள் இனி வாழ்வில் திரும்பக்கிடைக்குமா என்பதெல்லாம் பதில் தெரிந்த கேள்வி தான். கிடைக்காது என்பதே அதன் பதிலாகவும் இருக்கிறது.

 இந்த தொழில்ப  நுட்யுகத்தில் "கதை சொல்லி" என்னும் அடையாளத்தோடு நிறைய பேர் இருக்கிறார்கள். எதோ  ஒரு எழுத்தாளரின் கதையை படித்து, அந்தக் கதை சொல்ல வரும் கருத்தை அதன் சுவை குறையாமல் ஏற்ற இரக்கத்தோடு  விளக்கி அல்லது தங்களது கதை ஒன்றை கடந்துவந்த வாழ்வின் வலிகளோடும் அதன் மூலம் அடைந்த வெற்றிகளோடும் சேர்த்து அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்கும் பணியையும் பலர் அழகிய முறையில் செய்துகொண்டிருக்கிறார்கள்.                அதற்கென கட்டணம் வாங்கிக்கொண்டோ அதன் மூலம் லாபம் ஈட்டிக்கொண்டோ இருப்பதையெல்லாம் தாண்டி, அதை யாருக்கும் எளிதில் கைகூடிவிடாத  ஒரு அற்புதக்  கலையாக மாற்றி தங்களை இன்னும் மெருகேற்றி இன்னும் உயரத்தில் வைத்துக்கொண்டவர்கள் வாழ்வின் சூட்சமத்தைக்கூட மிக அழகாக கையாளுபவர்களாக தங்களை மாற்றிக்கொண்டதில் தான் இந்த வாழ்வின் மீதான ஈர்ப்பும் மனிதர்களின் மீதான காதலும் கொண்டவர்களாய்  நிறைந்திருக்கிறார்கள்.

 நான் சின்ன பையனா இருந்தபோது எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு தாத்தா இருந்தார். ஆண்டு, அனுபவிச்சு, ஓய்வு எடுக்கும் வயதிலும் கூட அத்தனை கம்பீரமாய் முறுக்கு மீசையோடு இருந்தார். சாயங்கால நேரங்களில் விளையாடிக்களைத்து வீட்டுக்கு திரும்பும் முன் அந்த தாத்தா அமர்ந்திருக்கும் கயிற்றுக்கட்டிலின் ஓரத்தில் என் வயது பெண்களும் பசங்களும் வரிசையாக  நிற்போம். அவர் வேட்டைக்கு போகும் பரிவார ராஜா போல மெல்ல மெல்ல கதை சொல்ல தயாராவர். வெத்தலையை துப்பிவிட்டு சுண்ணாம்பு கையை கழுவிவிட்டு வேட்டியை இறுக்கிக்கட்டிக்கொண்டு தொழில் போட்டிருக்கும் துண்டை உதறி சரியாக போட்டுக்கொண்டு "ரெடியா போலாமா?"ன்னு கேப்பார். சில சமயங்களில் முந்தைய    நாள் பாதி கதையை சொல்லி முடித்திருந்தால் "நேத்து எதோட விட்டோம்?" ன்னு கூட்டத்தில் கேப்பார், அதை சொல்வதற்கே போட்டியாக இருக்கும். சில சமயங்களில் புதுக் கதைகள் சொல்லுவார், அந்த கதைகள் அவர் தாத்தா அவருக்கு சொல்லியதாகவோ, வேறொருவர்  மூலமாக  அவர் வாய்வழியா கேட்ட கதையாகவோ, அவருடைய சிறு வயதில் நடந்த கதையாகவோ கூட இருக்கலாம். ஆனால் எந்த கதையாக இருந்தாலும் அதை சொல்வதில் அத்தனை நேர்த்தி இருக்கும். இடையில் யாராவது சேர்ந்து கொண்டால் மறுபடியும் அவர்களுக்காக முதலில் இருந்து சுருக்கமாக ஒருமுறை சொல்லுவார். 

