03 June 2016

பேசிக்கொண்டிருக்கும் நிழல்கள்




வெற்றிடம் நிரம்பித் ததும்பும்
மனதின் இருளடர்ந்த பக்கங்களில்
ஒரு சிறு வெளிச்சமென வந்து
முகம் காட்டு

யாரொருத்தியைப் போலவும்
இல்லாமல் நீ
நீயாக மட்டும் நிஜம் சுமந்து வா

உனக்கான கனவுகளையும்
எனக்கான ஆசைகளையும்
கலந்து செய்வோம்
நமக்கானதொரு காதலை

உன் அன்பின் எடைக்கு
என் காதலையும்
என் காதலின் எடைக்கு
உன் முத்தங்களையும்
பரிமாறிக்கொள்வோம்

உன்னோடு நானும்
என்னோடு நீயும்
அவரவர் வீடு திரும்பும் வேளையிலும்
கைகோர்த்தபடி அமர்ந்து
பேசிக்கொண்டிருக்கட்டும்
நம் நிழல்கள் ...!!!

                                   

30 May 2016

நந்தி மலை பயணம்




மிகப்பிடித்த பாடலொன்றையோ
படமொன்றையோ ரசித்துப்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் " கொஞ்சம் கடைக்குப்போய் பால் வாங்கிட்டு வா " என வீட்டில் யாராவது சொல்லும்போது பக்கத்து தெருவுக்கு போக கொஞ்சம் வெறுப்புடனும் நிறைய கோவத்துடனும் பைக்கை அப்படி உதைக்க நேரிடும், நடந்து போகும் தூரத்தில் இருக்கும் கடைக்குப்போக பைக்கோ சைக்கிளோ தேவைப்படுகிறது.

சில கிலோமீட்டர்கள் நடந்தே ஒரு பயணம் போக வேண்டுமென  வருகிற போது அந்த சூழ்நிலையை கையாளும் பக்குவத்தை எது கொடுக்கிறது? அந்த இலக்கை அடைய எது தூண்டுகிறது? அடைந்த பின்பு வரும் ஒரு பெருமிதத்தை புத்துணர்ச்சியை எது தக்கவைக்கிறது?

எங்கள் அலுவலகம் பெங்களூரில் உள்ள நந்தி மலை உச்சியை நடந்தே அடைய வேண்டுமேன ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மலை அடிவாரத்திலிருந்து உச்சி வரை 7 கிலோமீட்டர்கள் தான், பாதை வழியாக முதலில் உச்சி தொடும் முதல் மூன்று ஆண்களுக்கும் முதல் மூன்று பெண்களுக்கும் பரிசென அறிவித்திருந்தார்கள் பரிசுக்கென இல்லையெனினும் ஒரு பயண அனுபவமாக இருக்கட்டுமென நண்பர்களோடு பயணிக்க தொடங்கினோம் உச்சியை நோக்கி.

பவானியிலிருந்து பழனிவரை கூட பாதயாத்திரை போய் வந்திருக்கிறோம் வயதும் மனதும் ஒத்துழைத்த நாட்களில்.
இப்போதைய சூழலில்  நானெல்லாம் இரண்டு கிலோமீட்டர் தூரத்தைக் கடப்பதே கடினமென நினைத்தபடிதான் நடக்கத் தொடங்கினேன் ஆனால் இயற்கையை ரசித்தபடியும் இலக்கை துரத்தியபடியும் நடக்க  நடக்க தூரங்கள் குறையத்தொடங்கின. புகைப்படங்களெடுத்தபடி முன்னேறுகிறோம் எங்களுக்கு நிகராய் மேகங்களும் முன்னேறுகின்றன.

கால்கள் நடக்க நடக்க காலங்களில் பின்னோக்கி  கேள்விகளால் நிரம்புகிறது மனது அந்த காலத்தில் இத்தனை உயரத்தை எத்தனை குதிரைகளில் அடைந்திருப்பார்கள்?
இந்த மரங்களில் எத்தனை பறவைகள் கூடுகட்டியிருக்கும்?
எந்த விதையில்  இந்த மரம் இப்படி வளர்ந்திருக்கும்? மலை உச்சியின் கோட்டை கட்டவும் அந்த பெரிய குளம் கட்டவும் எத்தனை கழுதைகள் கல் சுமந்திருக்கும்? இங்கு வாழும் குரங்குகளுக்கு போதுமான உணவு கிடைத்துவிடுமா? அந்த பெரிய தேன்கூட்டை யாரும் தொல்லை செய்யாமல் அப்படியே விட்டுவிடுவார்களா? தலைக்குமேல் போகும் மேகம் பொசுக்கென மழை பொழியுமா? இப்படி எத்தனை எத்தனையோ கேள்விகள் பதில் கிடைக்காமலே அடிமனதின் பள்ளத்தாக்கில் விழுந்து தொலைந்துவிடுகின்றன.

