21 May 2021

பற்றுதலில் உதிரும் துகள்

"திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன" என்னும் வாக்கியம் எதற்காக சொல்லப்பட்டது? இப்போதும் திருமணங்கள் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றனவா? அப்படியெனில் சொர்க்கத்திலிருந்து இந்த திருமணங்களை யார் நிச்சயிக்கிறார்கள்?என்னும் கேள்விகள் பல நாட்களாக மனதுக்குள் ஓடிய வண்ணம் இருக்கிறது. இதற்கெல்லாம் விடைகள் காண கட்டாயம் திருமணம் செய்திருக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் அது குறித்த தேடலும் அறிந்துகொள்ளும் ஆர்வமும் இருக்கும் பட்சத்தில் வயதின் மீது பொழியும் நினைவு மழையென காலம் பின்னோக்கி இழுத்துச்சென்று மறக்கமுடியா நாட்களின் ஈரத்தை மனமெங்கும் பரவச்செய்யும்.   

ஒருகாலத்தில் கல்யாணத்துக்கு போறோம் என்பதே பெரும் கொண்டாட்டமாக இருக்கும். புதுத்துணி போட்டுக்கலாம், இனிப்பு பலகாரங்கள் பாயாசத்தோடு நல்ல சாப்பாடு கிடைக்கும், கல்யாணம் வார நாட்களில் வருமெனில் பள்ளிக்கூடத்திற்கு லீவு போட்டுக்கலாம் என்பதையெல்லாம் தாண்டி, வெவ்வேறு ஊருகளில் இருக்கும் உறவுகளை ஒரே இடத்தில் சந்திக்கலாம் என்னும் சந்தோசம் மிகுந்திருக்கும். சிறுவயது கொண்டாட்டங்களுள் என்றைக்குமே மறக்க முடியாதவையாக அத்தை மாமா கல்யாணத்திலோ, சித்தி சித்தப்பா கல்யாணத்திலோ, தூரத்து உறவுகளின் கல்யாணத்திலோ விளையாடிக்களைத்து பரட்டை தலையோடு படிந்த பவுடர் முகத்தோடு ஒளிந்து ஒளிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் இன்னும் இருக்கத்தான் செய்யும். இவையெல்லாம்  ஆண்பிள்ளைகளுக்கு மட்டும் பொருந்தும். பெண் பிள்ளைகள் பெரும்பாலும் மருதாணி விரல்களோடும் கலையாத ஒப்பனைகளோடும் வலம் வருவார்கள்.


திருமண வீடுகளில் பெரிய பெரிய ஸ்பீக்கர்களில் "மணமகளே மருமகளே வா வா உன் வலதுகாலை எடுத்துவைத்து வா வா"ன்னு மணமகளுக்கான பாடல்கள் ஒலித்தபடி இருக்கும். மணமகனுக்கான பாடலை இதுவரை கேட்டதாய்  நினைவில்லை. பழைய மடக்கு சேர்கள், "வெல்கம் ட்ரிங்க்" என "லவ்ஓ , ரஸ்னா" க்களோடு உண்மையான அன்பையும், நியாமான கோபங்களையும் சுமந்தபடி நடந்து முடிந்த திருமணங்கள் ஏராளம். கூலிங்கிளாஸ் போட்டபடி அண்ணன்களும், ஊதா ரிப்பனோடும் கனகாம்பரம் பூவோடும் இருக்கும் சடையை முன்னாடி போட்டபடி அக்காக்களும் போட்டோவுக்கு போஸ் கொடுத்த காலங்கள் பேரழகு. பந்தியில் பரிமாற சிறுவர்களுக்கென ஒதுக்கப்படும் தண்ணீர் டம்ளர்களும் ஒடுங்கிய ஜக்குகளும் பால்யத்தின் நினைவுச்சின்னங்கள்.


 ஆண்டுகள் பல கடந்த பின்பு எல்லாவற்றையும் கான்ட்ராக்ட்  விட்டுவிட்டு ஆடம்பரத்திற்காகவும் கெளரவத்திற்காகவும் பல திருமணங்கள் நடந்தன. அவையெல்லாம் ரொக்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள். திருமணமென்னும் ஒருவார கொண்டாட்டங்கள் இரண்டு நாள் சம்பிரதாயங்களாக மாறிப்போயின. ஒருபக்கம் கல்யாண வயதைக்கடந்தும் ஆண்களும் பெண்களும் கனவுகளைச் சுமந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம்  சிறுவயதிலேயே மணமக்களின் அரைகுறை புரிதல்களோடு கல்யாணங்களும் நடந்தவண்ணம் இருப்பது முரண். இந்த அவசரயுகம் திருமணத்தை மட்டுமல்ல சேர்ந்து வாழ்வதையும் அவசர அவசரமாக முடித்துக்கொள்கிறது என்பதுதான் உண்மையான வேதனை. பிரிவதற்காக அத்தனை போராடும் பலருக்கு வாழ்வதற்காக அதில் பாதியாவது போராட வேண்டுமென்பது தெரிவதே இல்லை. அல்லது முயற்சிப்பதே இல்லை.


