14 July 2016

சில ரகசியங்கள்





யாருக்கும்
சொல்லிவிடக்கூடாதெனவோ
தெரிந்துவிடக்கூடாதெனவோ
எல்லோருக்குள்ளும் ஒளிந்து கிடக்கின்றன
சில ரகசியங்கள்

வாய்வரை வந்துவிட்டு
உதடுகளை உச்சரிக்க விடாமல்
உள்சென்று ஒடிந்து விழுந்து விடுகின்றன
சில ரகசியங்கள்

காக்கப்படுமென
நம்பியதை உடைத்து
காற்றில் மிதந்து வந்து
நம் காதுக்குள்ளே நுழைகின்றன
நாமே சொன்ன
சில ரகசியங்கள்

தொடுதிரையில்
வார்த்தைகளைக் கோர்த்து
கவிதையெனவோ கட்டுரையெனவோ
தலைப்புகளைத் தாங்கி வருகின்றன
சில ரகசியங்கள்

யாருக்குமே சொல்லாமல்
நிழலுக்கும் தெரியாமல்
எரியூட்டப்பட்ட உடலோடு
சாம்பலாகிப் போயிருக்கின்றன
சில ரகசியங்கள் ...!



09 July 2016

உள்ளத்தனைய உடல்

#உள்ளத்தனைய உடல்
#21DaysChallenge
#Completed

இந்த குழுவில் இணைவதற்கு முன்னால் நானும் சோம்பேறிதான்
ஆனாலும் எப்போதாவது நண்பர்கள் கிடைத்தால் உடற்பயற்சி செய்வதுண்டு,  துணைக்கு யாருமில்லையென்றாலோ தூக்கம் என்னை எழ விடவில்லையென்றாலோ பெங்களூர் குளிருக்கு கதகதப்பாய்  போர்வைக்குள் புதைந்துவிடுவதுண்டு.

எதேச்சையாய் இந்த குழுவில் இணைந்து ஒரு ஆர்வத்தில் முதல் நாளே ஓவராக ஓடிவிட்டேன்.  நீண்ட நாள் இடைவெளியோ அல்லது திடீரென அதிகமாய் உடலுக்கு வேலை கொடுத்ததாலோ காய்ச்சல் வந்து மூன்று நாளாய் பெரும் அவஸ்தை.  இனி இதை முயற்சிக்க வேண்டாமெனவும் குழுவிலிருந்து வெளியேறி விடலாமெனவும் தோன்றியது. அதே சமயம் இன்னொரு முறை முயற்சித்துதான் பார்ப்போமே என ஏதோ ஒரு உள் மனம் சொல்ல மீண்டும் தொடங்கினேன் .

முதலில் எடுத்ததும் ஓடாமல் மெதுவாய் நடைப்பயிற்சியில் தொடங்கி 3km நடந்து பின் ஒவ்வொருநாளும் தூரத்தை அதிகப்படுத்தி வேகமாய் நடந்து மெதுவாய் ஓடி உடலை ஒரு புதிய பழக்கத்துக்கு கொண்டு வந்தேன்.
தினமும் எதாவது ஒரு வகையில் என் பயிற்சியை தொடர்ந்தேன்

பக்கத்திலிருக்கும் கடைக்கு கூட பைக் எடுத்துக்கொண்டு போகும் நான் இப்போதெல்லாம் 7 அல்லது 8 KM தூரமானாலும் சிரமமில்லாமல் யார் துணையுமில்லாமல் நடக்க முடியுமென நம்புகிறேன். பவானியிலிருந்து சித்தோடு-ஈரோடு வரைகூட  நடந்து போக முடியும்.

இந்த சவாலை நான்  பெங்களூரில்  தொடங்கியபோது வெளியூர் பயணம் , சுற்றுலா திட்டம் , சொந்த ஊர் பயணம் என பல இடஞ்சல்கள் வந்தன , அதையெல்லாம் சமாளித்து  போகும் இடங்களிலெல்லாம் பயிற்சியை எதோ ஒருவகையில் தொடர்ந்தேன்.  நடக்க, ஓட முடியாத போது சைக்கிள், வெளியூர் போனால் நடைபயிற்சி தடைபடும்  நேரங்களில் நிறுத்தத்திற்கு 5km முன்னாடியே இறங்கி நடப்பது , மழை காரணமாக வெளியே போக முடியாத தருணங்களில் ஜிம்மில் அல்லது தங்கியிருந்த அறைக்குள் பயிற்சி செய்வதென நான் தோற்கப்போகும் தருணங்களில் எல்லாம் என்னை நானே வென்றெடுத்தேன் .