 அந்த தாத்தா கதை சொல்லும் விதத்தில் அத்தனை உயிர்ப்பு இருக்கும். கதையை வெறுமனே சொல்லாமல் கொஞ்சம் கொஞ்சம் நடித்துக்காட்டவும் செய்வார். மழை நேரத்து இரவுகளில், மின் இணைப்பு துண்டிக்கப்படும் நேரங்களில் கூட அவர் வீட்டு திண்ணையில் அவரோடு உட்கார்ந்து மழைச்சாரல் தெறிக்க தெறிக்க கதைகள் கேட்ட நியாபகங்கள் இன்னும் மனதோரங்களில் நிழலாடுகிறது. குழந்தைகளைக் காணவில்லை என தேடிக்கொண்டு வரும் பெற்றோர்களோடு அத்தனை எளிதில் எங்களை அனுப்ப மாட்டார். யாரோட அம்மா வராங்களோ அவங்ககிட்ட ஒரு விடுகதை போடுவார் அந்த விடுகதைக்கான பதிலை சரியாக சொன்னா தான் குழந்தையை அனுப்புவார் இல்லனா கதையை முழுசா சொல்லி முடிச்சபிறகு வந்து கூட்டிட்டு போங்கன்னு சொல்லிடுவார். அவரு சொல்ற விடுகதைகளுக்கு பதில் சொல்வது அத்தனை சுலபமல்ல, இந்த விடுகதைக்கு பயந்துகொண்டே கதை கேட்கும் எங்களை கூட்டிப்போக யாரும் வராமல் இருப்பதுதான் எங்களுக்கான அதீத சுதந்திரம். அவரு கதை சொல்ல சொல்ல நாங்க "ம்ம் ம்ம்" ன்னு கேக்கணும் அந்த "ம்ம்" அவருக்கு நல்லா கேக்கலைனா கதை சொல்லுவதை நிறுத்திட்டு குறுகுறுன்னு எல்லா முகங்களையும் பார்ப்பார் அப்பறம் திட்டிட்டு மறுபடியும் கதை சொல்லுவார். விடியத்தொடங்கியிருந்த ஒரு அதிகாலையில் தூக்கத்திலேயே இறந்து போனதாய் சொன்னார்கள். தெரு முழுக்க ஒரு தாத்தா இறந்ததாக மட்டும் தான் தெரிந்தது. எங்களுக்கு மட்டும் தான் தெரியும் "அந்த கதைகளின் நாயகனோடு சேர்ந்து எங்களுக்கு சொல்வதற்காக சேர்த்து வைத்திருந்த அத்தனை கதைகளும் கூட செத்துப்போய்விட்டன" என்பது.

 அவன் பேரு மோகன், எங்களை விட இரண்டு வயது மூத்தவன் ஆனாலும் அவனை அண்ணா என்று அழைப்பதைவிட மோகன் என்றே அழைக்க எங்களை பழக்கப்படுத்தி இருந்தான். எண்பதுகளின் இறுதியில் பன்னிரண்டு வயதில் ஒருவன் கதைசொல்லியாக மாறி எல்லோரையும் தான் பார்த்த படங்களில் இருந்து, தான் படித்த புத்தகங்களில் இருந்து, தான் கேட்ட மொழிகளில் இருந்து அத்தனை கதைகளை எங்களுக்காக சுமந்து வருவான். ஜேம்ஸ்பாண்ட் படத்தை பார்த்துவிட்டு வந்து அதன் கதையை விவரித்து சொல்லுவதில் அவனுக்கு அத்தனை ஆர்வமும், அதை கண்கொட்டாமல் கேட்பதில் எங்களுக்கு அத்தனை ஆச்சரியங்களும் இருந்தன. அந்த படத்தில் வரும் கார் சத்தத்தில் இருந்து, துப்பாக்கி சத்தம், வெடிகுண்டு சத்தம்ன்னு என்னென்ன இருக்கோ எல்லாத்தையும் கண்முன்னாடி கொண்டு வந்து நிறுத்தற மாதிரி கதை சொல்லுவான்.