உலகை கைக்குள் கொண்டுவந்து அடக்கிய காலத்திற்கு முன்னால் இருந்த கூட்டுக்குடும்பங்களில் திருமணம், காதுகுத்து, வளைகாப்பு, சீர் போன்ற விசேஷங்கள் எத்தனை அழகாய் இருந்தன. மாமா-அத்தைகள், சித்தி-சித்தப்பாக்கள், பெரியப்பா-பெரியம்மாக்கள் அவர்களின் பிள்ளைகளென ஒட்டுமொத்த குடும்பத்தையும் வழிநடத்தும் தாத்தா பாட்டிகளென ஒரே கூடாரத்தின் கீழ் ஒட்டுமொத்த பிரியங்களும் அன்பும் கொட்டிக்கிடக்கும். கடந்த தலைமுறை மனிதர்கள் சந்தித்துக்கொள்ளும்போது அவர்களது சிறுவயது பட்டப்பெயர்களையோ குடும்பப்பெயர்களையோ சொன்னால் சட்டென அடையாளம் கண்டுகொண்டு உரையாடத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இப்போது..?  மிக நெருங்கிய சொந்தத்தில் நடக்கும் திருமணமொன்றில் கலந்திருப்பவர்கள் யார், என்ன உறவுமுறை எனத் தெரியாமல் கைப்பேசிகளுக்குள் மூழ்கிவிடுகிறோம். 


பிழைப்புக்காக வேறு வேறு ஊர்களுக்கு மாறிப்போனபின்பு எப்போதாவது உறவுகளின் திருமணத்திற்காக பிறந்த ஊருக்குப் போகும் மனிதர்களின் மனநிலை எத்தனை சந்தோசங்களால் நிரம்புகிறது. "இந்த தெருக்குழாயிலிருந்துதான் நான் தினமும் தண்ணி பிடிப்பேன், இந்த கடையில் தான் நாங்கள் வளையல்கள், தோடுகள் வாங்குவோம், அப்போ இங்க ஒரு திண்ணை இருக்கும் அதில் தான் பேருந்துகளுக்காக காத்திருக்கும்போது உட்கார்ந்திருப்போம், இந்த மண்டபத்தில் தான் எனக்கு சீர் வெச்சிருந்தாங்க" என்று பல கதைகளை தன் பிள்ளைகளிடம் சொல்லும் அம்மாக்களின் மனது  மருதாணியைப்போல மாதக்கணக்கில் சிவந்துகிடக்கும். "இந்த பள்ளிக்கூடத்துலதான் நான் படிச்சேன், இங்கதான் நான் முடிவெட்டிக்க வருவேன், இந்த மைதானத்தில் தான் நான் சைக்கிள் ஓட்டிப் பழகினேன், இந்த கோவில் திருவிழா அப்போதான் நீ பொறந்த" என்று தன் பால்யத்தை மகன்களிடம் சொல்லிக்கொண்டே நடக்கும் ஆண்களின் மனது பழைய காதலியைப் பார்த்ததைப்போல பல நினைவுகளை மீட்டெடுக்கும். அந்த அழகிய நினைவுகளின் ஈரத்தை, மருதாணி போன்ற வாசத்தை, கனவுகள் சுமந்து கொண்டிருக்கும் ஏக்கத்தை பல நாட்கள் மனம் அசைபோடும். சென்ற இடத்தில் கல்யாணநாளோ, பிறந்தநாளோ வந்துவிட்டால் உறவுகளோடு கூடித் திளைக்கும் அந்த நாள் இன்னுமொரு மறக்க முடியாத நாளாய் மாறும்.


இப்போது இருக்கும் சூழலில் இந்த சந்தோஷங்கள் எதுவுமில்லை. வாட்சப்பில் வந்து விழும் அழைப்பிதழ்களுக்கு வாட்சப் வழியாகவே வாழ்த்துகளையும் அனுப்ப வைத்திருக்கிறது காலம். நெருங்கிய சொந்தமென்றாலும் கூட திருமணத்திற்கு நேரடியாக வரவேண்டாமென சொல்லிவிட்டு வீட்டிலிருந்தபடியே நேரலையில் வாழ்த்துச்சொல்ல வைத்திருக்கிறது. தவிர்க்கவே முடியாமல் அழைக்கப்படும் உறவுகளும் கைகுலுக்கியோ, கட்டிப்பிடித்தோ நலம் விசாரிக்க முடியாமலும், வாழ்த்துகளை சொல்ல முடியாமலும், பாதங்கள் பணிந்து ஆசீர்வாதங்கள் வாங்க முடியாமலும் தனித்து நிற்கின்றன. இந்த சூழலை அறிவோடு பொருத்திப்பார்ப்பவர்கள் எதார்த்தத்தை எளிதாக கையாளுகிறார்கள். உணர்வோடு பொருத்திப்பார்ப்பவர்கள் வெளியில் புன்னகைத்தாலும் உள்ளுக்குள் ஒரு வெறுப்பு நெருப்பை அணையாமல் வைத்திருப்பார்கள்.


