20 May 2012

மின்சாரம் இல்லாத இரவு ...!



தொலைக்காட்சிப்பெட்டிகள்
ஊமையாகிப்போக
அழமுடியாத சோகத்தில்
அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறார்கள்
நாடக ரசிகைகள்....!

மொட்டைமாடிக்காற்றில்
முழுதாய் திரிகின்றன
காதலர்கள் கைப்பேசியில்
பரிமாறிக்கொள்ளும்
முத்தங்கள்....!

பனையோலை விசிறிகள்
முயற்சி செய்கின்றன
புழுதி படிந்த காற்றை விரட்ட...!

மின்சார உணவில்லாமல்
தற்காலிகமாய் இறந்து கிடக்கின்றன
மடிக்கனிணிகள்....!

தெருவோரங்களில் முளைக்கின்றன
பழைய பொருளாய் மாறிப்போன
கயிற்றுக்கட்டில்கள்...!

நீண்ட நாளைக்குப்பிறகு
கேட்கிறது குழந்தைகளை
தூங்க வைக்க பாட்டிகள்
சொல்லும் கதைகள்...!

எதுவும் இல்லாத
பழைய மனிதர்களின் வாழ்வும்
எல்லாம் இழந்த இன்றைய
மனிதர்களின் வாழ்வும்
வந்து போகிறது மனக்கண்ணில்....!

கருப்பு கொட்டிக்கிடக்கும் இரவை
இனிமையாக்குகிறது எங்கோ ஒரு
பண்பலை ஒளிபரப்பும்
இளையராஜாவின் பழைய பாடல்.....!
 

06 December 2011

குழந்தையின் சமையல்....!

சின்ன சின்ன பாத்திரங்கள் வைத்து
சமையல் செய்கிறேனென சொல்லி
இல்லாத காய்கறிகளை எடுத்துப்போட்டு
சில நிமிடங்கள் கழிந்தபின் நீட்டுகிறாள்
வெற்றிடம் நிறைந்த பாத்திரத்தை...

அதில் எதுவுமே இல்லையென்றாலும்
இருந்த பசியையும் அடக்கிவிடுகிறது
குழந்தையின்   சமையல்....!

10 June 2011

மாறாத சொற்கள் ...!








பணியின் நிமித்தமாக 
வெளியூரில் வேலை செய்து விட்டு 
விடுமுறையில் 
வீடு திரும்பும்போதெல்லாம் 
ஏதாவது ஒன்று மாறியிருக்கிறது ....!

வீடு புதிதாய் 
வெள்ளையடிக்கப்பட்டிருக்கிறது...
எப்போதும் கலைந்து கிடக்கும் 
என் புத்தக அலமாரி 
அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது..! 
மீன் தொட்டியில் 
இரண்டு மீன்கள் புதிதாய் வந்திருந்தன...!
டி வி யும், பீரோவும்
இடம் மாறி இருந்தன ...!
முகம் பார்க்கும் கண்ணாடி 
பெரிதாகி இருந்தது ...!
ஆனாலும் ....
ஒவ்வொருமுறை 
வீட்டுக்குள் நுழையும் போதும்...

"என்னடா 
உடம்பு இப்படி இளைச்சி போயிருச்சி
ஒழுங்கா சாப்படறியா இல்லையா ?"
என்கிற அம்மாவின் வார்த்தைகள் மட்டும் 
இன்னும் மாறவே இல்லை ....!  

06 February 2011

எழுத்து முத்தங்கள்....!





என் அலைபேசியின்
குறுந்தகவல்களில்
குவிந்து கிடக்கும்
சொற்களுக்குள் இன்னும்
ஈரமாகவே இருக்கிறது ....
நீ கொடுத்த எழுத்து முத்தங்கள்....!

25 January 2011




எல்லோரும் கத்தியை
உறைக்குள் தான் வைத்திருப்பார்கள்...!
நீ மட்டும் தான்
கண்களில் வைத்திருக்கிறாய்...!