ஒருவழியாய் உச்சியை அடைந்த போது வாழ்க்கை ஒரு உண்மையை உணர்த்தியது , "முயற்சியோடு முன்னேற நினைப்பவர்களையும் வலிதாங்கி தடைதாண்ட துடிப்பவர்களையும் வாழ்க்கை உயரத்திற்கு கொண்டு செல்கிறது".

இன்னும் இன்னும் பயணிக்கணும்
புது உயரங்களைத் தொடவும்.
புது அனுபவங்களைப் பெறவும்.

பயணிப்போம் ...!

---தனபால் பவானி

07 May 2016

ஆண்களின் வரம்

"கொழம்பு நல்லா இருக்கு" என்பதே
அம்மாக்கள் பெரும் மிகச்சிறந்த பாராட்டு ..!
**************************************
மொத்த மெத்தையும் கொடுக்காத
தூக்கத்தைக் கொடுப்பதுதான்
அம்மாவின் சேலைத் தொட்டில்..!
**************************************
எந்த நிலையிலும்
தன்னை நேசிக்கும் பெண்ணாய் அம்மா
இருப்பது ஆண்களின் வரம் ..!
**************************************
குடும்பம் என்னும் புத்தகத்தில்
அம்மா என்பவள் அடிக்கோடிட்ட
மிகப்பிடித்த வரி ..!
**************************************
மாளிகையானாலும்
குடிசையானாலும் சமையலறைக்கு
பிடித்த ஆள் அம்மா மட்டுமே ..!
**************************************
யாருமற்ற  வீட்டில் எப்போதும்
நிறைந்திருக்கும் அம்மாவின்
வாசம் ..!
**************************************
எத்தனை முறை முயற்சித்தாலும்
மிக அரிதாய்க் கிடைப்பது தான்
அம்மாவின் வெட்கம் ..!
**************************************
எந்த மொழியில் அழைத்தாலும்
அழகாகும் சொல் அம்மா ..!
**************************************
அன்னையர் தின வாழ்த்துக்கள்..!


06 September 2014

தொடர்வண்டி நினைவுகள் ....!





உன்னோடு 
அதிக நேரம் செலவழித்த 
அந்த தொடர்வண்டி நிலையத்தின் 
நடைமேடை திண்ணையில் அமர நேர்ந்தது ஒருநாள்...

அன்று 
கண்கள் மூடிய தருணம்
நினைவுகள் பின்னோக்கிச் சுழல..

''அப்போது என் விரல் கோர்த்தபடி
அருகில் அமர்ந்திருந்தாய் நீ
அழகான புன்னகையோடு ...

நீ பேசிய வார்த்தைகளை காதுகளும்
உன் அழகை கண்களும் உள்வாங்கிக்கொண்டிருக்க
அன்பான காதல் வெளிவந்து கொண்டிருந்த
ஆசிர்வதிக்கப்பட்ட நிமிடங்கள் அது .....!!!

இப்போது நீ இல்லாத அதே இடத்தில்
உன் நினைவுகளின் விரல் கோர்த்து அமர்ந்திருக்கிறேன்...

பெருங்கூச்சலிட்டு வந்த ஒரு தொடர்வண்டி
என் நினைவுகளைக் கலைத்து
பயணிகளை இறக்கி விட்டு
திரும்பாமல் போய் விட்டது உன்னைப்போல ....

தண்டவாளங்கள்
இன்னும் அப்பிடியே இருக்கின்றன
என்னைப்போல ....!!!

22 August 2014

உறங்காத இரவுகளும் உன் நினைவுகளும்..!


உறக்கம் தொலைத்த இரவுகள்
உணவாய்த் தின்கிறது
உன் நினைவுகளை....

இருள் படிந்த என் அறையின்
ஜன்னல் வழியே வந்து விழும்
வெளிச்சக்கீற்றுகள்
தோண்டி எடுக்கின்றன
உன் வெள்ளைச் சிரிப்புகளை...

கைப்பேசியின் உள்டப்பியில்
இருந்து அழிக்கப்படும் தேவையற்ற
குறுந்தகவல்களைப்போல்
அவ்வளவு சுலபமாய்
அழிக்க முடியவில்லை
இதயத்திலிருந்து
உன் கடைசி பார்வையை ...

அருகில் உறங்கும் நண்பனின்
அலைபேசி அலறும் அர்த்த ராத்திரி
மீட்டெடுக்கிறது
நீ அழைத்த நிமிடங்களை....

கொசுக்கள் வந்து கடிக்கும் 
தருணங்கள் முன் வைக்கிறது 
உன் விலை மதிப்பில்லாத 
முத்தங்களை... 

தூரத்து மசூதியில் ஓதும்
ஒரு குரல், விடிந்து விட்டதை
விவரிக்கும் போது
தொடங்குகிறது என் உறக்கம் ...!