மிக நெருங்கிய உறவுகள் கூடவே இருந்து திருமணத்தை சிறப்பித்துவிட்டு ஆசீர்வாத மழையை அள்ளி வீசினாலும் கூட, மணமக்களுக்கு சந்தோஷமென்பது உடைந்துபோன கனவுகளின் மீது தெளிக்கப்படும் ஆறுதல் துளிகளாகத்தான் அவை இருக்கும். இப்போது திருமணம் செய்துகொள்ளும் இருவரும் எத்தனை  திருமணங்களுக்கு போயிருப்பார்கள், நண்பர்கள், உறவுகள்,  கூட படித்தவர்கள், வேலை செய்பவர்கள் என எல்லோரோடும் எத்தனை குதூகலமாய் கேலியும் கிண்டலுமாய் அந்த திருமணங்களைக் கடந்து வந்திருப்பார்கள், தங்களது கல்யாணமும் இப்படியெல்லாம் நடக்க வேண்டுமென எத்தனை கனவுகளை மனதுக்குள் அடுக்கி வைத்திருப்பார்கள். எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி, மிகச்சிலரோடு விரைவில் முடிக்கவேண்டுமென்ற நிபந்தனைகளோடு, போட்டோக்களுக்கு கூட முழுப்புன்னகையை கொடுக்க முடியாமல் நடந்தேறும் இந்த கொரோனா காலத்திருமணங்கள் எல்லாமே  நினைவுகளின் அலமாரியில் எப்போதுமிருக்கும் நிறைவேறாக்கனவுகளில் ஒன்றுதான். 


இந்த காலம் நிச்சயம் மாறும் இழந்து போன அத்தனை சந்தோஷங்களையும் இன்னொரு காலம் மூட்டை கட்டிக் கொண்டு வந்து கைகளில் திணிக்கும், அப்போது மனம் சுமந்த கனவுகளில் சிலவேனும் நிறைவேறும் வாய்ப்பு வரும். உறவுகளோடு கூடிக்களிக்க, நண்பர்களோடு ஆடித்திளைக்க, பயணங்கள் மூலம் பூமி அளக்க, வானம் நோக்கி சிறகுகள் விரிக்க இந்த வாழ்க்கை வழங்கும் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளவேனும் இப்போதைக்கு சில சங்கடங்களை தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். சில உறவுகளுடன் வரும் பிணக்குகள் நீர்க்குமிழி போல சட்டென உடைவதும், உடைந்த கண்ணாடியைப்போல சிதறியே கிடப்பதும் நேசத்தின் மீதான முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு தேவையான கடவுச்சொற்கள் மறந்துபோன தருணங்களாய் காலத்தின் பரணில் கைக்கு எட்டாத தூரத்தில் தூக்கி எறியப்பட்டுவிடுகின்றன. தொடுத்துக்கொண்டிருக்கும் ஈகோவை அன்பால் கட்டிவிட ஒரு பக்கம் தயாராய் இருந்தாலும் வெறுப்பின் கயிறுகளைக்கொண்டு இன்னும் கொஞ்சம் இறுக்கிக்கட்டிவிட மறுபக்கம் வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறது. 


எதன் பொருட்டும் உறவுகளின் அன்பை, பிரியங்களை இன்னும் இன்னும் நெருங்கி பற்றிக்கொள்ளவே கைகள் நீளுகின்றன. அந்த பற்றுதலில் உதிரும் ஒரு துகள் ஒட்டுமொத்த ஈகோவையும் உடைத்துத் தகர்க்குமெனில் கைகளை இன்னும் கொஞ்சம் இறுகப்பற்றுவோம். பிரியங்களின் கூடாரத்தில் அலங்காரங்களாய் இருக்கும் பொய்களைவிட அவசியமாய் இருக்கும் உண்மைகளை இன்னும் கொஞ்சம் நேசிப்போம்.

24 March 2021

பெண் என்னும் கம்பீரம்

ஆதாம் என்னும் ஆண் மகனால் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்துவிட முடியாது என்னும் கருணையால் ஏவாள் படைக்கப்பட்டிருக்கலாம், அல்லது ஆதாம் எங்கே நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்துவிடுவானோ என்னும் பொறாமையால் கூட ஏவாள் படைக்கப்பட்டிருக்கலாம். எப்படியாகினும் இந்த உலகம் மனித இனம் தோன்றிய காலம் தொட்டே பெண்ணின் துணையில்லாமல் உருமாறி நிறம் மாறி இப்போதிருக்கும் இந்த நிலையை அடையவில்லை. காலங்காலமாக பெண்ணின் பங்களிப்பு இல்லாமல் முன்னேறிய குடும்பம் என்பது அரிதிலும் அரிதாகவே இருக்கக்கூடும். பூமிக்கு ஒன்றை நிலவும், ஒன்றை சூரியனும் போல, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் ஆணிவேராக இருப்பாள். அவள் தான் ஏதேதோ வழிகளில் எங்கெங்கோ கைமீறிச் செல்லும் குடும்பத்தின் பொருளாதாரத்தை இழுத்து தன் முந்தானையின் முனையில் முடிச்சி போட்டுவைத்திருப்பாள், வந்தவழி தெரியாமல் போக இருக்கும் சில்லறை நாணயங்களையெல்லாம் சிறுவாட்டுக்காசென பானைகளுக்குள்ளும், கடுகு டப்பா, சீரக டப்பாக்களிலும் சேர்த்து வைத்திருப்பாள். ஆபத்து காலங்களிலோ அவசர நேரங்களிலோ கைகளில் எதுவுமற்று திணறி நிற்கையில் அவள் சேமிப்புதான் கைகளுக்குள் வந்து எதுவோ ஒன்றுக்குள் சிக்குண்டு கிடக்கும் குடும்பத்தைக் காப்பாற்றும். 

