06 September 2014

தொடர்வண்டி நினைவுகள் ....!





உன்னோடு 
அதிக நேரம் செலவழித்த 
அந்த தொடர்வண்டி நிலையத்தின் 
நடைமேடை திண்ணையில் அமர நேர்ந்தது ஒருநாள்...

அன்று 
கண்கள் மூடிய தருணம்
நினைவுகள் பின்னோக்கிச் சுழல..

''அப்போது என் விரல் கோர்த்தபடி
அருகில் அமர்ந்திருந்தாய் நீ
அழகான புன்னகையோடு ...

நீ பேசிய வார்த்தைகளை காதுகளும்
உன் அழகை கண்களும் உள்வாங்கிக்கொண்டிருக்க
அன்பான காதல் வெளிவந்து கொண்டிருந்த
ஆசிர்வதிக்கப்பட்ட நிமிடங்கள் அது .....!!!

இப்போது நீ இல்லாத அதே இடத்தில்
உன் நினைவுகளின் விரல் கோர்த்து அமர்ந்திருக்கிறேன்...

பெருங்கூச்சலிட்டு வந்த ஒரு தொடர்வண்டி
என் நினைவுகளைக் கலைத்து
பயணிகளை இறக்கி விட்டு
திரும்பாமல் போய் விட்டது உன்னைப்போல ....

தண்டவாளங்கள்
இன்னும் அப்பிடியே இருக்கின்றன
என்னைப்போல ....!!!

22 August 2014

உறங்காத இரவுகளும் உன் நினைவுகளும்..!


உறக்கம் தொலைத்த இரவுகள்
உணவாய்த் தின்கிறது
உன் நினைவுகளை....

இருள் படிந்த என் அறையின்
ஜன்னல் வழியே வந்து விழும்
வெளிச்சக்கீற்றுகள்
தோண்டி எடுக்கின்றன
உன் வெள்ளைச் சிரிப்புகளை...

கைப்பேசியின் உள்டப்பியில்
இருந்து அழிக்கப்படும் தேவையற்ற
குறுந்தகவல்களைப்போல்
அவ்வளவு சுலபமாய்
அழிக்க முடியவில்லை
இதயத்திலிருந்து
உன் கடைசி பார்வையை ...

அருகில் உறங்கும் நண்பனின்
அலைபேசி அலறும் அர்த்த ராத்திரி
மீட்டெடுக்கிறது
நீ அழைத்த நிமிடங்களை....

கொசுக்கள் வந்து கடிக்கும் 
தருணங்கள் முன் வைக்கிறது 
உன் விலை மதிப்பில்லாத 
முத்தங்களை... 

தூரத்து மசூதியில் ஓதும்
ஒரு குரல், விடிந்து விட்டதை
விவரிக்கும் போது
தொடங்குகிறது என் உறக்கம் ...!





சென்னை தினம் .... !!!


இது தமிழ் நாட்டின் தலை நகரம் மட்டுமல்ல இந்திய இளைஞர்களின் தலையெழுத்தையும் மாற்றும் இடம்...!!!

கண்கள் நிறைய கனவுகளோடும், மனது நிறைய லட்சியங்களோடும் தினம் தினம் ரயில் ஏறும் கால்கள் எத்தனை...? படிப்பு தந்த அறிவை மூளையில்  சுமந்துகொண்டு 
உடம்பு தரும் பசியை வயிற்றில் சுமந்து கொண்டு ஒரு டீ யோடும் ஒரு தம்மோடும் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் மனங்கள் எத்தனை...? நகல்கள் நிறைந்த ஃபைல்களை  தூக்கிக்கொண்டு நனைந்த கைக்குட்டையால் முகத்தை துடைத்துக்கொண்டு நேர்காணளுக்கான  இடத்தின் முகவரி தேடி அலையும் முகங்கள் எத்தனை...? கிராமத்து அம்மா அப்பாவின் அன்பை துறந்து உடன்பிறந்தவர்களோடு செல்ல சண்டைக்கு ஏங்கி திறக்காத சினிமாவின் கதவுகளை மீண்டும் மீண்டும் தட்டிக்கொண்டிருக்கும் விரல்கள் எத்தனை...? தொடர்பு எல்லைக்கு அப்பால் வந்ததால் உடைந்து போன நட்புகள் எத்தனை...? ஒரு சிறு வெற்றியெனும் கிடைக்காமல் திருமணம் செய்ய கூடாதென இளமையை தொலைத்த இதயங்கள் எத்தனை...?