 அந்த தெருவில் மூனு படிக்கட்டு வெச்சி, நீளமான திண்ணை ஒன்னு இருக்கும் அதுதான் எங்களின் கதைக்களம். அவன் நடு படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு கதை சொல்லுவான் அப்பத்தான் எல்லோருக்கும் நல்லா கேட்கும். திண்ணையின் பக்கவாட்டில் ரெண்டு பக்கமும் திறந்திருக்கும் சாக்கடையில் ஓரங்களில் நின்றுகொண்டு அவன்  சொன்ன கதைகளைக்கேட்ட நாட்கள் தான் அப்போது கிடைத்த வாரஇதழ் மாதஇதழ் புத்தகங்களில் இருந்த சின்ன சின்ன கதைகளை படிக்கத்தூண்டியது. ஜாக்கிஜான் படங்களின் மீதான ஆசைகளும் ஆங்கிலப்படங்களின் மீதான மோகங்களும் வரக் காரணமாக இருந்த மோகன் திடீரென படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அப்பாவோடு சொந்த தொழிலுக்கு போய்ட்டான். பல ஆண்டுகள் கழித்து எதிரெதிரே பார்த்துக்கொண்ட போது மெல்லிய புன்னகையை கசியவிட்டு அப்பாவின் பின்னாடி அமைதியாக நடந்துகொண்டிருந்தான். அத்தனை சொற்களைக்கொண்டு பல கதைகள் சொல்லியவனிடமிருந்து ஒற்றை சொல்கூட உதிராத காரணம் என்னவாக இருக்குமென அவன் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன். கொஞ்ச நாளில் உடல்நிலை சரியில்லாமல் திடீரென இறந்து விட்டதாக சொன்னார்கள். அவனோட அப்பாவை எப்போதாவது அந்த தெருவில் பார்க்க நேரிடும், அப்போது அவரிடம் அவனைப்பற்றி கேட்க பல கேள்விகள் முளைக்கும் ஆனாலும் அவன் சொல்லிய கதைகளின் வழியே இப்போதும் எங்களோடு வாழ்ந்துவிட்டுப் போகட்டுமென அமைதியாய் கடந்துவிடுவேன்.

இப்போதும் பாட்டி, அம்மா பெரியம்மா, சின்னம்மான்னு சந்திக்கும் எல்லோரும் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை, பட்ட சிரமங்களை, அனுபவிக்க மறந்த சந்தோசங்களை, சேமித்து வைத்திருக்கும் கனவுகளை கதைகளைப்போல சொல்லுவதுண்டு. அவை வாழ்வியல் அனுபவங்களின் அடர்த்தியாக இருக்கின்றன. மனிதர்களின் மனங்களில் குவிந்து கிடக்கும் கதைகள் பலவுண்டு. கேட்பதற்கு காதுகள் கிடைக்கும் தருணங்களில் தான் அவை வெடித்துக்கிளம்புகின்றன. சொல்லப்படாத கதைகளில் மறைந்திருக்கும் சோகங்களை சொல்லாமல் புரிந்துகொள்ளும் மனங்கள் அத்தனை எளிதில் வாய்ப்பதில்லை. ஆணோ பெண்ணோ அப்படி வாழ்வின் வலிகளை விளக்கும்போது கைப்பேசியை நோண்டாமல், தொலைக்காட்சிக்குள் தொலைந்துவிடாமல், சமையலுக்குள் மூழ்கிப்போகாமல், குழந்தையைக் காரணம் காட்டி நகராமல் கொஞ்ச நேரம் காதுகொடுத்துக்கேட்கும் துணை தான் வாழ்வின் ஆகச்சிறந்த வரம்.