ஒரு ஆண் அத்தனை எளிதில் சேமிப்பை தொடங்க மாட்டான். தன் உடன்பிறப்புகளுக்கு, உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, என அவன் செய்யும் செலவுகள் ஏராளம். அத்தை பெண்களுக்கும் மாமா பெண்களுக்கும் பிரியங்களின் மிகுதியால் செய்யப்படும் தாராள செலவுகளும் கணக்குகளுக்குள் வராதவை. ஆனால் ஒரு பெண் அப்படி எடுத்த எடுப்பில் சட்டென செலவு செய்து விடுவதில்லை. ஒவ்வொரு ரூபாய்க்கும் அவளுக்கென சில பொறுப்புகள் இருக்கிறது. அதையும் மீறி இந்த செலவு அவசியமா அவசியமில்லையா என்று ஆராயும் அறிவும் இருக்கிறது. ஆண்களில் இந்த ஆராயும் அறிவு வெகு சிலருக்கு மட்டுமே இருக்கிறது. மளிகைக்கடையில் காசு கொடுத்து வாங்கும் கருவேப்பிலை தொடங்கி பட்டுச்சேலை வரை அவர்கள் செய்யும் செலவுகளுக்கு நிகராக மிச்சம் பிடிப்பதிலும் கொஞ்சமும் சமரசம் செய்து கொள்வதில்லை. இதற்கு நேர்மாறான பெண்களும் இருக்கவே செய்கிறார்கள். போகிற போக்கில் காரணமே இல்லாமலும் அவசியமே இல்லாமலும் செய்துகொள்ளும் செலவு அவர்களுக்கானது அல்ல, இந்த சமூகத்தின் பார்வையில் தங்களையும் தங்களுக்கு இணையாகவோ அல்லது மேலாகவோ உள்ளவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு தாங்களும் இப்படி வாழ்கிறோம் என்பதைக் காட்டுவதற்கான அறிகுறிகள் தான் அந்த செலவுகள். இவை பெரும்பாலும் தற்பெருமைக்காகவும், கெளரவுத்திற்காகவும் மட்டுமே செய்யப்படுபவை. 

கணவனை இழந்து முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஒரு பெண் தெருவோரத்தில் கட்டிலில் கடை போட்டு மாங்கா, எழந்தபழம், நவாப்பழம், கொய்யா, நெல்லிக்கா, மாலை வேளைகளில் பஜ்ஜி, போண்டா போட்டும் விற்பனை செய்து தன் நான்கு பிள்ளைகளுக்கும் தனியாளாக நின்று கல்யாணம், சீர் செணத்தி செய்துவைத்து இப்போதும் அந்த கடையை அதே இடத்தில் நடத்திக்கொண்டிருக்கிறார். வாழ்வின் மீதான பேரார்வம் மட்டுமே அவரை இன்னும் தொடர்ந்து இயங்கவைக்கிறது. தனாக்கா கடை என்பது அந்த பகுதிக்கான அடையாளமாய் மாறியதில் தான் அவர் வெற்றி இருக்கிறது. 

அதே தெருவில் தான் பணியாரக்காரம்மாவும் இருந்தார். பலபேரின் காலை பசியை போக்கியது அவர்தான். விடியற்காலையிலேயே மண் அடுப்பை பற்றவைத்து ஒரு அடுப்பில் பணியாரம், ஒரு அடுப்பில் இட்லி என ஊற்றி வைத்து காலை உணவை தயாரித்து விற்பவர். கூடவே கஞ்சி கொலாப் புட்டும் விற்பார். அத்தனை சூட்டிலும் அத்தனை வயதிலும் அத்தனை சுறுசுறுப்பாக இருப்பார். அடுப்பு சூட்டில் முகமெல்லாம் வியர்த்து வழியும் அதை முந்தானையில் துடைத்தபடி காத்திருக்கும் எல்லோருக்கும் இட்லி, பணியாரம் போட்டு சட்னி சாம்பார் ஊத்தி, காசை வாங்கி போட்டு சில்லறை கொடுத்து, விறகு மாற்றி, அங்கேயே சாப்பிட்டவர்களின் தட்டுகளைக் கழுவி, அடுத்த நாளுக்கான தேவைகளை கடைக்கு, மார்க்கெட்டுக்கு போய் வாங்கி வருவதென எல்லாமே ஒரே ஆள் தான். எத்தனையோ பேர் கடை வைத்தும் அந்தம்மா கொடுக்கும் ருசியை யாராலும் கொடுக்க முடியல. அதான் அவர் பட்ட கஷ்டத்திற்கான பரிசும் உழைப்பிற்கான அங்கீகாரமும். 