சொந்த ஊர்களில் அடுத்த தெரு மளிகை கடைக்கு  கூட போகாத அழகு பெண்கள் IT கம்பெனிகளில் இரவெல்லாம் விழித்து  வேலை பார்க்கிறார்கள், தோழிகளோடு ஆலமர ஊஞ்சல் ஆடியவர்களுக்கு சுழலும் நாற்காலிகள் அந்த சந்தோசத்தைக் கொடுக்குமா? அம்மாவின் மடியில் தலை சாயும் சந்தோஷ நிமிடங்களை அமெரிக்க டாலர்களால் கொடுக்க முடியுமா ?மெகந்தியின் வளைவுகளில் மயங்கும் மனம் மருதாணியின்  வாசத்தை மறக்குமா? வாய்க்கால்களில் முங்கிக் குளித்த ஈரத்தை கால்களை நனைக்கும்  மெரினா கடல் அலை கொடுக்குமா? நகரப்பேருந்துகளில் சிக்கிச் சிதையும் வேளைகளில் மாட்டு வண்டியில் பயணித்த நியாபகம் வராமலா போகும்? போகிற போக்கில் தெருவோர பிள்ளையாரைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்ளும் போது ஊர் திருவிழாக்கள் கண்களுக்குள் வந்து போகாது?

இவை அத்தனையையும் பறித்துக்கொண்டு இந்த பெரு நகர வாழ்க்கை கொடுத்தது என்ன? 

பள்ளிக்கு போகும்  மகனுக்கு ஆட்டோவில் டானிக் கொடுக்கும் ஒரு தாய் , நடைபாதையில் கடைவிரித்து மகளுக்காக புத்தகம் சுமந்து செல்லும் ஒரு தகப்பன், பேரனுக்கு முந்தானை குடை பிடிக்கும் ஒரு பாட்டி , பேத்திக்கு இளநி வாங்கிக்கொடுக்கும் ஒரு தாத்தா, வயதான அம்மாவை வைத்துக்கொண்டு பிச்சை எடுக்கும் ஒரு மகன் , தாமதமாக வரும் காதலிக்காக சாக்லேட்டோடு காத்திருக்கும் காதலன் , பிறந்த நாள் பரிசு கொண்டு வரும் காதலனுக்காக முத்தங்களோடு காத்திருக்கும் காதலி, காலையிலேயே குடித்துவிட்டு மட்டையாகிக் கிடக்கும் 'குடிமகன்' இவர்களோடு சிக்னல்களில் சிக்கிகொள்ளக்கூடாது என பறக்கும் வாகனங்கள்,ஐந்து நிமிட தாமதத்திற்காக அரை மணி நேரம் வாங்கும் திட்டு , எல்லாம் சரியாக இருந்தும் கொடுக்கப்படும் லஞ்சம் , தண்டவாளம் கடக்கையில் வரும் மரணம், நடைமேடையில் நடக்கையில் வரும் பயணச்சீட்டு பரிசோதனை, சில்லறைக்காக நடத்துனரிடம் நடத்தும் சண்டை இப்படி  எல்லாம் கடந்து வீட்டுக்குள் நுழைகையில் சம்பாதித்ததை விட இழந்தது அதிகமாக இருக்கும் .

Inline image 1

ஆனாலும் இதே சென்னை தான் கடற்கரை சாயங்காலங்களிலும், சினிமா படப்பிடிப்புகளிலும் , வடபழனி முருகன் கோவிலும், தியாகராய நகர் தெருக்களிலும் , தொங்கிக்கொண்டு போகும் தொடர்வண்டிகளிலும் , திருவல்லிக்கேணி மேன்சன்களிலும், MGR , அண்ணா சமாதிகளிலும்,
மகாபலிபுர மணல் மேடுகளிலும், கோயம்பேடு எலைட் வெளிநாட்டு சரக்குகளிலும்,சத்யம் சினிமா தியேட்டர்களிலும் , சிட்டி சென்டர், போனிக்ஸ் மால்களிலும், கண்ணகி சிலை பக்க  புத்தாண்டுக் கொண்டாட்டங்களிலும் கலங்கரைவிளக்கத்தின் உச்சியிலும் இன்னும் இன்னும் வாழ்க்கை மிச்சமிருப்பதை உணர்த்திக்கொண்டு தான் இருக்கிறது.