ஒவ்வொரு முறையும் என் தூரத்தையும் என் நேரத்தையும் அதிகமாக்கி என்னால் முடிந்தவரை இந்த 21 நாட்களாய் மிகச்சரியாக  பயன்படுத்தினேன் . இந்த 21 நாட்களில் நான் இழந்தவையென  பார்த்தால் ..
இடையும்-எடையும் அலுப்பும்-கொழுப்பும் உணவும்-வியர்வையும் துக்கமும்-தூக்கமும்

கிடைத்தவையெனப் பார்த்தால்
அன்பும் நட்பும்
உந்துதலும் பாராட்டுக்களும்
அறிவுரைகளும் ஆலோசனைகளும்
வாழ்த்துக்களும் வரவேற்புகளும்
முயற்சிகளும் வெற்றிகளும்
என இன்னும் இன்னும் நிறைய.

வழக்கமாய் அலுவலகம் விட்டு வந்தவுடன் கதவைத் தாழிட்டு கைப்பேசியோடு கடினமாய் கடக்கும்  என் சாயங்கால நேரங்கள் இந்த நாட்களில் எத்தனையோ புது உறவுகளை புது இடங்களை புது வ(லி)ழிகளை புது நம்பிக்கைகளை புது வெற்றிகளைக் கொடுத்திருக்கிறது.  இதெல்லாம் இந்தக் குழுவிலுள்ள ஒவ்வொருவராலுமே சாத்தியம் .

இதை இன்னும் இன்னும் தொடரனும் இன்னும் பல தடைகளை இன்னும் பல இடங்களைக் கடந்து பயணிக்கணும் ... பயணிப்பேன்.

என் சின்னச் சின்னப் பதிவுகளுக்கும் லைக் போட்டு என்னை ஊக்கப்படுத்தி என்னை வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் இதயம் நிரம்பிய நன்றிகள்.

குறிப்பாக குருநாதர் ஷான் கருப்பசாமி
அவர்களுக்கும் , ஈரோடு கதிர் அண்ணன் அவர்களுக்கும் குறையாத நன்றிகள் .

---தனபால் பவானி
#பெங்களூரிலிருந்து

சிறகைப் பறக்கவிடு

உன் மீதான வெறுப்பு
இன்னும் கூட கூடியிருக்கலாம்
இல்லையெனினும் குறையாமல்
பார்த்துக்கொள்கிறேன்

நினைவுகளில்
அலைந்து கொண்டிருக்கும்
நிறைவேறாத ஆசைகளைக் கூட்டிவந்து
தீயிட்டுக் கொளுத்துகிறேன்

கடந்தகால பரண்களின்மேல்
மடித்து வைத்திருக்கும்
நம் நாட்களின் மீதுபடிந்த தூசிகளை
தவறியும் தட்டுவதில்லை

சுவாசப்பையின் பள்ளத்தாக்கிலிருந்து
சுத்தமாய் துடைத்தெறிந்த உன் வாசனையை
மீண்டும் நிரப்ப முயற்சிப்பதில்லை

கனவுகளில் தோன்றி மறையும்
உன் முக பிம்பத்தை உடைக்க மனமில்லை
தடைகளில்லை உன் திசையில் பயணி
தேடல்களுண்டு என் சிறகைப் பறக்கவிடு

வேண்டாமென
விலகிச்செல்லும் உறவுகளை
என்ன செய்வது
மறப்பதையும் மன்னிப்பதையும் தவிர


03 June 2016

பேசிக்கொண்டிருக்கும் நிழல்கள்




வெற்றிடம் நிரம்பித் ததும்பும்
மனதின் இருளடர்ந்த பக்கங்களில்
ஒரு சிறு வெளிச்சமென வந்து
முகம் காட்டு

யாரொருத்தியைப் போலவும்
இல்லாமல் நீ
நீயாக மட்டும் நிஜம் சுமந்து வா

உனக்கான கனவுகளையும்
எனக்கான ஆசைகளையும்
கலந்து செய்வோம்
நமக்கானதொரு காதலை

உன் அன்பின் எடைக்கு
என் காதலையும்
என் காதலின் எடைக்கு
உன் முத்தங்களையும்
பரிமாறிக்கொள்வோம்

உன்னோடு நானும்
என்னோடு நீயும்
அவரவர் வீடு திரும்பும் வேளையிலும்
கைகோர்த்தபடி அமர்ந்து
பேசிக்கொண்டிருக்கட்டும்
நம் நிழல்கள் ...!!!