பாவாயக்கா டீக்கடைன்னா ஏரியாவில் தெரியாத ஆட்களே இருக்க மாட்டார்கள். ஆண்களே கொஞ்சம் பயப்படும் அளவுக்கு அத்தனை கம்பீரமும் ஆண்களுக்கு நிகராக தைரியமும் கொண்ட பெண் அவர். என் சிறுவயதில் டீ வாங்கப்போகும் போதெல்லாம் கைல தினத்தந்தியோட அவங்க டீ போடும் அழகை பார்த்துட்டே இருப்பேன். மளமளவென கண்ணாடி டம்ளர்களைக் கழுவி, வரிசையாக வைத்து பாலையும் டிக்காசனையும் கலந்து மேல தூக்கி ஒரு ஆத்து ஆத்தி வரிசையாக ஊற்றி அவர் எடுத்துக்கொடுக்கும் அழகே தனி தான். இப்போ அவர் இல்ல ஆனாலும் பெண்கள் நடத்தும் டீக்கடைகள் அந்த பகுதியில் இருக்கின்றன. பாவாயக்கா மாதிரி டீ போடும் பெண்கள் இப்போது இருந்தாலும் அவரிடம் இருந்த கம்பீரமும் தைரியமும் எல்லா பெண்களிடமும் இல்லை. 

தேர்வீதியில் செளடேஸ்வரி அம்மன் கோவில் எதிரில் ஒரு அம்மா அரிசி கொலாப்புட்டு செய்து விற்பார். ஒரு குட்டிப்பானையில் நீரூற்றி சுட வைத்து ஒரு பக்கம் அடைக்கப்பட்ட மூங்கிலை வைத்து மறு பக்கம் ஒரு துணியை வைத்து அதில் கொலாப்புட்டு செய்யத் தேவையான அரிசி மாவை மிக நேர்த்தியாக நிரப்புவார். வெந்த கொலாப்புட்டை இறக்கி துணியை நகர்த்தி கத்தியில் அறுத்து வாழை இலையில் வைத்து கட்டி சர்க்கரை பாகை ஊற்றிக்கொடுப்பார். வீட்டில் வைத்து சர்க்கரை பாகை மட்டும் குடித்துவிட்டு விக்க விக்க கொலாப்புட்டை சாப்பிட்டிருக்கிறேன். அதன் ருசி ஒவ்வொரு நரம்பிலும் இறங்கி இருக்கிறது. வெளியூர் ஓட்டல்களின் விலைப்பட்டியலில் கொலாப்புட்டு கொண்டைக்கடலை என்னும் எழுத்துகளைப் பார்க்கும் போதெல்லாம் இந்தம்மாதான் நினைவுகளுக்குள் நிரம்புவார். இப்போ அவங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் தன் மருமகள் மூலம் அந்த கொலாப்புட்டு கடையை நடத்துகிறார். ஆனால் அந்த ருசி இன்னும் அப்படியேதான் இருக்கிறது. இப்போதும் காத்திருந்து வாங்கி வந்து சாப்பிடுவது வாடிக்கையாகவே இருக்கிறது. 

கார வேலை செல்லமக்கான்னு சொன்னா எல்லோருக்குமே தெரியும். அவங்க கட்டிட வேலைகள் செய்யரவங்க. நல்ல உயரம், கணீர்க் குரல், உடம்பில் அவ்ளோ வலு இருக்கும். ஒரே நடையில் பத்து செங்கல்னாலும் தூக்கிட்டு ரெண்டு மாடி ஏறிப்போவாங்க. பெரிய பெரிய கருங்கல்லாக இருந்தாலும் அலாக்கா தூக்கிட்டு போய் போடுவாங்க, சாரத்தின் மேல நிற்கும் மேஷன் ஆளுக்கு ரெண்டு செங்கல்லை லாவகமா தூக்கி போடுவாங்க. நான் கடைசியா பார்த்த வரைக்கும் கூட அதே வேலைக்குத்தான் போய்ட்டு இருந்தாங்க. தன்னைப்போலவே தன் இரு பெண் பிள்ளைகளுக்கும் எல்லா வேலைகளையும் நல்லா பழக்கிவிட்டவங்க. இப்பவும் எங்க பார்த்தாலும் அந்த கணீர்க் குரலில் கூப்பிட்டு பேசுவாங்க. அவரை மாதிரி கட்டிட வேலை செய்யும் பெண்ணை இதுவரைக்கும் பாக்கல.