இங்கே வலிகளுக்கு நிகராய் சந்தோசங்களும் ,பயங்களுக்கு நிகராய் கொண்டாட்டங்களும்,  கண்ணீருக்கு நிகராய்  புன்னகையும் , நரகத்திற்கு நிகராய் சொர்க்கமும், தோல்விகளுக்கு நிகராய் வெற்றிகளும், ஏமாற்றங்களுக்கு நிகராய் வாய்ப்புகளும் இறப்புக்கு நிகரான வாழ்க்கையும் இன்னும்  இருக்கின்றன.

சாதனை படைக்க சென்னை வருவதை விட சென்னையில் இருப்பதே பெரிய சாதனைதான்.
வாழ்க்கை பயணத்தில் சிகப்பு விளக்கு எறிந்தால் கொஞ்சம் பொறுமையாய் காத்திருங்கள் 
உங்களுக்கான பச்சை விளக்கும் கண்டிப்பாய் ஒளிரும் .....!!!

வாழ்க்கைக்காக சென்னை வந்தவனின்  வாழ்த்துக்கள் ...!!!    

20 March 2014

பெண்கள் தின வாழ்த்துக்கள்...!

March 8 2014
            
Inline image 1
உலகம் என்னும் நான்கெழுத்து சொல் 
அன்பு.. பாசம்.. கருணை.. தாய்மை..
என்ற மூன்று எழுத்து சொற்களோடு
இன்னும் சுறுசுறுப்பாய் சுற்றிக்கொண்டிருப்பதற்கு
இன்னொரு காரணம் இரண்டெழுத்து பெண்..!!!
பெண் என்பவள் சதையையும் எலும்புகளையும்
தோலால் போர்த்தப்பட்ட பொருளல்ல ....!
அவள் ...!
வெட்கங்களால் செய்யப்பட்ட வீணை ....!
விரல்கள் முளைத்த நீர்வீழ்ச்சி.....!
நீளமாய் வளர்ந்த ஒற்றை மழைத்துளி...!
தெருவில் உலா போகும் தேர்....!
    பூக்களை திறக்கும் சாவி.... 
    புன்னகையில் கொல்லும் பாவி...! 
சேர்த்து வைக்கப்பட்ட மௌனத்தின் பாடல்....!
ஒட்டுமொத்த மொழிகளின் ஒற்றைக்கவிதை....!
வானவில் உடுத்த நினைக்கும் ஓவியம்....!
பூமியை தனக்காக சுற்ற வைக்கும் நிலா ....!
சூரியனை சுட நினைக்கும் நெருப்பு...!
கடலை கைக்குட்டையாக்கும் கருவி...!
நட்சத்திரங்களை மேடையாக்கும் நாட்டியக்காரி...!
தென்றல் சேலை உடுத்தும் சோலை...!
சொர்கத்தின் பாதி சுனாமியின் மீதி ...!
வீட்டுக்குள் சுழலும் பூமி வீதியில் நடக்கும் சாமி ...!
கடவுள் இருந்த தவம் ஆண்கள் வாங்கிய வரம்...!
பிரம்மன் படைத்த பேரதிசயம் ....!!!
அம்மாவாய் ...
அண்ணியாய் ...
அக்கா தங்கையாய் ...
தோழிகளாய்....
எதிர்கால மனைவியாய் ...
சொந்தங்களாய்...
என்னை சுற்றி இருக்கும் 
எல்லா பெண்களுக்கும் 
இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்...!

25 June 2012

நண்பன்



அம்மா , காதல் என்ற சொல்லுக்கு அடுத்த படியாய் இந்த உலகில் உள்ள எந்த மொழியில் உச்சரித்தாலும் இனிக்கும் இன்னொரு சொல் நண்பன்.....! மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்கும் எப்போதும் இருக்கும் உறவு இந்த நண்பன் உறவு. நண்பர்களாய் வருபவர்கள் நம் வாழ்க்கையை கடந்து போவார்கள் இல்லையென்றால் கற்றுக்கொடுத்து விட்டுப்போவர்கள். எனக்கு கிடைத்த ஒரு நண்பன் வாழ்க்கையை கற்றுக்கொடுத்து விட்டுப்போனான். அவன்தான் இந்த படத்தில் இருக்கும் துரைராஜ்.