                                   

30 May 2016

நந்தி மலை பயணம்




மிகப்பிடித்த பாடலொன்றையோ
படமொன்றையோ ரசித்துப்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் " கொஞ்சம் கடைக்குப்போய் பால் வாங்கிட்டு வா " என வீட்டில் யாராவது சொல்லும்போது பக்கத்து தெருவுக்கு போக கொஞ்சம் வெறுப்புடனும் நிறைய கோவத்துடனும் பைக்கை அப்படி உதைக்க நேரிடும், நடந்து போகும் தூரத்தில் இருக்கும் கடைக்குப்போக பைக்கோ சைக்கிளோ தேவைப்படுகிறது.

சில கிலோமீட்டர்கள் நடந்தே ஒரு பயணம் போக வேண்டுமென  வருகிற போது அந்த சூழ்நிலையை கையாளும் பக்குவத்தை எது கொடுக்கிறது? அந்த இலக்கை அடைய எது தூண்டுகிறது? அடைந்த பின்பு வரும் ஒரு பெருமிதத்தை புத்துணர்ச்சியை எது தக்கவைக்கிறது?

எங்கள் அலுவலகம் பெங்களூரில் உள்ள நந்தி மலை உச்சியை நடந்தே அடைய வேண்டுமேன ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மலை அடிவாரத்திலிருந்து உச்சி வரை 7 கிலோமீட்டர்கள் தான், பாதை வழியாக முதலில் உச்சி தொடும் முதல் மூன்று ஆண்களுக்கும் முதல் மூன்று பெண்களுக்கும் பரிசென அறிவித்திருந்தார்கள் பரிசுக்கென இல்லையெனினும் ஒரு பயண அனுபவமாக இருக்கட்டுமென நண்பர்களோடு பயணிக்க தொடங்கினோம் உச்சியை நோக்கி.

பவானியிலிருந்து பழனிவரை கூட பாதயாத்திரை போய் வந்திருக்கிறோம் வயதும் மனதும் ஒத்துழைத்த நாட்களில்.
இப்போதைய சூழலில்  நானெல்லாம் இரண்டு கிலோமீட்டர் தூரத்தைக் கடப்பதே கடினமென நினைத்தபடிதான் நடக்கத் தொடங்கினேன் ஆனால் இயற்கையை ரசித்தபடியும் இலக்கை துரத்தியபடியும் நடக்க  நடக்க தூரங்கள் குறையத்தொடங்கின. புகைப்படங்களெடுத்தபடி முன்னேறுகிறோம் எங்களுக்கு நிகராய் மேகங்களும் முன்னேறுகின்றன.

கால்கள் நடக்க நடக்க காலங்களில் பின்னோக்கி  கேள்விகளால் நிரம்புகிறது மனது அந்த காலத்தில் இத்தனை உயரத்தை எத்தனை குதிரைகளில் அடைந்திருப்பார்கள்?
இந்த மரங்களில் எத்தனை பறவைகள் கூடுகட்டியிருக்கும்?
எந்த விதையில்  இந்த மரம் இப்படி வளர்ந்திருக்கும்? மலை உச்சியின் கோட்டை கட்டவும் அந்த பெரிய குளம் கட்டவும் எத்தனை கழுதைகள் கல் சுமந்திருக்கும்? இங்கு வாழும் குரங்குகளுக்கு போதுமான உணவு கிடைத்துவிடுமா? அந்த பெரிய தேன்கூட்டை யாரும் தொல்லை செய்யாமல் அப்படியே விட்டுவிடுவார்களா? தலைக்குமேல் போகும் மேகம் பொசுக்கென மழை பொழியுமா? இப்படி எத்தனை எத்தனையோ கேள்விகள் பதில் கிடைக்காமலே அடிமனதின் பள்ளத்தாக்கில் விழுந்து தொலைந்துவிடுகின்றன.

ஒருவழியாய் உச்சியை அடைந்த போது வாழ்க்கை ஒரு உண்மையை உணர்த்தியது , "முயற்சியோடு முன்னேற நினைப்பவர்களையும் வலிதாங்கி தடைதாண்ட துடிப்பவர்களையும் வாழ்க்கை உயரத்திற்கு கொண்டு செல்கிறது".

இன்னும் இன்னும் பயணிக்கணும்
புது உயரங்களைத் தொடவும்.
புது அனுபவங்களைப் பெறவும்.

பயணிப்போம் ...!

---தனபால் பவானி