பூக்காரம்மா, பலாச்சுளைக்காரம்மா, மீன்காரம்மா ன்னு இன்னும் ஊருக்குள்ள நெறைய பெண்கள் இருக்காங்க, ஆண்களோடு துணையில்லாமல் தைரியமாக முட்டி மோதி, பல அவமானங்களைத் தாண்டி மேலே வந்தவங்க. இப்போதும் உழைத்துக்கொண்டே இருப்பவர்கள். அவர்களையெல்லாம் ஏதோ ஒரு தருணங்களில் காணும் போதும் கடக்கும் போதும் வாழ்வின் மீதான நம்பிக்கை பிறக்கிறது. அவர்கள் தான் பலபேருக்கு ஆகச்சிறந்த நம்பிக்கை கடத்திகளாக இருக்கிறார்கள். சோர்ந்து விழும்போதெல்லாம் சட்டென எழுந்துகொள்ளத் தூண்டுகிறார்கள். ஆண்களின் துணை இல்லையெனில் இந்த சூன்யம் நிறைந்ததாக மாறிவிடும் என்று நினைத்து வருத்தப்படும் பல பெண்களுக்கான பலமாக பாடமாக இவர்கள் இருக்கிறார்கள். 

யுகம் யுகமாய் மனித இனம் வாழ்வதற்கு இன்றியமையாத தேவைகளாய் இருப்பது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் மட்டுமல்ல பெண்களும் தான்.

24 February 2021

தடுமாறும் தலைமுறை

அறிவியலும் விஞ்ஞானமும் போட்டிபோட்டு வளர்ந்துகொண்டிருக்கும் காலத்தில் வருடங்கள் சட்டென ஓடிவிடுகின்றன. போட்டிகளும் பொறாமைகளும் நிறைந்ததாய் ஒரு தலைமுறை எதையோ நோக்கி, எதையெதையோ தேடி வேகமாய் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வேகத்தால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் அடுத்தவர்களுக்கும் சேர்த்தே பல அசெளகரியங்களை போகிறபோக்கில் திணித்துவிட்டுப் போகிறார்கள் என்பது தான் ஏற்றுக்கொள்ள முடியாத வேதனை. 

காலத்தின் கைகளில் எல்லோருக்குமான நல்ல விஷயங்களைப்போலவே சில கெட்ட விஷயங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு தலைமுறை தன் நல்ல விஷயங்களையும் கூட கெட்ட விஷயமாக மாற்றிக்கொண்டிருப்பதுதான் இங்கே ஏற்றுக்கொள்ளவே முடியாத மாற்றமாக இருக்கிறது. அம்மாவுக்கு ஓய்வு கொடுக்கணும், அப்பாவின் சுமையை கொஞ்சம் தானும் ஏற்றுக்கொள்ளனும், தன் கூடப்பிறந்தவர்களை நல்லா படிக்கவைக்கணும், நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி கொடுக்கணும், அப்பறம் தான் நம்ம கல்யாணத்தை பற்றி யோசிக்கணும் என்று முப்பது வயதான பின்னும் தன் குடும்பத்தை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வராமல் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நல்ல இளைஞர்கள் கடந்த தலைமுறையோடு நின்றுவிட்டார்கள்.
யாருக்கு என்ன நடந்தாலும் நடக்காவிட்டாலும் அதைப்பற்றிய கவலையோ, அக்கறையோ எனக்கு இல்லை என்று அணைபோட முடியாத காட்டாற்று வெள்ளம் போல ஒரு தலைமுறை இங்கு கண் முன்னே உருவாகிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. 

தன் சந்தோசமே பெருசு அதற்காக என்ன விலை கொடுத்தாலும், யார் எத்தனை துன்பப்பட்டாலும் அதை அடைந்தே தீருவது என பலர் "சுயபோதை" ஒன்றுக்குள் மூழ்கிப்போய்க் கிடக்கிறார்கள். அவர்களால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களைச்சார்ந்த குடும்ப உறவுகளும், நட்பு வட்டமும் அடையும் வருத்தங்கள் ஏராளம். பதின் பருவ வயதென்பது மதில்மேல் இருக்கும் பூனையைப்போல எப்போது எந்த பக்கம் குதிக்குமென கணித்துவிட முடியாத வயது. சிலசமயங்களில் சட்டென இறக்கை முளைத்து வானத்தையும் தாண்டி பறக்க நினைக்கும், சில சமயங்களில் தனிமைகளின் இருளுக்குள் புதைந்துகொண்டு தலைகாட்ட மறுக்கும். அந்த வயதின் மூர்க்கங்களை அடக்கி அது தடுமாறும் போதெல்லாம் தமக்கு வேண்டிய பக்கங்களில் திருப்பி ஒரு கட்டுக்குள் வைத்துக்கொள்கின்ற கலை எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. 

குழந்தை வயதென்பது பெற்றோர் சொல்லும்படி முழுவதுமாக கேட்கவில்லையெனினும் அடிவிழுமென்ற பயத்தின் பொருட்டு தேவையானவற்றை கேட்கும். கல்யாணமானபின்பு புதிதாய் இணைந்த இன்னொரு உறவையும் அது சார்ந்த இடங்களையும் பொறுத்து கொஞ்சம் தன்னிலை உணர்ந்து செயல்படும். முதிர் பருவமென்பது பேரன் பேத்திகளுக்காக, இனி தனித்து இயங்க முடியாத சூழலின் வலியை மறைப்பதற்காக, பல இடங்களில் ஆறுதலாக பல இடங்களில் அன்பாக இருக்கவேணும் சில விஷயங்களுக்குள் அடங்கும். ஆனால் இந்த இளவயதென்பது யார் சொன்னாலும் கேட்காத, யார் வலியையும் பொருட்படுத்தாத, யார் வழியையும் பின்பற்றாத தற்காலிக சுகத்துக்கான பாதைகளில் அதீத ஆசைகளோடு அதி வேகமாக பயணிக்கக்கூடிய ஒன்று.