நான் படித்த SSM டிப்ளமோ கல்லூரியில் ஒரு பெட்டிக்கடைக்காரரின் மகனாய் எனக்கு கிடைத்தவன், எனக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுத்தவன். டிப்ளமோ கல்லூரிகளில் முதல் வருடம் இரண்டு  அல்லது மூன்று வெவ்வேறு துறைகளைச்சேர்ந்த மாணவர்களை ஒன்றாக அமரவைத்து பாடம் நடத்துவது ஒரு சில கல்லூரிகளில் வழக்கம், அப்படித்தான் எங்கள் கல்லூரியிலும். நான் எலெக்ட்ரிக்கல் இவன் கம்ப்யூட்டர் பிரிவு, எங்கள்  நட்பு ஆரம்பித்தது ஒரு சண்டையில் தான், ஆனால் அதுதான் முதலும் கடைசி சண்டையுமாய் இருந்தது. அப்போது எங்கள் கல்லூரியில் வகுப்புகள் பற்றாக்குறையின் காரணமாய் ஒவ்வொரு பாடப்பிரிவு ( PERIOD) முடிந்தவுடன் வேறு வகுப்பறைக்கு செல்ல வேண்டும். செய்முறை வகுப்புக்கு போய்விடும் மற்ற மாணவர்களின் வகுப்புகளில் நாங்கள் சென்று அமர்ந்து கொள்வோம், இது எப்போது நடக்கக்கூடிய ஒரு வாடிக்கை, 

அப்படி ஒரு நாள் நான் வகுப்பு மாறும் வேளையில் இரண்டாவது பெஞ்சில் அமர்ந்து விட்டேன்.( அப்போது யார் வேண்டுமானால் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து கொள்ளலாம் காரணம் அது கல்லூரியில் சேர்ந்த முதல் மாதம். ஆனால் அவர்கள் எப்போதும் இரண்டாவது பெஞ்சில் தான் உட்காருவார்கலாம், அது எனக்கு தெரியாது. ) இவன் தன் இன்னொரு நண்பனோடு (அருள் (DD&W) ) வந்து இது எங்கள் இடம் எழுந்திருங்கள் என்று கேட்டனர் அதற்கு நான் முடியாது நான் முதலில் வந்தவன் அதனால் நீங்க வேற சீட்ல போய் உக்காருங்கன்னு சொல்லிட்டேன். அவர்களும் என்னிடம் அதிகம் சண்டை போடாமல் எனக்கு  பின்னால் இருந்த சீட்ல போய் உக்காந்துட்டாங்க. இடைவேளையில் எல்லோரும் எழுந்து போகும்போதுதான் அதைகவனித்தேன், இவனுக்கு ஒரு கால் இல்லை, கட்டைக்கால் பொருத்திக்கொண்டு மெதுவாய் என்னைகடந்து  போனான் நான் இடிந்து போனேன். இவனிடமா சண்டை போட்டேனென மனசு குறுகிப்போனது. பிறகு அவன் திரும்பி வந்த போது மன்னிப்பு கேட்டு அவனை இரண்டாவது பெஞ்சில் அமரவைத்து நான் அவனுக்கு பின்னால் அமர்ந்து கொண்டேன். அப்போது அறிமுகமாகி நல்லா நண்பர்கள் ஆனோம், அன்று முதல் அவன் இரண்டாவது பெஞ்சிலும் நான் மூன்றாவதிலும் அமர்ந்தோம், அன்று இவனிடம் கற்றுக்கொண்டேன் எந்த சூழ்நிலையிலும் நாம் எதையாவது விட்டுக்கொடுத்தால் நமக்கு நல்லது நடக்குமென.