ஒருகாலத்தில் அடர்ந்த கருவேல மரங்களைக்கொண்டிருந்த காடுகள் அவை. இப்போது வளர்ச்சியின் பொருட்டு நகரத்தின் முக்கிய மையப்புள்ளியாக மாறியிருக்கும் இடம். பேருந்து நிலையம், நீதிமன்றம், பெரிய மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என்று எல்லாவிதமான வசதிகளும் வந்து குவிந்திருக்கும் இடம். அங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் சொந்த வீட்டுக்காரர்கள், பெரிய பெரிய வேலைகளில், சொந்த தொழில்களில் முன்னேறியவர்கள். அவர்களின் வீடுகளில் இருக்கும் பதின் பருவப்பிள்ளைகளின் போக்கு எதிர்காலத்தை நினைத்து நமக்கே பயத்தை சுரக்க வைக்கும் நேரங்களில் கூட அவர்களின் பெற்றோர் அவர்களைக் கண்டிப்பதோ கடிந்து கொள்வதோ அடக்கி வைப்பதோ இல்லையென்பதுதான் கூடுதல் கொடுமை. பெரிய இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் பண்ணியதும் சட்டென வேகமாய் முறுக்கி எடுத்த எடுப்பில் டாப் கியரில் பயணிக்கும் நொடி நமக்குள் பலவிதமான பயத்தை கொடுக்கிறது. நண்பர்களோடு சேர்ந்து இரவு நேரங்களில் ரேஸ் போவது சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களைப்போல இங்கேயும் வந்துவிட்டது. இரவு நேரம் ஆள் நடமாட்டம் இல்லாத நேரமென்பதால் சாதாரணமாக மணிக்கு 80கிமீ வேகத்தில் வீடுகளும் குழந்தைகளும் அதிகமுள்ள தெருக்களில் பயணிப்பதை பார்க்கமுடிகிறது. அந்த பெரிய பெரிய வண்டிகளின் சத்தம் தூங்கிக்கொண்டிருக்கும் வயதானவர்களை, குழந்தைகளை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்குகின்றன.

பள்ளிக்கூட படிப்பை முழுவதுமாக முடிக்காத பதின்பருவப்பிள்ளைகள் அவர்கள். ஆண்ட்ராய்ட் மொபைல்களின்மேல் அதிக நாட்டம் கூடவே போட்டோகிராபி/மாடலிங் மீது ஆர்வம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறை சார்ந்த ஆர்வமே அவர்களை படிக்கவிடாமல் செய்திருக்க வேண்டும். சொல்லி வளர்க்கவோ, பார்த்து வளரவோ கூடப்பிறந்தவர்களும், உறவுகளும் இல்லாமல் வளர்ந்த பிள்ளைகள். திருடவோ, குற்றச்செயல்களிலோ ஈடுபடாமல் பொருளீட்டும் வண்ணம் சின்ன சின்ன வேலைகள் செய்து அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து தங்களது சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்தவர்கள். ஒருகட்டத்தில் திருமண விழாக்களில் சமையல், பரிமாறும் வேலை என செய்து கொஞ்சம் அதிக பொருளீட்டும் இடம் நோக்கி நகர்ந்த பின்பு அவர்களது ஆசைகளும் அதிகமாகியிருக்கின்றன. கைகளில் தாராளமாய் காசு தங்க, மது, புகை, புகையிலை உள்ளிட்ட அவர்களின் கூடவே தங்கிவிட்டது. ஒருவனைப்பார்த்து மற்றொருவன் என எல்லோரும் குடிக்கு வெகு சீக்கிரமே சிநேகமாகிப்போனார்கள். தங்களது வாழ்க்கை இந்த பதினெட்டு வயதுக்குள் மிகக் கோரமாக முடிவுக்கு வரப்போகிறது என்பது தெரியாமலே ஒரு பெரிய தீம் பார்க் நோக்கிய பயணத்தை அந்த அர்த்த ராத்திரியில் தொடங்கினார்கள். 

நட்புக்கூட்டத்தில் கார் வைத்திருந்த ஒருவனோடு சேர்த்து எட்டு பேர் ஆம்னியில் புறப்படுகிறார்கள் போகும்போதே வாங்கிவைத்த சரக்கு பாட்டில்கள் காலியாக காலியாக இவர்கள் போதைக்குள் முக்கால்வாசி மூழ்கிப்போனார்கள். தேசிய நெடுசாலையில் பயணிக்கத்தொடங்கும் போது வேகத்தால் பறக்கத்தொடங்கியிருக்கிறார்கள். போகிற வழியெங்கும் வேறுவேறு ஆட்கள் காரை ஓட்டிக்கொண்டு போகிறார்கள் போதையோடு. தங்களுக்கு முன்னால் போன அரசுப்பேருந்து யாரோ ஒரு பயணியை இறக்கிவிட நிறுத்த, அந்த பயணியும் இறங்கி சாலையைக்கடக்க அதிவேகத்தில் ஆம்னியில் வந்தவர்கள் அவரையும் அடித்துத்தூக்கி காரைக்கொண்டு போய் அரசுப்பேருந்தில் மோத சாலையைக்கடந்த பயணி உட்பட காருக்குள்ளிருந்த ஐந்து பேர் என மொத்தம் ஆறுபேரும் சம்பவ இடத்திலேயே கோரமாக மரணிக்கிறார்கள். மீதமுள்ளவர்களுக்கு பலத்த அடி, ஒருவனுக்கு கால் போய் விட்டதாகவும் சொல்கிறார்கள். இதை விதி என்று எல்லோரும் ஒற்றை வார்த்தையில் விளக்கம் சொல்லி விலகிப்போனாலும் அந்த வேகமும் போதையும் எத்தனை குடும்பங்களைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. 

பெங்களூரின் பிரபலமான பாலமொன்றில் நடந்த கார் ரேஸில் விபத்து நடந்து பதினெட்டு வயது பூர்த்தியாகாத மருத்துவரின் மகன் தலை துண்டாகி இறந்ததாகவும் கார் பாலத்தை தாண்டி மறுபக்கம் விழுந்து நொறுங்கியதாகவும் ஒரு செய்தி படிக்கும் போதே பதைபதைக்க வைக்கிறது. இதுபோன்ற பல செய்திகளை தினமும் பத்திரிக்கைகளும் இணையப்பக்கங்களும் தாங்கி வருகின்றன. இவற்றையெல்லாம் படித்து நாம் சாதாரணமாக கடந்து போய்விடுவோம் ஆனால் அந்தந்த குடும்பங்களுக்கு அது எப்போதும் ஆறாத ரணமாகவே இருக்கும். வருட வருட புத்தாண்டு இரவுகள் கொண்டாட்டமாக தொடங்கும் அதே நேரத்தில் எத்தனையோ விபத்துகள் நடக்கின்றன, திடீர் மரணங்கள், கை கால்கள் இழப்புகள், மேனியெங்கும் சிராய்ப்புகள் என ஒரு இரவு கொண்டாட்டங்களையும் துக்கங்களையும் சரிசமமாக கொண்டு வந்து நம்முன்னே வைக்கிறது ஆனால் நமக்கு நடக்காத வரை கொண்டாட்டங்கள் மட்டுமே நம் கண்களுக்கு தெரிகின்றன. 

இந்த மாதிரியான விஷயங்களால் அதிகம் பாதிக்கப்படுவது பெரும்பாலும் இளைய தலைமுறை பிள்ளைகள் தான். என் மகன் ஆறாவது தான் படிக்கிறான் இப்பவே என்னைய வெச்சி வண்டில கூட்டிட்டு போறான்னு பெருமையாக சொல்லிக்கொள்ளும் அம்மாக்களும், உங்க பையன் மூனு பேரை வெச்சிக்கிட்டு வேகமா வண்டி ஓட்டிட்டு போறான் கொஞ்சம் சொல்லிவைங்க என்று பக்கத்துவீட்டுக்காரரோ, தெருவில் வசிப்பவரோ சொல்லும் போதும் அதை கண்டிக்காத அப்பாக்களுமே தங்கள் பிள்ளைகளுக்கு நேரும் விபத்துகளுக்கு பாதை அமைத்துக்கொடுக்கின்றனர். வசதியில்லாத பிள்ளைகளுக்கு கிடைக்கும் புது சைக்கிளில் எல்லா சந்தோஷங்களையும் ஒரு வரையறைக்குள் அனுபவித்துக்கொள்கிறார்கள். அதீத செல்லமும், வசதியும் கிடைக்கப்பெறும் பிள்ளைகள் கொஞ்சம் வழி மாறிப்போவது உண்மை. அதனால் உண்டாகும் வலியும் உண்மையே. 

தடுமாறும் நாட்டையோ நாட்டின் பொருளாதாரத்தையோ ஒரு தனிமனிதனாக ஒரு குடும்பமாக நம்மால் சரி செய்யவே முடியாது அது அத்தனை சுலபமான காரியமும் அல்ல. ஆனால் தடுமாறும் அடுத்த தலைமுறை பிள்ளைகளை தனியாளாக, குடும்பமாக சேர்ந்து நல்வழிப்படுத்துவது அத்தனை கஷ்டமும் அல்ல. அன்போடு சேர்த்து கொஞ்சம் கோபத்தையும் , சுதந்திரத்தோடு சேர்த்து கொஞ்சம் இறுக்கிப்பிடித்தலையும், புன்னகையோடு சேர்த்து கொஞ்சம் கண்டிப்பையும் கையாளுங்கள். உங்கள் பிள்ளைகளின் ஆசைகளை, கனவுகளை நிறைவேற்றத்துடிக்கும் அதே சமயம் அவனுக்கான ஒரு முழு வாழ்க்கை இருக்கிறது என்பதையும் உணர்த்துங்கள்.