வகுப்பில் மற்ற எல்லோரையும் விட இவன் மீது அன்பும் நட்பும் அதிகமானது, எல்லாவற்றையும் நாங்கள் பகிர்ந்து கொண்டோம் நட்பு இவ்வளவு அழகானது என்பதை இவன்தான் கற்றுக்கொடுத்தான். சினிமா, ஓட்டல், வீடு, ஆற்றுப்பாலம், என எல்லா இடத்திற்கும் என்னோடு வருவான், என்னை இவனுக்கு மிகவும் பிடித்துப்போனதால் கம்ப்யூட்டர் துறையில் இருந்து எலெக்ட்ரிக்கல் துறைக்கு மாற்றம் கேட்டான் ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. பொதுத்தேர்வு வந்தது, எனக்கு பிடிக்காத, புரியாத பாடங்கள் இரண்டு, கணிதம் 1&2 மற்றும் டெக்னிக்கல் டிராயிங் ஆனால் அந்த இரண்டையும் அவ்வளவு பொறுமையாகவும் தெளிவாகவும் கற்றுக்கொடுத்தான்,நன்றாக கணக்கு போடும் மாணவர்கள் கூட தோற்றுப்போக நான் எல்லா பாடத்திலும் பாஸாயிட்டேன் அதுக்கு காரணம் இவன்தான்.அப்போது நமக்கு தெரிந்த நல்ல விசயங்களை  மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை இவனிடம் இருந்த கற்றுக்கொண்டேன்.

தேர்வு முடிந்த மதியம் கில்லி படத்துக்கும் ஒருவாரம் கழித்து ஊட்டியும் போய் வந்தோம், இன்னும் சில நாட்களில் கல்லூரி திறந்து விடும் இரண்டாம் வருடம் அடி எடுத்து வைக்கப்போகிறோம் என்ற நினைப்பில் இடியை இறக்கியது அந்த செய்தி, இவன் காலைத் தின்று பசியாறாத புற்று நோய் மீண்டும் பரவத்தொடங்கி விட்டது என்பதை ஜீரணிக்க முடியவில்லை, என்னென்ன வைத்தியம் செய்தும் இவன் உடல் நலம் தேறவில்லை, பணக்கஷ்டம் வேறு, நான் கல்லூரி முதல்வரின் அனுமதியோடு எல்லா மாணவர்களிடமும் கொஞ்சம் கொஞ்சம் பணம் சேர்த்து இவன் அம்மாவிடம் கொடுத்தேன் அந்த நிலையிலும் இவன் " எதுக்கு மச்சி இதெல்லாம்" என சிரித்தான்  அப்போது என்னால் அழத்தான் முடிந்தது, மருந்து செலவுக்காவது ஆகட்டும் என சொல்லி வந்தேன். எந்த நிலைமையிலும் அடுத்தவர்களிடம் கை ஏந்தக்கூடாது என்பதை அன்று கற்றுக்கொடுத்தான்,

எவ்வளவோ  முயற்சி செய்தும் கடைசியில் இதே நாள் (ஜூன் 26) இறந்து போனான், பதறியடித்து ஓடி இவன் உடலை மட்டும் பார்த்த போது கதறித்துடிக்கத்தான் முடிந்தது, அன்று சிந்திய கண்ணீர் அளவில்லாமல் போனது, 
இத்தனை நட்சத்திரங்களுக்கு மத்தியில் உள்ள ஒரே ஒரு நிலவு காணாமல் போனால் எப்படி இருக்குமோ...
இவ்வளவு பெரிய உலகிற்கு ஒளி கொடுக்கும் ஒரே ஒரு சூரியன் காணாமல் போனால் எப்படி இருக்குமோ...
அப்படி இருந்தது அந்த நாள், இவன் உடல் மீது அடுக்கப்பட்ட ஒவ்வொரு விறகும் இவனுக்கான கனவுகளாகவே எனக்குத் தோன்றியது,
எல்லாம் சாம்பலாய்ப் போனது.

எவ்வளவோ விசயங்களை கற்றுக்கொடுத்த இவன்தான் கடைசியில் இழப்பின் வலி எப்படி இருக்கும் என்பதையும் கற்றுக்கொடுத்தான்.
இன்று இவனது எட்டாவது வருட நினைவு நாள், இன்னும் இவன் என் நிழலோடு இருக்கிறான் என்பதை ஒரு உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கிறது. இவன் இன்று இருந்திருந்தால் நான் வேறு ஒரு ஆளாய் வெற்றி பெற்றிருப்பேன், இழப்புகள் வாழ்க்கையில் இயல்புதான், ஆனால் ஒரு சில இழப்புகள் ஒவ்வொரு நொடியும் வலி தரக்கூடியவை, அப்படித்தான் இவனும்.